Showing posts with label வருக வருக திருப்பாவை நாட்கள். Show all posts
Showing posts with label வருக வருக திருப்பாவை நாட்கள். Show all posts

Sunday, 13 January 2013

திருப்பாவையில் ஏது கடைசி ?

மார்கழி:30
திருப்பாடல்:30



“வங்கக்கடல் கடைந்த”திருப்பாவையின் கடைசி பாடல் இது. ஆனால் திருப்பாவையான ஆண்டாளின் அன்புக்கு கடைசி என்பது இல்லை. அன்பை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு பொருளும் அருளும் வந்து கொண்டேதான் இருக்கும். வஞ்சனையாய் பொருள் சுருட்டுகிறவர்கள் குறித்து “நாம் அவன் போல் ஏமாற்றி வாழ்ந்திட அறியவில்லையே” என்றெல்லாம் ஏங்குவது எதற்கு? ஸ்வாமி தந்திருப்பது குறைவற்ற பக்தி. அவன் நம்மை உடையவன். அவன் நம் கையைப் பற்றி இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம்மை ஆட்படுத்திக் கொண்டவன். “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை” என்று வாழ்வதற்குரிய உயர் எண்ணங்கள் அனைதையும் நமது நெஞ்சின் உள்ளே பிறக்கும்போதே வைத்து அனுப்பியவன். அவன் என்றும் நம் துணை. ஆம். அவன் வங்கக் கடல் கடைந்த மாதவன். நமது உள்ளக்கடலையும் அறிந்தவன்!

திருப்பாடல்:

வங்கக்கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
தங்கள் திருமுகத்துச் சேழியையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலர்த் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


திருப்பாவையில் ஓம்

மார்கழி:29
திருப்பாடல்:29

மறு ஜன்ம பயம் எல்லோருக்கும் இருக்கிறது. கண்ணன் அடியவர்களுக்கு அது இல்லை. ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இல்லை. ஏன்? அவர்கள் எழுகின்ற பிறவிதோறும் கண்ணா - நீயும் எங்கள் குலத்திலேயே பிறந்துவிட்டால் பிறவித்துன்பம் தீண்டாமல் நீயே பார்த்துக்கொள்வாய் அல்லவா! என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். எற்றைக்கும் (என்றும்) எத்தனைப் பிறவி எடுத்து எழுந்தாலும் (ஏழேழ் பிறவிக்கும்) உனக்கு உற்றவராகவே யாம் இருப்போம். (இருப்பு+ ஓம்) உனக்கே நாம் ஆள் (பணி) செய்வோம் (செய்தல்+ஓம்) கண்ணா! எமது காமங்களை (விருப்புகளை) மாற்றி நல்ல திசையில் செலுத்தி அருள்வாய்.

திருப்பாடல்:

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்.



திருப்பாவையில் அசையாத நம்பிக்கை

மார்கழி:28
திருப்பாடல்:28


“நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்” என்பான் கம்பன். நம்பிக்கையே இல்லாதபோதுதான் நம்பிக்கையாய் அதிகம் பேச வேண்டும். உலகப்பற்றிலேயே மூழ்கிப்போய் எப்போதும் பணம் பணம் என்று மண்டியிடும் சந்தர்ப்பத்திலும் , நமக்கு பக்தியே அற்றுவிட்டதோ என்று நம்மையே நாம் சந்தேகமாய் நினைக்கும் தருணத்திலும் “இறைவா உன்னோடு உறவு நமக்கு என்றும் ஒழியாது. அழியாது” என்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தனைத் துதிக்கவேண்டும். அற்¢யாத பிள்ளைகள் நாங்கள். நாங்கள் அழைப்பதில் குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக சீறிவிடாதீர். இப்படியெல்லாம் பணிவுடன் கேட்கின்றனர். ஆனால் பெருமாள் முகத்தைப்பாருங்கள். குறைவு ஏதேனும் கண்ணில் தெரிகிறதா? சீறக்கூடிய ஸ்வாமியாக அவரில்லை. பூரணமான ஸ்வாமி அவர். அவரைப் பற்றுவோம். கரையேறுவோம்.


திருப்பாடல்:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் வெற்றிவிழா

மார்கழி:27
திருப்பாடல்:27

கண்ணபெருமானே உமது வெற்றி எமது வெற்றி. உன்னைப் பறை கொண்டு பாடுகிறோம். அப்போது எங்களுக்கு நாங்களே பலவித அணிகலன்கள் (தோடு ,செவிப்பூ) அணிந்து சந்தோஷப்படுகிறோம். பால்சோற்றை மூடுமாறு நெய் ஊற்றி சாப்பிடுவோம். அப்போது அந்தநெய் முழங்கை வரையில் வழிகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணவை கூடியிருந்து உண்கின்றோம். உள்ளம் குளிர்ந்தது கண்ணா! உனது அருள் என்பது எமது ஆன்மாவின் உணவு. வயிற்றுப்பசியை எவ்விதம் சேர்ந்து உண்டு சொந்த பந்தங்களுடன் உண்பதற்கு ஆசைப்படுகிறோமோ உனது அருள் உண்டு பசியாற நாங்கள் ஒன்றுகூடி உள்ளோம். மார்கழி குளிர் வேறுவகை. இப்போது உமது அருள் பெறும் நேரம் கூடிஇருக்கிறது. இப்போது உள்ளம் குளிர்கிறது!

திருப்பாடல்:

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பாறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையை தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் இசைக்கருவிகள்

மார்கழி:26
திருப்பாடல்:26


பாஞ்சன்னியம் என்கிற சங்கு மகாபாரதப்போர் துவக்கத்திலும் முடிவிலும் ஓசை எழுப்புகிறது. காயிலே நீ புளிக்கிறாய் அதுவே கனியானதும் அதே இடத்தில் நீ இனிக்கிறாய்  அது நீயே எமது கண்ணபெருமானே! “பறை” என்கிற கருவி இசை கலந்து எங்கள் குரலையே இசைக்கருவியாக்கி பல்லாண்டு இசைக்கிறோம். “கோல விளக்கு” போன்ற துணை உடைய ஆலின் இலை வாழும் கண்ணா! ஆலின் இலைக்கு சமானமான அழகும் பசுமையும் உலகில் எங்கேனும் உண்டா! உன் அருளும் அந்த ஆல மரத்தின் இலைகள் போல பசுமையானது. எங்கள் உள்ளத்தின் மலட்டுத்தன்மைகளைப் போக்குவது. ஆம். கண்ணா எமக்கு நீ அருளமாட்டாயா?

திருப்பாடல்:

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டிலையேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் பொய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! அருளேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் ஒருத்தி

மார்கழி :25
திருப்பாடல்:25



“ஒருத்தி” என்ற சொல் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும் சொல். “ஒரு பெண்” என்று அதன் அர்த்தம் இருந்தாலும் அந்த ஒரே பெண் யார்? என்றும் நம்மை யோசிக்க வைக்கும். தாய் நம்மைப் பெற்ற முதல் பெண். வளர்கிறோம். இன்னொரு பெண் நம் வாழ்வில் நானே தாரம் என்கிறாள். முதல் ஆதாரமாய் இருந்தவளும் பெண், வளர்த்து ஆளாக்கி அவள் இன்னொரு பெண்ணின் கரங்களில் ஒப்படைக்கிறாள்.இதனை கண்ணதாசன், “ இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்” என்று பாடத்தொடங்கி “பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்” என்கிறார். இது இயற்கையின் திட்டம். நிற்காத சுழற்சி. இதனை தடுக்க நினைப்பவருக்கு கண்ணபெருமான் நெருப்பென்ன நின்று அழித்து முடிப்பான்.                                  




திருப்பாடல்:

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருந்தித்து வந்தோம் பறைதகுதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday, 11 January 2013

திருப்பாவையில் வீரம்


மார்கழி:24
திருப்பாடல்:24

வீரம் மிகுந்தவரைப் பணிந்தால் சேவகம் செய்தால் நமக்கும் வீரம் வரும். உலகை அளந்த வீரம், தென் இலங்கையில்  வென்றாய். மலையைத் தூக்கி குடையாகப் பிடித்தாய். எங்களது பகையை அழிப்பாயாக. பெருமாளே எங்களுக்கு இரங்குவாயாக.


திருப்பாடல்:
 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் மாண்புமிகு


மார்கழி :23
திருப்பாடல்:23



“மன்னிய”என்ற சொல் , இந்தியிலும் உண்டு. இதன் பொருள் “மாண்பு மிகு” . நமது மன்னிய அறிவு என்னும் சீரிய சிங்கம் தீயைப் போல் விழித்து செயல்படாமல் குகையில் (மூலாதாரத்தில்) உறங்குகிறது. எங்கள் அறிவில் தீ இல்லாமல் அவியும் நிலை வந்து விட்டது. பூவைப் பூவண்ணா அருள மாட்டாயா?

திருப்பாடல்:

மாரி மலைமுழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் கண்கள்

மார்கழி :22
திருப்பாடல்:22

“பெண்கள் தாமரை விழியால் நோக்கினர்”என்ற பதத்திற்கு திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் “பெண்கள் தமது அரை விழியால் நோக்கினார்கள்”என்று விளக்கியதும் அந்தக்கூட்டம் முடியும் முன்பே ஒரு ஆளை அனுப்பி கவியரசு கண்ணதாசன் ஐந்துபவுன் சங்கிலி  பரிசளித்தார் என வாரியார் சுவாமிகள் கூறக் கேட்டிருக்கிறேன்.
இந்தத் திருப்பாவையில் “தாமரைப் பூப்போல செங்கண்” என்று வர்ணித்துவிட்டு அவை எம்மேல் “சிறுச்சிறிதே விழியா ஓ?” என்று கேட்கிறார்.கண்ணனது கண்கள் அருளுடன் மிகப்பெரிதாக தாமரைப்போல் சிவந்து உள்ளன. அவை சிறிதளவு எம்மேல் விழ வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அதிலும் சிறிது கிடைத்தால் போதும் என்று மிகப்பணிவுடன் வேண்டுகிறார் ஆண்டாள் நாச்சியார். “சிறுச்சிறிதே” என்பது மிகவும் நயமான பதம். ஆண்டாள் போல் தகுதியிருக்கும் நபருக்கு எது வழங்க வேண்டும் என்று கண்ணனுக்குத் தெரியாதா என்ன. அதனால் சிறுச்சிறிதே நோக்குவதே போதும் என்று கம்பீரமான தன்னடக்கமும் பக்தியும் காணும் பாடல் இது.

திருப்பாடல்:

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி சிறுச்சிறிதே எம்மேல் விழியாஓ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் மாற்றான்

மார்கழி : 21
திருப்பாடல்:21

நமது ஆணவம் , நம்மை மிகப்பெரிய கடவுள் சக்தி முன்னம் நின்று தொழவிடாமல் தடுக்கிறது. வாழ்வுச்சக்கரம் சுழல்கிறது. வெற்றி வரும்போது துள்ளிய மனம், அடிகளும் ஏமாற்றங்களும் பெருகும்போது வலிக்கிறது. தன்னை ஒரு பலவானாக நினைத்த மனம், அடங்க ஆரம்பிக்கிறது. “வலி” என்று திருக்குறள் சொல்கிற வலிமை - தன்னிடமிருந்து வந்தது அல்ல என்று உணர்கிற மனம் , இறைவாசல் தேடி அலைகிறது. அடிபணிகிறது. அந்த நிமிடம் வரையிலும் தன்னை ஒரு பலவானாகாவும் ,சக்தியாகவும் இறைவனுக்கு மாற்றானாகவும் நினைத்த மனம் தொலைந்து போகிறது. உன் வாசலுக்கு “கண்ணா ! நாங்கள் மாற்றான் ஒருவன் தாங்கமுடியாமல்  வந்து உன் அடி பணிவது போல பணிகின்றோம்.” என்று கெஞ்சும் திருப்பாடல் இது. ஆணவம் சாகிற இடத்துக்கு வருவது அத்தனை சாதாரணமா என்ன! ஆண்டாள் நாச்சியாரால் அது முடிகிறது.


திருப்பாடல்:
 
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய் ! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் விசிறியும் கண்ணாடியும்

திருப்பாடல் - 20   
மார்கழி - 20 


பனை ஓலை விசிறி  ! தெருவில் விற்பார்கள். கவனித்துப்பாருங்கள். மறக்க முடியுமா அந்த எளிமையை! எந்த முகப்பூச்சும் பூசாமல் எவ்வளவு அழகு . அந்த ஈர்ப்பு சக்தி பார்த்தீர்களா. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் மகான் திருக்கரத்தில் பொலியும் அந்த விசிறி அமரத்துவத்தின் குறியீடு. “பிரம்மத்தின் சக்தி பெற்று சுவாசித்து உயிர் வாழும் நீ விசிறிபோல் அந்த பிரம்மத்தினால் இயக்கப்படுகிறாய். மறந்துவிடாதே”
 “உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை” என்கிறது தங்கவரி. அது என்ன தட்டொளி? தட்டுபோல் இருக்கிறது கண்ணாடி. நிமிர்த்திவைத்தாலும் படுத்துக்கிடந்தாலும் உலகை எந்த சுமையும் இல்லாமல் தன்னுள் எடையே இல்லாமல் தூக்குகிறது  - கண்ண பெருமானைபோல! ஆனால் இந்த சக்தி அளிப்பது நப்பின்னைதான்!


திருப்பாடல்:

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் டந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் பெண்மையின் சக்தி

திருப்பாவை - 19
மார்கழி - 19


“நப்பின்னைகொங்கைமேல் வைத்துக்கிடந்த  மலர் மார்பா” தந்தக்கட்டில் போட்டு- சுற்றிலும் விளக்குகள் எரிய -  தனது மலர் மார்பை நப்பின்னையின் கொங்கைமேல் வைத்து - உறங்குகிறான் . அடடா! எத்தனை அழகிய காதல் உறக்கம்! நேரமோ மார்கழி!
ஆனால் இப்பாடலில் இந்த காட்சியின் முக்கிய சக்தியாக  - ஒன்று இருக்கிறது. இப்படிப்பட்ட தூக்கம் கலையாமல் இருப்பதற்கு பொறுப்பு சக்தியிடம்தான் உள்ளது.  அவள் கையில்தான் அவன்! எனவே அவளை எழுப்புகிறார்கள் கெட்டிக்காரத் தோழிகள்! பிரிய முடியவில்லையோ என்று ஆதாரமான கேள்வி கேட்கிறார்கள்.   

திருப்பாடல்:

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்று பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் மெல் ஒலிகள் கூட்டம்

திருப்பாடல்-18
மார்கழி-18


பொதுவாக நாம் ஓசை உலகில் உள்ளோம். அதன் மூலமே புரிகிறோம். கூந்தலில் உள்ள வாசனை கூட “கந்தம் கமழும் குழலீ” என்ற சொல்லால் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் இந்தப்பாடலை உலகியல் வழக்கில் அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தியான நிலைக்கு உயர்த்தியும் பார்க்கலாம். “எனக்கு என் தியானத்தில் ஒரு காட்சியும் வரவில்லையே.. பதில் குரல் ஒன்றும் வரவில்லையே.. நான் ஆதி பரமனுடன் இணைக்கப்பட்டதை எப்படி எதனைக்கொண்டு அறிவது?” என்று சிலர் வருந்துவார்கள். அதன் பதிலை, குயில்கள் போன்ற கவன ஈர்ப்புகளை தாண்டி - அழகிய வளையல்கள் ஓசையுடன் அம்மை கதவு திறக்கும் ஓசையுடன் பொருத்தி மிக கவனமுடன் நாம் (கழறிற்று அறிவார் நாயனார் போல) நிச்சயம் உணர்வோம்.

திருப்பாடல்:

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பினாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறப்பாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் உறக்கத் தீவிரவாதங்கள்

மார்கழி :17
திருப்பாடல்:17

இரண்டு பேர் உறங்குகிறார்கள். ஓங்கி உலகளந்த உத்தமன் ( மனசாட்சி) உறக்கம் காட்டப்படுகிறது. “யசோதாய்” என நீளமாய் நீநீநீட்டி   அழைக்கப்பட்டு  ( மனசின் பெண்பாகம் ) உறக்கம் கொள்வதாய் சொல்லப்படுகிறது. செல்வப் பரந்தாமனே உறங்கிவிட்டால் இந்த உலகம் என்னாகும்!
திருவள்ளுவர் பேருந்தில் 112ரூபாய் கொடுத்து சென்னைக்கு ஏறுகிறீர்கள். இரவு இரண்டு மணிக்கு கண்விழித்துப்பார்த்தால் ஓட்டுநரும் உறங்குவதை ஒரு நொடி கண்டு விட்டீர்கள்! எப்படி இருக்கும்! உறங்காதீர் என்று எழுப்புவீர்களா இல்லையா? 
நீதி:- “உலகம் என்கிற மாயை படைத்தீர்கள். அது பற்றி பலதடவை கண்ணபெருமானே நீ விளக்கியும் , விட்டில் பூச்சிகளாய் நாங்கள் காம, குரோத, லோபத்தில் சிக்கிய மக்களாம் எங்களை எழுப்பும்  ஓயாத பணியை விட்டு உறங்கிவிடாதீர்கள்! எழுந்திருங்கள்”  

திருப்பாடல்:

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோ எம்பாவாய்.

திருப்பாவையில் நேசம்

திருப்பாடல் 16
மார்கழி 16

நேசம் வைத்து ஆரம்பித்த செயல்களைக்கூட  நடுவில் நாம் நிறுத்திவிடுகிறோம்.  “அது இது” என எவ்வளவோ சப்பை க்கட்டுகள் கட்டினாலும் அதற்கு உள் காரணம் ஒன்று இருக்கும். வாயால் முன்னம் ஒன்று பேசினோம். இப்போது மாற்றி விட்டோம். மாற்றி மாற்றிப்பேசுகிறவர்களை “உனக்கு இரட்டை நாக்கா? என்பார்கள். தண்ணில கிடக்குற நாக்கு எப்படியும் பேசும்” என்பார்கள். ஏன்? கதவு போட்டு நல்ல காரியங்க¨ளை இழுத்துமூடியதற்கு என்ன காரணம்? மரக்கதவு தேக்கு கதவு போட்டால் அடைத்தே வைத்திருப்போம். நேசம் கொண்டு ஒரு கதவு செய்தால் அதனை  நம்மால் திறக்க முடியும்தானே! ஆண்டாள் நாச்சியார் வாய் மலர்கிறதை இதோ பாடலில் கேளுங்கள். 

திருப்பாடல்:

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


Sunday, 6 January 2013

திருப்பாவையில் அறியாமை

மார்கழி :15
திருப்பாடல் :15

திருப்பாவையில் அற்புதமான பாடல் இது. நம்மைச் சுற்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளது. நாமும் அறியாமை கொண்டவர்களே. எனினும் மற்றவர்களை விட ஒரு சில விஷயத்தில் அறிவு விழிப்பு உள்ளவர்களாய் நமக்கே தோன்றும்போது அறியாமை கொண்டோரிடம் கோபமாக “என்ன! உனக்கு இதுகூட தெரியாதா” என்று சினம் கொள்வோம். அப்படிப்பட்டவர்களை கோபமாக  அப்படிச் சொன்னால் மாறமாட்டார்கள். நமக்கு ரத்தக் கொதிப்பு (பி.பி) எகிறும். உண்மையில் திட்டு வாங்கும் நபர் , “உமக்கு மட்டும் எல்லாம் தெரியுமோ!” என்று கேட்கவும் கூடும். இந்த சிக்கல்கள் தீர ஆண்டாள் அம்மை அழகிய காட்சி ஒன்றைத் தருகிறார்.
அறியாமை என்கிற உறக்கத்தில் இருப்பவர்களை மெல்லென “எல்லே!” என்றும் “இளங்கிளியே” என்றும் கொஞ்சும் அன்புடன் அழைக்க வேண்டும். பிறகுதான் “இன்னும் உறங்குதியோ” என்று சிடுசிடுப்பு காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் மாறுவார்களா? விழிப்பார்களா? “நீங்கள் எல்லாம் பேச்சில் திறமைசாலிகள்” என்று புகழ்ந்து ஒதுங்கப் பார்ப்பார்கள். மீண்டும் புரியுமாறு கூறுவோம். அப்போது அவர்கள் “மற்றவர்கள் உறக்கம் விட்டு (அறியாமை) நீங்கிவிட்டார்களா? அவர்கள் எத்தனை பேர்! முதலில் அதை எண்ணிச் சொல்லுங்கள்” என்றுதான் கூறுவார்கள். இத்தகைய உலகப்பண்பை  மார்கழி குளிர் நடுவே வரைந்த கோலத்தில் வைத்த மஞ்சள் பூசணிப்பூ போல செழுமையாக சேர்த்துவிட்டார் நம் ஆண்டாள்!
   
திருப்பாடல்:

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


திருப்பாவையில் நாவு

மார்கழி :14


நமக்கு நம் உள்ளே இருக்கும் நாக்கு வெளியில் தெரியவில்லை. ஆனால் பேச்சு  உலகில் பேச்சு மட்டும் எழுப்புகிறவர்களால் நாம் உள்ளோம். இல்லாததும் பொல்லாததும் பேசி வருகிறோம். நிறைய பேசுகிறவர்களே மாட்டிக் கொள்வார்கள். திருப்பாவையில் ஒரு தோழி “நாளைக்கு நானே வந்து சீக்கிரம் எழுப்புவேன்” என்று உத்தரவாதமாய் பேசி அந்த வாக்குறுதி மறந்து உறங்கிவிடுகிறாள். ஆண்டாள் நாச்சியார் இபடிப்பட்டவர்களை “நாணாதாய் நாவுடையாய்:” என்று பட்டம் தருகிறார். உண்மை சொல்லவேண்டும் என்கிற பொறுப்புடன் நடந்துகொள்ளாத நாக்கு வெட்கமில்லா நாக்கு. ஆடை அணியாத நாக்கு. நிர்வாண நாக்கு என்று உறுதிப்பட கூறுகிறது இப்பாடல்.

திருப்பாடல்:

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவாள் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

திருப்பாவையில் வானவியல்

மார்கழி:13

அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிடும். சும்மாவிடுகிறதா இந்த சோம்பல்!  அப்படியே படுக்கையில்  கிடப்போம். : “இன்னுமொரு அஞ்சு நிமிஷம்” என்று உடம்பு கேட்கும். புத்தி தலையாட்டும். நேரம் கடந்துவிடும். எழுவது தள்ளிப்போகும். பொழுது விடிந்து சூரியனின் கிரணங்களில் படிந்து கடிகாரம் காலை ஏழு எனச் சொல்லும். அடடே எப்படித் தூங்கிப் போனோம்! என்று பறந்து பறந்து  நேரத்தைத் துரத்துவோம். ஒரு பொன்மொழி சொல்கிறது. “காலையில் நீங்கள் இழந்த பத்துநிமிடத்தை இரவு படுக்கச் செல்லும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள்!”
              “வெள்ளி எழுந்து” என்கிறார் கோதை நாச்சியார். வெள்ளி என்பது சுக்கிரன் வானில் பளீர் எனத் தனியே தெரியும் நட்சத்திரம். மற்ற நட்சத்திரங்கள் போல் மின்னி மின்னி அடங்காது. அளவில் சற்று பெரிதாக வைரக்கல் மூக்குத்தியே போல் நிலைத்த பிரகாசமுடன் காணலாம். இப்படிப்பட்ட வெள்ளியைக் வானில் காண அதிகாலை எழ வேண்டும். மனம் குளிரும் இத்தகைய “வெள்ளி” ஒளிவிட்டு எழும்போது வியாழன் கிரகம் மறைகிறது என்கிற வானவியலை  “வெள்ளி எழ வியாழம் உறங்கிற்று” என்று கவிதைத் தமிழில் அறிவியலாகச் சொன்னாள் நமது திருப்பாவையார்.

திருப்பாடல்:

புள்ளின்வாய்க் கீண்டானைப்ப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புகார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ எம்பாவாய்.

திருப்பாவையில் இயற்கை அழகு

மார்கழி:12


எருமை என்றதும், “பெருத்த கருப்பு உருவம்! எமனின் குறியீடு! கணக்கு வாத்தியார் திட்டு!” முதலியன நினைவு வரலாம். அன்பு வழியாகவே காண ஆரம்பித்தால் காட்சிகள் மாறுகின்றன. ஆண்டாள் காணும் எருமைதான் எத்தனை அழகு வாய்ந்தது. அதோ பாருங்கள்! தாய்ப்பாசம் நிறைந்த எருமை தனது கன்றுக்கு பாலூட்ட நிற்கிறது. பால் உடனே சுரக்கவில்லை. மனம் இரங்கும்போதுதான் முலை வழியே பால் சுரக்க முடியும். இது ஒரு அபூர்வ கவனிப்பாகும். உடலில் சுரக்கும் திரவம் - அது எருமையானாலும் சரி அன்பு மன ரசாயனம் தேவைப்படுகிறது. அதன் பின்பு சுரக்கும் பாலினால் இல்லம் நனைந்து சேறாகிறதாம். வீட்டு வாசலில் பனி வழிந்து தலையில் சொட்டுகிறது. பனியும் ஈரம். பாலும் ஈரம். இரண்டுமே நீரின் அம்சங்கள். திருப்பாவையில் இந்த அழகியலைச் சுட்டிக்காட்டிய ஆண்டாள் நாம் நம்மை தூக்கத்திலிருந்து (அறியாமை) எழுப்பிக் கொள்ள “மனத்துக்கு இனியானைப்பாடுக” என்று நேரடியாக சொல்லாமல் , மனம் இரங்க வேண்டும் என ஈரம் வழியே நினைவூட்டுகிறார்.

திருப்பாடல்:

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ் நின்வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ எம்பாவாய். 


திருப்பாவையில் வலிமையான கேள்விகள்

மார்கழி :11


“தூங்குகிறேன் நன்றாக” என்கிறவரை “நீதான் நன்றாகத் தூங்கினேன் என்கிறாயே நீ உறங்கியது எப்படி உனக்குத் தெரியும்!” என்று ஒரு கேள்விக் கேளுங்கள்.சொன்னவர் திண்டாடிப் போவார். ஏன்?  அதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது. உண்மையான பதில் எதுவெனில் நமது ஆன்மா உறங்குவதில்லை., நமது புலன்கள் உறங்குவதை அது சாட்சியாகக் காண்கிறது என்பதே விடை. சுருக்கமாகச் சொன்னால், ஆன்மாவுக்கு இரவுமில்லை.பகலுமில்லை. உறக்கமும் இல்லை. விழிப்பும் இல்லை. என்பதே அர்த்தமாகும். நாம் நம்மை ஆன்மாவாகக் கருதாமல், விழிப்புணர்வாக உணர்ந்து கொள்ளாமல் வயிறு சம்மபந்தப்பட்டவர்சகவும் கண்ணாடி போட்டவராகவும் நெட்டை குட்டை என்றும், படித்தவர் பெயிலானவர் என்றும் கருதுவது சரியல்ல. அதனால்தான் இந்தத் திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் அழகாக “எற்றுக்கு உறங்குகிறாய்? இதன் பொருள் என்ன!:” என்று அர்த்தமற்ற - உயர்வு தராத - விழிப்புணர்வு கொள்ளாத தன்மையாகிய தூக்கத்தை கேள்வி கேட்டு ஆராய்கிறார். அந்தக் கேள்வியில் அக்கறையும் தெரிகிறது. பழி போடுவதாய் கேட்கவில்லை.

இதோ அந்த அருமையான பாடல்:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழி மாரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
ஏற்றுக் குறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.