Wednesday, 30 December 2015

மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! - 15


மயங்கிய அறிவு மயங்கி இருக்கவே விரும்பும்.
இருட்டில் நடந்த வெளவால்களுக்கு
பகல் ஒளி எந்த பக்கம் என்று அறியவும் ஆசை வராது.
சேற்றில் குளிக்க ஆசைப்படுகின்றன நம் புலன்கள்.
அதிலும் கண் மூடி உறங்கும் மனதை செல்லமாக எழுப்புவதே கடமை.
“எல்லே !” என விளிக்கிறாள் ஒருத்தி
இன்னொருத்தி மனம் எனும் அடங்காப் பிள்ளையை “இளங்கிளியே...” என்பாள்
உடனே அடங்கா மனம் உஷாராகின்றது
“ சில்லென்று கூப்பிடாதீர்கள் எழுந்து வருகிறேன் இருங்கள்”
இப்போது நாமும் கொஞ்சம் சலிக்கிறோம்:-
“ நீ சொன்ன பழைய கதைகள்..... அப்பப்பா! அதெல்லாம்
உன் வாய்க்கே தெரியும்....! வாயில் வந்த கதையெல்லாம் சொல்பவள் நீ!”
அதட்ட ஆரம்பித்ததும் மனம் எனும் தோழி சொல்கிறாள்
“ எனக்கு பதில் நீயே போயிட்டு வா! நீங்களே நான் !”
இப்படி ஐஸ் வைத்து சொல்லும்போது
மனம் எனும் பெண்ணை அறிவு எனும் பெண் இன்னும் விழிப்பாகி
“ வேறு வேலை உனக்கு என்ன இருக்கிறது? எழு!” என்றதும் -
“சரி! எல்லோரும் வந்துவிட்டார்களா! எண்ணிச் சொல்டி” என்கிறாள்
(பிறரை ஒப்புமை செய்து தன் கடமை தள்ளிப்போடுகிறாள்)
அப்போதும் அறிவு எனும் பெண் சோரவில்லை
களைப்படையவில்லை
“வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
பாடேலோர்  எம்பாவாய்!” என்கிறாள்
ஆகவே புலன்கள் சுவைக்கும் நம் மனது - முதலில் நம் கூப்பிடலை ஏற்காது -
கண்டித்தால் நம்மையே செல்லம் கொஞ்சி திசை மாற்றும்
தள்ளிபோட என்ன வழி? என்றுதான் பார்க்கும்! மாயந்தான் காக்க வேண்டும்!
                                     - தொடரும்.

 



மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! (1 -14)



ஆஹா என சந்திக்கிறார்கள்
இயற்கை மனம் என்ற பெண்ணும்
மார்கழி என்ற குளிரால் செய்த பெண்ணும்!

ஒருவரை ஒருவர் அழைத்து மகிழ்வர்
ஆண்டாள் திருப்பாவை முழுதுமே ஆனந்தக்குளிர்தான்
பெருமிதமான தமிழின் செல்வக்குளிர்
வெளிப்படையான பேச்சு இது அன்று
காதலின் பூமி முழுதும் கண்ணன் எனும் தெய்வத்தின்
இளமை பூசிய இரகசியத்தின் உச்ச கட்ட உரையாடல்கள்
ததும்பி வழிகின்றன பரிசுத்தமான ஆன்மாவின் கேவல்களாய்!
காதலின் குளிர்காலத் திருக்குறள் காமத்துப்பால் இது
இதில் முழுதும் அன்பின் ரசம் மட்டுமே உள்ளது
பூக்காத பூக்களெல்லாம் மணன் வீசுகின்ற மார்கழி இது
(1)
இயற்கை பேரான்மா
மனித உடலில் சிறு தங்கல் ஜீவான்மா
பெரிதுதானே சிறிதை அழைக்கும்! இதோ அழைப்பு !
ஒருத்தி அழைக்கிறாள்
எப்போது உங்கள் மதி நிறைகிறதோ
அப்போதே அது நன் நாள் தானடி! வா!  நீராடப்போவோம்!
நாராயணனின் அம்சமான கண்ணன்
நமக்கே நமக்கு அருள் தருவானடி
ஆமாம்! நமக்கே என்கிறேன் கவனியுங்கள்
பறை தருவான் அவனைப் பாடிப்புகழ்வோம் வருகிறாயா எழுவாயா
எப்போதும் உயர்ந்தோனுக்கே ஆசையுறு
எவன் சிங்கம் போன்ற உச்ச ஆண்?
கூர்வேல் நந்தகோபன் - அழகிய யசோதா மகன் தானே?
தெரியுமா அவனுக்கு சூரியன் போல கண்கள்
மேனி நிறம் மேகநிற கருப்பு!
(2)
வையத்துப் பெண்களே ! ஒன்று செய்வோம் வருகிறீர்களா..?
மனதாலேயே பாவை செய்வோம்
ஆமாம் மனசால்தான்
உடம்புதான் நெய் கேட்கிறது பால் கேட்கிறது
கண்கள் மை கேட்கிறது
கூந்தல் மலர் கேட்கிறது
பிறர் குறை கூற -  வாய் வம்பு கொடு  என்கிறது
மெல்லத் துயில் கொண்ட நம் பரமன் திருவடி பாடுவோம்
உய்ய வேண்டும் பிறவி தாண்ட வேண்டும்
துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் தானம் செய்ய வேண்டும் 
அது மனம் எனும் பாவையால் சாத்தியம்! சத்தியம்!
(3)
பெண்களே நாம் நன்றாக நம் கணவனுடன் வாழ
நமக்கு செல்வம் வேண்டும்... !ஆமாம்தானே? ஆனால்
நாம் நமக்கு மட்டும் வேண்டலாமா? அது தவறு
நாடு முழுதும் மாதம் மூன்று மழை பொழியவேண்டும்
அதை நம் மனப்பாவையிடம் சொல்வோம்
ஆக்க பூர்வமான கற்பனை கொள்வோம்
அதற்கு என்ன வழி ?
தனன் சிறிய கால்கள் ஓங்கிட
மூன்று உலகமும் அளந்த உத்தமன் பேர் பாடினால் போதுமடி.
வயல்களில் நீரும் மீனும்  நெல்லும்
குவளை மலர்களில் வண்டும் பிறகு வரும்
கறவைப்பசு மாடுகளை வள்ளல் பெரும் பசுக்கள் ஆக்கிட
அவன் பேர் மட்டுமே போதும்! புரிகிறதோ?
(4)
ஆழி மழைக் கண்ணா!
கடல் நீரே ஆவியாகி மழை நீர் ! ஒப்புக்கொள்கிறோம்
நீரின்றி அமையாது உலகு! ஒப்புக்கொள்கிறோம்
ஆனால்
சமீப 2015 டிசம்பர் மழையாய் பொழியாதே
எமது கணவர் மட்டுமல்ல நாங்களும் பணிக்குச் சென்று வரவேண்டும்
அப்படிப் பட்ட மழை பொழிய வை
அந்த மழை மிலிடரி படை போல சீரான கடமை மழையாக இருக்கும்
அப்போது மார்கழி நீராட மிகப்பிடிக்கும் கண்ணா
ஆனால் எமக்கு மட்டுமே மழை கேட்க மாட்டோம்
உலகம் முழுதும் உன் அன்பு மழை பொழிய வேண்டும்
எப்படி என்று எங்களைச் சொல்ல வை! கண்ணா
சாரங்கம் என்ற வில் விட்டு நீங்கும் சர மழை அது
இடி ஓசை வலம்புரி சங்கு போல் அதிரும்
மின்னல் ஒளி பத்மநாபன் சக்கரம் போல் ஒளிரும்!

(5)
பெண்களே ! எது நமக்கு பாரம் தெரியுமா?
நினைவுகள் தான்!
என்ன செய்யலாம் நெருப்பினில் வீழ்ந்த தூசு போல்
மனம் லேசாக வேண்டும்
ஒரு வழி இருக்கிறது
நம் மன்ப்பாவை தூய்மையானவள்தான்
அவள்தான் அந்த அழகிய வழி சொன்னாள்
கண்ண பெருமானை வாயினால் பாடி
மனதினால் சிந்திக்க வேண்டும் ! simple!
(6)
வருங்கால மணப்பெண்ணே நிகழ்கால மனப்பெண்ணே
உனக்கு ஒரே ஒரு சிக்கல்
புவி வெப்ப மயமாவதுபோல்
உன் உன் உள்ளம் துன்புறுகிறது
ஆனால் இதை சுலபமாக சமாளிக்கலாம்
ஆண்டவன் கண்ணன் நமக்கு ஒரு நல் வழி செய்தான்
அது என்ன
எத்தனை பெரிய size ஓசை என்றாலும்
நமது சிறிய காதுகளால் நாம் கேட்க முடியும்
கேளாதனவெல்லாம் கேட்பிப்பான் என்கிறார்கள்
அவன் தந்த அந்த அகச்செவியால்
 மார்கழி மாதத்தில் முனிவர்களும் யோகிகளும்
“ஹரி ஹரி” என்று ஒலிக்க எழுகின்ற ஓசை மட்டும்
உன் உள்ளம் புகுந்திட அனுமதி பெண்ணே!

(7)
கீசு கீசு என்று ஆனைச்சாத்தன் குருவி கத்தினாலும்
ஆய்ச்சியர்
தயிர் கடையும் ஓசை கேட்டாலும்
கேட்டுக்கொண்டே இருக்க
கண் மூடி தூங்க முற்படுகிறோமில்லையா
அப்போது நாம் பெண்கள் அல்ல
பேய்ப்பெண்கள் ஆகிறோம்
கண்கள் மூடினால் அவன் உலகம் இருளுமா
செவிகள் மட்டும் திறந்தால் தரிசிக்க இயலுமா
அவன் வர வேண்டும் என்று வாசல் நோக்கு
 நாராயணன் மூர்த்தி கேசவன் புகழும் பாடினார்களே
அடடா! அப்போதும் கேட்கவில்லையா
நீ பேய்ப்பெண் list தானா! கதவைத் திற! அகம் திற.
(8)
எனக்கொரு யோசனை
ஏன் அவன் அருள் இன்னும் கிட்டவில்லை
அவனோ தேவாதி தேவன்
எல்லாம் தெரிந்தவன் ..
ஆனாலும் அவனுக்கு ஏன் புரியவில்லை
சன்னதி முறையீடு என்பார்களே ஆம்! நேராகச்சென்று
அவன் சந்நிதியிலேயே நம் மனக்குறை சொல்வோம்
கிருஷ்ணன் அவன் இருக்குமிடம் சென்று நாம் சேவித்தால்
“ஆ!” என்று ஆச்சரியப்படுவான் பிறகு “வா!” என்று ஆராய்ந்து
அருள் செய்வான்

(9)
மனம் என்னும் விளக்கு அவனை நி¨னைகிறதடி
இருந்தாலும்
தூமணி மாடம் முழுதும்
சுற்றிலும் ஏன்
விளக்கை வைத்து விட்டுப்போனார்கள் தோழிகள்?
விளக்குக்கு முன் விளக்கு எரிய வேண்டும்
அவன் உள்ளே உள்ளான் என்று தெரிந்தால் போதுமா
வெளியிலும் நினை
மாமாயன் வைகுந்தன் மாதவன் என்று அவன் நாமம் சொல்க!
(10)
இப்போதல்லடி!
முற்பிறவியிலேயே அவனுக்காக நீ நோன்பு இருந்துள்ளாய்
அதனால்தானடி நீ சொர்க்கம் புகுந்தாய்
கவலைப்படாதே
மனம் மயக்கப்படாதே
விழிப்பு நிலை தவற விடாதே
நிச்சயம் அந்த பொன் கணம் வரப்போகிறது
உன்னை ஆட்கொள்வான் பாரேன்
தூங்காதே ! கும்பகர்ணன் தூக்கம் உனக்கு வேண்டாம்
(11)
பசு மாடுகள் பால் கறக்கவும் தெரியும்
பகையை போரில்  அழிக்கவும் அவனுக்குத் தெரியும்
குற்றம் ஒன்று கூட சொல்ல முடியாத அவனின்
செல்வப்பெண்டாட்டி நீ அல்லவா
எதற்காக உறங்குகிறாய்
அவன் மனைவி நீ! விழிப்பு நிலை பெறடி !
(12)
மனதுக்கு இனியானைப் பாடினால்
என்ன செய்ய வேண்டும்?
கொட்டும் பனி எமது தலையில் வீழ
உன்  வீட்டு வாசலில் பாடும்போது
வாய் திறந்து ஏதாவது சொல்லலாமே!
தூங்குவது போலும் சாக்காடு உனக்குத் தெரியுமே
அவன் உனக்காக நீ அவனுக்காக இது தெளிவு
அவன் பாடல் புகழ் பாடேன் ஆனால் எழ வேண்டும் நீ
அனைத்து வீட்டிலும் உள்ள பெண்கள் அனைவருமே உணர்ந்தனர்
அவன் பெருமை பாடப் பாட
அவன் பிரிவு உணராமல் விழிப்பு நிலை உணரப்படும்
எம் பாவாய்!
(13)
நீராட நீ வா பெண்ணே
குளிர் நீரில் நீராட நீ வா பெண்ணே
உன் உயரம் குள்ளமாகும்படி
சில்லெனப்பிழியும் ஒரு மின்னல் குளிர்தான்!
ஆனாலும் நீ தாங்க முடியும் ! எழு குளி நீராடு
பூக்காம்பை கிள்ளுவதுபோல் சீதை நாடிய இராவனன் தலை
கொய்யப்பட்டது அன்று
வெறும் குளிருக்கு
உறக்கம் எனும் தற்காலிக இன்பத்துக்கு
படுக்கையில் கிடக்கிறாய் இன்று!
நீ மட்டுமெழுந்து நிகழ்காலத்தை உணர்ந்தால்
கவலை எனும் மனக்குளிரும்
குளிர் நீர் எனும் உடல் குளிரும் போய்விடுமே கண்மணீ! 
 (14)
ஏய் என்னடி சொன்னாய் நேற்று!
“எனக்கு விழிப்பு நிலை அதிகமாகி விட்டது
நாளைக்கு நானே வந்து எழுப்புவேன்” என்றவளே
Over confidence அது!

ஒன்று தெரியுமா
உடம்புக்கு வெட்கம் உண்டு
நாக்குக்கும் வெட்கம் வேண்டும் என்றௌ அறிந்துகொள்
உன் வீட்டில் மலர்கள் வாய் நெகிழ மலர்ந்தன
உன் வீட்டுக்கு வெளியே
செங்கல் நிற ஆடைத்துறவிகள்
வெண்பற்கள் இருளில் ஒளிவீச நடந்துசெல்கிறார்கள்
சங்கு ஒலிக்க கோயில் நோக்கி விரைகிறார்கள்
பார்த்தாயா இல்லையா! 
                        - தொடரும்

Friday, 25 December 2015

அப்பா! உனக்கு ஆயிரம் வார்த்தைகள்


அப்பா என் ஆருயிர்த்தேனே
அடியோடு உன்னை இழந்து என் ஆவி சோர்கின்றேனே
செப்டம்பர்30 நள்ளிரவு ஏன்தான் வந்ததுவோ காந்திபோல்
எளிமைக்கு வந்ததுவோ உன் பிறப்பின் இரசியம்
என்றும் போல் இருப்பதில்லை மரண நாட்கள்
இருப்பது போல் இருந்து சந்தன ஊதுவத்தி மணமாய் மறைய
உன்னிடம்தான் கற்க வேணும்
ஏதோ கூப்பிட்டதுபோல
மாசிவ் அட்டாக் நிகழ்ந்து நெஞ்சு அடைக்க
சுழன்ற நாக்கை கடித்துக்கொண்டு இரத்தம் ஒழுக
பாத் ரூமில் சரிந்து கண் மூடி மறைந்தாயே
சிவன் தான் வந்தானோ
எஸ்.ஆர். எம். ஆஸ்பத்திரியில் விட்டோமே என
கவ்விடத்தான் கொண்டானோ
பொக்கெனப் போனீரே
சிறு மூச்சா பெரு மூச்சா
காண வேண்டும் மரணக்காரா நீ அறிவிப்பாயா
30ம் தேதியே வாடகைப்பணமும் மளிகைப்பணமும்
அட! கரண்ட் பில்ல்லும் கூட கட்டிவிட்ட
நிதி உணர்வு தனி உணர்வு விழிப்புணர்வு
 அட ! 84 வயது உனக்கென்றால் எவர்தான் நம்புவர் காண்
தடங்கல்களில் சுலபமாய் நீந்திய அன்புப் படகே
எங்கே போனாய்
உனக்கு பென்ஷன் 85லும் வாங்கும் ஆசையும்
பெருமிதமும் ஆரோக்கியமும் குரல் பலமும் இருந்தன
இரவுப்பணி நள்ளிரவில் எலக்டிரிகல் சாதனப்பணி பயம் என்றேன்
வான் கலந்த மாணிக்க வாசகரின் திருவாசகம்
துன்பம் வரும் நேரமெல்லாம் படி என்றாய் ஆஹா
சிவபுராணம் சொல்லிக்கோ என்றாய் சகஜமாய்
நான் கவ்விக்கொண்டேன் பயம் போயிற்று
தொற்றிய பயம் துரத்தும்போது தப்பிட
உன்னையறியாமல் எப்போதோ கற்பித்தாய்
என்றாலும் நான் பற்றினேன்
எத்தனை எத்தனை இன்பங்கள் நீ தந்தாய்
அத்தனையும் கூறிட
ஒரு நெஞ்சு எனக்குப் போதுமோ ஏன் பிரிந்தாய்
நெஞ்சு கரிக்கும் என்று சொல்லி
எந்த உணவு பின்னாலும் உனக்குப்பிடிக்கும்
மாவடுவும் பழைய சோறும் காம்பினேஷன்
இரவில் நீ உண்ணும் ஓசை
உறிஞ்சும் ஓசை அள்ளி அள்ளி உண்ணும் ஓசை
இப்போதும் கேட்குமப்பா
ஆயிரம் கதைகள் சொல்லி ஆயிரம் அனுபவங்கள் சொல்லி
மகனை மகளை மாணவரை மாணவியை
காண்பவர் எவராகினும் அறிவின் சிகரமாக்க
பேதமில்லாமல் முயன்ற
உன் அன்பை வெட்ட வெளி ஞானம் என்பேன்
குளத்தில் சிமெண்ட் கட்டை மீதிருந்து
என்னைத் தூக்கி வீசிப்போட்டு
ஐயோ அப்பா காப்பாற்று என்று கத்திக்கொண்டே
நீரை அழுத்தும்போது “அதாண்டா நீச்சல்!” என்ற துணிவு
மணக்கால் குளத்தில் நீச்சல் கற்றுத் தந்து
 மீன்கள் போல் நீரில் நீந்தும் ஆசை தோற்றுவித்தாய்
பேராசிரியர் சத்திய சீலன் உன் தோழன்
அவர் பெயரே எனக்கும் சேர்த்து
நட்பின் பெருமை பூண்டாய் உலகில் உன் போலுண்டோ
மேடையேறி பேசுக என் மகனே என  நீ
நேரடியாய் சொல்லாமல் இரவென்றும் பகலென்றும்
சத்தியசீலன் அறிவொளி பட்டிமன்றம் கூட்டிச்செல்வாய்
உன் நட்பெல்லாம் எனக்காக்கி
இளம் வயதிலேயே
என்னைத் தமிழ்க்கிழவனாக்கினாய்
தனித்த நறும் சொல் மட்டும்தானா
அன்பென்ற இணைப்பெல்லாம் இலக்கியமெல்லாம்
புதுக்கவிதை சாரம்தான் என்று
சுஜாதா எனை பாராட்டிய கணையாழிக் கூட்டம் வந்தாய்
இலக்கியபீடம் விக்கிரமன் ஐயா நெய்வேலி விருதுதர
அப்போதும் என் அருகே வந்தாய்
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ப்ரேமி தொடரில்
என் கவிதையை ஜேம்ஸ் ஐயராக அவர் முழங்க
ஊருக்கு ஊர் என் பையன் கவிதை என் பையன் கவிதை என்றாய்
நிமிடத்தில் சுதந்திர உணர்வு கொள்ளும் சுதந்திர எண்ணம்
உனக்குண்டு ஆதலினால்
எப்போதும் விரைந்து பறக்கும் பேச்சிலே வித்தை செய்தாய்
காவியத் தலைவன் போல் ஒரு கணம் உன்னை உணர்வாய்
கால் நொடியில் நாம் ஒன்றுமில்லை என்பாய்
ஞான நிலை தத்துவ நிலை
இரண்டின் நிலையும் மாறி மாறி பயணம் போனாய்
கல்வியிலே உனைப்போல விடாமுயற்சி இளைய தலைமுறை
பெற வேண்டும் என்று எனை நினைக்க வைக்குமளவு
மலை போல் இரவு முழுதும் விழித்துப்படிப்பாய்
ரோடு மேஸ்திரிக்குப் பிறந்த எட்டாவது பையன்
என்ற மனப்பான்மை பெருமையாய் கூறுவாய்
காபி ஆற்றும் வேலை செய்து புத்தகம் இரவல் வாங்கி
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பாய்
திருப்பராய் துறையிலும் சிதம்பரத்திலும் கற்றாய்
நான் டிப்ளமா சிதம்பரத்தில் படித்தபோது
நீ M.Ed படித்தாய்
இரவு நேரத்தில் வாடகை வீட்டின் வெளிச்சம் போதாமல்
ஒரே ட்யூப் லைட்ட்ட்டின் கீழ் படிப்போமே அப்பா!
திரிசிரமலை புராணம் நீயும் சத்தியசீலனும் கலந்து எழுதிய
பக்திக்காப்பியம் ஆனாலும் நீ தீவிர பக்தனல்ல
உலக வாழ்க்கை பக்தன் என்றே உன்னைக்காட்டி வந்தாய்
எல்லோரும் நம்பி விட்டோம்
தம்பிக்கு பெரம்பலூரில் வேலை கிட்டியதும்
சிதம்பரம் நடராஜர் பொன்னம்பலத்தை
மொட்டை அடித்த தலையோடு அங்கப் பிரதஷ்ணம் செய்தபோது
உன்னையுமறியாமல் உன் பக்தி உலகுக்கு
சிறு முளை காட்டிற்று
உலகுக்கு இருக்கும் ஒரே வழி
நமசிவாய மந்திரமே என்று
ஒரு தரம் ஒப்புக்கொண்டாய்
“எனக்கு ஒரு முறை நீச்சல் வராமல்
குளத்தில் இறக்கும் நிலை
வந்தபோது இராம நாமம் காப்பாற்றியது அதனால்
அதுவே எனக்கு இலகுவாய் வருகிறது”  என்றும் சொன்னாய்
நடப்பு செய்தி எதுவானாலும்
உன் கருத்து உன் சிந்தனை
அதனை மறுக்கும் முதலில் பிற்பாடு வளையும்
நாக்கில் ஒலிக்கும் சொற்கள்
நெகடிவ் தன்மை போல் அச்சம் தரும்
இங்கே இருப்பதை எதிராளிக்குப் போய் சொல்லி விடும்போல
செய்தி சொன்னவரை கலங்க வைக்கும்
கீதை கண்ண பரமாத்மா போல
எல்லோருக்கும் பொது என்ற தன்மை கொண்டதனால்
எல்லோரும் உன்னை வா வா என்றாலும் ஏதோ
உள்ளே கொஞ்சம் அஞ்சினர்
ஆனாலும் பொது மனிதர் ஒருவர் பொது ஜன விரோதி என
நினைக்க இடம் ஆனாய்
ஆனாலும் என் கடமை பொதுக்கருத்தே என்றாய்
என் கருத்தை எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்
என்று கண்ணதாசன் போல  எடுத்துச்சொன்னாய்
புத்தகம் அச்சிடுகிறேன் என்று சொன்னால் போதும்
உடனே கவலைப்பட்டு முதல் ஆளாய் தடுத்திடுவாய்
புத்தகம் விருது வாங்கினாலோ
“என் பிள்ளை !” என்று உச்சி மோர்வாய்
உன் சிடுக்குகளும் நேர்ப்புள்ளிகளும் கோணல்களும்
என் திருமண வாழ்க்கைக்குப் பின்
என்னைத் திணற வைத்தன
ஆனாலும் என் மனைவி கஸ்தூரிபா போல
என் இயலாமை மாற்றி  தனைக் கொடுத்து எனக்கு பலம் தந்தாள்
உன் முதுமையெல்லாம் அவள் ஆதரவாக கனிவுடன் இருந்து
எனக்கு நான்கு கரங்கள் என இயங்கினாள்
கடைசியாய் தீபாவளிக்கு காரில் அழைத்து வந்தபோது
“தலை தீபாவளி மாப்பிளை!”  எனப் பெருமிதப்பட்டாய்
(அது கடைசி என்று யாருக்குத் தெரியும்)
அவசரத்தில் தவறாகப் புரிந்து கொள்வதில் உன்னைப்போல்
அசகாய சூரர் யாருமில்லை என்றாலும்
அத்தனையும் வெளிப்படையாய் சொல்வாய் குழந்தை போலே!
குஷ்ட ரோகிக்கு உதவுவதென்றாலும்
இல்லாதவர்க்கு இரக்கப் படுவதென்றாலும்
கனிவு உந்தன் சொந்தம்
ஆனால் சிறுகணமும் அவமானம் தாங்காய்
திருக்குறளில் முந்திரி பருப்பு போலே
முத்து முத்து வாக்கியம் பகிர்வாய்
“குணம் என்னும் குன்றேறி நின்றார் சினம்
கணம் ஏனும் காத்தல் அரிது” என்பதாக
உன் சினம் நியாயம் செய்வாய்
எத்தனை எத்தனை ஊன்று கோல் சொற்கள்
அத்தனையும் நீ உருவாக்கின சொல் சிற்பங்கள்
அடடா அடடா
“எதிர்பார்த்தால் ஏமாற்றம்”
“பணம் கிடக்கு பாஷாணம்”
“கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
யாரே அனுபவிப்பார் அந்தப்பணம்”
“நான் முந்திண்டா நோக்கு நீ முந்திண்டா நேக்கு”
“If you save a penny , a penny will save you”
“A thing for a place and a place for a thing”
“Waiting for mahatma”
“ a stitch i time saves nine”
எத்தனை எத்தனை
கொத்து கொத்தாய் நெஞ்சில் கொட்டிவிட்டுப் போனீரே
மரியாதையாய் நடத்துகிறேனா அப்பா என்றால் -
“நீ எனக்கு அப்பா ஆயிட்டேடா நாங்க உன் பிள்ளைகள்” என்றீர்
கோமாளிகளோடு பேசவும் தெரியும் அப்பாவுக்கு
அப்துல் கலாம் ஆங்கிலமும் குறட்பாவும் சிந்தனையும் தெரியும்
அப்பா! நீங்க நல்லாசிரியர் விருது வாங்கலியே ? என்றால்
அடுத்தகணம்
அது “நல்- ஆ- சிறியர்!” விருதுடா என்பீர்
எதுவும் எகத்தாளம் செய்யப்படாமல்
உன்னிடம் தப்பியதில்லை
உன் அன்னைப் பாசமும்
மேட்டுக்குப்பம் சிவப்பிரகாச சாமிகள் பாசமும் தவிர!
எதையோ இழந்தது போல்
நானும் என் மகளும் என் மகனும்
உணர்ந்து கலங்குகிறோம்
அப்பா நம்முடன் தான் உள்ளார்
என்கிறாள் குழம்பிய மனைவி
கடைசியாக போனில் “வாரா வாரம் பேசும்மா”
என்றாரே என்கிறாள்
இல்லை இல்லை நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
நான் அவர் வேட்டி சட்டை உட்பட
மேட்டுக்குப்பம் இல்லத்திற்கு கொண்டு சென்றோமே
அப்படி எனில் அப்பா இல்லை தானே என நினைக்கிறேன்

“என் சாம்பலை மேட்டுக்குப்பம்
சிவப்பிரகாச சாமிகள்ட்ட கொடு”என்ற தியாக
உணர்ச்சி வாக்கியம் நெஞ்சை அறுக்கிறது  
இல்லை இல்லை என்கிறேன்
நீங்கள் இருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் என்றும் சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
இன்பமான நிலை இல்லை இது
மந்திர ஒலிகளால் அஞ்சலி செய்ய
சோதக கும்பம் - திதி மாசிகம் வந்து வந்து போகுது
அப்பா உனக்கு உன்னை அறியாமலே
ஆண்டவன் அருள் துரத்திற்று
ஆதலினால் நெருப்பில் வாய் வைத்தாலும்
முடிவில் அது இனிப்பாகவே மாறி உனைத் தூக்கிற்று
 அந்த கால அனுபவ முத்திரைகள் என்றாலும்
அவர் அவர் அனுபவம் மதிப்பாய் விலகுவாய்
Everybody is an individual என்பாய்
“கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்” 
கண்ணதாசன் பாட்டை எம்.எஸ்,வி. குரலில் பாடுவாய்
ப்ரீசர் பாக்சில் இருந்து எங்களை யெல்லாம் பார்த்தாய்
வறுமைக்கு கலங்காதே உன் நேர்மை உன் சொத்து
அஞ்சாதே என்றாய்
கற்பதில் உன்னைபோல் மாணவ மனம் எனக்கு கொடப்பா
அஞ்சாமையில் அன்பில் நட்பில் இயற்கை நேசிப்பில்
எனக்கு உன் பலம் கொடப்பா
Be bold ! say yes or no! உன் இஷ்ட வாக்கியம்
What is lost! Un conquerable will that i have
என்பது உன் ஜீவ வாக்கியம்
ஏசு பிறப்பு நாளில் எழுதுமிக்கவிதை கண்டு
எழுந்து வா என் அப்பா என்றால்
“மேப்படியான் மோகனய்யர் பாத்துப்பான்” என்பீரோ
அழுகின்றேன் கண்ணீர் வாராமல்
அதுக்கும் ஏதேனும் சொல்வீரே அப்பா
“நானேதான் நீ ஆயிடுக”
அழுத்திச்சொன்னீர் செல்போனில்
ஆசி தருக அருள் தருக தெம்பும் வழியும் தருக!



Saturday, 19 December 2015

இருக்கும் ஒரே கேள்வி



மூச்சிரைக்க மூச்சிரைக்க இலக்குக் கோட்டைத் தொடும் நேரம்
நான்கு ஐந்து பேர் அமுக்குவர் உனைச்சூழ்ந்து !
தெம்பிருந்தால் வா ! அதை விளையாட்டாக விளையாடு
அதுவே “கபடி” கற்றுத் தரும் பாடம்.
ஒரு சிலரை அவுட்டாக்க நொண்டியடித்தாவது முயல்க
உன் மூச்சு இரைக்கும்
அதையும் விளையாட்டாக விளையாடு அது
“நொண்டி” விளையாட்டு பழக்கும் பாடம்
ஏதோ தருவதுபொல் வரிசையாக அமர வைத்து
 ஒருவர் முதுகுபின்னே ஒருவர் மறைந்து
எதிர்பாரா நேரத்தில் கிளம்பிவிட்டு “போ!” எனத்துரத்தும்
வாழ்க்கைத் தன்மைதான் “GO GO” விளையாட்டு
உற்றுப் பார்த்தால்
“கீச்சு கீச்சு தாம்பாளம் கியான் கியான் தாம்பாளம்” முதல்
ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் வரை
ஒவ்வொரு விதமான  விளையாட்டிலும்
புதைந்திருக்கிறது ஓர் சூட்சும வஞ்சகப் பயிற்சி
அப்படியிருந்தும் மனிதர் நடுவே
விளையாடுவாயா கடைசி வரை?
முட்டியில் சிராய்க்க அடிபட்டாலும் ஏமாந்தாலும்
சிநேகித்தால்தான் உரசல்களும் விளையாட்டாகும் என உணர்வாயா?
அதுதான் மனித உறவில் இருக்கும் ஒரே கேள்வி!

Wednesday, 16 December 2015

மலை உச்சி வார்த்தை


அன்று ஒரு நாள்
பர்வதமலை உயரத்திற்கு
நானும் மகன் அருண்சித்தார்த்தும் ஏறலானோம்
பயணப்பட பயணப்பட நடந்துவந்தது  முதலில் உற்சாகம்
வெய்யில் ஏற ஏற தனிமையும் களைப்பும் கூட ஏறின
சுற்றிலும் பாறைகள் சுற்றிலும் பாறைகள்
மலை உச்சி நெருங்குவோமா என ஆகிவிட்டது
அங்கிருந்து தரையைத் தேடினால்
அது ஆகாயமாய் விலகித் தெரிந்தது
ஏறு ஏறு விடாதே இலக்கை அடை என்று மூச்சு விட்டோம்
அயர்ச்சி வாட்டும்போது சுழன்ற கண்களில்
ஒரு பாறையில்
அம்பிகையே எழுதியதுபோலவும்
பாரதியார் வைத்த மீதி வார்த்தை போலவும்
கண்டேன் அச்சொல்லால் மன உச்சிக்குப் போக வாய்த்தது
அது என்ன சொல்? ஆ! மனனம் செய் நெஞ்சே -
“ஏக்கம் தவிர்”


 

Tuesday, 15 December 2015

நூலும் நூலும்




அசையும் மெல்காற்றின் நடுவே
வேப்பமரம் தாண்டி நடந்தபோது
ஏதோ அந்தரத்திலிருந்து இறங்கிய பச்சைப்புழு ஒன்றை
பள்ளிக்கூடத்தில் பார்த்ததுபோவே
கண்ணறியாமல் மெல் சரடாய்
குதூகலமாய்க் காணநேர்ந்தது
மரம் நீங்கி தொங்கிக் கொண்டிருந்தது சர்க்கஸ் போல்
தன் நாவிலிருந்து நூல் கட்டி
உயர மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது .
நாக்கில்  நல்ல நூலால் என்னால் ஏற முடிவதுபோல்
நெஞ்சில் நல்ல நூல் இருக்கும் மனிதா
உன்னாலும் மேலேற முடியும்”
என்று சொன்னது அரைக்கணம் உணர்ந்தேன் பிறந்தேன்!

Monday, 14 December 2015

காலை ஆபீஸ் வரும்போது



காலை ஆபீஸ் வரும்போது
மஞ்சள் காமாலை தடுப்பென அப்பா உணர்த்திய
“சி” வைட்டமின் சிகரமென அப்பா பதிவித்த
செடி இலைகளைப்பறிக்கும் போது தவறுதலாய்
வேருடனும் வேர்மண்ணுடனும் இறக்க நேரிட்டது அது
என்ன இருந்தாலும் அப்பா பறித்தது போலவோ
அவரின் லாவகம் போலவோ வராது என்பதை
உணர்த்தவும் அவகாசம் தராமல்
காய ஆரம்பித்தது கீழாநெல்லிச்செடி
 

Sunday, 13 December 2015

விண்ணப்பக் கலிவெண்பா ( 320 வரை)


பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவும் பொருளுக்காகவும் அலைந்து
துக்கம் மிகுந்த இடங்களில் வலம் வந்து சஞ்சரித்தேன்
உன் கோவில் வலம் வர உன்னைப் பணிய நினைத்ததில்லை
பெருத்த செல்வமுடையோரை கை கூப்பி புகழ்ந்தேன் வாழ்த்தினேன்
உன் சந்நிதியில் கை கூப்பி வணங்கியதில்லை
அற்ப நெறி மனிதர்களான மிண்டர்களை வியந்தேன்
நினது தொண்டர்களை கூடவும் இல்லை
ஆன்ம விசாரணை செய்யவுமில்லை
காண்பவரை கடுகடுத்து வெறுத்த முகத்துடன் பார்ப்பேனே தவிர
எந்த நாளிலும் முகமலர்ச்சி ஏற்றதில்லை
நல்நெஞ்சமாம் சிவநெஞ்சை பிறரும் பெற வேண்டி தொண்டர்கள்
உன் புகழை நவில்வது கேட்டு
கல் நெஞ்சை சிறிதும் கரைத்தது இல்லை
தண்ணீரின் தண்மையும் தன்மையும் ஒத்திட்ட
பண்களால் பாமாலையால் துதித்து
கண்ணீர் கொண்டு உன்னை யான் துதித்ததில்லை
தண்ணீர் போல் நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பரை
அஞ்சேல் என ஆட்கொண்டதுபோல்
என்னை ஆட்கொண்டதில்லை
“இவர் மெய் அடியார்” என மேலோர் புகழ்வதற்காக
வித்தகா! உன் பொன் அடிக்குப் பொய் வேடங்கள் பூண்டுள்ளேன்
மெலிவைத் தருகின்ற ஆனால் புதுமை மிகுந்த
பணத்திற்காக புணர்ச்சியில் ஈடுபடுத்தும் பெண்கள் புணர்ச்சிக்காக
கலவி எனும் பிறவி தரும் குழியில் நான் விழுந்தது உண்டு
தூயவர்களைக் கூட மதித்து எண்ணாமல்
அவர் முன்னே ஒரு விதமாக
இல்லாத இடத்தில் ஒரு விதமாக என் இயல்பில் பேசியது உண்டு
மானத்தைப் போற்ற வழியில்லாமல்
மனம் நொந்து இரப்பவர்களுக்கு
தானம் செய்பவரைத் தடுத்தது உண்டு
வழக்கு உண்டாகும் போது
குறைவிலாத அன்பு வார்த்தைகள் பேசாமல்
ஒருதலைபட்சமாக நின்றது உண்டு
உன் அடியே தஞ்சம் எனத் தாழாமல்
ஈரம் இல்லாத நெஞ்சருடன் கூடித் தாழ்ந்தது உண்டு
குற்றமில்லாத தாய்மை கொண்ட உன் சந்நிதி வந்தும்
அன்பு வெளிப்பாடு இல்லாத ஒதிய மரம் போல் நின்றதுண்டு

தீயவினைகளை நிறுத்திக்கொள்ளாத
செல்வர்வீட்டு வாசலில் செல்வத்திற்காக
கேட்கக்கூடாத சிவநிந்தை கேட்டதுண்டு


புலால் உண்ணும் புலையர்கள் போல்
கொடிய ஆணவத்தால்
புண்ணியரை சொல்லாத வசை எல்லாம் சொன்னதுண்டு
நல்லவர்களைப் போற்றாமல்
பொய் உடம்பைப் போற்றி பாதுகாத்துக்கொண்டு
உடம்பின் மூலமாக சிவஞானம் பெற
சிவபூசை செய்யாமல் இருந்ததுண்டு
“இறையன்பனே! எனக்கு சோறுதா” என்று இரக்கும்போது
கோபம் கொண்டு நாய் போல் குரைத்து
வெருட்டியது உண்டு
மனம் வாக்கு செயல் மூன்றும் வேறு வேறு திசை போகவிட்டு
சிவஞானம் சித்திக்காமல் என் தந்தையே
உன்னைத் தொழாமல் இருந்தது உண்டு
நீருக்குள்ளேயே கிடந்தாலும் கல் இளகாதது போல
ஞானிகள் அறிவுரை கேளாமல்
நிலப்பாதையில் எல்லைக்கல் போலவும் நின்றதுண்டு
சஞ்சிதவினை எனும் முன்னை வினை ஆழ்த்துவதால்
அழுக்கு உலகின் அற்ப மகிழ்ச்சிக்கு மயங்கி
உன்னை வாழ்த்தாமல் மறந்ததுண்டு
எலும்புகளை அணிகலனாகப்  பூண்டவனே 
நிலையான நின் பொன் வடிவம் காண முயலாமல்
வீண் காலம் தாழ்த்தியதுண்டு
தாங்கள் உயர வேண்டும் என முயற்சிக்காமல்
தனக்குரிய பெருமைகளைக் கொள்ளாமல் இருக்கும் நாட்டிலே
இரை தின்றும் பிறருக்கு உழைத்தும்
இரண்டு கால் மாடு போல் வாழ்ந்ததுண்டு
                                                                 ( தொடர்வோம்)





 

Saturday, 12 December 2015

விண்ணப்பக் கலிவெண்பா


வள்ளல் பெருமானார் அருளியது. அருள் பெற இது ஒன்றே போதும் என்று அன்னதான ஆதீனம் மேட்டுக்குப்பம் வாழ் ஞான வள்ளல் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் முன்னுரை ஒன்றில் கூறியுள்ளார்.
எப்படி இறைவனைத் துதிக்க வேண்டும் என்ன கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் வள்ளலார் நமக்கு அருளிய கலி வெண்பா வடிவம் அதனை புதுக்கவிதை வடிவில் முயன்று எழுதும் வடிவம் இது.
 அனைவரும் அறிய முற்படுவோம். காலம் சிறிது.
                                                         பா.சத்தியமோகன் 13.12.15

“ குளிர் நெஞ்சம் உடையவனே பாசநீக்கம் செய்பவனே
தேடியும் காணமுடியாத தலைமை உடையவனே
உனக்கொரு விண்ணப்பம்
வேறாக உட்கொண்டு என்னை இகழாதே
எனக்குள் ஒளியாமல் உள்ளபடியே உரைக்கின்றேன்
கடும் சொல் தவிர வள்ளலே உனது அன்பர்களுக்கு
இனிய சொல் தந்ததும் இல்லை
பணிவுடன் ஒன்றைத் நான் தந்ததும் இல்லை
தீய சொல்லாகிய பொய் சொல்வதென்றால் பூரித்து மகிழ்கிறேன்
ஆனால் உண்மை பேசுவதை நான் விரும்பியதே இல்லை
வாயால் துன்பம் விளைவிக்காத வாய்மை எனக்கில்லை
மெய்யால் துன்பம் விளைவிக்காத மெய்ம்மை எனக்கில்லை
உள்ளத்தால் துன்பம் விளைவிக்காத உண்மையும் எனக்கில்லை

பொருந்தா நெறியாகிய  உயிர்க்கொலையாகிய
பொல்லாத விரதம் பூண்கிறேன் உண்கிறேன்
கொல்லாத விரதம் பூண்டதில்லை

பிறவிகளை மேலும் மேலும் வருவிக்கும்
இருள் சேர்க்கின்ற புகழை விரும்பினேன்
நல்ல நெறிக்குப் போகாதவர் புகழைக் கேட்க விரும்புகிறேன்
வானவரும் தானவரும் புகழும் உந்தன்
பொருள் சேர் புகழைக் கேட்க நினைத்ததும் இல்லை
வஞ்சம் கொண்டு இனிமையாக நடிக்கும்
நுண்ணிய இடை மாதர்களுக்கு ஏவல் புரிந்தேனே தவிர
உனது பொன் அடிக்கு என்றுமே தொண்டு புரிந்தது இல்லை
மூன்று குற்றமாகிய காமத்தாலும் கோபத்தாலும் மயக்கத்தாலும்
நெருக்கப்பட்ட என் மனம் செக்கில் இடப்பட்ட எள் போல
சிந்தை நசிந்தது தவிர
மூன்று குற்றம் முறிக்க நான் எண்ணியதே இல்லை
                                                                     ( தொடர்வோம்_)


 

துன்பங்களின் கூட்டுத்தொகை !


ஓம்.

துன்பங்கள் வந்தால் துடித்துப்போகாதார் யாருமில்லை. மொத்த துன்பங்களும் தொகுப்பாக வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கொரு பாடல் இருக்கிறது. “அர்த்தமுள்ள  இந்துமதம்” கண்ணதாசன் நூலில் படித்தேன். அந்த பாடல் எழுதியவர் பெயர் அதில் போடவில்லை. ஆனால் “வாழையடி வாழை” வடலூர் மேட்டுக்குப்பத்திலிருந்து வெளிவரும் இதழில் ராமச்சந்திர கவிராயர் என இருந்தது. அந்த இதழை நடத்துபவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். நன்றி.
               அழகான ( படா அவஸ்தையான) அந்தப் பாடல் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் தன்மைகள் கொண்டிருக்கிறது. அது இதுதான்:-
                     “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
                      அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக
                      மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
                       வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
                       சாவோலை கொண்டொருவன் எதிரே வர
                        தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
                        கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க
                       குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே”
இந்தப்பாடலின் பொருளை சிந்திப்போம். ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். வீடே நச நச என இருக்கும். காரியம் ஒன்றும் புரியாது. (இப்போதைய வெள்ளம் வந்த சென்னை வீடு மாதிரி) காய்ந்த இடம் இல்லாமல் இருக்கும். அப்போது மழையும் பொழிந்தததாம். வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லையாம். வீடும் விழுந்து விட்டதாம். வீட்டு வேலைக்கார அடிமை உதவி கேட்கலாம் என்றால் செத்துவிட்டானாம்.  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடினானாம். வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டாராம். நெருங்கிய உறவினர் இறந்தார் என்று சாவோலை அதே நேரத்தில் வந்ததாம். அதே நேரத்தில் மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் வந்துவிட்டாராம். பாம்பும் தீண்டியதாம். அரசர் எதிரே வந்து நிலத்துக்கு கட்டவேண்டிய கடனைக் கேட்டாராம். அதே நேரத்தில் குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்றாராம்!
              
                    
                   

Friday, 11 December 2015

மகாகவி பாரதியார்


மகாகவி பாரதியார் பற்றி எழுதுமுன் நாள் போய்விட்டது. சரி.  பலர் அவர் கவிதைகள் மட்டும் எழுதினார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர் எழுதின கதைகள் எல்லாம் திக்கான பசும்பால் போல இளைஞர்களுக்கு வழி காட்டுவன.
சற்று முன் படித்த ஒரு கதையை அடியேனின் அன்பர்களுக்கு:-
குண்டூசி வியாபாரம்
ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக்கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம் பண்ணினான். அவனைப்பார்த்து குண்டூசி வியாபாரியும்பகல் வெயில் நேரத்தில் அரைத்தூக்கமாய்க் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக்கொடுக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒரு நாள் பகல் வெய்யிலில் குண்டூசிக்காரன் அரைகண்ணைத்திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டுசி டப்பி ஒன்று இருக்கிறது. இவன் கன்விலே ஒரு பெண் வந்தாள்.அவள் வந்து தன் புருவத்திலும் கண் இமையிலும் ஜவ்வாது தடவுவதாக கனா கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்னிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக் கூடாது 

உபரி சாட்சி


                              
                         

அது ஒன்றும் காண முடியாத செடி அல்ல
ஆனால் அபூர்வத்தின் கையெழுத்து போன்று
கழிவறை சன்னலின் விளிம்பில்
மூன்று அடி ஆழம் தாண்டி வேர் விட்டு
வளர்ந்திருக்கிறது ஆலம் கன்றாய்.
திட்டமிட்டு நட்டாலும்
வளர்க்க முடியாது அப்படி ஒரு ஆலம் கன்று
கட்டிட மண்ணில் விழுந்தது விதி எனினும்
சுவராகும் போது
தப்பித்திருக்கக் கூடாதா என உள் மனம் ஏங்குகிற்று
பக்கத்திலேயே வெண்டிலேட்டர் வட்டம் பரிகாசம்
கழிவறை வருவோர் போவோர் காணாமல்
புறக்கணிக்கின்ற அதிசயத்தின் வேதனையை விடவா பெரிது
என அந்த ஆலமர வேர் நினைக்கும் போது
நானும் 
மற்றுமொரு உபரி சாட்சியாகத்தான் இருந்தேன்.

Wednesday, 9 December 2015

அடடா இராமானுஜன் சார் !



அழைத்தேன் சொற்களை மெல்ல அவை விசும்பின
நான் எதிர்பார்க்கவில்லை அட யார்தான் அறிவார்
இத்தனை  சீக்கிரம் அவர் மறைவாரென்று
தனிமையில் வளர்ந்து ஓங்கிய மூங்கீல் முறிந்ததுபோல்
சட்டென அவர் உயிர் பிரிந்திருக்கக் கூடும்
ஒரு கம்பீரம் ஒரு அடர் கனமான குரல்
இதம் படிந்த உத்தரவின் வீச்சு
கலை இதயங்களை இரசிக்கும் மேன்மை ருசி
புத்தக நெஞ்சில் மலர்ந்த உயர்ந்த ஆங்கிலம் 
போலிகளை விமர்சிக்கும் வெளிப்படைச் சிரிப்பு
கற்பித்தல் எப்படி இருக்கக்கூடாது என்பதை அறிவுறுத்தும் தெளிவு
எனக்குத்தெரிந்து அவர் ஒரு தைரிய உருவம்
அசல் கலைக்கு உள்ளே பூக்கும் தாகமும் தேடலும்
எதுவும் போகவில்லை சார்!
இருக்கிறீர்கள் மாணவ மாணவிகளுக்கு உரைத்த சொற்களில்
ஒன்று கேட்கிறேன்
வட்டம் ஐந்து நெய்வேலி சுடுகாடே ஏனிந்த அவசர அழைப்பு?
8.12.2015 பிரதோஷ நாள் என்றா!

 

Monday, 7 December 2015

ஆனாய நாயனார் குருபூஜை (7.12.2015)



அது ஒரு சிறிய கருவிதான். ஆனால் அவர் இலட்சியம் குறிக்கோள் எண்ணம் உயர்வாக இருக்கும்போது கருவியின் பயன்பாடு பெருமை பெற்று விடுகிறது.ஆனாய நாயனார் அவர் பெயர். அவர் கையில் இருந்த கருவி புல்லாங்குழல். (மேல் மழநாடு என்பது முந்நாள் பெயர்)ஊர் லால்குடி அருகில் உள்ள திருமங்கலம்.
              கருவி காரணமா? இசை காரணமா? எது மூலம்? கருவியிலிருந்து இசை வருவது இல்லை என்பதே உண்மை. அன்பு உள்ளே இருக்க வேண்டும். அன்புதான் இசை ஆகிறது. பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம என்பதை புல்லாங்குழல் இசையில் பயின்றார் ஆனாயர்.
                     அன்பு ஊறியது. ஊறிய அன்பு இசையானது. பொங்கியது.அமுத இசை ஒலித்தது. ஒலியால் வன்பூதப் படையாளியாகிய சிவனின் ஐந்தெழுத்தையும் துதித்தார். வாழ்த்தினார்.ஊதும் அளவு முறையாக ஒலிக்க என்ன ஆனது? எந்த உயிர்களின் எலும்பிலும் கரைந்து உருக்கும் இன்னிசை அவரது புல்லாங்குழலுக்குள் சேர்ந்தது.
                       ஆனாய நாயனார் மாடுகள் மேய்ப்பவர். பசுக்கூட்டங்கள் அவர் வாசிக்கப் போவதை அறிந்து கொண்டு சூழந்து வந்தன. அப்போது சுற்று சூழல் பற்றி வர்ணிக்கலாம். ஆனால்சேக்கிழார் பெருமான் காலத்தை வருணிக்கும் அழகு அசாத்தியமானது. அது இதுதான்:
                        நீல நிறம் கொண்ட மயில்கள் அகவின. கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்பண் பாடின. முல்லை அரும்புகள் புன்முறுவல் செய்தன.அப்போது வானில் வருகின்ற மின்னல் என்பது இடையாக மாலைப் பொழுதே கொங்கையாக அசைந்தபடி உலகம் என்கிற பெரிய அரங்கி ஆடிட காலம் என்ற பருவத்தை உடைய மங்கை வருகின்றாளாம்!