Friday 7 October 2016

நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்களின் புதிய அவதாரம்

ஓம்

“இலக்கியம் பேசும் இலக்கியம்” நூல்
(வள்ளலார் பதிப்பகம்,எண்:2,சேதுராம பிளை காலனி, திருச்சி-20
அலை:- 9443188894)
          அன்று என் ஐந்து வயது  முதல் இன்று எனக்கு 53 வரை  - எந்த  இரத்த சம்பந்த உறவுமில்லாமல் - என்னால் “சத்திமாமா” என அழைக்கப்படுபவர் பேராசிரியர் சத்தியசீலன் ஐயா அவர்கள். அவரது இலக்கிய வித்தகமோ ஆளுமையோ முழுதும் அறிந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தவன் அல்லன் நான் . பிறகு ?
           சு.பார்த்தசாரதி என்ற அன்பு வடிவம் சத்தியசீலன் எனும் அன்பு நண்பனின் பெயரில் பாதியை எனக்கு வைத்தது. சத்திய மோகன் ஆனேன். அத்தோடு விட்டதா? தன்னைப்போலவே தன் நண்பனை, தன் மகனும் நேசிக்க எண்ணி அவரது கூட்டங்களுக்கெல்லாம் விரல் பிடித்து என்னை  அழைத்துச் சென்றது. இலக்கியம் புரியுமோ இல்லையோ அவர் கூட்டத்திற்கு போகும் சின்னஞ்சிறு சிறுவன் எனக்கு ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும். ஆம். அவர்  தன் மீது போர்த்திய பொன்னாடையை எனக்கு அன்போடு போர்த்துவார். சிரித்து மகிழ்வார். மில்க் பிக்கீஸ் தருவார். அந்த காலங்கள்! நீங்காத தமிழ் வளம் கொண்ட சத்தியசீலனின் வழக்காடு மன்றங்களின் பித்தன் ஆனேன். அவர் கரங்கள் தொட்ட முகூர்த்தம் இன்று நானுமோர் கவிச்சிறகு.
        தமிழ் தமிழ் தமிழ் .. ! ஆஹா.. அவரோடு பித்துகொள்ள தமிழ் மட்டுமல்ல - ஒழுக்கம் எனும் பண்பை சீலத்தை எவரும் உணர முடியும். தமிழ்ப்பாடல்களை மனனம் செய்வதில் இன்றும் அவர் ஒரு இளைஞர். அவரை வேட்டி கட்டிய ஒளவையார் என்றால் அதில் ஒரு எழுத்தும் மிகையாகாது.
           என் தந்தை பார்த்தசாரதி, தன்னைப்பற்றியும் சத்தியசீலன் ஐயா அவர்களையும் மிக உண்மையான செய்திகளை எனக்குள் விதைத்தபடியே இருந்தார். அவரது மரணபரியந்தம் வரை சத்தியசீலன் மீதான காதல் ஓங்கிய படியே இருந்தது. அவர் தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பை விவரிக்கும்போது டிக்ஷனரியை முதன் முதலில் தொகுத்த இருவரின் பெயர்களை சுட்டுவது வழக்கம். “தினம் சத்தி 30 பக்கம் படிக்காம தூங்கவே போமாட்டான்” உட்பட ஏராளமானவை. விரித்தால் அதுவோர் தனி நூலாகும்.
            பேராசிரியர் சத்தியசீலன் ஐயாவுக்கு திருமணம் என்று கேள்வியுற்று அதன் பிறகே என் தந்தை 32 வயதில் திருமணம் செய்துகொண்டார். நட்புக்காக தியாகம். நட்புக்காக உறுதி. நட்பின் வழிபாட்டுத் தலங்களாகவே இருவரும் திகழ்ந்தனர். குறைகளை “வாடா போடா” என்று சொல்லிச் செல்லும் பாங்கில்  கேட்பவர்களுக்கு அவர்கள் அண்ணன் தம்பியாகவே தோன்றுவர். காவிரி நதியில் இருவரும் குளிக்கும்போது கரையில் சிறுவன் நான் அவர்கள் பேசும் இலக்கியம் கேட்பதுண்டு. “அந்த இடத்தில் எப்படி அந்த அழகிய செய்தியை சொல்லி நெகிழ்த்தினாய்  சத்தி!” என்று அப்பா உருகுவார். எனக்கு ஒன்றும் புரியாது அப்போது! விடிய விடிய பேசுவார்கள் அப்படி பேசுவார்கள்!
          நிற்க.
          விபத்தினாலும் மூப்பினாலும் கையினால் எழுத முடியாத  84 வயது சத்தியசீலன் ஐயா அவர்கள், இந்நூலை வாயினால் சொல்லியே எழுதியது அவர் மன் வலிமை.
 இந்த தன் வரலாற்று நூல் 216 தலைப்புகளில் 383 பக்கங்களில்,மிளிர்கிறது. தொகுப்பு முழுதும் தன்னை “அவன் அவன்” என்றே விளிப்பது கவியரசு கண்ணதாசனின் ஆற்றொழுக்கு  நடைக்கு ஒப்பாக அழகு சேர்க்கிறது.
      பேராசிரியர் ஐயா இயற்றிய இந்த நூல் குறைந்த பட்சம் ஆறு விருதுகளாவது பெற்று தமிழர் இதயங்களில் நிலை நிற்கப்போவது உறுதி. ஏனெனில் இந்த செய்திகளை ஒருவர் தன் வாழ்வில் ஆழ்ந்து போய் விட்டால் எழுத முடியாது. முழுகிப்போனால் எழுத முடியாது. ஐயா முழுகியிருப்பார். ஆனால் “விதியே வா! அடுத்தது என்ன ! இதோ என் தோள்கள்!” என்று துன்பத்திலும் இன்பத்திலும் அவர் வாழ்க்கைக் கடல் முத்துக்களை எடுத்து  கோர்த்திருப்பதை இந்த நூல் பறை சாற்றுகின்றது.
84x365= 30660 நாட்களிலும் அவர் இலக்கியமாகவே வாழ்ந்தார் என்று இந்த நூலைப் படிக்காமல் தொட்டுப்பார்ப்பவர்கள் கூட உணரலாம். தமிழ் இலக்கிய அன்பு மின்சார நூல்.
         வாழ்க்கைத்தளம், ஆன்மீகத்தளம்,பயணகாவியம், இலக்கிய தளம், அரசியல் நட்பு, நட்பு பந்தங்கள் என ஒவ்வொன்றிலும் சிறகு விரித்துள்ளார்.
பேராசிரியர் அறிவொளி ஐயா அவருக்கு ஆன்மீகத்தூண். சமயத்தலைவர்கள் எல்லோரது நெஞ்சிலும் ஐயாவுக்கு இடம் உண்டு. உடல் வலிமை, உள்ள வலிமை இரண்டிலும் வள்ளல் பெருமான் ஆசிகளை நிறைய நிறைய பெற்றுள்ளார் என் அன்பான சத்திமாமா. இந்த இலக்கிய வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி இந்த அளவிற்கு நிற்பதற்கு அம்மையார் தனபாக்கியம், அவரின் பெரும் பாக்கியம் என்பேன்.
     “ மோகன் இதற்கு திறன் ஆய்வு எழுது” என்றீர்கள், நேரில். சூரியனது ஒளியை கயிறு அளக்காது. பச்சைக்குழந்தைக்கு தந்தையின் கருணை சொல்லில் அகப்படுமோ.
முதல் எழுபது பக்கங்கள் படித்தேன். ஒரு படி தேன்! இன்னும் சொல்லச் சொல்ல பல சம்பவங்கள்  அப்பா நேரில் சொன்னதை நினைவு  செய்கின்றது. நான் நேரில் பார்ப்பது போலவும் இருக்கின்றது. (நல்ல உதாரணம்:-கோலி சோடா எப்படி?- பக்கம் 251)
      மகாத்மா “சத்திய சோதனை” எழுதினார். வாழ்வில் சோதனை மேல் சோதனை வரும்போதும் இலக்கியம் அரும்பும் தத்துவ தரிசனத்தில் தன் சிந்தனை விளைச்சலில் தீராத தாகத்தோடு தனது தாகத்தையும் தணித்துக்கொண்டு- தடுமாறும் சமூகம் வாழ- worked examples ஆக- வாழ்வுக்கான தீர்வுகளையும் - தைரியமுடன் - சோதித்துப்பார்த்த - ஆண்மையே- சத்திய (சீல )சோதனை “இலக்கியம் பேசும் இலக்கியம்” என்று உறுதியாய்ச் சொல்ல முடியும்.
      இலக்கிய அரும்புகளுக்கு வழிகாட்டி. வாங்கிப்படிப்போம்.
      தமிழர்களுக்கோ என்றும் திசை காட்டி ! அவர் வாழிய ! அவர் தம் புகழ் வாழிய!  


                                         ***********



No comments:

Post a Comment