Showing posts with label வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். Show all posts
Showing posts with label வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். Show all posts

Tuesday, 19 February 2013

சுற்றிலும் பெய்த மழை


             சிரமம் போயிருந்தேன். புதிதாக வெள்ளை நிற டெம்போ டிராவலர் நின்றது. ‘வரும் வரும்' என்று காத்திருந்த வண்டி அது. ஏன்?  இதற்கு முன்பு பழைய 407 வேன் மட்டுமே பயன் படுத்தி வந்தார் சுவாமிகள். ( இடுப்புக்கு கீழே சுவாமிகள் செயல்படா நிலை என்பதை கட்டுரை வாசிக்கும் அன்பர்கள் நினைவு கொள்க)அன்பர்கள்அதில் இரும்பு வெல்டு செய்யப்பட்டிருக்கும். சல்லடையில் மாவு குலுக்குவது போல கூட்டிக் கொண்டு போகும். இதனைப் பார்த்து சுவாமிகளின் அன்பர்கள் வாங்கித் தந்த வண்டி தான் புதிய டெம்போ டிராவலர். ரீ கண்டீஷன் செய்த வண்டி என்றாலும் சீராக பெயிண்ட் செய்து முறையாக உள்ளே வசதிகள் செய்யப்பட்ட  சவுகரியமான வண்டி. கோவை அன்பர்களும் மதுரை அன்பர்களும் செலவை ஏற்றுக் கொண்டனர்.
                  வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘போகம்பட்டி'யில் இந்த வண்டி வழங்கப்பட்டது என்றார். போகர் வாழ்ந்த ஊர் என்று சொன்னவர் சட்டென அவ்வூரில் தாய் தந்தையுடன் வாழ்ந்ததை நினைவு கொண்டார். “அப்பா முதலில் இறந்தார். கோமாவில் இருந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அம்மாவும் இறந்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் கோப்பெருந்தேவி இறந்தது போன்ற அதிர்ச்சி மரணம் என்றும் என் அம்மா மரணத்தை வர்ணிக்க முடியாது” என்று சொல்லித்ட்த் தொடர்ந்தார். “இரண்டு பேருக்கும் ஒரே குழி. சடங்கு செய்வதற்காக குளிப்பாட்டி முடித்ததும், குழியில் அந்த இரண்டு உடம்புகளையும் இறக்கும் போது அந்த இடத்தில் மட்டும் சுற்றிலும் மழை பெய்தது !” என்ற போது சுவாமியின் குரல் தாழ்ந்து விட்டது. ஆதி சங்கரரையும் பட்டினத்தாரையுமே விட்டுவிடாத  தாய்ப்பாசம் நமது சுவாமிகளையும் விடவில்லை என எண்ணிக்கொண்டேன்.

                                                                                       ( சந்திப்போம் 19.02.2013)

Saturday, 22 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் -2

அறிஞர் ஜீன்பால் சார்த்தர் கூறுவார்: “இந்த உலகின் அழியாத பொருள் ஒன்றுடன் நான் தொடர்புடையவன் என்கிற எண்ணத்தை இழந்துவிட்டால், மனிதன் எல்லாவற்றையும் இழந்துவிடுவான்” ஆம். அழிவேயில்லாத ஆன்மாவுடன் -பிரம்மத்துடன் நமது விழிப்புணர்வு இணைக்கப்பட்டே உள்ளதை மறந்து தவிக்கிறோம். எல்லாம் நம்மால்தான் என்கிற எண்ணத்தை விட்டுவிட முடியாத பலவீனம் நம்மை மேலும் மேலும் பலவீனன் ஆக்குகிறது. ஆனால் தன்னை முழுமுதல் பொருளுடன் இணைக்கப்பட்ட உணர்வுடன் தியாக வாழ்வு வாழும் ஒருவரை சந்திக்கப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.
கோவை சிவப்பிரகாச சுவாமிகளை நேரில் சந்திக்க முற்பட்டபோது அவரே முயற்சித்தாலும் எழ முடியாத உடல்பாங்குடன் கட்டிலில் குப்புறக்கவிழ்ந்த நிலையில் காணக்கிடைத்தார். ஆனால் அவர் புன்னகையில் உள்ள சத்தியத்தை எளிதாக உணர்ந்தேன். மீற முடியாத புன்னகை அது. வரவேற்றார். “வாங்க” என்ற கொங்கு பாஷையில்தான் எத்தனை அன்பு. ஒருவரை எந்த உணர்வுடன் தொடுகிறோம் என்பதற்கு குரலின் கனிவே சாட்சி. தன்னுடைய உடம்புக்கு நேர்ந்த விபத்து பற்றி துளியும் காட்டாத அன்பு பரந்த முகம் கோடியில் ஒருவருக்கே கிட்டும். அவர் முகத்தில் வரவேற்ற புன்சிரிப்பு வலியை மறைக்க போடும் திரைப்பூச்சாக இல்லை. “உட்காருங்க” என்றார். கட்டிலின் முன்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். “உங்கள் அன்பு ஓங்கி வளர்க” என்றபடி இந்த மாதம் அறநிலையத்துக்கு தாங்கள் வாங்கி வரும் அரிசியின் தரம் பற்றிப் புகழ்ந்தார். அறநிலையம் என்பது (130 நபருக்கு) அவர் அன்னதானமிட்டு தங்கும் இடவசதியுடன் (இலவசமாக) நடத்துகின்ற அனாதைஇல்லம் என்பது புரிந்தேன்.
வள்ளல்பெருமான் இராமலிங்க சுவாமிகள் சித்தி வளாகம் செல்கிற வழியில் எதிர்புற சந்தில்தான் சிவப்பிரகாச சாமிகள் இருக்கிறார். “இத்தனை அருகிலேயே இருக்கிறீர்களே” என்றேன். சுவாமிகள் புன்னகைத்து “குருடனுக்கு வெளிச்சம் பற்றி எதுவும் தெரியாது.ஆனால் அங்கிருந்து (சித்தி வளாகத்திலிருந்து) பார்க்கிற (அருட்பெரும் ஜோதி) ஆண்டவருக்கு இவன் குருடன் என்பது தெரியும் அல்லவா! அதுவே நல்ல வழிகாட்டும் தானே..” என்று புன்னகையுடன் சொன்னார். முத்துச்சிதறல் உள்ளே பரவியதாய் உணர்ந்தேன்.
                            எப்போது விபத்து? எதனால் சுவாமி இப்படி ஆனார்?  அடுத்த மாதம் அரிசி வாங்க உதவி கிட்டியதா?

                                        (தொடர்ந்து பேசுவோம்)

Sunday, 16 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் - 1





“அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி”
இதுவே வள்ளலார் இராமலிங்க அடிகள் கண்ட மகா மந்திரம் ஆகும். இதனை ஓதி ஆத்ம அமைதி கண்டோர் ஆயிரம் ஆயிரம்.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி பெற்ற சித்தி வளாகம் ( அவர் தன்னை அறையில் சாத்திக்கொண்டு ஒளியாகிக் கலந்த இடமே சித்தி வளாகம்). அது சித்தி வளர் அகம் எனக் கொண்டாடி அதன் அருகிலேயே 1989முதல் அனாதைள் ஆதரவு அற்றோருக்கு உணவும் புகலிடமும் அளித்து வருகின்ற கோவை சிவப்பிரகாச சுவாமிகள்  குறித்து உங்களுடன் பகிர்கிறேன். வடலூரிலேயே வாழ்ந்தும் அவரைப்பற்றி எனக்கு சுத்தமாகத் தெரியாது.பிறகு எப்படி தெரிந்தது?”அலுவலக சக அன்பர் செங்குட்டுவன் எனும் திராவிடர் கழக அன்பர் சொன்னார்:-“அவசியம் போய் அவரைப்பாருங்க.. உங்களுக்கும் அவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டால் நான் ஒரு மணிநேரமா உங்கள்ட்ட பேசினது எல்லாம் தூசாத் தெரியும்”
              ( நான் போய் சந்தித்தேனா? என்ன கண்டேன் அங்கே?)

Tuesday, 27 December 2011

VALLALAR CINDHANIGAL

    ஓம்சிவாயநம
வள்ளலார் இன்றைய வாழ்வுக்குப் பொருத்தமானவரா!
                                   கவிஞர் பா.சத்தியமோகன்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதனின் சுயநலம் ஓயவேயில்லை. எதிலிருந்து எதைப்பெறலாம்.
எதைத்தேடினால் எது கிடைக்கும் என்பதே அவன் நாட்டம். அப்படி எனில் சுயநலம் தவறான விஷயமா?
 சுயநலத்தால் நன்மையே கிடைக்காதா? சிந்திக்கும்போது ஒன்று தோன்றியது.
தென் ஆப்பிரிக்காவில் தனது வழக்கு ஒன்றினுக்காக வாதாடப்போன அண்ணல் காந்தியடிகளை வெள்ளை இனத்தவன்
அந்த இரயில் பெட்டியிலிருந்து முதல்வகுப்பு டிக்கட் வாங்கியிருந்தும் நள்ளிரவில் பலவந்தமாய் இறக்கிவிடப்பட்டு
அவமானம் பெறாவிட்டால், அந்த உன்னத மனிதரின் சுயமதிப்பு சேதப்படுத்தப்படாவிட்டால்,
கறுப்பின மக்களின் விடுதலைக்கு பிள்ளையார் சுழி இல்லை.
           உண்மையில் என்ன நடந்தது?
 நாமாக இருந்தால் எனது இரயில்பெட்டியின் செளகரியமான பயணம் தடைப்பட்டு விட்டதே என்கிற சுயநலமோடு கோபப்பட்டிருப்போம்.
அநேகமாக பயணம் முடிகிற வரையில் நீடிக்கிற, சிலமணிநேர வருத்தம்கலந்த சுய பச்சாதாபமாக வலுப்பெற்ற  சிறிய கோபமாக இருந்திருக்கும்.
அண்ணலோ என்னைப்போல இதுபோல எத்தனை எத்தனை இந்தியர்கள் இங்கே அவமானப்படுத்தப்படுகிறார்களோ
என்று தன் கோபத்தை பொதுநலமாக்கினார். விடுதலை பிறந்தது.
இன்றைய 2011கால கட்டத்தில் “அன்பு” என்கிற சொல்லையும் பண்பையும் நாம் நமது சுற்றத்திற்கும் உறவினருக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இது சரியா? முறையா? மனிதத் தனமா ?
 தன் வீடு, தன்மக்கள் , தன் பெண்டிர், தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளம் நன்மைதருமா?
தன்வீட்டுக்கு குடிநீர் வரவில்லை என வருந்துகிறவன், ஊருக்கு மழை வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால் எத்தனைபேர் பயன் அடையலாம்!
அன்பு என்கிற பண்பை தன்மீதும் தன் சொந்தம் மீதும் மட்டுமே காட்டுவோரே! கொஞ்சம் திரும்புங்கள்.
அன்பைபெரிதாக்கிப் பாருங்கள். அகலமாக்கி உயர்த்துங்கள். என்ன கிடைக்கும்? அன்பெனும் பிடியில் மலையே கிடைக்கும்! அகப்படும். அன்பு  என்னால் குடிசை அளவுக்குத்தானே பெரிதாக்க முடிந்தது என்கிறீர்களா. அதில் இறைவன் எனும் அரசனே வந்துவிடுவார். அன்பெனும் வலை வீசுங்கள், பரம்பொருளே கிடைப்பார். அன்பாகவே உங்கள் மாறிவிட்டனவா? அதில் அமுதமாக அமர்வார் ஈசன். மட்பாண்டத்தால் ஆன பானை அளவுக்கு அன்பு இருந்தாலும்போதும் அதில் பொங்கும் கடல்போன்ற ஈசன் அடங்குவார்.
 அட! அன்புதானப்பா உயிர். அன்பு உயிரில் வெளிச்சம்தானப்பா அறிவு..
அன்பு உன்னிடம் அணு அளவு இருந்தாலும் போதும் அதில் பெரிய ஒளி ஒன்று அமைந்திருக்கும்.
அப்படியானால் பரம சிவம் எப்படி இருக்கும்?
அன்புக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்!
இத்தனையும் சொன்னார் எக்காலத்திற்கும் பொருத்தமான வள்ளல் பெருமான்!