Showing posts with label நினைத்துப் பார்க்கிறேன். Show all posts
Showing posts with label நினைத்துப் பார்க்கிறேன். Show all posts

Friday, 7 October 2016

நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்களின் புதிய அவதாரம்

ஓம்

“இலக்கியம் பேசும் இலக்கியம்” நூல்
(வள்ளலார் பதிப்பகம்,எண்:2,சேதுராம பிளை காலனி, திருச்சி-20
அலை:- 9443188894)
          அன்று என் ஐந்து வயது  முதல் இன்று எனக்கு 53 வரை  - எந்த  இரத்த சம்பந்த உறவுமில்லாமல் - என்னால் “சத்திமாமா” என அழைக்கப்படுபவர் பேராசிரியர் சத்தியசீலன் ஐயா அவர்கள். அவரது இலக்கிய வித்தகமோ ஆளுமையோ முழுதும் அறிந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தவன் அல்லன் நான் . பிறகு ?
           சு.பார்த்தசாரதி என்ற அன்பு வடிவம் சத்தியசீலன் எனும் அன்பு நண்பனின் பெயரில் பாதியை எனக்கு வைத்தது. சத்திய மோகன் ஆனேன். அத்தோடு விட்டதா? தன்னைப்போலவே தன் நண்பனை, தன் மகனும் நேசிக்க எண்ணி அவரது கூட்டங்களுக்கெல்லாம் விரல் பிடித்து என்னை  அழைத்துச் சென்றது. இலக்கியம் புரியுமோ இல்லையோ அவர் கூட்டத்திற்கு போகும் சின்னஞ்சிறு சிறுவன் எனக்கு ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும். ஆம். அவர்  தன் மீது போர்த்திய பொன்னாடையை எனக்கு அன்போடு போர்த்துவார். சிரித்து மகிழ்வார். மில்க் பிக்கீஸ் தருவார். அந்த காலங்கள்! நீங்காத தமிழ் வளம் கொண்ட சத்தியசீலனின் வழக்காடு மன்றங்களின் பித்தன் ஆனேன். அவர் கரங்கள் தொட்ட முகூர்த்தம் இன்று நானுமோர் கவிச்சிறகு.
        தமிழ் தமிழ் தமிழ் .. ! ஆஹா.. அவரோடு பித்துகொள்ள தமிழ் மட்டுமல்ல - ஒழுக்கம் எனும் பண்பை சீலத்தை எவரும் உணர முடியும். தமிழ்ப்பாடல்களை மனனம் செய்வதில் இன்றும் அவர் ஒரு இளைஞர். அவரை வேட்டி கட்டிய ஒளவையார் என்றால் அதில் ஒரு எழுத்தும் மிகையாகாது.
           என் தந்தை பார்த்தசாரதி, தன்னைப்பற்றியும் சத்தியசீலன் ஐயா அவர்களையும் மிக உண்மையான செய்திகளை எனக்குள் விதைத்தபடியே இருந்தார். அவரது மரணபரியந்தம் வரை சத்தியசீலன் மீதான காதல் ஓங்கிய படியே இருந்தது. அவர் தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பை விவரிக்கும்போது டிக்ஷனரியை முதன் முதலில் தொகுத்த இருவரின் பெயர்களை சுட்டுவது வழக்கம். “தினம் சத்தி 30 பக்கம் படிக்காம தூங்கவே போமாட்டான்” உட்பட ஏராளமானவை. விரித்தால் அதுவோர் தனி நூலாகும்.
            பேராசிரியர் சத்தியசீலன் ஐயாவுக்கு திருமணம் என்று கேள்வியுற்று அதன் பிறகே என் தந்தை 32 வயதில் திருமணம் செய்துகொண்டார். நட்புக்காக தியாகம். நட்புக்காக உறுதி. நட்பின் வழிபாட்டுத் தலங்களாகவே இருவரும் திகழ்ந்தனர். குறைகளை “வாடா போடா” என்று சொல்லிச் செல்லும் பாங்கில்  கேட்பவர்களுக்கு அவர்கள் அண்ணன் தம்பியாகவே தோன்றுவர். காவிரி நதியில் இருவரும் குளிக்கும்போது கரையில் சிறுவன் நான் அவர்கள் பேசும் இலக்கியம் கேட்பதுண்டு. “அந்த இடத்தில் எப்படி அந்த அழகிய செய்தியை சொல்லி நெகிழ்த்தினாய்  சத்தி!” என்று அப்பா உருகுவார். எனக்கு ஒன்றும் புரியாது அப்போது! விடிய விடிய பேசுவார்கள் அப்படி பேசுவார்கள்!
          நிற்க.
          விபத்தினாலும் மூப்பினாலும் கையினால் எழுத முடியாத  84 வயது சத்தியசீலன் ஐயா அவர்கள், இந்நூலை வாயினால் சொல்லியே எழுதியது அவர் மன் வலிமை.
 இந்த தன் வரலாற்று நூல் 216 தலைப்புகளில் 383 பக்கங்களில்,மிளிர்கிறது. தொகுப்பு முழுதும் தன்னை “அவன் அவன்” என்றே விளிப்பது கவியரசு கண்ணதாசனின் ஆற்றொழுக்கு  நடைக்கு ஒப்பாக அழகு சேர்க்கிறது.
      பேராசிரியர் ஐயா இயற்றிய இந்த நூல் குறைந்த பட்சம் ஆறு விருதுகளாவது பெற்று தமிழர் இதயங்களில் நிலை நிற்கப்போவது உறுதி. ஏனெனில் இந்த செய்திகளை ஒருவர் தன் வாழ்வில் ஆழ்ந்து போய் விட்டால் எழுத முடியாது. முழுகிப்போனால் எழுத முடியாது. ஐயா முழுகியிருப்பார். ஆனால் “விதியே வா! அடுத்தது என்ன ! இதோ என் தோள்கள்!” என்று துன்பத்திலும் இன்பத்திலும் அவர் வாழ்க்கைக் கடல் முத்துக்களை எடுத்து  கோர்த்திருப்பதை இந்த நூல் பறை சாற்றுகின்றது.
84x365= 30660 நாட்களிலும் அவர் இலக்கியமாகவே வாழ்ந்தார் என்று இந்த நூலைப் படிக்காமல் தொட்டுப்பார்ப்பவர்கள் கூட உணரலாம். தமிழ் இலக்கிய அன்பு மின்சார நூல்.
         வாழ்க்கைத்தளம், ஆன்மீகத்தளம்,பயணகாவியம், இலக்கிய தளம், அரசியல் நட்பு, நட்பு பந்தங்கள் என ஒவ்வொன்றிலும் சிறகு விரித்துள்ளார்.
பேராசிரியர் அறிவொளி ஐயா அவருக்கு ஆன்மீகத்தூண். சமயத்தலைவர்கள் எல்லோரது நெஞ்சிலும் ஐயாவுக்கு இடம் உண்டு. உடல் வலிமை, உள்ள வலிமை இரண்டிலும் வள்ளல் பெருமான் ஆசிகளை நிறைய நிறைய பெற்றுள்ளார் என் அன்பான சத்திமாமா. இந்த இலக்கிய வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி இந்த அளவிற்கு நிற்பதற்கு அம்மையார் தனபாக்கியம், அவரின் பெரும் பாக்கியம் என்பேன்.
     “ மோகன் இதற்கு திறன் ஆய்வு எழுது” என்றீர்கள், நேரில். சூரியனது ஒளியை கயிறு அளக்காது. பச்சைக்குழந்தைக்கு தந்தையின் கருணை சொல்லில் அகப்படுமோ.
முதல் எழுபது பக்கங்கள் படித்தேன். ஒரு படி தேன்! இன்னும் சொல்லச் சொல்ல பல சம்பவங்கள்  அப்பா நேரில் சொன்னதை நினைவு  செய்கின்றது. நான் நேரில் பார்ப்பது போலவும் இருக்கின்றது. (நல்ல உதாரணம்:-கோலி சோடா எப்படி?- பக்கம் 251)
      மகாத்மா “சத்திய சோதனை” எழுதினார். வாழ்வில் சோதனை மேல் சோதனை வரும்போதும் இலக்கியம் அரும்பும் தத்துவ தரிசனத்தில் தன் சிந்தனை விளைச்சலில் தீராத தாகத்தோடு தனது தாகத்தையும் தணித்துக்கொண்டு- தடுமாறும் சமூகம் வாழ- worked examples ஆக- வாழ்வுக்கான தீர்வுகளையும் - தைரியமுடன் - சோதித்துப்பார்த்த - ஆண்மையே- சத்திய (சீல )சோதனை “இலக்கியம் பேசும் இலக்கியம்” என்று உறுதியாய்ச் சொல்ல முடியும்.
      இலக்கிய அரும்புகளுக்கு வழிகாட்டி. வாங்கிப்படிப்போம்.
      தமிழர்களுக்கோ என்றும் திசை காட்டி ! அவர் வாழிய ! அவர் தம் புகழ் வாழிய!  


                                         ***********



Thursday, 25 August 2016

கவிஞனின் தேகம் (கவிஞர் ஞானக்கூத்தன் நினைவுகள்)


                                            ஒரு சாலை விபத்து 22.8.2016. கோமா ஸ்டேஜ் சென்றார்  . நல்லவிதமாக சிதை மூட்டப்பட்டார். 
அலுவலக வேலைகளால் மாலை நேரம்தான் இறந்தவர் வீட்டுக்கு என்னால் போக முடிந்தது.  
இடுகாட்டுக் காரியங்கள் முடிவுற்று- அலம்பிவிட்ட வீட்டில்- இறந்து மூணு மணி நேரம் ஆன வீட்டில்- 
மெல்லத் தேங்கி நின்ற - ஆனால் - மீண்டும்  மனமில்லாமல் இயல்புக்குத் திரும்பத் தயாராகிற வீட்டில் துக்கம் விசாரிக்கிறபோது- அங்கே திரும்பிக்கொண்டிருந்த - 
மெல்ல நுழைய முற்பட்ட அமைதி- என்னைக்கண்டதும் நண்பரின் சொந்தக்காரர் முகத்தில் சட்டென மீண்டும் கப்பியதை உணர்ந்தேன். 
             ஆம். துயரங்கள் நேரமாக நேரமாக அதிகமாகவும் செய்யலாம். 
“பேசும் புதிய சக்தி “ இதழில் எஸ்.சங்கர நாராயணன் கட்டுரை படித்தபோதும் ஞானக்கூத்தன் நினைவில் நிகழ்ந்தார்.
          இறந்தவர் மீது படிந்த நெருப்பு அவர்கள் இல்லாதபோதும் சுடுகிறது.
 இது சாதாரண மனிதர்கள் இறப்பில் ஒரு தளத்திலும் - கவிஞர்கள் இறக்கும்போது மலையளவு அதிகமாகவும் தோன்ற எது காரணம்? கவிஞர்கள் நம் வீட்டுக்கு சம்பாதித்துப்போட்டார்களா? கூடவே இருந்தார்களா? அவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்தோமா? ஏதுமில்லை.
அவர்கள் விட்டுச்சென்ற சொல்லால் நாம் தூண்டப்படுகிறோம். கவிஞனின் உடம்பு சொற்களால் ஆனது. 
எலும்புகள் கொண்ட  ரத்தமல்ல. கவிஞர்கள் இறந்தபிறகு புகழ் ஜனனம் எனும் கண்ணதாசன் வாக்கு மெய்யே. வாழை வீழ்ந்தபிறகு அடி வாழை தோன்றுவதுபோல என்றும் உவமித்திருப்பார் கவியரசர்.
                   கணையாழி என்ற இலக்கிய பத்திரிகையில் “போய்ச்சேராக்கடிதம்” (1993)என்ற  கவிதை வெளியாகியிருக்க அதை எழுதிய மகிழ்ச்சி பொங்க மாதாமாதம் கணையாழி இலக்கிய வட்டம் என்ற கூட்டம் ஆழ்வார்பேட்டையில் நேராகவே செல்லும் மகிழ்ச்சியோ இன்னும் அலாதி. சுஜாதா தலைமை. கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் போன்ற ஜாம்பவான்கள். 
முகம் தெரியாத முத்தான இலக்கியவாதிகள். கேட்டு கேட்டு அறிமுகம் செய்து கொள்வேன் - புது மருமகள் புதிய உறவினர்களை அறிய முற்படும் படபடப்போடு. 
ஏனெனில் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்ற ஆசை. அதை அல்ப ஆசை என்பதற்கில்லை. அது ஒரு மகத்தான துடிப்பு அப்போது.
                      எப்போதுமே கூட்டம் முடிந்த பின் நடக்கிற சிறு விவாத கூட்டம் உடனே கலைய முடியாமல் ஒரு மழை சொட்டு செடியில் நின்று வழிவதுபோல் சொட்டு தேங்கி நிற்கும்.
 அப்படி ஒரு சிறு வளைவில் கூட்ட அறையின் வழிநடையில்அழுத்தமான கண்ணாடியோடு வேறு ஒருவரின் கவிதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர்.
 எனக்கும் ஆசையாக இருந்தது. ஏனெனில் அடங்கிய குரல். ஆனால் தெளிவும் தொலை நோக்கும். 
அவர் பெயர் அறியும் ஆசையை விட அவர் ஏதாவது சிலாகித்தால் நன்றாயிருக்குமே என்று மனதார ஆசைப்பட்டேன்.
                      அவர் என் கவிதையை வாங்கிப்பார்த்தார். “போய்ச்சேராக்கடிதம் “அவரிடம் சென்றது. சம்பிரதாயமாக நல்லாருக்கு என்று சொன்னதுபோலிருந்தது. 
ஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை வேறு ஒரு கவிதை வர்ணித்து சொன்னபோது புரிந்து கொண்டேன். கவிதைக்கு விவரங்களும் உவமையும் வர்ணிப்பும் முக்யம் . 
குறிப்பாக சூழல்.ஆம். அவர் சொன்ன ஒரு கவிதையில், 
ஏதோ ஒரு சூழலில் ஆட்டு மாமிசம் தொங்கும் கடையில் ஒரு அந்தணர் எதிலும் பட்டுவிடாமல் நுழைகிறார். அவர் எச்சரிக்கையை வர்ணித்தார் ஞானக்கூத்தன். 
சட்டென அந்தணர் முதுகில் ஒரு பெரிய ஆட்டின் உடல் மோதி விடுகிறது என்று சொல்லிவிட்டு முகத்தைபார்த்தார் ஞானக்கூத்தன். 
சட்டென எதுவோ முதுகில் இடித்த உணர்வு.  “அதுதான் கவிதை” என நிறுத்தினார்.
                      வருஷங்கள் ஓடின. மூன்றாம் கவிதைத்தொகுப்புக்கு அடியேனின் “மீன்கள் கடிக்கும் மரம்” தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன்.
எந்த தயக்கமும் இல்லாமல் வாரி வழங்கிய கவிமனம்அவருடையது. எஸ்.சங்கர நாராயணன் கூறியதைபோல இளைஞைர்கள் மீது முழு நம்பிக்கை. 
“அப்பாமுகம் “ கவிதையை ஆஸ்திரிய கவிஞரை நினைவு படுத்தியதாக கம்பீரமாக மனமார எழுதிக்கொடுத்தார்.  
           அவர் எழுதின முன்னுரை பெற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் அவர்  வீட்டுக்குச்சென்ற போது சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து அவர் எழுதும் அழகைக் கண்டேன். 
வேஷ்டி மடித்துக்கட்டின பளீரென்ற ஆரோக்கிய நிறம். என்ன செய்கிறோம் என்ற தெளிவு மிக்க நடை. கால் பதிய அழுத்தி நடந்து வந்தார்.
        “நெய்வேலியில் வேலையா? என்னை மாதிரியெல்லாம் பண்ணாத. லீவு போட்டு எழுதுவேன்” தனக்கும் எனக்குமாக அண்ணனின் ஆதூரத்தோடு சொன்னவருக்கு முன்னுரை சன்மானமாக ஏதேனும் தர எண்ணி எதுவும் தோன்றாமல் வரும்போது ஒரு கடையில் வாங்கிய ரெனால்டு பேனாவை அளித்தேன். வெள்ளை உடம்பும் நீல மூடியுமாக இருந்ததை வாங்கி முதன் முதலாக பேனாவைப் பார்ப்பவர் போல அடியிலிருந்து நுனி வரை பார்த்தார். என்ன ஒரு பார்வை! எவ்வளவு அர்த்தம்!
                        அதுவே கவியின் பார்வை.  அதற்குப்பிறகு விழுப்புரத்தில் பழமலையோடு ஓட்டலில் ஒருமுறை சந்திப்பு. 
ஞானக்கூத்தன் கவிஞர்களில் மகுடம். அவருக்கு இப்போது பிறப்பு ஆரம்பம். ஆம். கவிஞனின் உடம்பு சொற்களில் ஆனது. 
                        நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் 
                         மலையினும் மாணப்பெரிது
           அழகிய சிங்கர் நவீன விருட்சம் வெளியீட்டில் “பென்சில் படங்கள்” போல எழுத இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். வாழிய கவிஞர்கள் ஆத்மா.ஓம்.
                         

                            

Sunday, 28 December 2014

அவரும் நானும்

“மனிதனின் அழகான படைப்பு கடவுள் என்றால் கடவுளின் அழகான படைப்பு மரணம்” என்று விஜய் டி,வி.வழியே இயக்குநர் சிகரம் பாலசந்தர் குறித்து நினைவு பகிர்ந்தார் -கண்ணீரை அடக்கிக்கொண்டு - ஆனால் வார்த்தைகள் தடுமாறாமல் பேசிய யூகி.சேது அவர்கள் .நாளை நாம் சாம்பலாவோம் என அவரிடும் திருநீறு அவருக்கு காலத்தை வீணாக்கக் கூடாது என்ற சிந்தனை தந்தது. அதனால் உழைப்பினால் கலையினால் அவர் தனது வாழ்வை சிற்பமாக்கிக் கொண்டார் எனப் பகிர்ந்தார். மட்டுமல்ல - “ஒவ்வொருவருக்குமே KB சார் பற்றிப் பேச அரைமணி நேரமாவது செய்தி இருக்கும்” என்றார். எவ்வளவு ஆழமான சொற்கள்! அடியேனுக்கும் இருக்கிறது.
1995ல் அடியேனின் “போய்ச்சேராக் கடிதம்” எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது என்பது யாருக்கும் தெரியாது ஒரு இருபது பேரைத் தவிர. ஆனால் திரையுலக பிரம்மாவாகிய KB சார், “ப்ரேமி “ என்ற தொலைக்காட்சித் தொடர் இயக்கியபோது “ஜேம்ஸ் ஐயர்” கதாபாத்திரத்தில் கவிதைகள் பேசி தொப்பி எல்லாம் போட்டுக்கொண்டு அசத்துவார். விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.“உன் கவிதை புத்தகமும் அனுப்பி வை” என்றார் அடியேனின் அப்பா. அனுப்பிவிட்டு மறந்தும் போனேன்.
             நெய்வேலியில் இரண்டாம் தெர்மலில் டூட்டி பார்க்கும்போது ஒரு அன்பர் “பிரேமியில் உங்கள் கவிதை!” என்றார். பிரமித்தே போனேன். நமது கவிதையை நாம் பார்க்க  முடியவில்லையே என்று ஏங்கி ஒரு கடிதமும் எழுதினேன். தெருவில் நடந்துபோகும் சாதாரண மனிதனை உலக அழகி முத்தமிட்டதுபோல் அடியேனின் மகிழ்ச்சி என எழுதியிருந்தேன். அதற்கு ஒரு கடிதம் போட்டிருந்தார். அதில் உள்ள நேர்மையும் நன்றி உணர்வும் படித்தாலே எவருக்கும் புரியும். மேன் மக்கள் மேன் மக்களே!
பேரன்புமிக்க சத்தியமோகன் அவர்களுக்கு,
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
“போய்ச் சேராக் கடிதம்” வந்து சேர்ந்தது.
1. மரம் விழுந்தால்
                 வேர் தெரியும்
                 மனிதன் உடல் விழுந்தால்
                “பேர்” தெரியும்!
2       குனிந்து நடந்தேன்
          கூன் என்றார்கள்
           நிமிர்ந்து நடந்தேன்
           திமிர் என்கிறார்கள்!

இந்த இரண்டு கவிதைகளையும் தான் “பிரேமி” டி.வி தொடரில் ஜேம்ஸ் ஐயர் வாயிலாக உபயோகப் படுத்திக் கொண்டேன்.
இவற்றை எழுதியது “சத்தியமோகன்” என்றும் “வாசுகி” பாத்திரம் வழியாகத் தெரிவித்திருக்கிறேன்.

நன்றியுடன்
கே.பாலசந்தர்.
சென்னை.

அத்தனை ஆயிரம் மனிதர்கள் கண்ணீர் விட - கண்ணாடிப்பெட்டிக்குள் அசையாத உடம்புடன் - பட்டையாய் விபூதியுடன் - அதே கருப்பு கண்ணாடி ப்ரேமுடன் - பெசண்ட் நகர் மின்சார சுடுகாட்டுக்குள் - KBசார் உடலை கொண்டுவரும்போது - டி.வி.நோக்கி என் மனைவி-  “நீங்க எழுதின கவிதைக்கு இலக்கணமா ஆயிட்டாருங்க” என்றாள் . ஆம்!
“மரம் விழுந்தால் வேர் தெரியும்
மனிதன் உடல் விழுந்தால் பேர் தெரியும்!”

Saturday, 25 January 2014

ஓ! மாமன்ன சரித்திரமே.. உடையாளூர் வாழ் தெய்வமே








 அன்று முதல் இந்த வினாடி வரை எண்ணி எண்ணி பெருமிதப்பட நமது சரித்திரம் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் தந்துள்ளது, இருந்தாலும் எண்ணி எண்ணி அழுவதற்கும் - நெஞ்சம் குமுறுவதற்கும் சில இடங்கள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முதலிடம் இதற்குத் தரலாம்.
நமது இதயத்தின் அலட்சியத்தை - தமிழர்களின் சரித்திரம் போற்ற அறியாத பேதமையை - தடித்தனத்தை - சுட்டிக்காட்டுகின்றது  வரலாற்று முக்கியத்துவமான இந்த இடம். ஆம். சரித்திரத்தின் மாபெரும் பெருமையாம் ராஜராஜ சோழன் நினைவிடம் தான் நீங்கள் காணும் போட்டோ. கும்பகோணம் அருகில் தாராசுரம் தரிசித்துவிட்டு அப்படியே இருபது நிமிஷப்பபயணத்தில் உடையாளூர் சென்று பார்க்கலாம். நிறைய வீடுகள் நடுவே சிறிய கீற்று கொட்டகையில் மாலை ஏழு மணி சுமாருக்கு என் மகன் அருண்சித்தார்த் எடுத்த புகைப்படம் இது ( 15.1.2014). அந்த மகா மன்னனின் தஞ்சை கோவிலுக்காக அப்படி இப்படி என்று மார்தட்டும் தமிழினம் இராஜ இராஜ சோழனின் நினைவிடத்தை இப்படி விடலாமா? வாய்விட்டு அழலாம் போலிருந்தது.

Saturday, 15 December 2012

சிவப்புப்பொட்டல நாய்

ஓம்சிவாயநம. அன்பு மனமே வணக்கம். பிளாக் ஆரம்பித்து உடனே பாரதிகுமாரும் அவர் மனைவி நிலாமகளும் கடிதம் அனுப்பி வாழ்த்துகிறார்கள்.இது ஒரு நல்லப் பழக்கம். நல்லவற்றை வாழ்த்தும்போது நல்லது நடக்கும். அவர்களுக்கு நன்றி. நிற்க.
14.12.12ல் நேற்றே எழுத வேண்டிய ஒன்று இப்போது எழுதுகிறேன். மனசு தாங்கவில்லை. பீடிகை
அதிகம்தான். காரணம் உண்டு. சாலையில் நான் பார்த்தது ஒரு நாய். இதுவரையில் அப்படி பார்த்ததேயில்லை. உடம்பில் உள்ள அத்தனை பாகமும் வெளியே பிதுங்கி
விட்டிருக்க - கண்களில் ஒன்று மட்டும் தெறித்து வழிய - சிறுகுடல் நீளமாய் ரத்தம் ஊற்றி ஸ்பீடு பிரேக்கரில் கோடு போட்டுக்கிடந்தது. அது என்ன சார். இப்படி ஒரு மரணம்.
திக்கித்துப்போனேன். இபோது என்ன செய்யலாம். ஆளாளுக்கு யாரோ கார்காரன் அடிச்சுட்டான் என்ற பேச்சுதான் சொல்கிறர்கள். எல்லா  இடத்திலும் உதவி செய்வதற்காக பறக்கின்ற பாலிதீன் குப்பை பைகளில் இரண்டை மண்தட்டி எடுத்து உதறினேன். கைகளை நுழைத்துக்கொண்டு இறந்த நாயின் காலகளைப் ப்பிடித்துக்கொண்டு தூக்கி சாலை ஓரமுள்ள மண்பரப்பில் இழுத்துப்போட்டதும் காக்கைகள் வர ஆரம்பித்தன. காகத்தை விரட்டி ஒரு பிடி மண் போட்டு ஒரு நொடி பிரார்த்தனை செய்து வாட்ச் பார்க்க மணி எட்டு முப்பது என்றது.  அடுத்தமுறை நீங்கள் இப்படி ஒரு நாயை கவனிக்க நேர்ந்தால் நிச்சயம் பாலிதீன் பயும் நேரமும் கிடைக்க சிவசக்தியை வேண்டிக்கொள்கிறேன்.

Thursday, 13 December 2012

நினைத்துப்பார்க்கிறேன்

பண்டிட் ரவிசங்கர் இறந்தார் எனும் செய்திக்குள் ஒரு வலி. மகா கலைஞர். லெஜண்ட் என்கிறார்கள்.நாடும் உலகும் போற்றிட வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது வாழ்நாள் இறுதி வரையில் நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தார் என்பது அற்புதமான செய்தி. ஏனெனில் ஒரு கலைஞனுக்கு ஒரு முகம் மட்டுமே இருப்பதில்லை என்பதை மறைக்கவே நாம் முயல்வோம். அவர் மகள் அனூஷ்கா டைம்ஸ் ஆப் இந்தியாவில் குறிக்கும்போது பாபி என்று நான் செல்லமாய் அழக்கும் என் அப்பா சீரியசாய் ஆஸ்பத்திரியி அட்மிட் ஆனபோது கூட தனது சிதார் மூலம்பூனை போல ஒரு ஒலி எழுப்பி சிரிக்கவைப்பார் என்கிறார். அது மட்டுமல்ல. குழந்தை போல அழுது  ( ஆடியன்ஸ் பார்க்காமல்) செய்து சந்தோஷப்படுவாராம். தன்னை ச்சுற்றிலும் சிரிப்பு பரவ - தனது புகழ்மலை - தன்னை அழுத்தாமல் காப்பாற்றிக்கொண்ட புத்திசாலி என்பது அந்த கட்டுரையில் நன்கு தெரிகிறது. "சிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்ற வரிகள் எப்போதும் ஒளிரும் வரியாகவே இருக்கும். அண்ணல் காந்தி ஒரு முறை சொன்னார்:-" நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை யென்றால் நான் எப்போதோ இறந்து போயிருப்பேன்"

Wednesday, 12 December 2012

அவல் அளவு நிம்மதி



சொல்லிக்கொள்ளமுடியாத அளவுக்கு வேலைகளும் வரலாம். அடுத்தடுத்து ஏற்படும் செலவுகளில் கவலைகள் வரலாம். இதையெல்லாம் தீர்ப்பதற்கு வடலூர் சேஷாயி நகர் உறை ஆபத்சகாய ஈஸ்வரர் சிவன் கோவிலில் பேங்க் ஒன்றும் இல்லை. அம்பாள் கனகாம்பிகை கரத்தினில்  பணக்கட்டுகள் காய்க்கவில்லை. இருந்தாலும் அங்கு உட்கார்ந்து குடும்பத்தோடு மாலை சாற்றிக்கொண்டு சபரிமலைக்கு கிளம்புகிற ஐயப்ப சாமிகளுக்கு தாடியோடு தாடியாய் எவ்வளவோ பணத்தேவைகள், உடல் வலிகள், தூங்காமை  இருக்கும்.அனுசரனையாய் இருந்து வேன் ஏற்றி விட வந்திருக்கிற மனைவியிடம் பேசாத வார்த்தைகள் அதைவிட இருக்கும்.மகள்கள் இரட்டை சடை பின்னலோடு பொழுது போகாமல் அப்பாவின் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உயரத்திற்குப் பொருத்தமில்லாத பேண்ட் அணிந்த மீசை அரும்பாத பையன்கள் அம்மன் சன்னதி அருகே இருந்த வாழைப்பழங்களை நோக்குகிறார்கள். நாற்பது பேராவது இருப்பார்கள். கதம்பமான புளிசோறு வாசனை அடிக்க இரவு நேரக்குளிரின் அருகில் செல்லாமல் வேனுக்காக காத்துள்ள மக்களுக்கு எவ்வளவோ கவலைகள் எனினும் நடுவே சிரிக்கத்தான் செய்கிறார்கள். கோவில் கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமல் என்னாகுமோ ! அந்த தனி நபர் குருக்களும் கவலைப்படவே செய்கிறார். அம்மன் சந்நிதியில் இருந்து “எல்லாம் நல்லபடியா நடக்கும்”  என்று மற்ற மற்ற பக்தர்களுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை,வெற்றிலைப் பாக்கு மஞ்சள் பையில் போட்டு குருக்கள் தருகிறார். கோபுரத் தூண்களுக்கு சிமெண்ட் பூசிட மூட்டைகள் இறக்கியவன் உட்பட கடன்தான். அர்ச்சனைகள் நிற்கவில்லை. நம்பிக்கையும் நிற்கவில்லை. விநியோகம் செய்கிற தாம்பாளத்தில் உள்ள அவலில் இருக்கிற செர்ரி பழங்களை மட்டும் பொறுக்கி உண்கிற பையனை அவன் பாட்டி அதட்ட குருக்கள் சொல்கிறார்: “ எடுத்துக்கட்டும் எடுத்துக்கட்டும் நாளைக்கு வந்து கேட்டா என்னால கொடுக்கவா முடியும்!” அவரவரிடம் இருக்கிற அவல் அளவு நிம்மதியை ஒருவருக்கொருவர் அன்றே பரிமாறிக்கொள்ள சிவனும் அம்மையும் வாழும் கோயில்கள் இருக்கும்வரை பேங்க் பணக்கட்டுகளை விடவும் மதிப்பு இருக்கவே செய்யும்

குழப்பமே நீ சொல்

12.12.2012 அப்பாடா! ஒரு வழியாக மீண்டும் வலைப்பூவில் இணைகிறோம். (நன்றி பாரதிகுமார்)நலம்தானே? நலமே விழைகிறோம்.
சிந்தனை-1
அன்று முதல் இன்றுவரையில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் மோதுவது இருந்திருக்கும். இது மனிதருக்கு மனிதர் மாறலாம். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கு ஒரே சமயம் ஏற்படுமா. நாம் பேச நினைப்பதையே எதிரில் வருபவர் பேசும்போது ஆச்சரியமாக வாய் பிளக்கலாம். ஆனால் பாருங்கள்...நாம் பேச நினைப்பதையே பாண்டிச்சேரி பண்பலை ரேடியோவும் பேசினால் ?! இது எனக்கு புதிராக உள்ளது. என்னுடைய நெஞ்சம் நினைப்பதை அந்த அறிவிப்பாளர் கிட்டத்தட்ட பேசுகிறார். ஒத்த சிந்தனைகளின் ஓட்டம் ஒரே புள்ளியில் வருமோ. அதன் அதிர்வு இதுவோ. உங்களில் யாருக்காவது இப்படி உண்டா. எழுதுங்களேன். (ஒரு வேளை நீங்கள் கேட்க நினைப்பதை நான் கேட்கின்றேனோ!)