Showing posts with label சுந்தர காண்டம். Show all posts
Showing posts with label சுந்தர காண்டம். Show all posts

Saturday, 17 May 2014

சுந்தர காண்டம் 1201 - 1298









பாடல்-1201:

மலர்கள் கரிந்தன
பொறியாகின சிதறின
இலைகள் கரிந்தன
சிறு கிளைகள் சாம்பலாகின
பருத்த வேர்களும் கரிந்து
சோலைகள் முழுதும் கரியானதே!
அனுமன் சினம் சரியானதே!

பாடல்-1202:

மேல்நோக்கி எழும் கனல் பிழம்புகள்
மேகங்களை மூழ்கடித்து
வானத்தின் அமராவதி நகர்  வெப்பமாகி
உருகி ஊற்ற ஆரம்பித்து
இடைவிடாமல் தாரைகள் வழியும் காட்சி
பொன் வேர்கள்
விண்ணிலிருந்து
மண்ணில் இறங்குவது போலிருந்தது.

பாடல்-1203:

அடர் நெருப்பின் சுடர் உயர்கிறது
வெண் சந்திர ஒளிக்கதிர் மண்டலத்தையே
உருக்குகிறது
சந்திரன் உருகியது அமுதம் சிந்தியது
தீப்பற்றியதால் இறந்த அரக்கர்கள்
சிலருக்கு உயிர் வருகிறது.

பாடல்-1204:

வானைப் பற்றுவதற்காக
நிமிர்ந்து எழுந்த கனல்
வானில் செல்லும் கார்மேகத்தை எரித்து
கருப்பாக்கியதால்
சூரியனைச் சுற்றிலும் கரிகளாக தெரிந்தன
கரிகளுக்கு நடுவே இடப்பட்ட தங்ககட்டி போல
தெரிகின்றான் சூரியன்!

பாடல்-1205:

குதிரைகளைக் கட்டியிருக்கும் கயிறு
முதலில் எரிந்தது
தாவும் நெருப்பு சும்மா இருக்குமா
கயிறு கட்டிய முளைகளை எரித்தது
குதிரையின் பெரிய மயிர்கள்
கால் குளம்புகள்
அழகிய நிறம் மிக்க உடல்
அனைத்தையும் எரித்தது .

பாடல்-1206:

எமனையே தூக்கி விழுங்கும்
ஆற்றலுடைய அரக்கர்கள்
தீயிலிருந்து தப்ப முயலும்போது
தீப்பிழம்பின் நுனி
துரத்தித் துரத்தி வளைப்பதால்
மயக்கமடைந்தனர்
நெருப்புக்கு இரையாகினர்.

பாடல்-1207:

பசிய பொன் அணிகலனும்
கடல் போல் பரந்த அல்குலும் கொண்ட
அரக்க மகளிர் இடுப்பில் இருந்த பட்டாடை
தீப்பிடித்து எரிந்தது
மேலாடைக்கு தாவியது
நறுமணமிகு கூந்தல் எரிந்தது.

பாடல்-1208:

 “செந்நிற இலவம் மலர்களில்
முத்து இருக்கின்றது” என நம்ப வைக்கும் அரக்கமகளிரும்
அரக்க ஆடவரும்
நிலவு போன்ற தமது வெள்ளை ஆடைகளில்
காமநெருப்பும்
அசல் நெருப்பும்
ஒரே நேரத்தில் பற்றிடக் கண்டனர் அலறினர்
இன்பம் ததும்பும் கலவியின் கரை காணமுடியாமல்
நெருப்பு அணைத்துக்கொண்டதால் -
கடலில் சென்று பாய்ந்து விழுந்தனர்
இரண்டும் அணையட்டுமென!

பாடல்-1209:

பஞ்சாரம் எனும் கூட்டிலிருந்த
பசுமை நிறக்கிளிகள் வெந்தன
பதைத்துப் போனார்கள்
அரக்க மகளிர் கண்ணீர் அருவி
முலை முகட்டில் விழுந்து வழிந்தது
யானை போன்ற தனது கணவர்களை
வீர சொர்க்கத்துக்கே சென்று காணும் ஆசையால்
புகையில் மறைந்து இறந்தார்கள் -
மேகத்தில் மறையும் மின்னல் போல.

பாடல்-1210:

மலை போன்ற மாளிகைகளில் பரவிய தீயினால்
அரக்க மகளிர் வெளியேறுகிறார்கள்
பொன்நகை ஒளி வீசிட
வானத்திடையே நடக்கும்போது
புகை படர்வினால்
திரை மறைவுப் பாவை போலாகி 
ஒளி குன்றி
கருப்பு நிறமாகவே ஆகி விட்டார்கள்.

1211
நந்தவனங்கள் எரிவதும்
சந்தன மரங்கள் எரிவதும்
குற்றமற்ற பலப்பல மரங்கள்
வாசனை சூழ எரிவதும்
ஊழியின் இறுதிக்காலத்தில் தோன்றும்
‘கால அக்னி'
மீன்வளங்களை அழித்து
கடலை வற்றச்செய்வது போலிருந்தது.

1212
மின்னல் பரவியது போல எரிகின்ற
கொழும்சுடர் எருப்பு
உலகம் முழுதும் விழுங்குவது மட்டுமல்ல-
நினைவு தாண்டிய பல உலகங்களின்
திசைகள் தாண்டியும் விரிபவை!
நெருப்பு பற்றி  எரிந்த மரங்கள்
நெருப்பு பற்றாமலே
நெருப்பின் ஒளியுடன் ஒளிரும்
கற்பக மரங்கள் போல நின்றிருந்தன.

பாடல்- 1213:

தாம் பருகிய நீரை
மேகக்கூட்டங்கள்
பெரிய மலைச் சிகரங்களில் பெய்தன
மீண்டும் நீரை முகக்க
பூளைப் பூ போல
வெண் நிறமாய் புறப்பட்டபோது
இலங்கை நகரிலிருந்து புறப்பட்ட கொடிய புகை
வழிமறித்தது!
செல்லும் வழி தெரியாமல்
முகில் கூட்டங்கள் அலைகின்றன.

பாடல்-1214:

மிகுதியான வெப்பம் மிகுந்த
புகையும் கரியும் கூட்டணி வைத்துக்கொண்டு
பல வேலைகள் செய்தன! ஆம்!
வெள்ளியங்கிரி மலை நிறமிழந்து
மற்ற மலைகள் போலானது
அன்னங்கள்
காக்கைகளாயின
பாற்கடல்
கருங்கடல் ஆயிற்று
திசை யானைகள்
வழக்கமான யானைகள் போலாயின.

பாடல்-1215:

கருகவும் உதிரவும் வைக்கின்ற
கொடிய நெருப்பு
உடல்களைப் பற்றியதால்
தோல் உரிந்து
ஓடிச்சென்று
கடல் நீரில் ஒளிகிறார்கள்
அரக்க ஆடவர்கள்
அரக்க மகளிர் சிவப்பு நிற தலைமயிர் மட்டும்
கடலின் மேல்புறம் தெரிவது -
கடல் நீரே
நெருப்பினால் வெந்தது போல
செந்நிறமாகத் தெரிகிறது!

பாடல்-1216:

இடுப்பிலே ஒரு குழந்தை
கையில் பிடித்தநிலையில் ஒரு குழந்தை
இன்னொரு குழந்தை
அழுதபடி
தானே நடந்து வர
கூந்தலில்
சுறுசுறு  என
பற்றிக் கொள்ளும் நெருப்புடன்
தமது வீடுகளை விட்டு ஓடி வந்து
கடலில் விழுகின்றனர்
கதறும் அரக்கியர்கள்.

பாடல்-1217:

ஆயுதக் கிடங்கில் இருந்த
வேல் கூட்டமும்
எறி ஈட்டியும்
விறகாகி எரிந்தன
எஃகுப் பகுதிகள் எல்லாம் உருகின
அவை
படைக்கலத் திரட்சி என்ற நிலை மாறி
எஃகு உருண்டை என்ற நிலைக்கு வருவது
உயர்நிலை நாடும் ஞானிகள்
தமது
பழைய நிலைக்குத் திரும்புவது போல உள்ளது!

பாடல்-1218:

முகபடாம் அணிந்த கொடிய யானைகள்
உடம்பில் நெருப்புடன் எரியும்போது
அகன்ற செவிகளை அசையாமல் நிறுத்தின
முறுக்கிய வால்கள்
முதுகில் படிய
துதிக்கைகளை தூக்கியபடி
பிளிறி ஓடும்போது
பாரம் மிகுந்த பூட்டுகள் சிதறுகின்றன!
கழுத்தின் கயிறுகள் சிதறுகின்றன!
கட்டியிருந்த தூண்கள் சிதறுகின்றன!

பாடல்-1219:

அடைக்கலமே இல்லாதவர்கள்
அருளில்லாத வஞ்சகர்களையே
சரண்புகுவது போல
வெப்பம் மிகு புகைப்பரப்புக்கு
அஞ்சிய பறவை இனங்கள்
இருள் நிறைந்த கரும்கடலில் விழுந்தன
மீண்டும் எழுந்து பறக்கமுடியாமல்
மருட்சி கொண்ட மீன் இனங்களால்
தின்னப்பட்டு இறந்தன.

பாடல்-1220:

உயர்ந்து ஓங்கிய தீ
நீர்நிலைகளை வற்றச் செய்தது
நெடிய நிலம் தடவியது
மரங்களைத் தழலாக்கியது
மேருமலையையும் பற்றிக் கொண்டு எரிக்கின்ற
ஊழிக்கால நெருப்பு போல
இலங்கை முற்றும் தின்றது
இராவணன் அரண்மனையில் புகுந்தது
உயர்தீ ! உயரும் தீ ! உயர உயர உயரும் தீ
!

பாடல்-1221:

இராவணன் மாளிகையில்
தேவமகளிர் மறுகிப் போனார்கள்
கந்தர்வ மகளிர் கலங்கிப் போனார்கள்
திக்கு அறியாமல்தவித்தார்கள்
அனைவரும் போனார்கள்
சுற்றிலும்
ஓடி ஓடித் திரிந்தார்கள்
தேவர்கள் தலைநகரை
இராவணன் கைப்பற்றிய அந்த நாள் போல
இன்று
இராவணன் மாளிகை நிலைகுலைந்தது.

பாடல்-1222:

ஒரு அரண்மனையில் எவ்வளவோ இருக்கும்
கஸ்தூரி வாசனை கலவை
கற்பக மரம் பூக்களின் மாலை
இன்னும் பலப்பல
எல்லாமும் எரிந்து புகைந்தன
புகையின் குளிர்ச்சி
மேகங்களின்  கூட்டம் போலாகிவிட்டது
எட்டுத் திசையும் சென்றது
தேவமகளிர் கூந்தலை
வாசனை தடவிச் சென்றது.

பாடல்-1223:

எங்கும் சூழ்ந்தது வெண் நெருப்பின் சுடர்
யாரும் தொடர முடியாத
யாரும் அணுக முடியாத
கடலளவு சினம் மிக்க
ஆண்மை மிகு இராவணன் அரண்மனையின்
ஏழு மாடங்களும் வெந்து எரிந்தன
பிரளய காலத்தின் கடைசி காலத்தீ
ஏழு உலகங்களை உண்பது போல
அக்காட்சி இருந்தது.

பாடல்-1224:
குற்றம் நீங்கிய
மலை போலிருந்த
பொன்னால் ஆக்கப்பட்ட
ஏழுமாட அரண்மனை
எதிர்க்க முடியாத நெருப்பின் முன்
மண்டியிட்டு அழிந்து உருகியது
உருகிவிட்ட அரண்மனையின் உயரம்
வட திசை மட்டுமல்ல
தெற்குத் திசையிலும் மேருமலை என
தங்கத்தில் ஜொலித்தது.


பாடல்-1225:

அப்போது
இராவணன் தனது உரிமை மாதர்களுடன்
புஷ்ப விமானத்தில் ஏறித் தப்பித்தான்
மற்ற அரக்கர்கள்  தம் ஆற்றலால்
நினைக்கும் நேரத்தில்
அங்கிருந்து தப்பினர்
இலங்கை என்ற இடத்திற்கு மட்டும்
தப்பிக்கும் ஆற்றல் இல்லை என்பதால்
மலை மேல்  அங்கே வெந்தது!

பாடல்-1226:

தீப்பட்டு எரிகின்ற மற்ற அரக்கர்களை
எதிரே பார்த்தான் இராவணன்! கேட்கின்றான்
“கீழும் மேலுமாக அடுக்கிய
பதினான்கு உலகங்களும் எரிந்திட
ஊழியின் இறுதிக்காலம்  வந்துவிட்டதோ!
வேறு காரணம் உண்டோ?
தீயில் இலங்கை வேகக் காரணம் என்ன?”

பாடல்-1227:

செல்வமும் இழந்து
சுற்றமும் இழந்து
கரங்கள் கூப்பிக் கொண்டே
அரக்கர்கள் சொல்கின்றனர்
“அரசனே
கடல் அலையை விட நீண்ட
அக்குரங்கின் வாலில் இட்ட நெருப்பினால்
அக்குரங்கு சுட்டது இது!”
கேட்ட இராவணன் கொதித்தான் நெருப்பை விட!



பாடல்-1228:

“அற்பத் தொழில் செய்யும்
குரங்கின் வலிமையால் இலங்கை வெந்து நின்றது
நெருப்பு தின்று ஏப்பம் விட்டது என்கிறீரே...
தேவர்கள் சிரிப்பார்களே...
நன்றாயிருக்கிறது
மிக நன்றாயிருக்கிறது நமது போர் வலிமை!”
இராவணன் கோபத்தில் உக்கிரமாய்ச் சிரிக்கின்றான்.

பாடல்-1229:

தேவர்களை வென்ற இராவணன் சொல்கிறான்
“இலங்கையைத் தின்ற அக்னி தேவனை
தேடுங்கள் ... கொண்டு வாருங்கள்”

பாடல்-1230:

கோபம்
உலகில்
எவ்வளவு இருக்கிறதோ
அவ்வளவு கோபமும் கொண்ட இராவணன்
“அழிவு செய்த குரங்கை
தப்புவதற்கு முன்பாகக் கொண்டு வருக” என்றான்.

பாடல்-1231:

தொலைவாகவும்
அருகிலும் நின்ற வீரர்கள்
சிட்டாய் விரைந்தார்கள்
செய்கிறோம் என்றார்கள்
அடுத்த நொடி கூட ஆகவில்லை
தேரில் ஏறிச் சென்றார்கள்

பாடல்-1232:

அவர்களுடன்
அளவில்லாத வில் வீரர்கள்
மிக்க பதவி வகித்தவர்கள்
தேரின் பின்னே ஓடினார்கள் கோபமுடன்!

பாடல்-1233:

தும்பைப்பூ மாலை அணிந்த
ஏழு வீரர்கள்
கடல் போல் பொங்கி
சேனைகளைச் சரி செய்து
புறப்பட்டார்கள் போருக்கு.


பாடல்-1234
அனுமனை
வானில் தேடினார்கள்
கடலைச் சுற்றியுள்ள
இலங்கைத்தீவு முழுதும் தேடினார்கள்
வெற்றி!
அண்ணல் அனுமனை அருகில்
தமது கண்ணால் கண்டனர்.

பாடல்-1235:

பிடியுங்கள் பிடியுங்கள் என்றனர்
அடியுங்கள் அடியுங்கள் என்றனர்
முற்றிலும் கோபமுடன் வளைத்தார்கள்
முற்றிப்போன கோபமுடன் பிடித்தார்கள்
கற்று உணர்ந்த மாருதி புரிந்து கொண்டான்.

பாடல்- 1236:

கருமேகங்கள் போல
வஞ்சகர்கள் எதிர்பட்டனர்
கால்களாலும்  கைகளாலும் வேல்களாலும்
அனுமனை வளைத்தார்கள்!
வெம்மை நெருப்பு வாய்கொண்டு
அனுமனும் வளைத்தான் அவர்களை!

பாடல்- 1237:
எல்லாத்திசைகளிலும் உள்ள அரக்கர்களை
வாலினால் வளைத்தான்
மரத்தை பறித்து அடித்தான்
கோபமான அரக்கர்கள்
முதலில் ஆயுதங்களையும்
பிறகு
ஆயுளையும் இழந்தார்கள்!

பாடல்-1238:

மாருதி அடிக்க அடிக்க
துன்புற்ற அரக்கர்கள் உடம்பிலிருந்து
இரத்தம் பெருகியது
நிலம் சேறானதுமட்டுமா?
இலங்கையை எரித்த சிவந்த நெருப்பு
தணியச் செய்வதற்கு
இந்த இரத்த ஆறுதான் பயன்பட்டது!

பாடல்-1239:

போரில் இறந்தவர்கள் தவிர
போரில் தோன்றிய வீரமாகிய
ஆண் சிங்கங்கள் போரிட்டன அனுமனுடன்
கலைகளைக் கற்ற அனுமன்
காற்றின் மைந்தன் அனுமன்
எமனை விட மூன்று மடங்கு
அதிக வலிமையுடன் கொன்றிட்டான் அவர்களை!

பாடல்-1240:
கருமேக உடம்புடன்
வலிய பாதங்களும் தோள்களும் கொண்ட
அரக்க வீரர்கள் ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்
இறக்காதவர்கள்
கடல் மேல் மிதந்தார்கள்.

பாடல்-1241:

அனுமன்
நெருப்பு கொண்ட வாலை
கடலில் தோய்த்தான்
கடல் நீர் கொதித்தது
கடலில் குதித்தவர்களும் இறந்தார்கள்
அதிலும் தப்பிய வீரர்கள்
தமது உயிரைக் காப்பது இழிவு என்பதால்
அனுமனுடன் போரிட முற்பட்டார்கள்

பாடல்-1242:

தேர் வீரர்கள்
வில் வலிமை காட்டிப் போரிட்டனர்
அவர்களையும் அனுமன் தாக்கினான்
அடிபட்டு இறந்தார்கள்.

பாடல்-1243:

பூமியை விட்டு
வானிலே சென்ற வித்யாதரர்கள்
“அனுமன் கொளுத்திய நெருப்பு
வட்டமுலை உடைய திருமகள் சீதை வாழும்
பறவைகள் வாழும்  சோலையின்
உட்புறமும் சுடவில்லை
வெளிப்புறமும் சுடவில்லை” என்றனர்.

பாடல்-1244:

அதனைக் கேட்ட
வெவ்விய வீரன் அனுமன் வியந்தான்
“தீவினையிலிருந்து தப்பினேன்!” என
மேலே எழும்பினான் உயர்ந்தான்
அசோகவனச் சீதையின்
திருவடிகள் பணிந்தான்.

பாடல்-1245:

அனுமனைப் பார்த்தனள் ஜானகி
பார்த்ததும் எரியும் மேனி குளிர்ந்தாள்
போர்த்தொழிலில் வல்ல மாருதி சொன்னான்
“வார்த்தைகள் ஏன்! வந்தனம்!” என்றனன்!

பாடல்-1246:

தெளிந்த அனுமன் புறப்பட்டான்
“கள்ள மன அரக்கர்கள் பார்த்தால்
இழிவாய்ப் பேசுவார்கள்
பிடித்துக் கொள்வார்கள்” என்று
ஒளி பொருந்திய அக்னிதேவனும் ஒளிந்தான்.

(இலங்கை எரியூட்டுப் படலம் முற்றிற்று)

திருவடி தொழுத படலம்

பாடல்-1247:

“விரைவில் இலங்கை நீங்குவேன்” என
நினைத்த அதே  கணம் அனுமன்
மலைச்சிகரம் அடைந்தான் சூரியன் போல!
நீண்டு உயர்ந்து வீங்கினான்
திரி விக்ரமனாய்!
வான் வழியே விரைந்து பறந்தான்
இராமபிரான் திருவடி வணங்கி!
திருவடி தொழுதார் எதைத்தான் அடையமாட்டார்!

பாடல்-1248:

துதிக்கை யானை போன்ற அனுமன்
“மைந்நாகம்” எனும் மலை அடைந்து
செய்தி உணர்த்தினான்
ஒரே கணம் கூட இல்லை!
மலைகளைப் பெயர்த்து எடுக்கும் வீரர்கள்
தனது வரவை எதிர்பார்த்து
கண்கள் பூத்துப்போன  மகேந்திரமலையில்
சென்று குதித்தான்!
குதித்துச் சென்றான்!

பாடல்-1249:

கூட்டிலிருக்கும் பறவைக் குஞ்சுகள்
தாய்ப்பறவை வரவுக்கு
மகிழ்ந்து கூத்தாடுவது போல்
அதுவரை
அனுமன் நிலைக்கு புலம்பிய அங்கதன் மட்டுமல்ல
அத்தனை வீரர்களும்
“சீதையை கண்டுபிடிக்கும் பணி முற்றுபெற்றது” என
மகிழ்வில் பூத்தார்கள்.

பாடல்-1250:

அனுமனைக் கண்ட மகிழ்வில் வானரர்கள்
சிலர் அழுதனர்
ச்¢லர் ஆரவாரித்தனர்
சிலர் தொழுதனர்
சிலர் துள்ளிக் குதித்தனர்
சிலர் அள்ளி விழுங்குவது போல் மொய்த்தனர்
சிலர் தழுவினர்
சிலர் அனுமனைத் தலையில் சுமந்தனர்.

பாடல்-1251:

“அண்ணலே! அனுமனே!
உன் பெருமை ஒளி முகம்
சீதையை நீ கண்டு விட்டாய் என்கிறது
தேன் இருக்கிறது
கிழங்கு இருக்கிறது
காய்களும் முயன்று தேடி வைத்துள்ளோம்
மெலிவு தீர்க! களைப்பு தீர இளைப்பாறுக” என
தனக்கு வைத்திருந்த உணவையும் இலையையும்
வரிசை வரிசையாகத் தந்தனர்.

பாடல்-1252:

புண்கள் புண்கள் புண்கள்
அனுமனின் கால்களில் மார்பில்!
தோளில் தலைகளில் பெரும் கைகளில்!
வாள்களாலும் வேல்களாலும்
மழை போல் சொரிந்த அம்புகளாலும்
அனுமன் உடல் பிளந்து
உண்டான புண்களின் எண்ணிக்கை எத்தனை ?
உலகில் இதுவரை கழிந்த நாட்களின்
எண்ணிக்கை எத்தனையோ அத்தனை!
பார்த்துப் பார்த்து உயிர் சிந்துவது போல வருந்தி
பெருமூச்சு விடுகின்றனர் வானரர்கள்!

பாடல்-1253:
அனுமன் என்ன செய்கிறான்?
வாலியின்மகன் அங்கதனை முதலில் வணங்கினான்
கரடிகளின் அரசன் ஜாம்பவானை வணங்கினான்
கடமைப்படி
வணங்க வேண்டியோரை எல்லாம் வணங்கினான்
“ஞாலநாயகன் தேவி சீதை
இங்குள்ளவர்களுக்கெல்லாம் நன்மை நடக்கும்! ” என்ற
வாழ்த்துச் செய்தி அறிவித்தான்.

பாடல்-1254:

அந்த ஒரு வார்த்தை கேட்கவே
உயிர் வைத்திருந்தது போன்ற மகிழ்ச்சி பொங்க
கரங்கள் கூப்பி எழுந்தனர்
வணங்கி கைகள்குவித்தனர்
உவகை பொங்கிட
நெஞ்சு விம்மினர் அத்தனைபேரும்!
மிகுந்த வலிமையாளனே
“இங்கிருந்து சென்றது முதல்
இப்போது வந்ததுவரை சொல்வீர்” எனக் கேட்டனர்
வாயு மைந்தன் சொல்வான்:

பாடல்-1255:

ஆண்மைத்திறம் மிக்க அனுமன்
எதைக் கூற வேண்டும் என அறிந்தவன்!
எதை கூற வேண்டாம் என்பதும் அறிந்தவன்!
அதனால்
சீதைதேவி உள்ளத்தின் அருந்தவச்சிறப்பினை
அமையுமாறு அழகுறச் சொன்னான்
அவள் அணிந்த
சூளாமணி பெற்றதும் சொன்னான்
நீண்ட வாள் அரக்கரோடு
நிகழ்ந்த போரினைச் சொல்லவில்லை
நெருப்பைச் சிந்தி இலங்கையிலிருந்து
வெற்றியுடன் மீண்டதைச் சொல்லவில்லை!

பாடல்-1256:

“அனுமனே
மகாவல்லவனே
நீ ஏதும் சொல்லாதபோதும்
நீ நிகழ்த்திய போரினை
உன் மேனிப் புண்களே சொல்லி விட்டன!
அப்போரில் நீ வென்றதை
நீ திரும்பி வந்ததால் அறிந்து விட்டோம்
இலங்கையில்
நீ இட்ட தீயை
ஓங்கும் புகை மண்டலம் ஓதியதால் அறிந்தோம்
கருத இயலாத புகழுடையவள் சீதாதேவி என்பது
உன்னுடன் மீண்டு வராமையால் தெரிந்தோம்
தெரிவதற்கு நீ தந்த செய்திகள் இவை!
இனி என்ன செய்யலாம் ?” என்றார்கள் வானரர்கள்.

பாடல்-1257:

“யாரும்
இனி வேறு ஒன்று நினைக்க ஒன்றுமில்லை
இராமசேவகன்
சீதாதேவியைக் கண்ட செய்தி
விரைவில் செப்பி
அண்ணல் இராமபிரான் உள்ளத்து
அருந்துயரம் ஆற்றுவதே
நமக்கு அறிவுடமை” என்று வானரர்கள்
பொருக்கென எழுந்து போனார்கள்!

பாடல்-1258:

அனுமனிடம் வானரர்கள் மேலும் சொல்லினர்
அக்குரல் - 
நன்றி மறவாத உத்தமக் கூட்டத்தின் குரலாக ஒலிக்கின்றது
“சாவதிலிருந்து எம்மை காத்திட்ட வீரா!
சீதை தேவியை மீட்பதாக
நாம் குறித்த நாள் மிகவும் கடந்து
நமது சேனை முழுதும் வருந்தி வருந்தி
விரைவாகச் செல்லும் ஆற்றல் இழந்துள்ளது
தலைமகன் இராமனின் மெலிவு தீர
நீ முன்னே செல்க!முதலில் செல்க!”
அனுமன் அச்சேனை முன்பு
“நன்று” என்று சொல்லிச் சென்றான் .

பாடல்-1259:

மூன்று தலைகள் உடைய சூலம் ஏந்திய சிவபெருமானும்
“செய்து முடிக்க அரும்பணி !பெரும்பணி !” என
வியக்கத்தக்க வித்தகன் அனுமன் ஆவான்!
தூது சென்று மீண்டதும்
இறுதியாய் விளைந்த பயனும்
யாம் அறிந்த அனைத்தும் சொன்னோம்
ஆழியான் இராமபிரானிடம் மன ஒட்டம்  குறித்து
எழுத்து இரதம் திருப்புகிறோம் .

பாடல்-1260:

துன்பம் உற்ற போது
தேற்றுதற்கு ஒரு இதயம் வேண்டும்
பிரசிரவண மலையிலே
இராமபிரான் சோர்ந்து சோர்ந்து போகும்போது
சூரியன் புதல்வன் சுக்ரீவன்
தனது சிறந்த சொற்களால் சீரிய சொற்களால் உயிர்ப்பித்தான்
அதனால்
மிகப்பல ஆயிரம் உயிர்கள்
தனது உடைமை எனப் பெற்றான் இராமபிரான்!

பாடல்-1261:

திண்மை மிகு அனுமனை
திறமை மிகு அனுமனை நினைக்கும் சிந்தையானாக
இருக்கின்ற இராமபிரான்
“உயிரோடுதான் இருக்கிறான்” எனும் அளவில்தான் இருந்தான்
ஏனெனில்
நெடிய மூன்று திசைகளிலும் சென்ற வானரவீரர்கள்
காணவில்லை சீதையை எனும் உரையால்!
காணவில்லை என்ற ஒற்றைச் சொல்லால்
 இராம  உள்ளத்தின் உயிர் வறண்டது.

பாடல்-1262:

ஆரியன் இராமன்
அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன் ஆனான்
சூரியன் புதல்வன் சுக்ரீவனை நோக்கி
“நாம் துவங்கிய செயல் சிறந்தது அல்ல
நமது செயல்
தீர்க்க முடியாத பழியோடு
வலிய பழியோடு முடிந்ததாகும்! ” என்றான்.

பாடல்-1263:

சீதாதேவியை மீட்க நாம் குறித்த நாட்கள்
யானையிலிருந்து எறும்பு அளவுக்கு
குறைந்து குறைந்து குன்றி விட்டன
தெற்கு திசை நோக்கி
நறுமணம் மிகு கரும் கூந்தல் ஜானகியை நாடி
தேடிச் சென்ற அனுமனும் வரவில்லை
“மாண்டு விட்டார்களோ..?
வேறு அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்
வீரனே கூறுக?”” என்றான் சுக்ரீவனிடம்.

பாடல்-1264:

ஆமாம்.. ஆமாம்.. சீதை மாண்டிருப்பாள்
“அவள் மாண்டதை எப்படிச் சொல்வது?”என்பதால்
சொல்வதை விடவும் இறப்போம் என
பெரும் துன்பமோடு இறந்தார்களோ
அல்லது
தேடுகிறவர்கள்
இன்னமும் அலைந்து அலைந்து திரிகின்றார்களோ.

பாடல்-1265:

அரக்கரைக் கண்டிருப்பார்கள்
கறுவும் கோபமுடன் பெரும் போர் வந்திருக்கும்
தொடங்கிய போரில்
வஞ்சகர்கள் மாயையால் என்னவர்கள் அனைவரும்
விண்ணுலகம் போய் சேர்ந்தார்களோ!
அல்லது
தப்பவியலாத  நெடும் சிறைக்குள்
சங்கிலியோடு உள்ளார்களோ....


பாடல்-1266:

“குறிப்பிட்ட நாளுக்குள் மீட்டு
சீதையுடன் செல்ல முடியாத நாம்
எதற்கு அங்கு செல்ல வேண்டும்” என அஞ்சி
இன்பமும் துன்பமும் இல்லாத தவநிலைக்கு சென்று
அயர்ந்துவிட்டார்களோ!
வேறு என்னதான் அவர்களுக்கு நடந்தது?
விளம்புவாய் சுக்ரீவா!” என்றான்
மானுடம் போதித்த வள்ளல்பிரான்.

பாடல்-1267:

சூரியன் திடீரென
தென் திசைக்கு வந்தது போல அனுமன்
அப்போது இராமபிரான் இருப்பிடம் பிரசன்னம் ஆனான்
“யாசிக்கும் கரங்களுக்கு
பொன் மழை பொழியும் பெருவீரன் இராமபிரானே...” என
அன்புறு சிந்தையோடு
அனுமனை அமைய நோக்கினான்.

பாடல்-1268:

இராமபிரானை எய்திவிட்டான் அனுமன்
ஏந்தல் இராமபிரானின் திருவடியைத் தொழவில்லை
தாமரையிலிருந்து நீங்கிய திருமகளாம் சீதை
இருந்த திசை நோக்கி
தலை மேல் கரம் குவித்து
நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சி வணங்கினான்.

பாடல்-1269:

எதையும் குறிப்பினால் உணரும்
கொள்கையான் இராமபிரான்
திறம் மிகு அனுமன் செயலினை
நன்கு நோக்கினான் அதே நொடியில்
“வண்டு உறையும் கூந்தலாள் சீதையும் நலம்
அவள் கற்பும் நலம்” என அறிந்து கொண்டான்.

பாடல்-1270:

அனுமன் காட்டிய குறிப்பே
சீதையின்
நிலைகாட்டும் அளவுக் கருவி ஆனது
ஓங்கிய உயர்வினால்
அங்கு நடந்தது உய்த்து உணர்ந்தான்
இராமபிரான் தோள்கள் மகிழ்வால் பருத்தன
மலர்க்கண்கள் ஆனந்தக்கண்ணீரில் விம்மின
மிகப் பெரும் துயரம் நீங்கியது
சீதையிடம் கொண்ட காதலோ நீண்டது.

பாடல்-1271:

“கண்டேன்! கற்பினுக்கு அணிகலன் சீதையை!
கண்களால் கண்டேன்
தெளிந்து சுருளும் அலைகடல் சூழ்ந்த
இலங்கையின் தென் திசை நகரில் கண்டேன்
இனி சந்தேகம் வேண்டாம்!
துறந்து விடுங்கள்
இதுவரை அனுபவித்த துயரமும் வேண்டாம்”
என்றான் அனுமன்

பாடல்-1272:

“ஐயா ! ஐயனே!
உன் பெரும் தேவி  -
உன்னைப் பெற்ற தசரதன் மருமகள் எனும்
வாய்மைக்கு மட்டுமல்ல
மிதிலை அரசன் ஜனகன் மகள் எனும் பண்புக்கும்
தகுந்த சிறப்பு கொண்டவள் எனத் திகழ்கிறாள்
என் பெரும் தெய்வம் ஐயா!
இன்னமும் கேளுங்கள்” என்றான் அனுமன்.

பாடல்-1273:

பொன்னை ஒத்தது பொன் தவிர வேறில்லை
பொறுமையில் தனக்கு ஒப்பவர் இல்லை என
சீதை தலை சிறந்தாள்
இராமா! உம்மைத் தவிர
உமக்கு ஒப்பானார் இல்லை என
தன்னையே உனக்குத் தந்தாள்
அடிமைத் தொழிலில் என்னைத் தவிர
எனக்கு ஒப்பு யாருமில்லை என
எனக்கும் சிறப்பு ஈந்தாள் ஐயா.

பாடல்-1274:

எம்மோய்!
எப்படிப் புகழ்வேன் சீதாதேவியை!
உன் குலத்தை உன் புகழ் அளவு ஆக்கினாள்
தன் குலத்தை தன்னால் சிறப்பாக்கினாள்
இராவணன் குலத்தை எமனுக்கு ஆக்கி
வானவர் குலம் வாழ வைத்தாள்
என் குலத்தை எவரும் புகழ வைத்தாள்
வேறு செய்ய இனி என்ன இருக்கிறது!

பாடல்-1275:

பெரும் வில்லினை தோளில் ஏந்தி ஏந்தி
தடம் பதித்த தோள் உடைய வீரா!
“திரிகூடமலை மேலிருக்கும் இலங்கையில்
நல்ல பெரும் தவம் செய்யும் நங்கை கண்டேன்”
என்று சொல்லமாட்டேன்!
உயர்ந்த பொறுமை ஒன்றும்
உயர் குடிப்பிறப்பு என்ற ஒன்றும்
பெரும் பொறுமை என்பதும்
ஒன்று சேர்ந்து
களிநடம் புரியக் கண்டேன்!

பாடல்-1276:

இராமபிரானே
“நீவீர் சீதையைப் பிரிந்து இருந்தீர்”
என்பது பொருத்தமற்ற சொல்லாகும்!
ஏன் தெரியுமா
நீவீர் சீதையின் கண்களில் உள்ளீர்
நீரே கருத்திலும் இருக்கின்றீர்
நீரே அவள் எண்ணமாக உள்ளீர்
சீதையின் கொங்கைக் சுவடுகள் மீது
ஓயாமல் மன்மதன்
எய்த அம்புகள் தொளைத்து ஏற்பட்ட
ஆறாத புண்ணிலும் நீவீர் இருக்கின்றீர்.

பாடல்-1277:

“ஐய!
தவம் செய்த தவமாகிய சீதை
கடல் நடுவே இருக்கும் இலங்கை நகரின் ஒருபுறம்
ஒளிமயமான வானளாவிய கற்பகச் சோலையின் உள்ளே
உன் தம்பி இலக்குவன் அமைத்த
புல்லினால் அமைத்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள்”

பாடல்-1278:

உலகைப் படைத்த
தாமரை மலர்வாழ் பிரம்மன்
இராவணனுக்கு இட்டான்
“உன்னை வ்¢ரும்பாத ஒருத்தியை
நீ தீண்டினால்
எண்ணவே முடியாத அளவு சிதறி இறப்பாய்”
என்ற மொழியை எண்ணி
வான் உயர் கற்பு மிக்க சீதையின்
புண்ணியமேனி தீண்டாமலே இராவணன்
மண்ணோடு பெயர்த்து
எடுத்துக் கொண்டு போனான் சீதாதேவியை!

பாடல்-1279:

“சீதையை இராவணன் தீண்டவில்லை” எனும்
வாய்மையை உணர்வாய் இராமனே
பிரம்மன் படைத்த அண்ட கோளம் வெடிக்கவில்லை!
கடல்கள் கரை நோக்கி ஏறி அழிக்கவில்லை!
சூரிய சந்திரச் சுடர்கள் கீழே விழவில்லை!
வேத விதிகள் மாளவில்லை!

பாடல்-1280:

கற்பு நங்கை சோகத்தாள் சீதை
உன்னைப் பிரிந்து
வான தேவர்களும் தொழும் பெருமை அடைந்தாள்
அவர்களும் சிறப்பு பெற்றனர்
உமை அம்மை -
தற்போது சீதாதேவியின் பெருமையால்
இடபாகம் நீங்கி
சிவனின் தலையில் உள்ளாள் !
திருமகளோ -
திருமாலின் மார்பு நீங்கி
திருமுடி மேல் ஏறிக் கொண்டாள்!

பாடல்-1281:

இலங்கை முழுதும் தேடினேன்
இராவணன் அரண்மணையில் தேடினேன்
பொன்னால் ஆன குழை அணிந்த பெண்கள் எல்லாம்
பொதுவாக நோக்கியபடியே வந்தேன்
அசைந்தாடும்  அசோகவனம் குளிர்சோலை புகுந்தேன்
அலைந்து கலங்கும் அலைகளுடன்
கண்ணீர் வழிய
கண்ணீர்க்கடலாக சீதை கண்டேன்.

பாடல்-1282

பேய்களின் கூட்டமும் அஞ்சிட
அரக்கியர் கூட்டம்
சீதையை நெருக்கிச்சூழ்ந்திருந்தது
உன்பால் கொண்ட நேயமே
அவள் அச்சத்தை அன்று நீக்கிய ஒரே கேடயம்!
இரக்கம் என்ற ஒன்று
ஏந்திழை வடிவம் எய்தியதோ எனும்படி
கொடுமை மிக்க சிறையுள்
உத்தமி சிக்கியிருந்தாள்! அம்மா!

பாடல்-1283

“ஐயனே!
சீதாதேவியை வணங்குவதற்கு
பொருத்தமான நேரத்தை நோக்கி இருந்தேன்
அப்போது
வேல் ஏந்திய இலங்கை வேந்தன் வந்தான்
சீதாதேவியிடம் கெஞ்சினான் காதலுக்காக!
கடும்சொற்கள் கூறி சீறினாள் சீதை!
அதுகேட்டு அவளைக் கொல்ல முயன்றான் இராவணான்!”

பாடல்-1284

ஐயனே!
அப்போது சீதாதேவியைக் காப்பாற்றியது
சீதையின் கற்பு ஆற்றல்
உனது அருள் ஆற்றல்
தூய நல் அறத்தின் ஆற்றல்
அதனால்
ஒன்றும் செய்ய முடியாத இராவணான்
அரக்கியர்களிடம்
“நீங்கள் புத்தி கூறுங்கள்” என வெளியேறினான்
அரக்கியர் அனைவரும்
என் மந்திர ஆற்றலால் உறங்கிப்போயினர்.


பாடல்-1285

அந்த ஒரு கணத்தில்
தனது அரிய உயிரை துறப்பதாக முடிவெடுத்து
ஒரு கொடியை
மரக்கிளையில் இறுக்கமாகச் சுற்றி
தன் மணிக்கழுத்தில் சார்த்திக்கொண்ட
அந்த வினாடியில்
நாயேனாகிய நான்
சீதாதேவியின் பொன்னடிகள் வணங்கி
நின்திருப்பெயர் புகன்றேன்.

பாடல்-1286:

மேகமழை போல கண்ணீர்
மெல்லிய கொங்கைகளில் வழிய
மழைக்கண் நீராள் சொன்னாள்:
“உன் செயல்
வஞ்சக அரக்கரின் மாயச்செயலோ.. என
எனது மனதில் சந்தேகம் வந்தாலும்
நான் இறக்கும் நொடியில்
அஞ்சன வண்ணத்தான் திரு நாமம் உரைத்தாய்
மரணத்தை துறக்கச் செய்தாய்”
என உவகையோடு சொன்னாள்.


பாடல்-1287:

“என் தந்தை போன்றவனே” என்று
பேசத் துவங்கிய சீதை
“நான் சொன்ன அடையாளங்களை
அறிவினால் ஆராய்ந்து தெரிந்து
சிந்தையில் வஞ்சம் இல்லை என முடிவு செய்து
உனது வண்ண மோதிரத்தை உற்றுக் கண்டாள்
மரணகாலத்தில் உயிர் தந்த மருந்து போன்றது” என்றாள்.

பாடல்-1288:

“செல்வனே!
ஒரே கணத்தில் இரண்டு அதிசயங்கள் கண்டேன்
ஒளி வீசும் மணிகள் பதித்த மோதிரத்தை
அழகிய முலைத்தடத்தில் வைத்ததும்
விரகம் எனும் பெரும் தீயினால் அது வெந்து உருகியது
அடுத்த கணமே உருகிய மோதிரம்
குளிர்ந்து ஒன்றாகி சேர்ந்து
மீண்டும் அடுத்த கணம் மோதிரமாகியது  !
எப்படி இத்தனை குளிர்ச்சி என யோசித்தேன்
இராமனின் மோதிரம் பட்ட மகிழ்ச்சி தந்த குளிர்ச்சி!

பாடல்-1289:

வாங்கினாள் கணையாழியை
அடடா இது வஞ்சகர் ஊரில் கிட்டியதே என நினைத்தாள்
அதனால்
மழைக்கண்ணீரால்
ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தாள் ஏங்கினாள்
மேனி வியந்தாள் வீங்கினாள் விம்மினாள்
கண் இமைக்காமல்
மோதிரமே பார்த்து வியந்தாள்
பெருமூச்சு விட்டாள் ஆனால் ஏதும் சொல்லவில்லை.

பாடல்-1290:

மன்னா!
சீதையிடம் பேச்சே வரவில்லை
போன உயிர் திரும்பியது போல
பெருமூச்சு கூட
நீண்ட நேரம் சென்றே வந்தது மன்னா!
நடந்ததை எடுத்துச் சொன்னபிறகுதான் மூச்சு வந்தது !
மீட்க
காலதாமதம் ஆனமைக்கு
இருக்குமிடம் அறியாமையே காரணம் என
விளக்கிய பிறகுதான் மூச்சு வந்தது!
இராமபிரானாகிய உன் வருத்தங்கள்
சொன்னபிறகுதான் சீதையிடம் மூச்சு வந்தது !

பாடல்-1291:

இராமா   உன் நிலைமைகள்
நிகழ்ந்த விதமாக சொன்னதும் கேட்டுக் கொண்டாள்
அங்கே  உள்ள நிலைமைகளை
அடியேன் அறியுமாறு சொன்னாள்
“ஒரு மாதம் உயிரோடு இருப்பேன்
அதன் பின் இறப்பது உண்மை” என
உன் மலரடி
தன் தலைமீது வைத்துக் கொண்டாள்.

பாடல்-1292:

“தன் ஆடையில்
முடித்து வைத்திருந்த சூளாமணி எடுத்து
இரத்தினங்களுக்கெல்லாம் சிகரம் போன்ற சூளாமணி எடுத்து
எனது கைத்தலத்தில் அளித்தாள்
வித்தகா!
உன் தாமரைக் கண்களால் காண்க!” என
வேதங்கள் வாழும் காலமெல்லாம்
புகழோடு ஓங்கி நிற்கும் அனுமன் கொடுத்தான்.

பாடல்-1293:

மெல்ல மெல்ல
பையப் பைய
உள்ளே காமம் பரிணமித்து
உயர்ந்து பொங்கி
உடல் தளர்ந்து வெதும்பி
மெலிவான நிலையிலிருந்து விடுபட்டான் இராமன்!
இராமபிரான் கரங்களில்
சூளாமணி பெறும் காட்சி
திருமண வேள்வித்தீயின் முன்பு
தொட்டுப்பார்த்த
அழகிய சீதையின் திருக்கரம் போலவே இருந்தது!

பாடல்-1294:

இராமனின் உரோமங்கள் பொடித்தன
சிலிர்த்தன
கண்ணீர் பொங்கியது
மார்பும் தோளும் துடித்தன
வியர்வைத் துளிகள் உண்டாயின
அழகிய மணிவாய் மடிப்புற்றது
உயிர் வந்தது! போனது!
உடம்பு பூரித்தது
என்ன!
இராமனின் அந்தத் தன்மை புரிந்து சொல்ல
யார் இருக்கிறார்கள்!

பாடல்-1295:

அப்போது
சூரியன் மகன் சுக்ரீவன்
“ஐயனே! கேள்!
சீதை நம்மால் காண எளியவள் ஆகிவிட்டாள்” என்றதும்
இராமன் சொன்னான் நேர்த்தியாக தனது அவசரத்தை!
“இன்னும் இங்கே நின்று
காலம் தாழ்த்துகிறாய் போலும்”
தூண்  போன்ற தோள்களுடன் சுக்ரீவன் புறப்பட்டு
ஆணை இட்டான் படைகளுக்கு!

பாடல்-1296:

“ஏ!” எனும் நேரத்துள்
கொடிய சேனைகள் போரிடக் கிளம்புக!
என்றான் சுக்ரீவன்
முரசு ஒலி அறைந்தனர் வள்ளுவர்!
எழுபது சேனை வானர வெள்ளம் புறப்பட்டது!
பாய்கின்ற கடல்
கடலை விட்டு வெளியே வந்தது போல
தென் திசை நோக்கி பாய்ந்தது படை!

பாடல்-1297:

வானர வீரர்கள் அனைவரும்
திரிகூட மலை மீதுள்ள இலங்கை பற்றி
கரிய நிற அரக்கர்களின் காவல் வலிமை பற்றி
அரண் பற்றி
அனுமன் விளக்கிச் சொல்ல சொல்ல
வழி சொல்லச் சொல்ல
எளிதாகக் கடந்தார்கள்! இலங்கை நெருங்கினார்கள்!

பாடல்-1298:

நீண்ட வழி செல்கின்றான் இராமபிரான்!
அறப்பயணம் செல்கின்றான் இராமபிரான்
வானர வீரசேனையுடன்
குரங்கினத்துக் கோமான் சுக்ரீவனுடன்
இலக்குவனுடன்
பெரிய சோலைகள் கொண்ட
மலை வழியிலே பகல் இரவாக பதினொரு நாட்கள்!
தெற்குத் திசையில் கடல் கண்டார்கள்!

(திருவடி தொழுத படலம் முற்றிற்று)

சுந்தர காண்டம் நிறைவு பெற்றது.
















 






Saturday, 19 April 2014

சுந்தர காண்டம்1176 - 1200







பாடல்-1176:

இலங்கை நகர் முழுதும்
அனுமன்சீதையை தேடினான்
அறிவினால் உணர முடியவில்லை
ஆனால்
அரக்கர்கள்
அனுமனை
இலங்கை முழுதும் இழுத்துச்சென்று
காட்டியபோது அனுமனால் காண முடிந்தது-
பொறிகள் முன்னே செல்ல
அதன்பின் செல்லும் அறிவுபோல.

பாடல் -1177

முழுவதும்
எல்லாமும் பார்த்தான்
ஊர் முற்று பெறும் பகுதி கடந்தது.
தப்பிச்செல்லும் தருணமிது என எண்ணிணான்
உடனே-
தன்னை வலிமையாகப் பற்றியிருக்கும்
இரண்டு லட்சம் தோள்களை
தன்னனோடு இழுத்துக்கொண்டு பறந்தான்
கயிறுகள்-
வானிலிருந்து தூண்கள் போல் தொங்கின
அரக்கர் கூட்டங்கள் கீழே விழுந்தன.

பாடல் -1178

கீழே விழுந்த
ஒரு லட்சம் அரக்கர்கள் உயிர் இழந்தனர்
தனது உடலை
வலிமையாகக் கட்டியிருக்கும் கயிற்றுடன்
பறந்திடும் அனுமன்
பாம்புக்கூட்டம் சூழ
பறந்திடும் கருடன் போல் உள்ளான்.

பாடல் -1179

“முன்பு
சிவபெருமான்
பகைவர்களின் முப்புரம் எரித்த தொழில் வெட்கப்படும்படி
பெரும் தீ மூட்டுவேன்
அரக்கர்களின் மாளிகைகள் எரிந்திட
நெருப்பு மூட்டுவேன்” என
ஐயன் அனுமன் எண்ணும்போது
தன் மன்னன் இராமனை வாழ்த்தி
பொன்மயமான இலங்கை மீது
போர் வாளாகிய
போர் வாலினை
நெருப்புடன் போகவிட்டான்!
அக்கினிக்குஞ்சொன்று செய்தான்!
தத்தரிகிட தித்தோம் !


பாடல் -1180

அனுமனது வாலின் தீ
இலங்கையின் பரப்பு முழுதும்
விரைவாக தீய்த்தது
பரவுகின்ற தீயின் வேகமும் திறமும்
மேரு மலையை வில்லாக்கி
செந்நிற சிவபெருமானின் தோள் வலிமை
எய்திட்ட அம்பு போல பவழ நிறத்தில் இருந்தது

பாடல் -1181

விஸ்வகர்மன் எனப்படும்
சிற்ப நூலில் வல்ல தேவதச்சன்
வருந்தி வருந்தி
தனது கைகளால்
பொன்னாலும், வெள்ளியாலும் செய்த
அழகிய மாளிகைகள் தோறும் நெருப்புடன்
முற்றம் முற்றமாக தாவிச்சென்றான் அனுமன்
ஊழியின் இறுதிக்காலத்தில்
மலைமேல் விழும் இடிகள் போல
காளை போல இருந்தான்
வாலில் ஒளிரும் நெருப்பு அனுமன்.

பாடல் -1182

கறுத்த உருவ அரக்கர்கள்
இத்தனை   வருடமாய்
நெய் சொரியும் வேள்விகளை நிறுத்தியதால்
பசியுடன் இருந்த நெருப்பு தேவன்
அனுமன் வாலை அன்புடன் பற்றிக்கொண்டானோ!
ஆலம் உண்ட சிவன்
அனைத்தும் அழித்து அனுமனுக்கு ஊட்டி விட்டானோ!
ஊழிக்கால வேள்வி நெருப்பில்
உலகமே ஆகுதியாக இடப்பட்டு
உண்டு வளரும் நெருப்பு போல
இலங்கை நகர் முழுதும்
நெருப்பால் தின்றான் அனுமன்.

இலங்கை எரியூட்டும் படலம்

பாடல்: 1183

அனுமனது வாலின் தீ
கொடிகளில் பற்றியது
மேலும் பலவற்றை எரித்தது!
நீண்ட தூண்களைத் தடவியது
நெடியச் சுவர்களை
வாலினால் முழுதும் சுற்றியது!
சுற்றிய சுவர்களொடு
வீடுகளை முற்றிலும் அழித்தது.

பாடல்-1184:

அனுமன் வால் தீ
வாசலில் தீயானது
வாசல் தீ
மாளிகைகளை மொய்த்தது
நிலை கெட்டனர் நகர மக்கள்
ஊஞ்சல் போல
முன்னும் பின்னும் ஓடினார்கள்
தப்பி ஓடிட வழி தெரியவில்லை
வருத்தத்தின் ஒலியும் வலியும் புறப்பட்டன!

பாடல்-1185:

இரத்தின  ஒளி மாளிகைகள்
செந்நிறத் தீ ஒளி பெற்றன
அதனால்
தீப்பற்றிய இடம் து?
தீப்பிடிகாத இடம் எது? என
அறிய முடியாமல்
வளையல் அணிந்த வணிதையர்கள்
அலமந்து போனார்கள்!

பாடல்-1186:

தேன்மலர்க்காடுகள் முழுதும்
நெருப்பு மொய்த்தது
நெடுந்தூரம் வரை புகை பரவியதால்
மயில்சாயல் மங்கையர்களுக்கு
எந்த திசையில் செல்வதெனப் புரியவில்லை
வாய்விட்டுப் புலம்பினார்கள்.

பாடல்-1187:
அரக்க மகளிருக்கும் ஆடவர்களுக்கும்
தலைமுடி நிறமும் நெருப்பு நிறமும்
ஒன்றாகவே இருப்பதால்
தீப்பிடித்த இடம் எது
தீப்பற்றாத இடம் எது உணராதவர் ஆயினர்
கூச்சலிட்டார்கள்
நடுவர் தலையில் ஒருவர் நீர் சொரிந்தனர்.


பாடல்-1188:

நெருப்பின் பாய்ச்சலும் விரைவும்
மாயையை எரித்து
சான்றோர் அடையும் ஞானம் போலிருந்தது
அரக்கர்களின் வீட்டிலிருந்த நெருப்புகள் எல்லாமும்
இராவணன் சொல்லிய சொல்லுக்காகப்
புறப்பட்டு வெளியே வந்தது போலிருந்தன.

பாடல்-1189:

வாமன வடிவத்தில்
குறுகிய குறட்பா போல சிறிதென
அடி எடுத்து வைத்து
உலகெலாம் அளக்க விரிந்து
“இன்னொரு உலகம் கொடு” என எழுந்து
உயரும் திருமால் போல
பறந்து உயர்ந்தது தீ!

பாடல்-1190:

நீலநிற யானைகள் யாவும்
நெருப்பு பற்றியதால்
உடல் வெந்து
தோல் நீங்கி
மதமயக்கமும் கொடும்கோபமும் கொண்டு
வெள்ளை யானைகள் ஆகின.

பாடல்-1191:

வெப்பமான புகை
தீயோடு சூழ்ந்திருப்பது போல் காணப்படுவதால்
மேகங்கள் ஏமாந்து
ஆறுகளில் விழுகின்றன எருமை போல!
அன்னபறவை போல
பெண்களும்
கடலோரம் ஒதுங்குகின்றனர்.

பாடல்-1192:

பொடித்து
பொடிப்பொடியாக எழுந்தது பெரும் பொறி!
இடியின் வம்சமோ என
நெருப்புப் பொறிகள் வெடித்து வீழ்கின்றன
எல்லா இடமும் வெடித்து விழுவதால்
கடல் கொதித்து அதனால்
மீன்கூட்டங்கள் உயிர் சோர்ந்தன!


பாடல்-1193:

எதையும் பருகும் நெருப்பு
உள் வாங்கிடப் புகுந்து புகுந்து  எரிகிறது
மாளிகைகளில் உள்ள
பொன் பொருள்கள் உருகி ஓடி
கடலில் நடுவே புகும் போது
கெட்டிப்பட்டு
நெடிய
பொன் தண்டாகத் திரண்டு விட்டது.

பாடல்-1194:

மலை போன்ற மாளிகைகள் என்ன!
வரிசையாக நிற்கும் சோலைகள் என்ன!
நகரத்தின் தரை முழுதும் தங்கமாயிருந்தது என்ன!
எல்லாம் நெருப்புபட்டு உருகின வெந்தன
சாபமொழி போல!

பாடல்-1195:

நெருப்பின்
புகை படிந்து படிந்து
கல் கற்றை போல படிந்து
தேவலோகம் இருட்டானது
உயர உயரமான தேர்கள்
மணிகள் பதித்த சக்கரங்கள்
எல்லாமும் எரிந்து
ஒரே தொகுதியாகத் திரண்டன.

பாடல்-1196:

தீயவர்களின் இடத்திற்கு சென்றால்
தீயவர்கள் அங்கே இல்லையென்றாலும்
தீமை செய்யவே இயலும் என்பது போல
அரக்கர்களின் மதுச்சாலையில்
புகுந்த நெருப்பு
அங்குள்ள மதுவை அருந்திய நெருப்பு
தீங்கு செய்தது.

பாடல்-1197:

இலங்கையைத் தழுவும் நெருப்பு
கடலை உலை நீர்போல் கொதிக்க வைத்தது
கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள்
குழுவாய்ச் சென்று
குளிர் மேகத்தையும்
கொதிக்க வைத்ததே!


பாடல்-1198:

நிலத்தின் வெப்பம்
“பேய்த்தேர்” எனப்படும்
கானல் நீரை உண்டாக்கியது
தம் உடலைக் குளிர்விக்க
காட்டாறு எனக்கருதி
வானம் வழி ஓடும் அரக்கமகளிர்
அதில் குதித்தார்கள்!

பாடல்-1199:

தேன் மலர்ச் சோலை
தீயில் விழுந்தது அறியாமல்
தேன்மலர்களில்
எப்போதும்போல்
தேன் அருந்தும் வண்டுகள் ஏமாந்து
பரவிச் சென்ற நெருப்புச் சுடர்களை
“ஓகோ! பெரிய தாமரைக்காடு”
என நினைத்துக் கொண்டன.

பாடல்-1200:

வில் புருவம் கொண்ட மகளிர்
வீட்டிலேயே இருக்க முடிவு செய்தனர்
“நமக்கு ஒரு பொறுப்புத்தான் உண்டு
நம் உயிர் நாயகரான அரக்கர்கள்
இறந்து போய்விட்டனர்
தீப்பற்றிய பிறகு
வெளியில் செல்லக் கூடாது”

--அனுமனோடு மீட்போம்.


Friday, 11 April 2014

சுந்தர காண்டம்1151 - 1175


பாடல்-1151:

அனுமன் சொல்லி முடித்ததும்
“இப்படியெல்லாம் சொன்னது ஒரு குரங்காம்!
இது நல்லது! நல்லது!” என்று
பெரும் சிரிப்பு ச்¢ரித்தான்
ஆம்!
வெற்றியைத் தவிர வேறு அறியாத இராவணன்.

பாடல்-1152:

“குரங்காகிய சுக்ரீவன் சொன்னது இருக்கட்டும்
மனிதனாகிய இராம இலக்குவன் வெற்றி இருக்கட்டும்
அடேய்!
தூதாக புகுந்து வந்த நீ
அரக்கர்களை எதற்கு அழித்தாய்?
அதைச் சொல்” என்றான் இராவணன்.


பாடல்-1153:

பதில் புறப்பட்டது
“இராவணனாகிய உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை
அதனால்
நறுமண அசோகவனம் அழித்தேன்
அதனால் என்னைக் கொல்ல வந்தவர்களை வீழ்த்தினேன்
பின்பு உன்னை
மென்மையோடு அடக்கத்தோடு வந்தது ஏன் எனில்
உன்னைக் காணவேண்டும் எண்ணத்தினால்தான்!”

பாடல்-1154:

அனுமன் சொன்ன அடுத்தகணம்
மின்னும் வாள் போன்ற பற்கள் கொண்ட இராவணன்
நெருப்பு போல் பெருங்கோபமுடன்
சினம் வீங்கினான்
“கொல்லுங்கள் இதை !” என்றான்
கொல்லும்படை சூழ்ந்த போது
“நில்லுங்கள்” எனத் தடுத்தான் நீதியுடைய விபீஷணன் !

பாடல்-1155:

எழுந்து  நிற்கின்ற அண்ணலை
சினமுடன் நிற்கின்ற அரக்கனை
நீண்ட கைகளால் வணங்கினான் விபீஷணன்
“மூண்ட கோபம் முறையல்ல
அறிய வேண்டும் உண்மையை” என
மெல்ல
மெதுவாக விளம்புகின்றான் விபீஷணன்


பாடல்-1156:

“வேதங்களில் வல்லவனே ..
எத்தகுதியும் பெற்றவனே ..
மூன்று உலகமும் ஆதி காலத்தில்
அறநெறி மூலம் படைத்த அந்தணன் பிரம்மனின்
ஆற்றல் மரபில் வந்தவன் நீ
ஆன்ற தவநெறி உணர்ந்தவன் நீ
இந்திரன் கூட 
உனக்குப் பணி செய்யும் அளவு
உயர்ந்து விட்ட இறைவன் நீ !
“தூது இயம்ப வந்தேன்” என்ற சொன்ன பிறகும்
அனுமனைக் கொல்வாயோ!”

பாடல்-1157:

“பூலோகம் முழுதும் பார்
அண்ட கோளத்தின் உள்ளேயும் பார்
பொய் தீர்ந்த வேதங்கள் இயங்கும்
வேறு  வேறான இடங்களில் உள்ள
மற்ற மற்ற வேந்தர்களையும் பார்
மாதர்களைக் கொன்றிருக்கலாம்
தூதர்களைக் கொன்றார்கள் யாராவது உண்டா? யோசி !”


பாடல்-1158:

“தூதன் என்பவன் யார்?
பகை கொண்ட நாட்டுக்கே வருவார்கள்
தன்னை அனுப்பியவர்கள் பகர்ந்த
செய்திகளைக் கூறுவார்கள்
அது கேட்டு
பிறர் தரும் ஏற்படும் கோபம் அடக்கிக்கொள்வார்கள்
உண்மை விளம்பவேண்டும் என்ற விரதம் கொண்டவர்கள்
நேர்மையான அறிவுத் தொழில் செய்கிறவர்கள்
அவர்களை அழிப்பது
நகைப்புக்கு உச்சமாகும்
நல்குலமே பழி சுமக்கும் ! அறிவாயா நீ ?”

பாடல்-1159:

“உலகங்களைக் காக்கும் இராவணனே
உன் பகைவர் ஏவியதால் வந்தவனைக்
கொல்லுதல்  என்பது
மட்டமான செயல்
மூன்று தலைகள் உடைய சூலம் ஏந்திய ஈசன்
திருமால், பிரம்மன் மட்டுமல்ல
நம் ஆக்கம் கண்டு பொறுக்காத தேவர்களும்
எள்ளி நகையாடுவார்கள்.


பாடல்-1160:

“இளையவள் சூர்ப்பனகையைக் கொல்லாமல்
இராம இலக்குவ வீரர்கள் 
இரு செவிகளை மூக்கினை அறுத்தார்கள்
“இங்கு நடந்ததை அங்கு சொல்” என அனுப்பினார்கள்
இராவணா! யோசி!
அனுமன் உயிரை நீ எடுத்து விட்டால்
இங்கு இவன் கண்டதை
அங்கு சொல்லாமல் தடுத்தவன் ஆகிறாய்” என்று
பொருந்துமாறு கூறினான் விபீஷணன்.

பாடல்-1161:

இராவணன் இதயம் கட்டுப்பட்டது
நல் வார்த்தைகள் பேசியது
“நம்பிக்கைக்கு உரியவனே ! நல்ல நீதி கூறினாய்
அனுமன்  குற்றம் செய்தவன் தான்
ஆனாலும் நாம் கொல்வது குற்றமே”
என்ற இராவணன் மேலும் கூறினான்
“அனுமனே நீ விரைந்து ஓடிச்செல்
இராம இலக்குவனிடம் இங்கு நடந்ததைக் கூறு”

மேலும்  கூறுகிறான்
“இந்த வானரத்தின் வாலை
அடியோடு அழியும்படி சுட்டெரித்து
நகரைச் சுற்றி வரச் செய்க
பிறகு எல்லை கடக்க அனுமதியுங்கள்”
“பலே ! பலே !” என குதித்தது அரசவை
ஆரவாரம் செய்தது
நடக்கப்போவது அறியாமல்!

பாடல்-1162:


அமரர்களையும்  போரில் வென்ற
இந்திரஜித் கூறுகிறான்:-
“பிரம்மாஸ்திரம் பிணித்த ஒருவரை
தீயிடல் கூடாது ..
சிறந்த கயிறுகளால் கட்டுவோம்.. “ என்று
ஆணையிட்டுக் கொண்டே
பிரம்மாஸ்திரத்திலிருந்து அனுமனை மீட்டான்.
‘ஏ' என்ற எழுத்து உச்சரிப்பதற்குள்
அரக்கர்கள்
பருமனான கயிற்றால்
அனுமனைக் கட்டி இழுத்தார்கள்.

பாடல்: 1163

அனுமனைக் கட்டுவதற்காக
தேவைப்பட்ட கயிறுகளால்
தங்கள் கயிறுகளை இழந்தவை பட்டியல் இதோ !
“வீடுகளின் ஊஞ்சல்கள்!
தேர்கள்!
பந்தியில் கட்டப்பட்ட குதிரைகள்
போர் யானைகள்!”

பாடல்: 1164

“இவை மட்டுமா?
இராவணன்  திக்கு விஜயம் செய்தபோது
கொண்டு வந்த கயிறுகளும் தேவைப்பட்டன
தேவர்களிடமிருந்து 
வலியப் பறித்தவையும் தேவைப்பட்டன
அசுரர்களிடமிருந்து பெற்ற கயிறுகளும் தேவைப்பட்டன
கண்ணில் கண்ட கயிறுகள் எல்லாம் கொண்டு
அனுமனைக் கட்டினர்
தப்பித்தவைகள் பட்டியலில்
பெண்களின் தாலிக்கயிறுகள் மட்டும் இருந்தன!


பாடல்: 1165


“கடவுள் படையாகிய
பிரம்மாஸ்திரம் எனும் அறத்தின் ஆணையை
அனுமன் நான் மீறிவிட்டேன்”  என ஆகாமல்
பகைவர்களே இப்போது விடுவித்தார்கள்
என்னைக் கட்டிய
இவர்களது வெற்றியை
நான் வெல்வதற்கான வாய்ப்புதான்
எனது வாலினை இப்போது இவர்கள் கொளுத்தும் செயல் !
‘ இந்த ஊரைச் சுடுக ' என்று மறைமுகமாய்
எனக்கு சொல்லாமல் சொன்ன செயல் !”
அரக்கர்கள் நடுவில் இருந்து
நினைத்ததைச் செய்ய
நேரம் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்
எதற்கும் கவலையில்லாத அனுமன் !


பாடல்: 1166

பிடித்திருந்த  கயிறுகளை அறுக்க
வலிமையில்லாதவன் போல உடல் வாடி
பொறுமையாக இருந்தான்
கொடிய அரக்கர்கள் அங்கும் இங்கும்
அலைக்கழித்தார்கள்  அப்போதும்

விரைவு காட்டவில்லை  ஐயன் !
மெய்ஞான வித்தை காட்டவில்லை
அறிந்தும்
அறியாதவன் போலவே  காட்டிக் கொண்டவன்
அஞ்ஞானம் எனும் பொய்யை
மெய்போல் ஏற்று 
நடிக்கின்ற யோகி போன்ற  அனுமன் போகின்றான்.


பாடல்: 1167

இராவண வேந்தனின்  அரண்மனை  வாசலை
விரைவாகக் கடக்கும்படி
அனுமனை இழுத்துக் கொண்டு சென்றனர்
பொறுமையில்லாத அரக்கர்கள் - 
அனுமனின் நீண்ட வால் முழுதும்  துணி சுற்றினர்
முழுவதையும் எண்ணெயில் நெய்யில் தோய்த்தனர்
காந்தும் கடும் தீயினால்  கொளுத்தி விட்டு
அண்டம் கலங்கும்படியாக
சந்தோஷப்பட்டார்கள்.


பாடல்: 1168

பலப்பல கயிறுகள் சேர்த்தயிற்று
அழியாத வலிமை கொண்ட கயிற்றினால்
அனுமனைக் கட்டியாயிற்று
இரண்டு பிரிவாய் நின்ற
இலட்சம் பேர் பற்றிக் கொண்டார்கள்
காவலுக்கு வருகிறவர்களோ
கடல் போல விரிந்திருந்தார்கள்
திசை எல்லை வரை  பரவியிருந்தார்கள்
வேடிக்கை பாத்தவர்கள்  அளவு எவ்வளவு  என
எண்ணிக்கை கூட  
சொல்ல இயலாது.

பாடல்: 1169

தெருவில் வாசல் முழுதும் நின்று
வேடிக்கை பார்க்கிறவர்கள்  சத்தமாய்ச் சொல்லினர் :-
“இலங்கை நகர் அழித்த குரங்கு
காவல் கொண்ட அசோகவனம் அழித்த குரங்கு
அக்க குமாரர்களையே அழித்த குரங்கு
சீதையோடு பேசி
மானிடர் வலிமைத் திறம் அறிவித்த குரங்கிற்கு
உற்ற கதியைக் காண  வாருங்கள் ! வாருங்கள் !!”

பாடல்: 1170

அரக்கர்கள்  மகிழ்ச்சியினால்
ஆர்ப்பரித்தார்கள் - 
அண்டத்துக்கு அப்புறமும் கேட்பதும் போல !
அங்கு மட்டுமல்ல
இங்கும் முரசு ஒலித்தனர்
இடிமுரசு போல  குரல் எழுப்பினார்கள்
அனுமனை அதட்டினார்கள்
அனுமனை எல்லா பக்கமும் வேடிக்கை பார்த்தார்கள்
ஓடிச் சென்று  ஜானகிக்கும் சொன்னார்கள்
அவளும் உயிர் துடித்தாள்
உடல் வேர்த்தாள் விம்மினாள்
விழுந்தாள்
பெருமூச்சு விட்டாள்.


பாடல்: 1171

சீதையின் கோரிக்கை இதுதான்
“நெருப்பு தேவனே பார்!
எவ்வுயிர்க்கும் தாய் போல் கருணை கொண்ட
வாயுவின் துணையே!
பெருமை குணமிலா நாய்களாம் அரக்கர்கள்
அனுமனை நலிவு செய்யக் கண்டும் நீ
அருள மாட்டாயோ?
உலகுக்கு எடுத்துக்காட்டான நெருப்பே
உனக்குத் தெரியும்
கற்பினில் நான் தூயவள் என்றால் நெருப்பே
அனுமனைச் சுடாதே!”என்றாள்.

பாடல்: 1172

வெண்மைப் பற்களும்
மெல்லிய நகையும் மிக்க சீதை
இவ்வாறு சொன்னபோது
ஒளி மிக்க அக்னிதேவன் உள்ளம் அஞ்சிற்று
அனுமனின் மயிர்க்கால்கள் குளிர்ந்தன
தளிர்த்தன
வெப்பம் குளிர்ச்சியாயிற்று!
அனுமனின் வாய் முதல் எலும்பு வரை
வெம்மை தண்¢ந்தது
குளிர்ச்சி உண்டானது.!

பாடல்: 1173

சீதை வாக்குக்கு அடங்கியது நெருப்பு
கட்டுப்பட்டது நெருப்பு
அனுமன் உடலில் மட்டுமா குளிர்ந்தது?
கடலில் உள்ள
வடவா முக அக்னியும் குளிர்ந்துவிட்டது.
முனிவர்கள் காக்கும் மூன்று அக்னிகள்
(காருக பத்யம் -ஆசுவனீயம் - தட்சண அக்னி)
முப்புரம் எரித்த விரிசடை சிவனின்
நெற்றிக்கண் அக்னியே குளிர்ந்துவிட்டது.

பாடல்: 1174

அண்டம் கடந்து
சத்திய லோகத்தில் வாழும்
பிரம்மனின் கைகளில் உள்ள நெருப்பும் குளிர்ந்தது.
பிரம்மனின்
வேள்வி அக்னி குண்டங்கள் குளிர்ந்தன.
மேகங்களில் உள்ள இடிகள் குளிர்ந்தன.
வெற்றியும் வெப்பமும் மிக்க
சூரியமண்டலம் குளிர்ந்தது.
இருள் விழுங்கும்
அழிவற்ற சூரியன் குளிர்ந்தான்.
மீளமுடியாத
நரகமும் குளிர்ந்தது!

பாடல்: 1175

மலையளவு  கொண்ட தனது வால் பக்கம்
வெப்பமான தீ சுடாமல் குளிர்வது
நினைவால் நோக்கினான் அனுமன்
இதன் காரணம்-
ஜனகனின் மகள் கொண்ட கற்பின் வலிமை
என்று பெரும் களிப்பு ஆனான்
அன்பின் தொடர் அறுகாத அனுமன்.


--அனுமனோடு மீட்போம்.

Thursday, 3 April 2014

சுந்தர காண்டம் -1126 to 1150







பாடல்-1126

“அப்படிப்பட்ட இராமனின் அடிமையேன்
அடியேன் நாமம் அனுமன் என்பேன்
அழகிய நெற்றியாள் சீதையைத் தேடி
மிகப்பெரும் நான்கு திசைகளும்
தேடி அலைந்த வாலியின் புதல்வன் அங்கதன்!
அவனது தூதன் நான் மட்டும் வந்தேன்இங்கு”

பாடல்-1127:

அனுமன்  கூறிவிட்டான்
கருமேகம் நடுவே மின்னல் தெரிவது போல
இராவணன் பற்கள் தெரிய சிரித்தான்
“வாலி மகன் அனுப்பிய தூதனே
வலிமை மிகு வாலி நலமா!
வாலி அரசு நலமா?”என்றதும்
நாயகன் இராமனின் தூதன் சிரித்தான்.

பாடல்-1128:

“அஞ்சாதே அரக்கனே!
பெரும் சினமுடைய வாலி
வானுலகம் எப்போதோ அடைந்தான் !
அவன் வாலும் போய்விட்டது ! எப்படி என அறிவாயா?
மை போன்ற கருநிற இராமனின்
ஒரே ஒரு அம்பினால் அழிந்தான் வாலி
எமக்கு தற்போது அரசன் வாலி அல்ல
சூரியன் புதல்வன் சுக்ரீவன்”

பாடல்-1129:

“எதற்காக இராமன் மனைவி சீதையை
அங்கதன் தேட வேண்டும்?
எதற்காக வலிமை வாலியை
அம்பினால் இராமன் கொன்றான்?”
வாயு மகன் அனுமன் பதில் சொன்னான்.

பாடல்-1130:

தேவியை நாடி வந்தான் செங்கண்ணான்
எங்கே எங்கே எனத்தேடுகின்ற  இராமனுடன்
நட்பானான் சுக்ரீவன்
இன்னொரு உயிராக இராமனுடன்  இணைந்தான்
“வாலியால் வந்த  துன்பம் துடைத்திடுக” என்றான்
ஓவியர்களும் எழுத இயலா உருவன் இராமன்
சுக்ரீவன் மனைவி உருமையை மீட்டான்
செல்வத்தை முன்னே கொடுத்தான்
வாலியையும் கொன்றான்

பாடல்-1131:

“சுக்ரீவனுடன் இராமன்
நான்கு மாதம் தங்கியிருந்தான்
வானர சேனை சூழ இனிது இருந்தான்
“நீங்கள் தேடுங்கள்” எனப் பணித்தான்
இப்படித்தான் இலங்கை வந்தோம்” என
தூதன்  சொன்னான்.

பாடல்-1132:

“உங்கள் குலத்தலைவன் சுக்ரீவனோடு
ஒப்பிட முடியாத வலிமை வாலியை
அம்பினால் கொலை செய்த இராமனுக்குத்
அடிமைத் தொழில் செய்யும்
உங்கள் புகழ் அழியவே அழியாது!
அப்படி அழிந்தால்
உலகம் பேதமை உடையது
என்று ஏளனமாகச் சொன்னான் இராவணன்.

பாடல்-1133:

“தன் சகோதரன்  வாலியைக் கொல்லச் செய்தவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிக் கொன்றவன் மீதே அன்பு செலுத்துபவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிப்பட்டவனின் தூதன் செய்தி என்ன!
போரிட்டது ஏன்?
தூதனைக் கொல்லமாட்டோம்
நெஞ்சம் அஞ்சாமல் சொல்க”என்றான் இராவணன்.

பாடல்-1134:
இராவணன் சொல்லிய சொற்களை
தொகுத்து ஆராய்ந்து
“உலக பொது நீதியை உணர்த்தினால்
அது பொருத்தம்” என நினைத்து
அருங்குணத்தான் அனுமன்
சொல்லத் தொடங்கினான்.

பாடல்-1135:

தூதனாக நான் வந்தேன்
சூரியன் புதல்வன் சுக்ரீவனுக்கு!
அச்சொற்களின் நீதியை உணர்வாயெனில்
“குற்றமற்றன” என உணர்வாய்
உன்னிடம் சொல்வேன்.

பாடல்-1136:

“உன் வாழ்வை வீணே கெடுத்தாய்
அறத்தை சிறிதும் நோக்கவில்லை
தீமை செய்தாய்
அழிவு காலம் நெருங்கிவிட்டது
எனினும்
என் சொல்லைக் கேட்டால் உன்
உயிரை நீண்ட காலம் காக்கமுடியும்”

பாடல்-1137:

பெருந்துன்பத்திலும்
குற்றமற்ற கற்புடைய சீதையை
தீயைக்காட்டிஉம் தூய சீதையைத் துன்புறுத்தினாய்
அதனால்
புலன்களை வென்று போற்றிக்காத்த
தவத்தின் பயன்
உன்னை விட்டுக் காய்ந்து போய்விட்டது.

பாடல்-1138:

தேவர்களை வென்ற பெருமை
முன்பு அழிந்தது
இன்று அதில் சிறிது அழிந்தது
நாளை அதிலும் சிறிது அழியுமே தவிர
நிறைந்து நிற்குமா?

பாடல்-1139:

“பாவத்தால்
புண்ணியத்தை அழிக்கமுடியாது”
எனும் உண்மையை விட்டு நீங்கினாய்
மாதவம் செய்து
அதனால் பெற்ற தூய்மை நிலை நீங்கினாய்
தூய்மை மிகு சீதையிடம் கொண்ட
ஆசை எனும் நோயால்
உன் தூய்மையை துடைத்து அழிக்கின்றாய்”

பாடல்-1140:

திறம் நிரம்பிய காமசெருக்கினால்
அறமுறை மறந்தவர்கள்
தன்னுடைய அறிவுக்குள்ளேயே
சுழன்று சுழன்று மயங்கி
இறந்து இறந்து
மேலும் மேலும் தாழ்ந்து அழிவார்கள்
அறம்மாறி நடந்தவர்களில்
அழியாமல் வாழ்பவர்
உலகில் யார் உள்ளார்கள்


பாடல்-1141:

உலகில் எல்லாவற்றுக்கும் கணக்கு உண்டு
ஆனால் இளமை மிகு மகளிரிடம்
முறையற்ற காமத்தால் அளவு கடந்தவர்கள்
கணக்குக்கு எல்லை இல்லை!
களிப்பு கொண்ட வண்டுகள் மொய்க்கும்
மாலைகள் அணிந்த ஆடவர்கள்
நேர்மையற்ற செயலால்
மறைந்தவர்கள் எண்ணிக்கைக்கு
எண்ணிக்கை இல்லை.

பாடல்-1142:

ஞானமுள்ளவர்கள் இருளாக நினைப்பது
பொருளாசை காம ஆசை மட்டுமே!
வறியவர்களுக்கு ஈதல்கருணையுடன் நடத்தல்
பொருளாசை காம ஆசை தீர்தல் என்பதையே
தெளிவு என நினைப்பார்கள்!

பாடல்-1143:

காம இச்சைத் தன்மையால்
பிறர் மனைவியை விரும்பி
தினமும் பிறர் எள்ளி நகையாடினாலும்
வெட்கம் அற்றவன் ஆனாய்
உனது பசுமையான தேகம்
காமதாபத்தால் உலர்ந்தது
பழிபடுகின்ற ஆண்மை
சிறந்த குணங்களில் ஒன்றாக ஆகுமோ!

பாடல்-1144:

அலைகடல் சூழ்ந்த உலகினில்
உன் போன்ற அரக்கர்களில்
உன்னைப் போல அறிவும் நீதியும் பெற்றவர் எவர் உண்டு!
வேத நீதியின் விதிப்படி நடந்திட
காதல் கொண்ட நீ
அறத்தின் எல்லை கடந்து விடவா செய்வாய்!

பாடல்-1145:

வெறுப்பு உண்டான ஒருத்தியை விரும்பி
அவள் மறுத்த பின்பும்
வாழ்கின்ற வாழ்வை விட
முகத்தின் நடுவே ஓங்கிய மூக்கை அறுத்துக் கொண்டு
“அது அழகு” என்று கூறுதல்
ஏற்புடையது ஆகும்!

பாடல்-1146:

உலகையே அழிக்க வல்ல கைகளும்
ஆயிரம் தலைகளும் இருந்து என்ன பயன்?
அறம் தவறும்போது
அவை உன் உயிர் காக்குமோ
ஊரெல்லாம் அழிக்கின்ற
கொடு நெருப்பில் அகப்பட்ட
நூறு துணிகளைப் போல் அழியும்.

பாடல்-1147:

நீ எதை மறந்தாய் தெரியுமா?
திரிபுரங்களும் தப்பமுடியாமல்
பெரும் நெருப்பால் கோபமுடன் அழித்த சிவன்
வீணை நரம்புகள் கொண்டு
நீ இழைத்த பாடலுக்கு மகிழ்ந்து அளித்த வரம்
அறம் தவறினால் அழியும் என்பதை மறந்தாய்
வேதநெறி விலகாத இராமனின்
அம்புச்சக்கரம் குறி தப்பாமல் அழிக்கும்
என்பதும் மறந்தாய்.

பாடல்-1148:

தெளிந்த ஞானிகளும் விரும்பும் அளவுக்கு
சிறப்பு உடையவனே
அழியாத நின் வாழ்நாள் சிதையுமாறு
எல்லாச் செல்வமும் அழிய
எளியவனாக மாறி
எல்லோரும் ஏளனம் செய்யும்
இழி தொழில் செய்வதில் ஈடுபடுவாயோ!


பாடல்-1149:

உலகில் பிறந்தவர்கள் மட்டுமல்ல
உலகில் பிறவாத வீடுபேறு  பெற்றவர்கள்
தேவர்கள்
தேவர்களுக்கெல்லாம் தேவராகச் சிறந்தவர்கள்
எவருமே இராமனை  மறந்தவர்கள் அல்ல
இது சத்தியம்.

பாடல்-1150:

“ஆதலால் இராவணா!
அருளும் செல்வமும் உறவினரையும்
இழக்காமல் பெற்றிட
சீதையைத் தருக” எனச் செப்பினான்
சூரியன் மகன் சுக்ரீவன்” எனப்படும் அனுமன்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 27 March 2014

சுந்தர காண்டம்-1101 -1125




பாடல்-1101:

“இராமனனின் இதயமாம் சீதையை
சிறை வைக்கப்பட்டதைக் கண்டும்
செயல்படாமல் இருப்பதில் என்ன இருக்கிறது?
தேவர்களும் அசுரர்களும் கண்டிட
மகுடம் அணிந்த இராவணன் தலையை
பறித்து எறியாவிட்டால்
பாவகாரி இராவணனுக்கு அழிவைத் தராவிட்டால்
இராமனிடம் என் அடிமை தனத்துக்கு
என்ன பெருமை இருக்கிறது!” துடித்தான் அனுமன்.

பாடல்-1102:

அனுமன் மேலும் நினைக்கின்றான்
“சீதையைத் தேடி வந்து ஒரு குரங்கு
இராவணன் அருகிலுள்ள மகளிர் திகைக்க
மகுடம் அணிந்த பத்து தலைகளையும்
பத்து திசைகளில் உருட்டியது கொடிய குரங்கு” எனும் புகழ்
சிறிய புகழா?
நிச்சயம் சிறிய புகழ் அல்ல.

பாடல்-1103:

இது வரை என் உயிரை சுமந்தேன்
நீண்ட வாள் பற்கள் இராவணனைக் காண!
வசை மட்டும் வீசி விட்டுச் சென்றால்
எனக்குப் பழிதான் சேரும்
ஆனால்
போரிட்டு நான் மாண்டாலோ புகழே கிட்டும்
புகழ் நிச்சயம் கிட்டும்


பாடல்-1104:

என் தோளில் இறுக்குகின்ற
நாகபாசம் அறுந்து விழும்படியாக  பாய்வேன்
மலையில்வாழும் ஆற்றல்மிகு ஆண்சிங்கம் போல
ஒரே குதி குதிப்பேன்! சென்று அடைவேன்!
சிந்திக்கும் போதே
“இப்படிச் செய்யக்கூடாது” என
நீதியால் நினைத்தான்!

பாடல்-1105:

இந்த  இராவணன்
கொல்லக்கூடிய எளிய வலிமை கொண்டவன் அல்ல
இவன் வெற்றிகளை கவனித்தால்
பிறரால் வெல்லும் நிலைமை கொண்டவன் அல்ல
இருளின் திரட்சி போன்ற இவனை
இராமன் தவிர பிறர் வெல்லமுடியுமோ? முடியாதே!

பாடல்-1106:

என்னை வெல்லவும் இவனால் முடியாது
இவனை வெல்லவதும் என்னால் முடியாது
வெற்றி தோல்வியின்றி காலங்கள் கழியும்
ஆதலால்
கடினமான ஒரு போர் தொடங்குதல்
தூய்மையானதல்ல!

பாடல்-1107:

“உலகங்கள் ஏழிலும் உள்ள மக்கள்
இன்ப மடையுமாறு
இராவணனின் வலிய தோள்கள் மட்டுமல்ல
பத்து தலைகளையும் பூமியில் புரட்டுதல்
என் இலட்சியம்” என ஊழியான் இராமபிரான்
விளம்பிய சபதம் ஒன்று இருக்கிறதே
அதை நான் மறக்கலாமா!”

பாடல்-1108:

நான் இராவணனுடன்
போர் செய்து பொழுது போக்கினால்
இன்னும் ஒரு மாதமே இருப்பேன் நான்!
இது நாயகன் இராமன் மீது ஆணை” என்ற
அழகு விழி சீதையும் உயிர் விடுவாள்


பாடல்-1109:

ஆதலால்-
“போர்த்தொழில் அழகல்ல
தூதுவனின் தன்மையே நல்லது” என உணர்ந்தான்
வேத நாயகனின் தனித் துணைவன் அனுமன்
நெருங்கினான் -  
வெற்றியும்  பகைமையும்  கொண்ட
இராவணனின்  அரியாசனத்தை !

பாடல் -  1110 :

இலங்கை வேந்தன்  இராவணன்  இருந்தான்
தீட்டிய வாள் எனக் கூறத் தக்க   மனைவியர்கள் குழு நடுவே !
பாற்கடல் அமுதம்  உண்ட தேவர்களை
ஓட ஓட  விரட்டிய  இந்திரஜித் காட்டினான் அனுமனை 
இராவணனுக்கு !

பாடல் -  1111 :

எத்தனை புவனங்கள்  உண்டோ
அத்தனையும்  போரினால்   கடைந்தவன் இராவணன்
போரினால் கடந்தவன் இராவணன்
அவனிடம் அனுமனை  
மூன்றே சொற்களில் சொல்கிறான் இந்திரஜித் :-
“  இவன் திருமாலின்  உருவம்
இவன் சிவன் ! செங்கண்கள் உடையவன்  ”

பாடல் -  1112 :

கைகூப்பி வணங்கி  இந்திரஜித் கூறிமுடித்தான்
அனுமனை நோக்குகிறான் இராவணன்
நோக்குதலில் உண்டானது கனல் பொறி
நோக்குதலில் உண்டான பொறிகளால் -    
அனுமனின்  உடல் மயிர் ‘ சுறு சுறு ' என தீய்ந்தது
 அனுமனின்  உடலினை -  
வெப்பமும் புகையும் 
நாகபாசம் போல     
இன்னும் இறுக்கின.

பாடல்  - 1113  :

கொடும் கோபம்  !
எமனின் வடிவம் இராவணன் !
தேவர்கள் நடுங்கிட
சுற்றிலும் நின்றவர்கள் நடுங்கிட
“எதற்கு இவன் வந்தான்? நீ யார்?”என
அனுமனின் தன்மை வினவினான்

பாடல் : 1114
சக்ரதாரி திருமாலோ?
வச்சிரதாரி இந்திரனோ?
சூலாயுதபாணி சிவனோ?
பூமிதாங்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனோ?
உன் பெயரும் உருவமும் மறைத்தாய்
அழிவதற்கு வந்திருக்கிறாய்!

பாடல் ; 1115

எதிரே நின்று
பாசக்கயிற்றால் உயிர்கவரும் கருநீலமான எமனோ?
குன்று பிளக்க வேல் எறிந்த கந்தனோ?
தென் திசை உரிமை எமனோ?
எந்த திசையில் ஆட்சி செய்கிறாய் நீ ? எவன் நீ?

பாடல் 1116

அந்தணர்கள் வேள்வியில்
கிளம்பிய கொடிய பூதமா நீ ?
இலங்கை அழிக்க
தாமரை மலர் பிரம்மன் படைத்த்¢ட்ட
அஞ்சாமை மிக்க தெய்வமோ நீ ?

பாடல் 1117

தேவர்கள் புகழை வேரோடு பறித்த இராவணன்
மேலும் கேட்டான்
“இவர்களில் நீ யார் ?
எதற்கு வந்தாய் ?
யார் உன்னை அனுப்பினர்?
என் கட்டளை! சொல்லிவிடு தப்பாமல்!”

பாடல் 1118

நீ சொன்ன யாரும் அல்ல நான்
அற்புதமான வலிமையாளர்களின்
ஏவலுக்காகவும் வரவில்லை
அழகிய செந்தாமரையே போன்ற
செங்கண்கள் கொண்ட வில்லி
இராமபிரான் தூதன் நான்
இலங்கை வந்தேன்

பாடல் 1119
அப்படிப்பட்ட வில் வீரன் யார் என
அறியவில்லை எனில் சொல்கிறேன்
முனிவர்கள்
அமரர்கள்
மும்மூர்த்திகள்
எத்தன்மை பெற்றவர்கள்  யாராயினும்
நினைக்கவே முடியாத பெரும் செயலை
செயலாக்கிட அவதாரம் செய்தவள்

பாடல் 1120

உங்களது தேகபலம் மட்டுமல்ல
தவ வலிமை
புதிது புதிதான படைகள்
தேவர்கள் தந்த நல்ல வரங்கள்
பெற்ற சிறப்புகள்
இன்னும் பிற எது இருந்தாலும்
தனது
ஒற்றை அம்பினால் அழிக்க வல்லவன்.

பாடல் 1121

அந்த வில்லாளன் இராமபிரான்
தேவர்களும் அல்ல
மற்றவர்களும் அல்ல
திசை காக்கும் காவலன் அல்ல
மும்மூர்த்திகள் அல்ல
மற்ற முனிவர்களும் அல்ல
பூமி முழுதும் ஆண்ட அரசனின் புதல்வன் !

பாடல் -  1122 : 

அவன் -  
ஞானம் பொருந்தும் வேள்வியின் பயன் !
மாபெரும் தவங்களின் தீரா வரங்கள்  அவன் !
இது மட்டுமல்ல - 
அவன் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்
காரணம் வேண்டுமா ?
வேதமும் அறமும்  புகழும்
மெய்யாகிய அற மூர்த்திதான் அந்த வில்லாளன் !

பாடல் -  1123 :

பரம் பொருளாகிய இராமபிரான்
அரச குமாரனாய் அவதரிக்க
காரணம் எதுவென  நீ கேட்டால் சொல்கிறேன்
அவன் - 
முடிவில்லாத வேதங்கள் ஆவான்
வேதங்கள் முடிவான உபநிடதமும் அவனே
அவை இதுதான் என விளக்க முடியாத
அறிவின் அறிவு அவன்
கஜேந்திரன்  எனும் யானை ஒன்று
சிறப்புப் பெயர் கூறாமல் பொதுவாக
‘ ஆதிமூலமே '  என்ற  அழைப்பிற்கே  அன்று  வந்தான்
இன்று - 
அமரரைக் காக்க வந்துள்ளான்

பாடல் -  1124 : 

மூலம் இல்லாதவன்   
நடு இல்லாதவன்
முடிவும் இல்லாதவன்
மூன்று காலங்களும் கணக்கும் நீத்தவன்
அனைத்துக்கும் காரணன்
சூலம் - சக்கரம் - சங்கு - கமண்டலம் துறந்தான்
வெள்ளி மலையாம்  கயிலை துறந்தான்
தாமரை மலரும் துறந்து
அயோத்திக்கு
வில்லுடன்  மட்டும் வந்த  பரம்பொருள்.
அவனே இராமன்.

பாடல் -  1125 : 

தன் பொன்னடிகள்  போற்றுவாரின்
பிறப்பை அறுப்பான்
அறம் தலை நிமிர நிறுத்துவான்
கருணையுடன் வேதம் கூறிய நீதியை
உலகம் அறிந்து அவ்வழியில் நடக்க
கொடியவர்களை  அழிப்பான்
நல்லோர் துன்பங்கள் துடைப்பான்
அவர்களை ஆள்பவன் .

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 20 March 2014

சுந்தர காண்டம்1075 - 1100






பாடல்-1076

மிகப்பெரிய வானப்பரப்பை
உருவி ஊடுருவினாய்
அதற்கு மேலும் வளர்ந்து நின்றாய்
கலைகள் யாவும் முற்றும் கற்றாய்
ஒரு கள்ள அரக்கனால் கட்டப்பட்டாய்
இதுதான் அறத்தின் தன்மையோ?

பாடல்-1077:

கடல் கடந்து
இலங்கை புகுந்தாய்
அரக்கர்கள் உடல்கள் பல கடந்தாய்
வென்று அழித்தாய்
உன் ஆயுள் அழியவில்லை
வெற்றித் தோள்கள் திரண்ட ஐயனே
இராமனைப் பிரிந்த இடர்கள் மேல்
இப்போது இன்னொரு இடர் தந்தாய்!

பாடல்-1078:

அனுமா ...
இராமனது ஆழி( மோதிரம்) காட்டினாய்
அதனால் என் உயிரை மீண்டும் எனக்கே காட்டினாய்
ஊழிக்காலம் வரை வாழ்க என உரைத்தேன்
அது பலிக்கும்
எனினும்
உன் மலைத்தோள் வலிமை காட்டி
பழிப்பு பெற்று அதுவும் காட்டுகிறாய்.

பாடல்-1079:

“என் அரிய உயிரை மீட்ட நீ
நன்றாக அறிந்த இந்த இடங்களை
இராமனுக்குக் கூறுவாய் என நம்பியிருந்தேன்;
கடும் போரில்
இராவணன் கொல்லப்பட்டபின்
சிறை மீட்கப்படுவோம் என இருந்தேன்”
அந்த நம்பிக்கை என்னை
தாண்டிப் போகச் செய்துவிட்டாய் அனுமா!

பாடல்-1080:

தீயைச் சுடும் கற்பு எனும் தீ போன்ற சீதை
அப்படியே தளர்ந்தாள்
மயக்கம் அடைந்தாள்
உயிர் தேய ஆரம்பித்தது
எதிரிகளிடம் சிக்கிய கன்றுக்காக
துவளும் தாய்ப்பசு போல தளர்ந்தாள்.

பாடல்-1081:

பெருமைக் குணத்தான் அனுமன்
பெரியோன் அனுமன்
அப்படிப்பட்ட அனுமனைக்கட்டிய இந்திரஜித்
இராவணன் அரண்மனை சென்றான்
தவப்பயனால்
மூன்று உலகும் ஆள்கிற
இராவணன் அரண்மனை அது.

பாடல்-1082:

இராவணன் கொற்றக்குடை வெள்ளைநிறம்
மூன்று உலகுக்கும் ஒளி வழங்கும்
இன்னொரு சந்திரனோ!
குளிர் நிழல் பேரொளி!
அந்த வெண்கொற்றக்குடை
இராவணன்
வானம் வரை தூக்கிய
கயிலை மலை போல் திகழ்ந்தது.

பாடல்-1083:

இராவணன் தோள்களில்
கருடக்கொடி திருமாலின் வச்சிராயுதம் உண்டு
முக்கண் சிவனின் சூலாயுதம் உண்டு
தழும்புகள் உண்டு
தேன் சொரியும் மகளிர் வாள் நகங்கள் பதித்த
வடுக்கள் உண்டு.

பாடல்-1084:

இராவணன் பத்து தலைகளில்
செந்நிற மயிர்க்கற்றை ஒளி
எத்திசையும் நிறைந்து ஓங்கியது
கோபமான பெருமூச்சு
பெரும் புகை உண்டாக்கிற்று
கடலில் ஒரு வடவைக் கனல் போல்
இராவணனை அது காண்பித்தது. 

பாடல்-1085:

இராவணனின் மகுடங்களில்
மரகதங்களின் செழுமை ஒளி உண்டு
மாணிக்க மணிகளின் நீண்ட ஒளி உண்டு
இரண்டு ஒளிகளும்
நரக லோகத்தின்
அசையாத இருளையும் விழுங்கின
இப்போது இராவணன் தோற்றம்
பாம்பரசன் ஆதிசேஷன்
எத்திசையும் செல்லுமாறு
அரசு செலுத்துவது போலிருந்தது.

பாடல்-1086:

இராவணன் மேலாடையில்
பலவிதமான இரத்தினங்களின்  ஒளி!
இராவணன்  தோள்களில்
சுடர் நிறைந்த அணிகலன்களின்  ஒளி!
கருங்கடல் பூமியில் பரவிய மேருமலையை
பொன்மகுடமாக சூடிவிட்டானோ இராவணன்!

பாடல்-1087:

சிவப்புநிற ஆடை
இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டு
காணப்பட்டான் இராவணன்
வரிசை வரிசையான வெண்முத்துக்கள் கொண்ட
அணிகலன்கள் ஒளி
வெண்ணிலா ஒளிக்குச் சமமாக இருந்தது.
இராவணனின்  இத்தோற்றம்
அந்திவானத்தை ஆடையாக
நட்சத்திரங்களை அணிகலனாக
சந்திரனாம் வெண்கொற்றக்குடை நிழலில்
காணப்படும் இருள் போல இருந்தது.
ஆம்! இராவண இருள்!


பாடல்-1088:

இராவணன்
கொலைத்தன்மைக்கு இருப்பிடம்!
சிறந்த வேதங்களுக்கு இருப்பிடம்!
வலிமையின் உச்சத்திற்கு இருப்பிடம்!
பத்து தலைகளும் கண் பார்வை வீசினால்
எண் திசை காக்கும்
எட்டு யானைகளுக்கு பயம் வரும்.
அது மட்டுமல்ல
விண்ணிலிருந்து காக்கும் துருவனும்
மண்ணிலிருந்து காக்கும் ஆதிசேடனும்
பெரும் பயம் கொள்வார்கள்.

பாடல்-1089:

உலகங்கள் அனைத்திற்கும் ஒரே நாயகன்
ஏக நாயகன்
இராமபிரான் தேவி சீதையைக் கண்டபின்
இராவணனுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது
நாகர்கள் வாழும் பாதாள லோகம்
பிரமன் வாழும் சத்தியலோகம்
இடைப்பட்ட உலகம்
அனைத்திலும் உள்ள அழகிய மங்கையர்கள்
அனைவருமே ஆண்களாகத் தெரிந்தனர்
காதல் பெண்களாகவே இல்லை!

பாடல்-1090:

இராவணனுக்கு ஏவல் செய்ய
புலால் படிந்த வேல்கள் ஏந்திய
அரக்கர்களோடு பணி செய்ய
எல்லோருமே சூழ்ந்து நிற்கிறார்கள்
சுற்றி நில்லாதவர்கள் பட்டியல் இது
சிவன்!
திருமால்!
அற்பத் தொழில் புரியும் மனிதர்கள்
முனிவர்கள்!

பாடல்-1091:

நரம்புக்கருவியாம் வீணை
தேன் தருகிறது!
பிரம்ம தாளம் எனும் இசைக்கருவியும்
சில்லரி எனும் இசைக்கருவியும்
குறகு எனும் இசைக்கருவியும்
வீணை இசைத்தேனுக்குத் தாளமிடுகிறது
தேவமகளிர் பாடல் கலக்கிறது
இத்தனையும்
இராவணன் இருபது  செவிகளில் சேர்கிறது.

பாடல்-1092:

தாளத்தோடு பாடல் இசைந்து
முழவின் ஒலியும் இசைகிறது
மலர் போன்ற சிறிய பாதமும் மனமும்
கைகளும் ஒன்றுபட்டு
மேனகை நடனம் இயங்குவதைப் பார்த்தால்
“முக்தியே வேண்டாம்” என
முனிவர்களைச் சொல்லச் செய்யும் ஆற்றல் புரிகிறது.

பாடல்-1093:
இராவணனின் முகங்கள்
ஒவ்வொன்றும் ஒரு செயல் செய்கின்றது
ஊடிய மகளிர் முகத் தேனை ஒரு முகம் நுகர்ந்தது
கூடிய மகளிர் முகக்களிப்பு எனும்
கள் அருந்துகிறது இன்னொரு முகம்
மற்ற மகளிர் காதல் பருகியது இன்னொரு முகம்
மகளிர் அழகு எனும்
அமுதம் குடிக்கிறது இன்னொரு முகம்

பாடல்-1094:

பணி செய்யும் தேவர்களுடன்
அரசியல் செய்யும் ஒரு முகம்
படைத் தலைவர்களுடன்
மந்திர ஆலோசனை செய்கிறது ஒருமுகம்
பாவ காரியங்களை சிந்தித்து
அந்த எண்ணங்கள் கொண்டது ஒருமுகம்
பூவை  சீதையின்
வெளி உருவத்தோடு ஒரு முகம் பொருந்துகிறது.

பாடல்-1095:

“காந்தள் மலர் போன்ற
மெல்லிய விரலைப் பெற்ற ஜானகியின்
கற்பு எனும் கடல் நீந்துதல் எவ்விதம்?” என
ஒரு முகம் நினைக்கிறது
சந்தனம் பூசிய கொங்கை மங்கையர்
இராவணனுக்கு கண்ணாடி காட்ட
அதில் தனது எழிலை நோக்குகிறது ஒருமுகம்.

பாடல்-1096:

மரச்செறிவில் இருக்கும் தேனை
பருக விரும்புகிறது வண்டு
மனம் வாடுகிறது
வேட்கையால்
செருக்கு துறக்கவும் முடியாத வண்டு
இராவணன் மனம் இப்படியிருக்க
இராவணன் மீது மோகம் கொண்ட பலவகை மகளிர்
மனம் கலங்குகினார்கள்
உடல் நலிந்தார்கள்
கொங்கை மீது கண்ணீர் விடுவார்கள்
இராவணன் இருபது தோள்கள் தாக்க
கண் அம்பு விடுவார்கள்.

பாடல்-1097:

தென்றல் இரு வித செயல்கள் செய்தது
மலர்களில் மகரந்தத் தேன் பருகி
மகளிர் அரும்புக் கொங்கைகள் பூசிய
சந்தனச் சேற்றிலே கலந்தது ஒரு செயல்
அதே நேரம்
இராவணன் உடலில் பகையுடன்
நஞ்சு போல் நுழைகிறது!

பாடல்-1098:

இராவணனும் இருவித செயல்கள் செய்தான்
பிறைச்சந்திரன் ஒளி நெற்றி மகளிர்
சிவந்த வரிகள் பெற்ற
கயல்மீன்  கண்கள் பெற்ற முகங்களுக்கு
தாமரை மலர்களுக்கு சூரியனாக ஆனான்
தாமரைப் போல்
கைகூப்பி வணங்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
சந்திரனாகவும் ஆனான் .

பாடல்-1099:

எட்டுத்திசைகளுக்கும்
உரிமை பெற்ற இராவணனை
அனுமன் எதிரே கண்டான்
“அனுமனின் சினம் -
கருநாகம் கண்ட கருடனின் சினம்!
சிறந்த எனது தோளில் உள்ள
நாகபாசம் எனும் பிரம்மாஸ்திரம் சிதறச் செய்வேன்
நச்சு இராவணன் மீது இப்போதே பாய்வேன்” என
கோபம் கொண்டான்.

பாடல்-1100:

“முன்பு
இராவணன் உறங்கும்போது
கொல்வது குற்றம் எனவிட்டுவிட்டேன்
இப்போது
பொன் அரியாசனத்தில் இருப்பதை கண்டேன்
பலவகையாகச் சிந்திப்பது எதற்கு?
இராவணன் தலைகளைச் சிதறடிப்பேன்
அறத்தின் வடிவம் சீதையை மீட்பேன்
சீதையுடன் புறப்படுவேன்” எனவும் எண்ணினான்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 13 March 2014

சுந்தரகாண்டம் 1051 - 1075


 
பாடல்-1051:

அனுமனுக்கோ களிப்பு தான்! ஆம்!
கூர் நெருப்பு ஒத்த ஆயுத வீரர்கள்
பெரும் யானைகள்
கொடி பறக்கும் தேர்கள் குதிரைகள்
மர வீச்சினால் உடைப்பட்ட மாளிகைகள் கூட்டம்
எல்லாமும் கண்டான் களித்தான்.

பாடல்-1052:

தன்னைத் துன்புறுத்தும் ஆயுத வரிசையை
எறும்புக்கூட்டம்
தன் மேல் ஏறுவதை அனுமதிக்கும்
பழைய மரம் போலிருந்தான்
அனுமனின் தோள்களை அருகில் முற்றிலும் காண
அரக்க மகளிரே அஞ்சுகிறார்கள்
பற்கள் நடுங்கி இதழ்கள் வருந்தின
வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
சிலர் மயக்கமும் அடைந்தனர்.

பாடல்-1053:

அனுமனை நேரில் காண அஞ்சி
ஆரவாரம் அடங்கிக் கிடந்தவர்கள் பலர்
அனுமன் செய்த அழிவுகளைச் சொல்கின்றவர் மிகப்பலர்
நேருக்கு நேரே பார்க்க அஞ்சி
சிதறி ஓடுகிறவர்களோ இன்னும் பலப்பலர்!

பாடல்-1054:

சில அரக்கர்கள்
மிகத் தெளிந்த கூரிய அறிவோடு பேசினர்
“இந்தக் குரங்கு சாமானியமல்ல
எரிக்கும் ஆற்றலும் கொடுமையும் கொண்ட
நச்சுப் பற்கள் கொண்ட நாகத்தினால் இவனைக் கட்டினோம்
இவன் முகமோ
பூமாலையால் கட்டியது போல் ஒளி விடுகிறது
ஆதலால் மிக கவனமுடன் இருக்கவும்!”

பாடல்-1055:

அரக்கர்களில்
ஞானமும் கலந்த நிலையுடன் சிலர்
நினைப்பு இப்படி இருந்தது
“அனுமனின் இந்த எளிய அடங்கிய நிலை
நாகபாசம் எனும் நாகக் கயிறால் நிகழவில்லை
இக்குரங்கின் எண்ணம் வேறு”
அது மட்டுமா?
“அனுமனே !
களிப்பு மிகு சிந்தையால் எம்மைக் காண்க
கோபிக்காதே” எனத் தொழ ஆரம்பித்தனர்.


பாடல்-1056:

பசும் பொன்னால் ஆன வீரக்கழல்
அனுமனின் கால்களில் கொண்ட அனுமனைக்
கட்டியிருந்தார்கள்  நாகபாசம் எனும் பாம்பினால்!
அனுமனை  இழுத்துச்செல்ல
கருடனைப் போல் மூன்று மடங்கு வலிமை பெற்ற
ஐம்பதாயிரம் அரக்கர்கள் தேவைப்பட்டனர்!

பாடல்-1057:

மிகுந்த ஆற்றல் மிகு அரக்கர் கர்வம் அடங்க
அழியாத தன் உருவை
அனுமன் வடிவம் கொண்டு
வந்திருக்கிறான் எமன் !” என்றனர் பலர்.

பாடல்-1058:

இழுத்துச் செல்லப்படும் அனுமனைக் காண
வரிசையாய் நிற்கிறார்கள்
வளையல் அணிந்த அரக்க மகளிர்!
கூட்டம் கூட்டமாய் ஆண்கள்
மாளிகை நிலா முற்றத்தில் நிற்கின்றார்கள்
பலகணிகளில்!
முரசு முழங்கும் வாசல்கள்
எல்லாவற்றிலும் ஏறி நிற்கிறார்கள்.


பாடல்-1059:

பலர் கூறியது இதுதான்
மயில் போன்ற சீதையின் கற்புச்சிறப்பினால்
கூரிய பற்கள் கொண்ட குரங்கின் வடிவு கொண்டு
இங்கே வந்திருப்பது
மழுவாயுதம் ஏந்தி வாழும்
கயிலை சிவபெருமான்தான்!”

பாடல்-1060:

தேவமகளிர்
வித்தியாதர நாட்டுப் பெண்கள்
யாழ் நரம்புகளைவிட 
இனிய பேச்சு கொண்டநாக நங்கையர்
கரும்பு போல் இனித்திடப்பாடும்
சித்தர் இனப் பெண்கள்
எண்ணிக்கைக்கு அளவேயில்லை!


பாடல்-1061:

“இது குரங்கே அல்ல
பெரும் சக்ராயுதம் கொண்ட பாற்கடல் பெருமாளும்
ஒப்பற்ற மலர்களின் மாலை அணிந்த பிரமனும்
கலந்து உண்டான உடல் கொண்ட அனுமனை
எவரால் வெல்ல முடியும்?” என்றனர் பலர்.

பாடல்-1062:
அப்போது
அரக்கர் அல்லாதவர் குழாமும்
அரக்கியர் அல்லாதவர் குழாமும்
தமது கண்ணீரை மறைக்காமல் சொரிந்தனர்
அப்படிப்பட்ட தேவர்களின் அழுகை
மணம் வீசும் கூந்தல் கொண்ட சீதையின்
துன்பம் எண்ணியதால் வந்த கண்ணீரோ!
அனுமனிடம் கொண்ட இரக்கமோ!
அறத்தின் வலிமை
இப்படி எளிமையாகிவிட்டதே என எண்ணியோ!

பாடல்-1063:

ஆண்மையாளன் அனுமன்
அவர்களோடே போனான்
மீளவில்லை
வேறு செயலும் விரும்பவில்லை
“தொடர்ந்து போவோம்
இலங்கை வேந்தனைக் காண்பதே நல்லது” என
கருத்தில் எண்ணினான்.

பாடல்-1064:

“என் தந்தை வாயுதேவன் அருளால்
இராமன் சேவடி தியானிக்கும் நலத்தால்
சீதை தந்த வரத்தால்
தேவர்கள் தந்த வரத்தால்
பிரம்மாஸ்திரம் எனும் நாக பாசமும் அறுப்பேன்
எனினும் அவ்வாறு செய்யக்கூடாது” என
தளர்ந்து இருந்தான் அனுமன்.

பாடல்-1065:

வளைந்த பற்கள் உடைய
அரக்கன் இராவணனை அடைவேன்
அவனுக்கு மந்திர ஆலோசனை தரும்
அளவற்ற முதியவர்களிடம்
நடக்கப்போகும் விளைவை நான் கூறும் போது
இராவணன் இளகுவான்
மிதிலைச் செல்வி சீதையை ஒப்படைப்பான்.

பாடல்-1066:

அது மட்டுமல்ல
இராவணன் துணைவர்களுக்கும்
நமது பலத்தின் எல்லை தெரிந்திருக்கும்
இராவணன் நிலையும் மனமும்
தெரிந்து கொள்ளவும் முடியும்
இராமனிடமிருந்து புறப்பட்ட என் முகமே
அவனுக்கு தூது சொல்லிவிடுமே.

பாடல்-1067:

கருநீல நிற இராவணன் நெஞ்சுக்கு
வாலியின் மரணம் தெரியும்
ஏழு மராமரங்களுக்கு உற்ற நிலை தெரியும்
கொடிய குரங்குப்படை வலிமை தெரியும்
சுக்ரீவன் வலிமையும் மேன்மையும் தெரியும்
அவன் நெஞ்சில் தைத்தவை தான் இவை,.

பாடல்-1068:

“ஆதலால்
அரக்கன் இராவணன் அடைவோம்
இராமபிரான் ஆற்றலும் நீதியும்
மனம் கொள்ளுமாறு நிறுவுவோம்
உணராவிடில்
மிச்சமிருக்கும் சேனைகளையும்
பாதிக்கு மேல் அழித்து
பையப் போய்விடுவோம்” என அனுமன் போனான்

பாடல்-1069:

இந்திரஜித் !
தேவர்களின் அரசன் இந்திரனை வென்றவன்
கடல் போல் படை சூழ
கட்டுண்ட காளை போன்ற வீரன் அனுமனை
கொற்றக்குடை பெற்ற இராவணன் அரண்மனைக்கு
கொண்டு போனான் இந்திரஜித்.


பாடல்-1070:

தூதுவர்கள் ஓடி வந்தனர்
இராவணனைத் தொழுதனர்
“மன்னா முன்பு தொல்லை தந்த குரங்கு
தாமரை மலர் பிரம்மன் அஸ்திரத்தால்
பிணிக்கப்பட்டது” என்றனர்.

பாடல்-1071:

அதைக் கேட்ட அடுத்த கணம்
இராவணன் நெஞ்சு
மகிழ்ச்சியால் நிமிர்ந்தது
ஒளி அற்ற வானம் என
இருள் விழுங்கிக் கிடக்கும் கறுத்த மார்பிலிருந்து
திசை யானைகளோடு மோதிய
மிகப்பெரிய முத்து மாலையைப்
பரிசாக நீட்டினான் இந்திரஜித்துக்கு.

பாடல்-1072:

அளவற்ற மகிழ்ச்சியால்
பூரித்தன தோள்கள்
கள் வடியும் பூக்கள் அவன் கரம் தழுவ
ஆணையிட்டான் இராவணன்
“விரைவாக ஓடுக! சொல்க! என் ஆணை!
கொல்லாமல் கொணர்க” என்றான்.

பாடல்-1073:

தூதர்கள் ஓடினர்
பகை என்பதே இல்லாமல் அழிந்த
இந்திரஜித் அறியச் செய்தனர்
இவர்கள் இங்கு உரைக்க
அங்கு
பழியற்ற அசோகவன சீதை நிலை சொல்வோம்.

பாடல்-1074:

“அனுமன் அசோகவனம் அழித்தான்
எண்ண முடியாத அளவுக்கு
பலரைக் கொன்றான்” என்ற போது மகிழ்ந்தாள் சீதை
இப்போதோ
உயிர் வெறுக்கின்றாள்
வீரன் அனுமனுக்கு உற்றதை
களங்கமில்லா திரிசடை
வருத்தமுடன் உரைத்தாள்.

பாடல்-1075:

புகையுண்ட ஓவியம் போல்
காணப்படுகிறாள் சீதை
ஒளிரும் பூவின் மேன்மை மிகு சீதை இப்போது
பாவி வேடனின் கையில் சிக்கிய
அன்னக்குஞ்சுக்காக வருந்துகிற
தாய் அன்னம் போல் வருந்திச் சொல்கிறாள்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 6 March 2014

சுந்தரகாண்டம் 1026 - 1050







பாடல்-1026:
வெற்றிக்கு உரியவன் அனுமன்
ஆயுதங்கள் அற்றாலும்
இராம ஆசியே அவன் ஆன்மா
ஆதலால் அவன் உடலில்பட்ட ஆயுதங்கள் யாவும்
அவனால் உதறமுடிந்தது
இந்திரஜித் தேரில் குதித்தான் அனுமன்
வல்லமையுள்ள  வில்லைப்பறித்து
வானில் பறந்து முறித்தான்.

பாடல்-1027:

இந்திரஜித் சாமான்யன் அல்ல
அனுமன் முறித்த வில் ஓசை ஒலித்து அடங்குமுன்
மீண்டும் ஒரு ஆயுதம் எடுத்தான்
அதுஒளி மிகுந்த படைக்கருவி
மலைகளின் சிறகுகளையே அறுத்த இந்திரன்
விட்டுச் சென்ற வில் அது.


பாடல்-1028:

மாறாத வெஞ்சின இராவணன் மகன் இந்திரஜித்
நூறு நூறு அம்புகளாக
அனுமனின் நெடுமேனியில் பாய்ச்சுகிறான்
இராம சேவகன் இராமதூதன்
சிறிது தளர்ந்தான்.

பாடல்-1029:

இதனைக்கண்டு
தேவர்கள் தளர்வுற அறிவுமயங்க
ஆதரவான அனுமன் தளர்ச்சி நீங்கினான்
பிறர் அன்பும் ஆதரவு முகமும்
தனக்கும் அவசியம் என அனுமன் புரிய வைத்தான் நமக்கு!
தேவர்கள் மனம் உயிர்ப்புற்றனர்
அழகிய கைகளால் மரம் பறித்தான் அனுமன்
இந்திரஜித் பாய்ச்சிய அம்புகள் வரிசையை
மரத்தால் ஒடித்தான்
மணி மகுடம் பதித்த இந்திரஜித் தலையில்
மரத்தால் அடித்தான் அனுமன்.

பாடல்-1030:

தேவர்களையே வென்ற இந்திரஜித்
வலியதும் பெரியதுமான மரத்தினால் பட்ட அடியால்
மகுட மாணிக்கங்கள் ஒளிக்கற்றைகள்
கீழே சிதறக் கதறினான்
மலை அருவி போல
கொழும் குருதி வர உடல் சோர்ந்தான்.

பாடல்-1031:

சிறிது நேரம் தான்!
திகைப்பு சிறிது நேரம்தான்
பிறைச்சந்திரன் போல் வளைந்த பற்களைக்கடித்து
மறுபடி எழுகிறான் இந்திரஜித்
தேவர்கள் திகைக்க அசுரர்கள் திகைக்க
ஆயிரம் அம்புகளை எய்கிறான் அனுமன் மேல்!

பாடல்-1032:

இந்திரஜித் விடுகின்ற அம்புகள் பாய்ந்தன
மார்பிலும் கரத்திலும் அனுமனைத்தாக்கின
வெறுத்துப்போன சிந்தையோடு அனுமன்
அதிகபட்ச கோபமுடன்
வில்வித்தகன் இராமனின் அம்பைவிடவும் வேகத்தோடு விரைந்து
இந்திரஜித்தை
தேரொடும் வேரொடும் பிடுங்கி வீசி
வானில் எறிந்தான் ! ஆரவாரம் செய்தான்.
பாடல்-1033:

மேலே சென்ற கண் இமை
கீழே வந்து கூடுவதன் முன்
அளவிட முடியாத வலிமையுடைய  இந்திரஜித்
தேரோடு வானம் சென்றான்
புண்ணின் மீது வழியும் குருதியுடன்
பசும் புலால் நாற்றமுடன்
மண்ணில் வந்து விழுந்தான்.

பாடல்-1034:

வான் வரை வீசி எறியப்பட்டவன்
பூமியை அடையும் முன்
பெரு வடிவு கொண்ட அனுமன்
மணிக்கூட்டம்  கொண்ட தேர்கள் முழுதும்
உளுந்து உருளும் நேரத்துக்குள்
சிதைத்துவிட்டான்.

பாடல்-1035:

ஏறிச் செல்ல தேரும் இல்லை இந்திரஜித்துக்கு
மீண்டும் அனுமனுடன் போரிட வலிமை இல்லை
கொடும் கோபம் மட்டும் இருந்தது
நெருப்பு போல வானில் திரிந்தான்
செய்ய எச்செயலும் இல்லாமல்
பிரம்மதேவன் பிரம்மாஸ்திரத்தை
அனுமன் மேல் எறிந்தான்.

பாடல்-1036:

அனுமனை வீழ்த்திடும் ஆசைக்கு மட்டுமே
வலிமையுள்ள இந்திரஜித்
அரை நொடிக்குள்  மானசீக பூஜை செய்கிறான்
அந்த பிரம்ம அஸ்திரத்துக்கு!
மலர்களால் ஒன்று
மலர் போன்ற வெண்சோற்றால் ஒன்று
தீப ஆராதனையால் ஒன்று
நறுமணப்புகையால் ஒன்று
பிறகு
உலகம் படைத்த நான்முகன் அஸ்திரத்தை
கையில் எடுக்கிறான்!

பாடல்-1037:

வெற்றி உடைய வில் அது
நாண் ஏற்றினான்
அனுமனது தோளுக்கு குறி வைத்தான்
பூமி நடுங்க
திசைகள் நடுங்க
சந்திரன் தோய்ந்த விண் நடுங்கிட
வில் செலுத்துகிறான் இந்திரஜித்.

பாடல்-1038:

பிரம்மாஸ்திரம்
எவராலும் அடக்கமுடியாதது
பாம்புக்கூட்டங்களின் அரசன் வடிவம் கொண்டு
அச்சம் தரும் விழிகளுடன் பாய்கிறது பிரம்மாஸ்திர அம்பு
கருடனுக்கும்
நடுக்கம் தரும் விதமாக பாயும் அஸ்திரம்
பெரிய அனுமனின் தோள்களை இறுக்கிற்று.

பாடல்-1039:

அனுமனின் உறுதி வாய்ந்த உடலை
பிரம்மாஸ்திரம் கட்டிவிட்டது
அனுமன் கீழே விழுந்து சாய்ந்தான்
ஊழி இறுதியில்
சந்திரன் -
மற்ற கோள்களுடன் விழுவது போல!
அறக்கடவுள் கண்ணீர் சிந்திட
அனுமன் வீழ்ந்து கிடக்கின்றான்.

பாடல்-1040:

கீழே விழுந்தது
அனுமன் மட்டுமே
அனுமனது ஞானம் அல்ல
அதனால்
“பிரம்ம அஸ்திரத்தை அவமதித்து
அகன்று போகக்கூடாது” என எண்ணி
கட்டுப்பட்டு கண்மூடி இருந்தான் அனுமன்
அரக்கன் இந்திரஜித் -
“இவன் வலிமை ஓய்ந்தது!” என அருகில் வந்தான்.


பாடல்-1041:

பதுங்கிய மற்ற அரக்கர்களும் வந்தனர்
வாள் பற்கள் கொண்ட அரக்கர்களும் பலர்
அனுமனைச் சூழ்ந்தனர்
பிரம்மாஸ்திரமாகிய
துவாரம் கொண்ட பற்கள் பெற்ற பாம்பை இழுத்தார்கள்
அனுமனை அதட்டினார்கள்
பலரும் ஆர்ப்பரித்தார்கள்.

பாடல்-1042:

இலங்கை நகரமே
பெரு முழக்கம் செய்கிறது!
இலங்கை இப்போது அலைகடலாகவும்
அனுமன் இப்போது மந்திரமலையாகவும்
பாம்பு அம்பாகிய பிரம்மாஸ்திரம்
வாசுகி பாம்புக்குச் சமமாகவும் தெரிகிறது!
அதைப் பிடித்து இழுக்கும் தேவர் கூட்டம்
அரக்கர்கள் போல உள்ளது!

பாடல்-1043:

கரு நிறமான பிரம்மாஸ்திரப் பாம்பு
பொன்நிற அனுமனின் உடலை கட்டியது
ஒளி பொருந்திய ஆதிசேஷன் எனும் பாம்பினால்
மேருமலை சுற்றப்பட்டது போல இருக்கிறது
அறக்கடவுளுக்கு அனுமன் ஒருவனே துணை என நின்ற
அனுமனும் வீழ்ந்துவிட்டான்
இலங்கையில்  இனி என்ன நடக்குமோ!

பாடல்-1044:

வெற்றி  குதூகலிப்பால்
அரக்க ஆடவர் ஒலியும்
அரக்க மகளிர் ஒலியும்
வானை மோதியது
எத்திசையும் பரவியது
மேகம் மோதியது போல முழக்கம் எழுப்பினார்கள்
அந்த மகிழ்ச்சிக்கு சமம் எதுவெனில்
இந்திரனை
இந்திரஜித்  சிறை செய்த போது
பெற்ற மகிழ்ச்சிக்கு சமம்!

                                  (பாசப்படலம் முற்றியது.)

13. பிணி வீட்டுப் படலம்


பாடல்-1045:

கட்டுண்ட அனுமனை நோக்கி
அரக்கர்கள் நிலை பலவிதம்
“அம்பினால் எய்க !
வாளால் வெட்டுக !
ஈட்டியால் குத்துக
கோடலியால் பிளந்து
கூறு கூறாக்குக
மண்ணில் தேய்த்து த்¢ன்னுக
இந்த குரங்கின்  உயிரை விட்டு வைத்தால்
நமக்கு உயிர் இல்லை!” என பலப்பல குரல்கள்!

பாடல்-1046:

அனுமனைச் சுற்றியிருக்கின்றார்கள்
மைதீட்டிய கண் கொண்ட மகளிரும் - மைந்தரும்
எல்லோரும் கோபமுற்றார்கள்
கனன்றார்கள்
“இத்தனை நேரம் இந்த குரங்குப்பயலை
விட்டு வைக்கலாமா?” என்றார்கள்
கொல்லவும் மொய்த்தார்கள் சிலர்!

பாடல்-1047:

“நஞ்சு ஆயுதங்களால் சாகின்ற
சாதாரண குரங்கல்ல இது
அலைகடலில் தள்ளி
உச்சம் தலையை அழுத்த வேண்டும்
வச்சிர உடல் குரங்கை நெருப்பில் இட வேண்டும்”
என்றும் சிலர் கூறினர்.



பாடல்-1048:

நீ கொன்ற
என் தந்தையைக் கொடு
என் தம்பியைக் கொடு
பிறகு நீ போகலாம்” என அனுமனைத் தடுத்தனர்
தேவர்களே இதன் காரணம் ஆதலால்
தேவர்களைக் கொல்வோம் என
மறுகினார்கள் பலர்.

பாடல்-1049:

இது வரை பிரியாத
மலை போல வலிமை கொண்ட கணவரை
இவனால் இழந்தோம்
வருத்தம் தீர அனுமன் தலை மீது ஏறி
எம் திருமங்கலம் நீக்குவோம்” என
அழுகின்றார்கள் பல மாதர்கள்.

பாடல்-1050:

அனுமனை இழுத்துச் செல்கிறார்கள்
வேடிக்கை பார்க்கிறது இலங்கை மக்கள் கூட்டம்
அதிகமாக ஆர்ப்பரிக்கிறது
ஆர்ப்பாட்ட ஒலி உலகம் முழுதும் பரவுகிறது
கழுத்து அறுபட்டு கணவர்களை இழந்திட்ட
குண்டலம் தரித்த மகளிருக்கு
அந்த ஒலி ஆறுதலாகிறது.

-அனுமனோடு மீட்போம்.

Monday, 3 March 2014

சுந்தரகாண்டம் 1001 - 1025



பாடல்-1001:

நீர்த்தன்மை கொண்ட இரத்த வெள்ளம்
அதனால் பேரலைகள் கொண்டது  கடல்!
கடலில் மட்டும் நீந்தவில்லை இந்திரஜித்
பிணக்குவியலிலும் நீந்தியும் இடறியும் செல்கின்றான்
தேய்க்கப்பட்டு இறந்து கிடக்கிறது தம்பி உடல்
கோபத்தால் சிவப்பு உண்ட கண்களுடன்
தீயில் காய்ச்சிய செம்பு போலாகிய கண்களுடன்
மனதில் சோகக் கறுப்புடன் காண்கிறான் இந்திரஜித்.

பாடல்-1002:

தாருகாசுரன் இரத்தக் குருதியில்
தம்பியின் உடல் கிடந்தது
ஒப்பற்ற நரசிங்கம் கூர் நகத்தால் பிளந்த
இரணியன் உடல் குழம்பிக் கிடப்பதுபோல!
தம்பியைக் கண்டதும் தேர் நின்றது
வீரத்தின் வில் நழுவி விழுந்தது
கண்ணீர், இரத்தம், நெருப்புப்பொறி
மூன்றும் ஒன்றாகச் சிந்தின இந்திரஜித் கண்கள்!

பாடல்-1003:
என் ஐயாவே!
இலை  வடிவ கூரிய வேல் கொண்ட
உன் தந்தை சினம் நினைத்தால்
உன் உயிர் வாங்க எமனும் அஞ்சுவானே!
வேறு வேறு உலகினரும் அஞ்சுவரே!
எம்மை விட்டு எளிதில் எந்த உலகம் அடைந்தாய்!
என் அப்பனே!

பாடல்-1004:

இந்திரஜித்
ஆற்ற முடியாத துன்பத்தினன் ஆனான்
அன்பின் மிகுதியால் அறிவு அழிந்தது
அயர ஆரம்பிக்கும் வேளையில்
சினம் என்ற ஒன்று
தானே மேல் நிமிர்ந்து ஓங்கியது
துன்ப நோயை உள்ளடங்கச் செய்த அந்தக் கோபம்
எதற்கு சமம் எனில்
உள்ளே போன முதல் ஆணியின் மேல்
அடித்துத் தைக்கப்பட்ட
இரண்டாம் ஆணி போல இருந்தது.

பாடல்-1005:

சூரியனால்
விரைவாகச் செலுத்தப்படும் தேர் போல
இந்திரஜித்  அனுமனைத் தாக்கிட வருகின்றான்
முப்புரம் அழிக்க முற்படும் சிவனைப் போல
வீரக்கழல் அணிந்த ஆண்மை பெற்ற அனுமன்
கோபமுடன் பார்த்தான்.

பாடல்-1006:

அனுமன் சொல்கின்றான்:-
“இதன் முன்பு சில வீரர்களை வென்றேன் எனும்
உண்மைதான் இவனை விரைவாக
இங்கு வரவழைத்தது! அம்மா!
அடுத்து நடப்பது
வெல்லுதல் தோற்றல் இரண்டில் ஒன்றே!
அதுவும் இன்றை சமைந்துவிடும்
இவன் இந்திரஜித்! ஆம்! இவன் இந்திரஜித்!”

பாடல்-1007:

மணம் வீசும் மாலை
கட்டப்பட்ட மாலை அணிந்த வீரன்
காளை  இந்திரஜித் என் கைகளால் இறந்தால்
அதுவே இராவணனுக்குப் புரிந்துவிடும்
“கெட்டுவிடுவோம்” என எண்ணுவான்
கற்புக்கரசி சீதையை விட்டு விடுவான்
அது மட்டுமல்ல
அரக்கரும் சினம் தீர்வார்கள்
அமைதி பெறுவார்கள்.

பாடல்-1008:

இந்திரஜித் கொல்லப்பட்டால்
ஒரே ஒரு நன்மை மட்டுமா கிடைக்கும்?
பலப்பல!
ஒளி பொருந்திய அவன் இறப்பு -
இந்திரனுக்கு  துன்ப விடுதலை தருமே
இலங்கையின் காவல் அழியுமே
இராவணனையும் வேரொடு வென்றவன் ஆவேனே.
பாடல்-1009:

அனுமான் நினைக்கும் அக்கணத்தில்
மூன்று உலகமும் வென்ற இந்திரஜித்
யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை மற்றும்
குதிரைப்படைகளோடு களத்தில் புகுகின்றான்
ஆரவாரிக்கின்றன படைகள்
அனுமன் வெகுண்டான் சினமானான்
பெரும் உரு எடுத்து
ஒரு பெரும் மரத்தை எடுத்துக் கொண்டான்.

பாடல்-1010:

யானைக்களிறின் வதம் ஆரம்பம்!
அனுமனால் சில யானைகள் உதை உண்டன
சில யானைகள் உதைப்பட்டு உருண்டன
இது மட்டுமா?
சில யானைகள் மிதிபட்டன
சில கீழே விழுந்தன
சில யானைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி
மண்ணில் புதைபட்டன
போரினால் சில யானைகள் வதைபட்டன
மண்ணில் விழுந்தும் சில மரணமாயின.

பாடல்-1011:

தேர்க்கூட்டங்கள் வதம் ஆரம்பம் !
அனுமனால்
சில தேர்க்கூட்டங்கள் முறிந்து விட்டன
சில இடிந்து சரிந்தன
சில அச்சு முறிந்து சிதைந்தன
சில பொடிப்பொடியாகின
சில நெருங்கி நொறுங்கின
சில மண்ணில் சாய்ந்தன.

பாடல்-1012:

குதிரைப்படைகள் வதம் ஆரம்பம்!
அனுமனின் தாக்குதலால்
குதிரைகளின் தலை நொறுங்கின
கருவிழிகள் சிதைந்தன
வலிமையான கால்கள் முறிந்தன
முதுகுகள் ஒடிந்தன
கிண்கிணி மாலைகளோடு மார்புகள் உடைந்தன
ஒரே நேரத்தில் பல இடங்களில் இரத்தங்களாயின
ஒளி விடும் பொன் குளம்புகள் நொறுங்கின
வளைந்த கழுத்துகள் ஒடிந்தது ஒடிந்ததுதான்!




பாடல்-1013:

அனுமன் வீரத்தாக்குதலால்
அரக்கர்கள் கொண்ட காலாட்ப்படை
வதை பட ஆரம்பிக்கிறது
பிடிக்கப்பட்டவர்கள் பலர் பிளக்கப்பட்டார்கள்
இன்னும் பலர் பெரும் தோள்கள் முறிந்தனர்
இன்னும் பலர் தலை உடைந்தார்கள்
உடலில் அடிபட்டவர்கள் கழுத்தினை இழந்தார்கள்
கரத்தினால் அடிபட்டவர்களும்
அச்சப்பட்டவர்களும் எண்ண இயலாதவர்கள்!

பாடல்-1014:

அரக்கர்களின் அம்புத் திறம் சொல்ல எளிதோ!
வட்டமாக வளைந்த கொடிய வ்¢ல் அம்புகள்
வலிமையான ஆயுதப்படைகள்
வீரன் அனுமன் மேல் வீழ்ந்தன! ஒன்றும் பலனில்லை!
பழுக்கக் காய்ச்சிய இரும்பு
பட்டடைக்கல்லை சுட முடியாது போல செயலிழந்தன !

பாடல்-1015:

கோபமான
அரக்கர் சேனையின் சுடர் மிகு அம்புகள்
அனுமனின் உடலில் பட்டாலும்
அனுமனின் உடல் வெப்பம் தாளாமல்
அம்புகள் புகையுடன் சரிந்து வீழ்ந்தன
தேவர்களின் உள் மனங்களோ
மகிழ்ந்து புன்னகை பூத்தன.

பாடல்-1016:

தேர்கள் அழிய
யானைகள் அழிய
குதிரைகள் அரக்கர்கள் அழிய
அனைத்தும் வதைத்து கொன்ற பின்
“வாருங்கள்! வாருங்கள்!” எனப் போருக்கு
அழைக்கின்றான் அனுமன்
பருத்த தோள்களுடன் கோபப்புன்னகையுடன்
போரிட வருகின்றான் இந்திரஜித்.

பாடல்-1017:

இந்திரஜித் தனது கொடிய வில்லில்
நாண் தெறிக்க எழுப்பும் ஒலியால்
இந்திரன் தலையே அஞ்சியது நடுங்கியது
வான் மேகங்களின் இடித்தொகுதிகள் நடுங்கின
நிரந்தரமாய் பூமி தாங்கும் ஆதிசேஷனின்
ஆயிரம் தலைகளும் நடுங்கின.

பாடல்-1018:

எல்லா உயிர்களும் ஆளுகின்ற
இராமதூதன் அனுமன் பலம் சும்மாவா?
அனுமன் தன் அழகிய தோள்களைத் தட்டும்போது
அண்டம் பிளந்த ஒலி கேட்கிறது
மலைகள் பொடிபடும் ஒலி கேட்கிறது
நீண்ட நிலம் பிளக்கும் ஒலி கேட்கிறது
இந்திரஜித் வில்நாண் அலறும் ஒலியும் கேட்கிறது!

பாடல்-1019:
இந்திரஜித் உரைத்தவை இவை:
“அனுமனே நீ மிக நல்லவன்
இவ்வுலகில் உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை
மாறுபட்டு போரிட மிகவும் வல்லவன் நீ
நீ கொண்ட வாழ்நாட்களின் எல்லை இன்று காண்பாய்
வா போருக்கு!”

பாடல்-1020:

அனுமன் உரைத்தான் இப்படி:
“கொடியவர்களே
உலகை உறுத்தும் உங்கள்
வாழ்நாளுக்கு எல்லை உண்டு
கொடிய செயல்களுக்கு எல்லை உண்டு
வாளுக்கு முடிவு உண்டு
என் தோள்பலத்துக்கும் வலிமைக்கும்
எல்லை ஒன்று இல்லை
வா போருக்கு!”




பாடல்-1021:

பகைஞன் இந்திரஜித்
“அனுமனே !
உன் நம்பிக்கையைத் தொலைப்பேன்” எனகர்ஜித்தான்
வச்சிராயுதம் காட்டிலும் வலிதான
கூர்மையான அம்புகள் எய்தான்
அனுமனின்  தலையிலும் மார்பிலும்
பச்சை இரத்தம் வெளிப்பட்டு ஒழுகியது
தேவர்கள் துடித்தனர்.

பாடல்-1022:

நெடும் சினம் கொண்டான் அனுமன்
தன் உருவை
வானம் வரை உயர்ந்ததும்
அதையும் தாண்டி
அதிகரித்தான்
அந்த உயரமும் நிமிர்வும்
எதுவரை இருந்தது?
தன் சிற்றன்னை கைகேயி திருமொழி
தலையிலே தாங்கி
உலகம் முழுதும் பரதனுக்கே தந்து
நல்நெறி நின்ற இராமபிரான் புகழ்
நிமிர்வதற்குச்  சமமாக இருந்தது.



பாடல்-1023:

இந்திரன் !
விரிந்த வானம் உள்ளிட்ட
பத்து திசைகளும் கொண்ட
அளவற்ற உலகின் தனித்தலைவன்!
அவனது பருத்த தோள்களையே கட்டியவன் இந்திரஜித்
மேகநாதன் எனும் சிறப்பு பெயர் பெற்ற இந்திரஜித்!
அப்படிப்பட்ட இந்திரஜித் இன்று
“அனுமனின் ஒரு பகுதி மட்டும் தானே
காணமுடிகிறது! என்று
திகைப்புற்றான் வியப்புற்றான்!

பாடல்-1024:

வான உயரம் தாண்டி
இராமன் புகழ் போல் உயர் அனுமன்
இந்திரஜித்  வீசிய கொடிய அம்புகளை வாங்கி
அரக்கன் மீதே வீசினான்
வலிமை மிகு தேரில் பூட்டப்பட்ட பேய்களையும்
தேர்ப்பாகனையும்
நிலத்தில் விழுந்து இறக்குமாறு
அடித்து நொறுக்கினான்.

பாடல்-1025:

 தேர் இழந்த அடுத்த கணம்
ஊழிக்காற்று போல செல்லும்
குதிரைகள் கொண்ட தேருடன்
ஒரு பாகன் உதவியோடு
இந்திரஜித் பாய்ந்து ஏறினான்
சக்ராயுதங்கள் போன்ற அளவற்ற அம்புகள் பாய்வதால்
மாருதி மேனி எங்கே என்றே தெரியவில்லை
அவ்வளவு அம்புகள்!

--அனுமனோடு மீட்போம்.
 

Saturday, 22 February 2014

சுந்தர காண்டம் 976-1000








பாடல்-976:

குற்றமற்ற போர்க்களம் அது
அரக்கியர்களோ ஓவியப்பாவையின் அழகுடன்
இறந்த வீரர்கள் மீது புரண்டு அழுகிறார்கள்
விழும்போதெல்லாம்
அம்பு போன்ற அழகிய கண்கள்
இமைக்கவும் இல்லாமல்
இறந்து போனது போல தெரிகின்றார்கள்
இப்படிப்பட்ட செயல்கள் யாவும்
உயிர் ஒன்று உடல் இரண்டு என
நிரூபிக்க நிகழ்கின்றது போலும்?

பாடல்-977:

இளமை மிகு அரக்க மகளிர் ஓட்டம் உயிர்களை நாடி
ஓடும் உடல் போல் உள்ளது
இறந்த பிணக்குவியல் நடுவே
கணவரின் உடல்களைக் கண்டுபிடித்தனர்
இறந்த உடல் பார்த்து இறந்தனர்
மேல் உலகம் சென்றனர்
இவர்கள் வருவதற்கு முன்பே
தேவமகளிர் தமது கணவரைத் தழுவியதைக் கண்டு
ஊடல் கொண்டனர்.

பாடல்-978:

மை தீட்டிய கண்\
திருமகள் போல் அழகு
இரண்டும் கொண்ட அரக்கப்பெண்
கூத்தாடி விழுகின்ற தலையிலாத உடலை
அதன் தலையுடன் சேர்த்து
“எம் உயிர் துணைவனை காட்டுபவன் ஆகுக” என
அழுகின்றாள் கை கூப்புகின்றாள்.

பாடல்-979:

ஓவியத்திலும் தீட்டமுடியாத பூங்கொடி போன்ற
அரக்க மகள் இறந்த கணவனின் அறுபட்ட தலையை
கையில் ஏந்தி நிற்கின்றாள்
தலையில்லாத உடலோ துள்ளுகின்றது
ஆடுகின்ற கணவனைக் கண்டு
“ன்ந்த்ஐவனே! வேந்தனே! நீ அலசி ஆடிவிட்டாய்
போதும் விடு! உனது நடம் ஆட்டம்”
கூறிக் கொண்டே தன் தலைவன் உடலைத் தழுவுகிறாள்

பாடல்-980:
அசோகவனத்தைக் காவல் செய்யும்
பருவத் தேவர்கள்
அனைவரும் கண்ட காட்சி இது!
“இதற்குப்பின் உயிர் பிழைத்தவர்
எவருமில்லை” என்ற செய்தியுடன் ஓடினார்கள்
இராவணன் திருவடி வீழ்ந்தார்கள்
“பெரும்படை யாவும் மாய்ந்தது” என்றார்கள்

பாடல்-981:

இராவணன் இணை
மயன் மகள் மண்டோதரி
கயல் மீன் ஒத்த கண்கள் நீர்வடிக்க
கருமேகக்கூந்தல் நிலத்தில் புரளபுழுதியில் அளாவுற
பிரம்மன் மகன்
புலத்தியன் மகனாகிய
விச்சிரவசுவின் மகனாகிய
இராவணன் திருவடிகளில் விழுந்து
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறித் துடித்தாள்.

பாடல்-982:

இராவணன்  திருவடிகளில்
இப்போது அழுது தொழுதவர்கள்
இலங்கையில் வாழும் மகளிர் மற்றும்
அசோகவனக் காவலராம் பருவத் தேவர்களும்!
பருவத்தேவர்களுக்கு இராவணன் தோல்வி
சிந்தையிலே களிப்பு வந்தது
வெளியில் மட்டும் அழுதனர்!
(அக்ககுமாரன் வதைப்படலம் முற்றிற்று)

பாடல்-983:

அப்போது அச்செய்தி கேட்டான்
ஆண்சிங்கம் இந்திரஜித்!
முன்பே சிவந்த விழி இப்போது
எரிக்கும் விழி ஆகியது சினம் வீங்கியது
எப்படிப்பட்ட உலகமும் குலைந்து நடுங்க
மிகுந்த சினம் ஆனான்.

பாடல்-984:

ஒப்பற்றவன் இந்திரஜித்
“அரத்தால் சுடரும் ஒளி வேல் அக்ககுமாரன்
இறந்தான்” எனும் சொல்கேட்டு
அனல் பெருமூச்சு உயிர்த்தான்
திரிபுரம் எரிக்க
மேருமலையை வில்லாக வளைக்கப்புறப்பட்ட
பரஞ்சுடர் சிவபெருமான் என எழுந்தான்.

பாடல்-985:

வானின் உயரம் என்ன? என
அளக்கும் தேரில் இந்திரசித் ஏறினான்
ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டிய தேரில்
சக்கரங்கள் பூட்டிய தேரில் ஏறும்போதும்
அவன் கர்ஜித்த வீர உரைகள்
ஒன்றுடன் ஒன்று கோர்த்து
நெரும் திசைகள் பிளந்தன
அண்ட கோளம் பிளந்தது.

பாடல்-986:

இந்திரஜித் கர்ஜித்தபோது
அவனது வீரக்கழல்களும் பேரொலி செய்தன
பேரிகைகளும் இடியும் அஞ்சின
இந்திரன்  உயிர் நடுங்கிற்று
தேவர்களின் தலைவர்களான மும்மூர்த்திகள்
“போர் உச்சம் அடிந்துவிட்டது” என நினைத்து
யோகம் கைவிட்டனர்!

பாடல்-987:

தம்பி அக்ககுமாரனை
எண்ணியபோதெல்லாம் தாரை தாரையாக
கண்ணீர் ததும்பிற்று இந்திரஜித்துக்கு!
கட்டமைப்பான வில்லை நோக்கி
வாய் மடித்து உருத்துப் பார்த்து சினமாய் நகைத்தான்
மரக்கொம்புகளில் வாழும்
நிலையற்ற மாயவாழ்வு வாழும் குரங்கினாலா
என் தம்பி தேய்ந்தான்! அல்ல!
என் தந்தை இராவணன் புகழ் தேய்ந்தது!

பாடல்-988:

இந்திரஜித்துக்குத் துணையாகத் திரண்ட
வேல்படைக்குழு
வில் படைக்குழு
மலையும் பிளக்கும் வாள்படைக்குழு
இவற்றை எண்ணிக்கூற முடியாது
ஆனால்
இரு பக்க நிலத்தையும் சேறாக்கும் மதநீர் சொரியும்
சிறுகண் யானைப்படைத் தொகை பன்னிரண்டாயிரம்
தேர்களின் தொகையும் அதுவே.

பாடல்-989:

ஒரு கண் கண்ணீர் பெருக்க
மறுகண் சினத்தைப் பாய்ச்சிட
இந்திரஜித் கோபம் எந்த அளவோ 
அதே அளவு செயலின் வேகமும் இருந்தது
ஆதலால்
“ஏய்!” எனக்கூறும் நேரத்திற்குள்
இரவணன் இருந்த அரண்மனை வந்துவிட்டான்
பன்னிரெண்டாயிரம் குதிரைப்படையுடன்
கொடும் வாள் ஏந்திய அரக்க அரசர்களுடன்.

பாடல்-990:

தந்தையின் தாளில் விழுந்தான்
இறந்த தம்பிக்காக அழுதான்
இந்திரஜித் தோள்பற்றி
இராவணனும் ஏந்தித் தழுவினான்
அழுது சோர்ந்தான்
வாள் நெடும் கண் மாதர்கள்
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினார்
அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு
இந்திரஜித் சொல்வான்:-

பாடல்-991:

“அரசே! ஒன்றை நீ உணர மறுக்கிறாய்
துன்பம் அடைந்த பின் வருந்துகிறாய்
குரங்கின் ஆற்றல் அறிந்தும்
செல்லுங்கள் போருக்கு என அனுப்பி
படைகள் தேயுமாறு கொன்றுவிட்டாயே
நம் அரக்கர் படை குழு குறைந்து விட்டதே!

பாடல்- 992:

என் தந்தையே
கிங்கரர்கள் அழிந்தனர்
சம்,புமாலி அழிந்தான்
சேனைத் தலைவர் ஐவர் அழிந்தனர்
என்ன காரணம்?
அக்குரங்கே சங்கரப்ன் பிரம்மன் திருமாலின் கூட்டு
எனக் கருதத் தக்கது.

பாடல்-993:

திசை யானையின் வலிமைகூட
முன்பு அழியும்படி செய்து
மூன்று புரமும் எரித்த முக்கண்ணன் சிவனையே வென்றாய்
சிவனது கயிலை
மூன்று உலகமும் வென்றாய் அப்படிப்பட்ட நீ
குரங்கை முதலில் வென்றிருக்க வேண்டும்
அப்படிச் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாய்
இதனை புலம்பல் என்று தான் சொல வேண்டும்
“வெல்வோம்” என நீ இப்போது சொல்வது பிதற்றல்.

பாடல்-994:
“ஆயினும் ஐயனே!
மனம் நொய்யாதோஅண்மைத் தொழில் புரியும் குரங்கை
“ஏ” எனும் நேரத்துள் பற்றிப்பிடித்துத் தருவேன்
துன்பம் என உழல ஒன்றுமில்லை
நீண்ட காலம் வாழ்க” என
நெடிய புகழோடு போருக்குப் போனான்.

பாடல்-995:

இந்திரஜித்
வீரக்கடமை புரிய புறப்பட்டான்
பிர்ளய காலத்தில் தனியே நிற்கும்
மாமேருமலை போல நிற்கிறான்
அவனைச் சுற்றிலும் ஊழிக்கடல் போல
அழகிய தேர்கள் குதிரைகள் வீரர்கள்!
முகபடாமும் சிவந்த கண்களும்
கொடிய கோபமும் கொண்ட யானைகள்!
அரக்கர் சேனைகள்!

பாடல்-996:

இந்திரஜித்
எல்லாத்திசை உலகங்களும் வென்றவன்
எனினும் அனுமன் ஆற்றலை
ஒரு கணம் வியந்து  உவகை கொண்டான்
பலரும் நடுங்கினர்

பாடல்-997:

இலை வடிவ அணிகலன்கள் தரித்த இந்திரஜித்
“போர்க்களம் காண்கிறான்
பிணமும் இரத்த வெள்ளமும்
அளவிலா ஆயுதமும் தடுக்கிறதே
இது போர்க்களமே அல்ல
மலைகளும் கடல்களும் காடுகளும் பெற்ற
இன்னொரு  உலகம்! அம்மா!” என நினைத்தான்.

பாடல்-998:

அது வரை
கவலை ஏதும் அடையாத இந்திரஜித்
கவலை உற்றான்
ஓர் விம்மல் கொண்டான்
“கடல் போன்ற பெருமை மிகு அரக்கர்
ஒப்பில்லாத ஆற்றல் அரக்கர் அனைவரையும்
அழித்தது ஒரே ஒரு குரங்கு எனில்
இராமனுக்கு  எவ்வளவு ஆற்றலோ!”
என நினைத்தான்.

பாடல்-999:

இறந்து கிடந்தவர்களைப் ப் அர்க்கிறான்
அடடா!
அத்தனை பேரும் இலங்கை அரசுக்கு
கண் போன்ற அரக்கர்கள்
எண்ண முடியாத பெருமை மிகு அரக்கர்கள்
உதட்டை மடித்து கோபிக்கிறான்
ஆறாத புண்ணில் கோல் இட்டது போல்
மான உணர்ச்சியால் புழுங்குகிறான்.

பாடல்-1000:

காட்டில் என் அத்தை சூர்ப்பணகைக்கு
அவமானம் அடைந்ததும்
கரன் இறக்க நேரிட்டதும்
தம்பி அக்க குமாரன் இறந்ததும்
இரண்டே இரண்டு மானிடர்களால்!
ஒரே ஒரு குரங்கால்!!” என்றால்
என் வீரம் எவ்வளவு சிறந்தது! அடடா!
இழிவு பட தன்னையே
எண்ணிக் கொண்டான் இந்திரஜித்.

--அனுமனோடு மீட்போம்.