Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, 12 December 2015

துன்பங்களின் கூட்டுத்தொகை !


ஓம்.

துன்பங்கள் வந்தால் துடித்துப்போகாதார் யாருமில்லை. மொத்த துன்பங்களும் தொகுப்பாக வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கொரு பாடல் இருக்கிறது. “அர்த்தமுள்ள  இந்துமதம்” கண்ணதாசன் நூலில் படித்தேன். அந்த பாடல் எழுதியவர் பெயர் அதில் போடவில்லை. ஆனால் “வாழையடி வாழை” வடலூர் மேட்டுக்குப்பத்திலிருந்து வெளிவரும் இதழில் ராமச்சந்திர கவிராயர் என இருந்தது. அந்த இதழை நடத்துபவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். நன்றி.
               அழகான ( படா அவஸ்தையான) அந்தப் பாடல் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் தன்மைகள் கொண்டிருக்கிறது. அது இதுதான்:-
                     “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
                      அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக
                      மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
                       வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
                       சாவோலை கொண்டொருவன் எதிரே வர
                        தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
                        கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க
                       குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே”
இந்தப்பாடலின் பொருளை சிந்திப்போம். ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். வீடே நச நச என இருக்கும். காரியம் ஒன்றும் புரியாது. (இப்போதைய வெள்ளம் வந்த சென்னை வீடு மாதிரி) காய்ந்த இடம் இல்லாமல் இருக்கும். அப்போது மழையும் பொழிந்தததாம். வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லையாம். வீடும் விழுந்து விட்டதாம். வீட்டு வேலைக்கார அடிமை உதவி கேட்கலாம் என்றால் செத்துவிட்டானாம்.  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடினானாம். வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டாராம். நெருங்கிய உறவினர் இறந்தார் என்று சாவோலை அதே நேரத்தில் வந்ததாம். அதே நேரத்தில் மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் வந்துவிட்டாராம். பாம்பும் தீண்டியதாம். அரசர் எதிரே வந்து நிலத்துக்கு கட்டவேண்டிய கடனைக் கேட்டாராம். அதே நேரத்தில் குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்றாராம்!
              
                    
                   

Friday, 11 December 2015

மகாகவி பாரதியார்


மகாகவி பாரதியார் பற்றி எழுதுமுன் நாள் போய்விட்டது. சரி.  பலர் அவர் கவிதைகள் மட்டும் எழுதினார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர் எழுதின கதைகள் எல்லாம் திக்கான பசும்பால் போல இளைஞர்களுக்கு வழி காட்டுவன.
சற்று முன் படித்த ஒரு கதையை அடியேனின் அன்பர்களுக்கு:-
குண்டூசி வியாபாரம்
ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக்கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம் பண்ணினான். அவனைப்பார்த்து குண்டூசி வியாபாரியும்பகல் வெயில் நேரத்தில் அரைத்தூக்கமாய்க் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக்கொடுக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒரு நாள் பகல் வெய்யிலில் குண்டூசிக்காரன் அரைகண்ணைத்திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டுசி டப்பி ஒன்று இருக்கிறது. இவன் கன்விலே ஒரு பெண் வந்தாள்.அவள் வந்து தன் புருவத்திலும் கண் இமையிலும் ஜவ்வாது தடவுவதாக கனா கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்னிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக் கூடாது 

Monday, 7 December 2015

ஆனாய நாயனார் குருபூஜை (7.12.2015)



அது ஒரு சிறிய கருவிதான். ஆனால் அவர் இலட்சியம் குறிக்கோள் எண்ணம் உயர்வாக இருக்கும்போது கருவியின் பயன்பாடு பெருமை பெற்று விடுகிறது.ஆனாய நாயனார் அவர் பெயர். அவர் கையில் இருந்த கருவி புல்லாங்குழல். (மேல் மழநாடு என்பது முந்நாள் பெயர்)ஊர் லால்குடி அருகில் உள்ள திருமங்கலம்.
              கருவி காரணமா? இசை காரணமா? எது மூலம்? கருவியிலிருந்து இசை வருவது இல்லை என்பதே உண்மை. அன்பு உள்ளே இருக்க வேண்டும். அன்புதான் இசை ஆகிறது. பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம என்பதை புல்லாங்குழல் இசையில் பயின்றார் ஆனாயர்.
                     அன்பு ஊறியது. ஊறிய அன்பு இசையானது. பொங்கியது.அமுத இசை ஒலித்தது. ஒலியால் வன்பூதப் படையாளியாகிய சிவனின் ஐந்தெழுத்தையும் துதித்தார். வாழ்த்தினார்.ஊதும் அளவு முறையாக ஒலிக்க என்ன ஆனது? எந்த உயிர்களின் எலும்பிலும் கரைந்து உருக்கும் இன்னிசை அவரது புல்லாங்குழலுக்குள் சேர்ந்தது.
                       ஆனாய நாயனார் மாடுகள் மேய்ப்பவர். பசுக்கூட்டங்கள் அவர் வாசிக்கப் போவதை அறிந்து கொண்டு சூழந்து வந்தன. அப்போது சுற்று சூழல் பற்றி வர்ணிக்கலாம். ஆனால்சேக்கிழார் பெருமான் காலத்தை வருணிக்கும் அழகு அசாத்தியமானது. அது இதுதான்:
                        நீல நிறம் கொண்ட மயில்கள் அகவின. கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்பண் பாடின. முல்லை அரும்புகள் புன்முறுவல் செய்தன.அப்போது வானில் வருகின்ற மின்னல் என்பது இடையாக மாலைப் பொழுதே கொங்கையாக அசைந்தபடி உலகம் என்கிற பெரிய அரங்கி ஆடிட காலம் என்ற பருவத்தை உடைய மங்கை வருகின்றாளாம்! 

Thursday, 3 April 2014

குரு வடிவம்


                    

“குருவே சிவமென்று கூறினன் நந்தி” என்று திருமூலம் பேசுகிறது. இந்த உலகிற்கு நம்மைக் கொண்டு வர இரண்டு பேர் தேவைப்பட்டனர். ஆனால் இந்த உலகில் இருந்துக் கொண்டே இன்னொரு உலகை நாம் அறிய உதவுகிறவர் குரு ஒருவரே. குருவின் கண்களில் வாழ ஒருவன் சேவை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பயன் கருதாத சேவை. “இன்ன செய்தால் இன்னது வரும்” என்ற எதிர்பார்ப்பு இல்லாத சேவை ஒன்றைச் செய்து தனது மனதை தானே செதுக்கும் சிற்பியாகவும்; உளி அடித்து உருவான சிலையாகவும் முயற்சிகளை மேற்கொள்வது குருவை நோக்கி அவனை நகர்த்தும் .
குரு நேரில் வந்து “நாளை முதல் நானே உனக்கு குரு” என்று சொல்லிக் கொள்வதில்லை. “அறிந்தவர் அறிவாராக” என்று மவுனமாக தனது செயல்களைப் புரிகிறார் குரு. ஆலமரத்தின் கனிகளில் , எது ஒன்று நிறைவு நோக்கிப் பழுக்கும் என்று அறிந்திருந்தும் மவுனம் காப்பவர் குரு. குருவின்  காலடிகளில் தனது எதிர்காலத்தை வைத்துவிட்டு நிகழ்காலத்தின் கத்திமுனைகளை ஆரஞ்சு சுளைகளைப் போல கடித்துச் சுவைக்க தனது சிஷ்யனை தயாராக்குவது குருவின் மாண்பு.
“மலை உச்சி அடைய எந்த வழியாக ஏறத்துவங்கலாம்? என்று சிஷ்யன் பவ்யமாக பணிவாகக் கேட்கிறான். “உச்சியிலிருந்து துவங்கு” என்கிறார் ஜென்குரு. அதாவது மலை உச்சியை இப்போதே அடைந்துவிட்டவனைப் போல உன் மனநிலையை உயர்த்திக் கொள். மலையின் உயரம் உன் மன உயரமாகட்டும். அந்த மனோநிலைக்கு உன்னை நீ வசியப்படுத்திக் கொண்டு மலை ஏற ஆரம்பி என்று அர்த்தம்.
நாம் தேடும் குரு எப்படி இருப்பார் என்று ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் ஏங்கியிருப்போம். வாழ்வின் துன்ப சுவடுகளில் அழுந்தி அழுந்தி அடி வாங்கிய பின்பும் நம்மை நடத்திச் செல்லும் பூரண சக்தி நம்மைத் தாண்டிய சக்தி வடிவான குருவிடம் உள்ளது என்று நமது அறிவு ஒத்துக்கொள்வதில்லை. “அறியும் அறிவை  நீ தந்துவிடு” என்று நாம் மனம் கசியக் கேட்பதுமில்லை. கேட்காத ஒன்று எப்படிக் கிடைக்கும்?

                                           (குருவைத் தேடுவோம்) 

Thursday, 20 March 2014

ரக்பி விளையாட்டு!



                பயங்கரமான கனவு கண்டேன். ரக்பி மேட்ச் ஆடுகிறேன். (அதாவது பந்தினை கையில் தூக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம்)  ஆட்டம் ஆரம்பிக்கிறது.யாரோ சில ரவுடி ப்ளேயர்கள் வருகிறார்கள். ரெப்ரீ எனும் ஆட்ட நடுவரைத் தாக்குகிறார்கள். இப்போது அது மிக நல்லதாக இருக்கிறது.எல்லா ஆட்டக்காரர்களுக்கும் ஒரே குறிக்கோள்தான். பந்தினை விரட்டி விரட்டி எதிர் அணியின் கோல் போஸ்ட்டில் சேர்க்க வேண்டும். சொந்த கோல் போஸ்ட் நோக்கி பந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். நிறைய விளையாட்டுக்காரர்களுக்கு காயம் ஏற்படுகிறது. சரியான அடி பலருக்கு.
               நிஜமாக சொல்ல வேண்டுமானால் எனக்கும் தலையில் பலத்த காயம் ஒரு ரெளடி பிளேயரால் ஏற்பட்டுள்ளது. ஏன் என்னை அடித்தான் என்று ரத்தம் துடைத்துக்கொண்டே யோசிக்கிறேன். ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது. ஒன்றுமே புரியவில்லை. இது ஒரு கனவுதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பலத்த தலைக்காயங்களுடன் சில விநாடிகளில் இறந்துபோகிறேன். ஹெல்மெட் அணியாமல் செத்துப்போனேனே என்று ஒரே ஏக்க ஏக்கமாய் வருகிறது. கடைசி நிமிட ஏக்கம். ரக்பி விளையாட ஏற்பாடு செய்தவர்கள் நடுவர் எனும் ரெப்ரீயை காப்பாற்றியிருக்கலாம். சை! கனவு கலைந்து எழுந்து உட்கார்ந்தேன்!
                     மறு நாள் இன்னொரு கனவு. ரக்பி மேட்ச்! இந்த முறை நான் ஹெல்மெட்டோடு ஆடுகிறேன். ரவுடிகள் நுழைந்து தொப் தொப் என நடுவருக்கு அடி விழுகிறது. சில விநாடிகளில் மயங்கிப்போய் விழுகிறார். எப்படியோ ரக்பி ஏற்பாடு செய்தவர்கள் டாக்டரை அழைத்து வர ரெப்ரீ காப்பாற்றப்படுகிறார்.நான் இந்த முறை ஆட்டத்தில் தோற்றாலும் நிம்மதியாகவே உணர்ந்து வீட்டுக்கு வருகிறேன். ஏதோ திருப்தி. 
                     இரண்டு கனவுகளையும் அழ்ந்து சிந்திக்கிறேன். முக்யத்துவம் ஆராய்ந்தேன். ரப்பி மேட்ச் என்பது வாழ்க்கையின் குறியீடு என்பது புரிந்தது. நாம் இந்த வாழ்க்கையில் பிறப்பு எடுத்து வந்ததற்கு காரணமே இந்த பிரம்மாண்டத்தின் படைப்பில் பங்கு பெறவே. இதில் இன்னொரு கருத்து இல்லை. அது புரிந்தால் வெற்றி. இல்லையேல் தோல்வி. அதுவும் கனவில் வருகிறது. நான் இந்த விளையாட்டில் எனது பதப்படுத்தப்பட்ட ஈகோவுடன்  ஆடியிருக்கிறேன். இப்படியிருந்தால் இப்படி நடந்து கொள்வேன் என பொத்தி பொத்தி வளர்ந்த ஈகோ அது.  என்னுடைய உடம்பு, என்னுடைய ஐந்து புலன்கள்,எனது மனம், எனது சாதுர்யமான புத்தி ஆகியவை என்னுடன் ரக்பியில் விளையாடிய மற்ற மற்ற ப்ளேயர்கள். அவர்கள் என்னோடு சேர்ந்து சேர்ந்து ஆடினார்கள். நான் ஓடும்போதெல்லாம் அவர்களும் ஓடி மகிழ்ந்தார்கள்.
                     எதிர் டீமில் விளையாடியவர்கள் யார்? அவர்கள் என்னுடைய மற்ற மற்ற புலன் இன்பங்கள்.அவை எனது பேராசைகள். எனது கோல் போஸ்டில் நான் எவை எதற்கு எதிராக நிற்கிறேன் தெரியுமா? என்னுடைய காயங்கள், என்னுடைய அதிருப்திகள்,எனது கோபங்கள் ஆகியவற்றை யாரும் பார்த்துவிடாமல் தடுக்க நான் எனது கோல் போஸ்ட்டில் நிற்கிறேன். நடுவர் யார்? அவர்தான் ஆன்மீக விழிப்புணர்வு.
                    இந்த பூமியில் நாம் இயங்க சில விதிகள் இருப்பதுப்போல ஆன்மீக விதிகளையும் நாம் பின்பற்றாமல் வாழ்வு விளையாட்டை விளையாட முடிவதில்லை. ரக்பி விளையாட்டுபோல - வாழ்க்கை விளயாட்டுக்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு . ஆன்மீக விழிப்போ என்கின்ற ரெப்ரீ எனும் நடுவர் நம் தவறை சுட்டிக்காட்டும்போது நாம் அவரை வீழ்த்தி விடுகிறோம். அதன் பிறகு - நமது பதப்படுத்தப்பட்ட ஈகோ, உடம்பு, ஐந்து புலன்கள்,  புத்திசாலித்தனம் என்பவை  இன்பங்களைத்தேடி வீரவெறியோடு போரிடும் நார்வே போர்வீரனைப்போல ஈகோவுடன் போரிட்டு  வலிகளும் தாக்குதல்களும் பெறுகின்றது .ரத்தம் கட்டிப்போய் கன்றிப்போன காயங்களுடன் - திருப்தியின்மையுடன் - கடைசியில் ஒரு நாள் இறந்து போகிறோம். அப்போது நினைக்கிறோம்  மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்து நிச்சயம் நன்கு விளையாடுவோம் என்று. இந்தச் சுழல் முடிவதே இல்லை.
                         இரண்டாம் கனவில்- நடுவரை - ரெப்ரீயை ரக்பி அமைப்பாளர்கள் மூச்சை தெளியவைத்தது எதனைக் குறித்தது எனில் - சற்குரு நமது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்றுக்கொண்டு நம்மை காப்பாற்றிவிடுதல் ஆகும். அதன் பிறகு நமக்கு வாழ்வு எனும் விளையாட்டின் விதிகள் புரிகின்றன. வென்றாலும் தோற்றாலும் நமது வாழ்வு அவர் ஆசிர்வாதமாகிறது. விளையாட்டு முடிகிறது. நாம் நமது இல்லம் திரும்புகிறோம். அங்கே நாம் நமது உண்மையான “நாம்”- க்குள் நுழைவோம்.விடுதலை உணர்வு. நிறைவு ததும்பும் ஆனந்தம் கிடைக்கிறது. மீண்டும் வாழ்வில் பிறந்து விளையாடும் எண்ணம் வருவதேயில்லை. 
               


  *****

Sunday, 20 January 2013

தான் இல்லாது கொடுக்கும் கலை

      “தானம்” என்பதன் தெளிவான விளக்கத்தை கீதை உபதேசித்துள்ளது. முதலில் , அது தகுதியுள்ளவர்களுக்கே செய்யப்பட வேண்டும். அதாவது அதனைப் பெறுகிறவன் , திருப்பித் தரும் அளவுக்கு வசதி வாய்ப்புள்ளவனாக இருக்கக்கூடாது. அப்படி வசதி வாய்ப்புகள் இருந்தால் “தானம்” என்பது தலைகீழ் ஆக வாய்ப்புண்டு.
         இரண்டாவதாக, தானம் என்கிற செயல் உண்மையிலேயே தேவைப் படுகிறவர்களுக்கு  நிகழ வேண்டும் என்கிறது கீதை. மூன்றாவது சரியான இடத்தில் நிகழ வேண்டும். (இக்கருத்து தானம் என்பது மிக ரகசியமாகவும் வேண்டாம். மிகவும் விளம்பரமாகவும் செய்யப்பட வேண்டாம் என்று பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்) நான்காவது: கொடுக்கிற நபர் தனது கடமையாக எண்ணியே உதவி அளித்தல் எனும் தானம் நிகழ்த்துதல் வேண்டும்.
          எதிர்பார்ப்பின் எந்த ஒரு கூறுபாடும் தானம் தருகிறவருக்கு இருந்துவிடக் கூடாது. மரியாதை பெறுதல் நிமித்தமாகவும் கூடாது. பெறுகிறவர்கள் அன்பை எதிர்பார்ப்பதும் கூடாது. எந்த மறுபலனும் அற்றதே தானம். இந்த நான்குவித கோட்பாடுகளும் நிரம்பியதே சாத்வீக தானம் எனப்படும். அது உண்மையானது . நல்லது.
            தானே முன் சென்று தருதலை குரானும் கட்டாயமாக்கியுள்ளது.
     கீதையும் பிறருக்கு கொடுப்பதை “தனது கடமை” என்ற உணர்வோடு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கண்ணில் தெரிகின்ற- கண்ணறியாமல் மறைத்த உனது ஒவ்வொரு சொத்துக்கும் “சகத்” குறிப்பிட்ட தொகையில் செலுத்தப்பட வேண்டும் என்று புனித குரான் கூறுகிறது. மறைத்தோ வெளிப்படையாகவோ தானம் செய்வதை புனித குரான் கொடுப்பவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறது. ஏனெனில் கருணையோடு செய்யப்படுவதை விரும்புகிறது. அதிகாரம் ,புகழ், கெளரவம் பெற விரும்பும் தானம் தானமே அல்ல என்கிறது புனித குரான்.
      மனிதன் என்பவனை வர்ணிக்க வேண்டுமானால் எதை எதை தியாகம் செய்தானோ அதில்தான் உண்மையாக இருக்கிறான் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.
       ஜான் கார்மோ கூறுகிறார்:-  தியாகம் என்பது நமது வாழ்வின் பரிசு. அந்தப் பரிசு நமது நேரத்தினால் ஆக்கப்பட்டிருக்கலாம். நமது திறமையாக இருக்கலாம்.  நமது சொத்தாக இருக்கலாம்.


*****

Wednesday, 16 January 2013

செவிகளா ! கண்களா!

           
                சிந்திக்கச் சிந்திக்க திகைப்பூட்டுவதே வாழ்வின் அதிசயம். நிகழ்காலக் கடமைகளில் உழல்வது மட்டுமே நமது பொறுப்பு என அது நம்மை நம்ப வைக்கிறது. ஆனால் நாம் எதிர்காலக் கடமைகளுக்கும் இலட்சியங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அழுத்தபூர்வமான நிலையில் அது நம்மை அழுத்தி இருப்பதை மறுக்க முடியுமா ? இப்படிப்பட்ட வாழ்வியலைக் கொண்டுள்ள நாம் , நமது செயல்பாடுகளுக்குள் இயந்திரங்கள் பலவற்றைப் புகுத்திக் கொண்டோம். புகுத்துதலுக்கு விஞ்ஞானத்தைக் காரணமாகச் சுட்டினோம். அது நமது நேரத்தை மிச்சம் செய்வதாக கற்பனை செய்தோம். ஒரு கருவியால் மிச்சமாகும் நேரம் , இன்னொரு கருவியைப் பராமரிக்க ஆகும் நேரத்தில் கழிந்து விடுகிறது. பொருளுக்காக கருவிகளை நுழைத்து , கருவிகளுக்கான பொருளாகிப் போய்விட்டதே இந்த நூற்றாண்டில் நம் பரிதாப நிலை.
ஒன்றல்ல, இரண்டல்ல..எண்ணற்ற  கருவிகள் நம் வாழ்வைச் சூழ்ந்து விட்டன. எதற்குத்தான் கருவி என்றில்லை. பல் தேய்த்துவிடும் கருவி , உடல் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் கருவி, சின்ன வெங்காயம் உரிக்கும் கருவி, நாக்கைப் பிரட்டாமல்  உணவை மெல்லாமல் வயிற்றுக்குள் தள்ளும் கருவி , என்பவற்றைக் கூட எதிர்பார்க்க ஆரம்பித்துவைக்கிறது இன்றைய கருவிக்காலம். மாறாக,  நம் முன்னோர்கள் உண்ட உணவின் பலங்கள், அவர்களை அழியாத கோவில் படைப்புகளை நிர்மாணிக்கும் பலசாலிகள் ஆக்கி வைத்திருந்தன என்பதை எண்ணிப்பார்க்கலாம். போர் பயமற்ற அன்றைய சூழல் ஆன்மாவை நோக்கி , எளிதாக - ஆழமாக - உண்மையாக - மிகப்பெரும் தமிழர்கள் - அதிக எண்ணிக்கையில் ஈடுபட உதவிற்று,  ஆன்மீகம் சுத்திகரிக்கப்பட்டது. ஆகம விதிகளில்  நிர்ணயமான கோவில்கள் மிகப்பல சத்தியச் சுடராய் தலை நிமிர்ந்தன. இன்றும் அவை நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமது ஆன்மா எழுப்பும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளிப்பன. இன்னும் அதன் சக்திகள் நமக்குள்தூண்டலை உற்பத்தி செய்கின்றன.

                ஏக்கப்பெருமூச்சுவிட வைக்கும் கடந்த காலத்தையும், இயந்திர வாழ்வையும் ஒப்பிட்டு மீண்டும் நுகத்தடி மாடுகள் போல நுழைவதாலோ நாம் இயந்திரகதியில் சுழல்வதாலோ, தேவையான காரணங்களை அடுக்குவதாலோ வாழ்வின் எல்லை நம்மை மன்னித்துவிடுமா என்ன!
              சொந்த பந்தங்களுக்கும் , அலுவலக வேலைகளுக்கும் , போட்டுக் கொண்ட அரிதாரங்களுக்கும் ஈடு கொடுப்பதிலேயே  காலம் கழிக்கும் நம்மை காலன் கேட்கும் கேள்வியோ வேறு.  ஹீப்ரு மத நம்பிக்கையில் மேலுலகில் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கப்படுகிறது. 
1. நீ பூமியில் சந்தோஷமாக இருந்தாயா ?
 2. பிறரை சந்தோஷமாக வைத்திருந்தாயா ? 
          இந்த இரு கேள்விகள் எழுப்பும் அதிர்வுகள், மிகவும் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன மனிதனுக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசாட்சி மிக்க நடுத்தரவர்க்கத்தினர், உண்மையும் உழைப்பும் மிக்க அடித்தட்டு வர்க்கத்தினர் , தர்ம சிந்தையுள்ள சில மேல்தட்டு மக்கள் ஆகியோர் இதயத்திற்குள் இக்கேள்விகள் பாயும் சக்தி கொண்டுள்ளன.
          மிக மிக அதிகமான விஞ்ஞானக் கருவிகளில் தொலைபேசியும் ; செல்போனும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மிக மிக அருகாமை தரும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மகளை வெளிநாட்டில் கற்க அனுப்பும் தந்தை , தன் ஒரே மகனை வடகிழக்கு மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பும் தாய் ஆகியோர் அந்த செல்போனை மட்டுமே  நம்பி அனுப்புகின்றனர். பேச்சே ஆதாரம். பேச்சே மகனின் உருவம்!
            தொலைபேசியும் செல்போனும் என்ன செய்துள்ளன?நமது உறவுகளை செவி வழியே புகுத்தி சொல்பிரபஞ்சம் வழியாக, ஏற்கனவே நாம் நம் மனதில் பதித்திருந்த சொல்சித்திரம் வழியே  விரிந்து கொள்கின்றனவே தவிர, நிஜத்தில் வேறு ஏதும் நிகழ்வதில்லை. அதாவது உதாரணத்திற்கு ஐந்தாண்டுகளாக ஒருவர் வெளியூரிலிருந்து பேசிப்பேசி ஒருவரைக்குறித்து ஏற்படுத்திக்கொண்ட உருவம், நேரில் காணுகையில் (கண் என்ற ஊடகம் வழியே காணும்போது) மிக மிக மாறுபட்டதாக இருக்கும். அதாவது, நமது அகத்தில் ஒரு பிளவு ஏற்படுத்திவிட்டன கருவிகள். இதனால் தனது கண்ணை நம்புவதா, செவியை நம்புவதா என்ற  கேள்வி முடிச்சில் இருபத்தோரம் நூற்றாண்டு மனிதன் தவிக்கிறான். ஓயாத பேச்சுகளின் வழியே ஏற்பட்ட அகபிம்பம் வேறு. நேரில் கண்களுக்கு ஏற்படும் வேறு நடத்தை கொண்ட மனித ஆளுமை வேறு.
                    வேறுபட்ட பொய்ச்செய்திகள் செல்போனில் மழைபோல பொழியும் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க எளிய வழி இருக்கிறது. அண்ணல் காந்தி சொன்ன மிக எளிய வழி தான் அது. ஆம். உண்மை பேசுதல். தொலைபேசியிலும் செல்லிலும் உண்மையான தகவல்களை மட்டுமே நேர்மையாக (நேரில் இருப்பதாகக் கருதி) பரிமாறிக் கொண்டால் மனித உறவுகளில் மகிழ்ச்சி ஏற்படும்.
            நவீன கருவிகள் எத்தனை நுழைந்தாலும் மனித உறவுகள் காயப்படாமல் தப்பிக்க வழி ஏற்படும். பூசல்கள் குரோதங்கள் அழியும். இல்லையேல் தப்பும் தவறுமாக அவசரமாக தொலைபேசியில் பறக்க விடும் சொற்களால் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் நிலை ஏற்படும். தொலைபேசியிலும் செல் பேசியிலும் பேசும் வாழ்வை, கூடிய வரையில்,  சுத்தம் கொள்வோம். நேர்மையுடன் நடந்து மனித உறவு விரிசல் தடுப்போமாக.

                           *****