Showing posts with label வள்ளலார் சிந்தனைகள். Show all posts
Showing posts with label வள்ளலார் சிந்தனைகள். Show all posts

Friday, 17 January 2014

காணுக தைப்பூச விழா!









“அருட்பெருஞ்சோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி” என்று வடலூர்  சாலை முழுதும் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். வெண் ஆடை உடுத்திய உடலில் திருநீறு அணிந்த மனிதர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். கூப்பிட்டு கூப்பிட்டு சாப்பாடு போடும் தனித்த கனிவு வடலூரில் நிகழ்கிறது. பலப்பல  ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்து அன்னதானம் செய்வது சகஜமாகக் காணலாம். ஏன்?
இன்று வடலூர் தைப்பூசம். ஆம். வள்ளல்பெருமான் என்கிற மகாசித்தர் இன்றுதான் முத்தேக சித்தி பெற்றார். அதாவது தனது மூன்று உடல்களையும் துறந்து - இனி எல்லா உடல்களிலும்  இருப்பேன் என வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் அருட்பெரும்ஜோதி ஆனார் . பூச நட்சத்திரம். தை மாதம்.                      
சத்திய ஞான சபை உள்ளது. மாய வாழ்வின் ஏழு திரைகள் விலக்கி காட்டப்படுகிறது.நமது  மூளையே சிற்றம்பலம். அம்பலக்கூத்தன் நமது அஞ்ஞானத்திரைகள் விலக்கி நமது ஆன்மா நமக்கே புலப்பட்டால் அப்போது திருச்சிற்றம்பலம் ஆகிறது.
வள்ளல் பெருமான் சொன்னவை செய்தவை எழுதியவை எல்லாம் தண்ணீர் போல் எளிமையாக இருக்கும். ஆனால் உணர்வதற்கு ஒரு தாகம் தேவைப்படும். அந்த தாகம் அவர் நமக்குத் தருவது. அது வரை வடலூரில் நிகழ்வன மேலோட்டமான ஒரு செயலாகவே நம்மை மூடிவிடும். திரைகள் விலகுவது அத்தனை எளிதா! எத்தனை பிறவிகளாக வளர்த்துவிட்டோம்! அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஆட்கொள்வீர் என கரைந்து அழுவது தவிர வேறென்ன குறுக்கு வழி இருக்கிறது. “வாய்த்தது நமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” - திருநாவுக்கரசு சாமிகள்.

Tuesday, 5 February 2013

எப்போது ஆட்கொள்ளப்படுவோம்!

                  அன்றிலிருந்து இன்றுவரை விநாடிக்கு விநாடிக்கு அதிசயங்கள் நிரம்பியதுதான் வாழ்க்கை.உணர்ந்து பார்க்கத் தவறிவிடுகிறோம்.இழந்த பின்பு புரிகிறோம்.காரணம் நமது ஆணவம்.இராணுவத்தில் இறந்தவர்களைவிட, நாட்டில் ஆணவத்தால் இறப்போர் தொகை அதிகமாகிவருவது கண்கூடு.இச்செய்திகளை சிந்திப்பதற்க்கு காரணம் இருக்கிறது.”அப்பா வாசனை” என்று ஒரு சிறுகதை.அச்சிறுகதை அமுதசுரபியில் வெளிவந்து பரிசு பெற்றது(1998).அதனை அடியேன் எழுதியது சிதம்பரம் சிவகாமிஅம்மன் கோவில் வளாகத்தில். அச்சிறுகதை இறக்கப்போகும் தந்தை குறித்த மகனின் மனஓட்டமாக அமைந்திருக்கும் ஒரு பாடல் வரும்:-
”நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லா நெஞ்சப் புலையேனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் என் எழுத்தறியும் பெருமானே”
       இப்பாடல் எதில் வருகின்றதென்று அப்போது தெரியாது. வள்ளல்பெருமான் குறித்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஆர்வமும் எழவில்லை இருந்ததில்லை. காலஓட்டத்தில் வடலூரில் குடியேறினோம்.               
                        மேட்டுக்குப்பம் வாழ் அன்னதான வள்ளல் கோவை சிவப்பிரகாச சுவாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது “எழுத்தறியும் பெருமான் மாலை”என்று அன்புடன் அளித்த தொகுப்பில் வள்ளல் பெருமான் இயற்றிய  5 ஆம் பாடலாக மேற்கண்ட  பாடல் இருந்தது. சிலிர்ப்பாக இருந்தது. இது ஏன் அப்போதே எனக்குத் தெரியவில்லை? வள்ளல்பெருமான் உயிர் மீது படிந்திருக்கும் “நான்” என்ற ஆணவ இருளை அடக்கி மிகவும் அவசியப்பட்ட தருணத்தில் மட்டுமே தம்மை அறிவிக்கிறார் என்பதே இதன் பொருள்.
 அதுதான் ரகசியம்.அந்த மாலையின் 31 பாடல்களும் அபாரமான உள் தோண்டல் கொண்டவை.

           நம்மை நாமே விமர்ச்சிக்கவும் உணரவும் அழவும் தொழவும் செய்பவை. என்னுடைய முந்தை வினை தொலைத்து உன் கழலுக்கு ஆளாக்க மாட்டாயா ? என்று ஆரம்பிக்கிறது முதல் பாடல். கடைசி பாடலில் எனை ஆள்வது உன் கடனே என்று முடிக்கும்போது “எனை உடையாய்” என்பார் வள்ளல் பெருமான். நம்மையெல்லாம் உடமையாய் வைத்திருப்பவர் சிவபெருமானும் சக்தியும்.
           திருவொற்றியூர் சிவபெருமான் - அழகம்மை அலாதியான சரணம் புகுந்து தம்மை ஆண்டு கொள்ள இறைஞ்சுகின்ற வள்ளல்பெருமான் அடியேனுக்கு 2002ல் நிகழ்ந்த சிறுகதையின் வரிகளாக நிகழ்ந்து தடுத்தாண்டு கொண்டதாகவே தோன்றுகிறது. “எனக்கு உனக்கு முன் அறியேன் பின் அறியேன் எப்படியோ ஐயா உன் சித்தம் எழுத்தறியும் பெருமானே” வள்ளல்பெருமான் திருவடிகளே சரணம். அருட்பெரும் ஜோதி.அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

                *****

Thursday, 31 January 2013

அருள் நமக்கு கிடைக்குமா!

          ஒரு கோடீஸ்வரர் இருக்கிறார். அவரிடம் யாசகம் கேட்டுச் செல்கின்றோம், கோவில் எழுப்பிட. அவர் தனது கணக்குப் பிள்ளையிடம் கூறி 50000 செக் தருகிறார். இப்போது பணம் தந்தவர் கணக்குப் பிள்ளை என்பதால் அவர் பக்திமான் என்று நினைக்கலாமா? கோடீஸ்வரருக்கு தானே அந்த புண்ணியம் போய்ச்சேரும்? அவர் தன் கையால் எடுத்துத் தரவில்லை, அவ்வளவு தான்.
            வேகமாக விரையும் காரினில் பின் சீட்டில் அமர்ந்து “இப்படிப்போ அப்படிப்போ” என டிரைவருக்கு கட்டளையிடுவார் கார் சொந்தக்காரர். ஓட்டாமல் உட்கார்ந்திருக்கிறார் என்பதால் அவர் காரின் சொந்தக்காரர் அல்லாமல் போய் விடுவாரா ? அவர் அந்நிலையில் இருக்கிறார் அவ்வளவுதான்.
            சிவபெருமான் அருளுதலை சக்தி மூலமாகச் செய்கிறான்.  இதனை சிவமே தனக்கு எடுத்து இயம்பியது என்று அகவல் பாடுகிறார் வள்ளல் பெருமான். அகவல் என்ற சொல் அழகானது. நாய் குரைக்கும். மயில் அகவும். அக ஓசை. காகம் கரையும். இக்கால கவிஞர்கள் தன் துன்பம் கண்டே கரைகிறார்கள். வள்ளல் பெருமான் உலகினர் துன்பம் அற்று வாழ சிவத்திடம் அகவுகிறார் இப்படி:-
“அருள் அலாது ஓர் அணுவும் அசையாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே”
                அதுமட்டுமா சொல்கிறார். அருள் பெற்று விட்டால் எல்லாம் இயலும். இது உண்மை. அதனால் அருளுற முயல்க என்று சிவம் அருளியதாம் அவரிடம். அதாவது அருள் பெற முயற்சிக்க வேண்டும். முயற்சியிலாது எதுவும் கிட்டாது. பக்தியும் அதன் மூலம் அருள் பெற முயல்வதும் சோம்பேறித்தனமானவை அல்ல. அது முயற்சி தொடர்புடையது. அதனால்தான் அருள் பெற முயல்க என்றார் வள்ளலார்.
“பிரான் அருள் உண்டேல் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டேல் உண்டு நல்ஞானம்
பிரான் அருளில் உண்டு  பெருந்தன்மையும்
பிரான் அருளில் உண்டு  பெருந்தெய்வமும் ஆமே”
-    எனும் திருமூலர் வாக்கில் இறை அருளால் நாம் பெருந்தெய்வப் பண்புகளையும் பெற முடிவது புரிய வரும். வள்ளுவப்பெருந்தகை
“அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லாகி ஆங்கு” என்கிறார். 
           நிறையபேர் “ஆங்கு” என்ற சொல்தொடரை விட்டுவிடுகிறார்கள். அப்படிச் செய்தால் அக்குறள் தனித்தனியான இரண்டு வாக்கியங்கள் போல் உப்பு சப்பு இல்லாத முழக்கமாக இருக்கும். உலகப்பொது மறையாம் வள்ளுவம் அப்படி இருக்குமா? இருக்காது. உலகினருக்குத் தெரிந்ததை வைத்து, தெரியாததை விளங்க வைக்கிறார் வள்ளுவர் பெருமான் . பொருள் இலாதவரை இந்தப் பொருள் உலகம் மதிக்காமல் எப்படி விரட்டுமோ அது போல அருள் உலகிற்கு அருள் இருந்தால்தான் மதிப்பு என்பது விளக்கம்.  
           வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வாழும் அன்னதான ஆதீன சித்தர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தயவு வடிவானவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது கூறினார்:- “  இலங்கையில் இந்திய ரூபாய்கள் செல்லாது. அங்கு செல்லும் முன்பு அந்த நாட்டுக்கேற்ப பணத்தை மாற்றிக்கொள்கிறோம். அந்நியச்செலாவணி என்பார்கள்.  அதே போல, நாம் செல்லப்போகும் அருள் உலகத்திற்கு ஏற்ற புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும்” என் அழகுற விளக்கினார். எவ்வளவு அழகிய விளக்கம்! 

              எடுத்துக் கொடுங்கள். எடுத்து எடுத்துக் கொடுங்கள். குறையாது. ஆம். அட ஆமாப்பா. குறையாது. அப்படி ஒரு பொன் இருக்கிறது. அது எடுக்க எடுக்க அடுத்து அடுத்து ஓங்குகிறதே. மெய் அருள் என்கிற தங்கம் உனக்கு இருக்கின்றது. உனக்குள் இருக்கின்றது. தளரக் கூடாது. நீ எடு. நீ எடுத்தால் வளரும் தங்கம் அது. உன் உள்ளம் கிளறி இதைக் கூறுகிறேன் அப்பா. அப்படிப்பட்ட செம்பொன் அது. அது அருள் பொன் என்று உரத்துச்சொன்னார் வள்ளல் பெருமான்.

           *****

Tuesday, 27 December 2011

VALLALAR CINDHANIGAL

    ஓம்சிவாயநம
வள்ளலார் இன்றைய வாழ்வுக்குப் பொருத்தமானவரா!
                                   கவிஞர் பா.சத்தியமோகன்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதனின் சுயநலம் ஓயவேயில்லை. எதிலிருந்து எதைப்பெறலாம்.
எதைத்தேடினால் எது கிடைக்கும் என்பதே அவன் நாட்டம். அப்படி எனில் சுயநலம் தவறான விஷயமா?
 சுயநலத்தால் நன்மையே கிடைக்காதா? சிந்திக்கும்போது ஒன்று தோன்றியது.
தென் ஆப்பிரிக்காவில் தனது வழக்கு ஒன்றினுக்காக வாதாடப்போன அண்ணல் காந்தியடிகளை வெள்ளை இனத்தவன்
அந்த இரயில் பெட்டியிலிருந்து முதல்வகுப்பு டிக்கட் வாங்கியிருந்தும் நள்ளிரவில் பலவந்தமாய் இறக்கிவிடப்பட்டு
அவமானம் பெறாவிட்டால், அந்த உன்னத மனிதரின் சுயமதிப்பு சேதப்படுத்தப்படாவிட்டால்,
கறுப்பின மக்களின் விடுதலைக்கு பிள்ளையார் சுழி இல்லை.
           உண்மையில் என்ன நடந்தது?
 நாமாக இருந்தால் எனது இரயில்பெட்டியின் செளகரியமான பயணம் தடைப்பட்டு விட்டதே என்கிற சுயநலமோடு கோபப்பட்டிருப்போம்.
அநேகமாக பயணம் முடிகிற வரையில் நீடிக்கிற, சிலமணிநேர வருத்தம்கலந்த சுய பச்சாதாபமாக வலுப்பெற்ற  சிறிய கோபமாக இருந்திருக்கும்.
அண்ணலோ என்னைப்போல இதுபோல எத்தனை எத்தனை இந்தியர்கள் இங்கே அவமானப்படுத்தப்படுகிறார்களோ
என்று தன் கோபத்தை பொதுநலமாக்கினார். விடுதலை பிறந்தது.
இன்றைய 2011கால கட்டத்தில் “அன்பு” என்கிற சொல்லையும் பண்பையும் நாம் நமது சுற்றத்திற்கும் உறவினருக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இது சரியா? முறையா? மனிதத் தனமா ?
 தன் வீடு, தன்மக்கள் , தன் பெண்டிர், தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளம் நன்மைதருமா?
தன்வீட்டுக்கு குடிநீர் வரவில்லை என வருந்துகிறவன், ஊருக்கு மழை வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால் எத்தனைபேர் பயன் அடையலாம்!
அன்பு என்கிற பண்பை தன்மீதும் தன் சொந்தம் மீதும் மட்டுமே காட்டுவோரே! கொஞ்சம் திரும்புங்கள்.
அன்பைபெரிதாக்கிப் பாருங்கள். அகலமாக்கி உயர்த்துங்கள். என்ன கிடைக்கும்? அன்பெனும் பிடியில் மலையே கிடைக்கும்! அகப்படும். அன்பு  என்னால் குடிசை அளவுக்குத்தானே பெரிதாக்க முடிந்தது என்கிறீர்களா. அதில் இறைவன் எனும் அரசனே வந்துவிடுவார். அன்பெனும் வலை வீசுங்கள், பரம்பொருளே கிடைப்பார். அன்பாகவே உங்கள் மாறிவிட்டனவா? அதில் அமுதமாக அமர்வார் ஈசன். மட்பாண்டத்தால் ஆன பானை அளவுக்கு அன்பு இருந்தாலும்போதும் அதில் பொங்கும் கடல்போன்ற ஈசன் அடங்குவார்.
 அட! அன்புதானப்பா உயிர். அன்பு உயிரில் வெளிச்சம்தானப்பா அறிவு..
அன்பு உன்னிடம் அணு அளவு இருந்தாலும் போதும் அதில் பெரிய ஒளி ஒன்று அமைந்திருக்கும்.
அப்படியானால் பரம சிவம் எப்படி இருக்கும்?
அன்புக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்!
இத்தனையும் சொன்னார் எக்காலத்திற்கும் பொருத்தமான வள்ளல் பெருமான்!