Thursday, 23 July 2026

எழுத்தறியும் பெருமான் மாலை / நம் சரிவுக்கு காரணம் என்ன? (1)

 எழுத்தறியும் பெருமான் மாலை

#####################


திருவொற்றியூரில் வள்ளல் பெருமான் அருளியது.எழுத்தறியும் பெருமான் மாலை வள்ளல்பெருமான் அருளிய ஆறு திருமுறைகளுள் இரண்டாம் திருமுறையில்  பாடல் 905 முதல் துவங்குகின்றது. மொத்தம் 31 பாடல்கள். இவை நம் நெஞ்சம் உருக்கும் பக்தி சாறாகத் திகழ்வன. அன்போடு அம்மா என்று அழைத்தாலும் அர்த்தம் தெரியாமல் அழைத்தாலும் தாய் திரும்பிப் பார்த்து வாரி அணைக்கும் அன்பு கொள்வாள். குறை தீர்க்க  குழந்தையின் முகம் நோக்கி கனிவு கொள்வாள்.

நம் சரிவுக்கு காரணம் என்ன?

*****************************************


பாடல்:1

பொதுவாகப் பலர் தமது சரிவுக்கும் தாழ்வுக்கும் பிறரைக் குறை சொல்வது வழக்கம். வள்ளல்பெருமான் நெஞ்சம் அப்படி அன்று. 

ஒரு நாய் எவ்வாறு மனிதர்கள் புழங்கும் அங்காடியில் எந்தப்பயனும் இல்லாமல் ஒவ்வொரு கடையாக அலைகின்றதோ அது போல அலைகிறேன்  என்று பட்டினத்தார் சொல்வது போன்றே வள்ளல் பெருமான் சொல்லிச்செல்வது நம் பொருட்டே ஆகும். 

குற்றம் சாட்டப்பட்டவனுக்காக வாதாடும் வழக்குரைஞர் நீதிபதியிடம் வாதாடும்போது குற்றவாளிக்கு கிட்ட வேண்டிய நியாயத்திற்காக எவ்வாறு அந்தக் குற்றத்தைத் தானே செய்தது போன்று வாதாடுகிறாரோ, எழுத்தறியும் பெருமான் மாலையின் பாடல்கள் இருக்கின்றன.

உனது திருவடிக்கு ஆளாக வேண்டும் என்ற என்ணம் தவிர்க்கும் போக்கு எதனால் ஏற்பட்டது? முந்தை வினைகளே காரணம். இதனால் எனக்கு நோய் வந்தது. என்ன நோய்? பிறரால் நான் ஏசப்படும் நோய். இப்படி நிகழ்வது நீதியா? என் தந்தயான எழுத்தறியும் பெருமானே. அருள்வாயாக.


சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை

முந்தை வினை தொலைத்து உன் மொய் கழலுக்கு ஆள் ஆக்காதே

நிந்தை உறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ

எந்தை நீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


*****

No comments:

Post a Comment