Sunday 25 June 2023

 வாழ்த்துமடல்

வாழ்க மணமக்கள்:- 

திருவருள் கூட்டும் திருமணத்திற்கு அழைத்தீர்கள் வரச்சொல்லி !

நன்றி .. ! பரிசொன்று தர எண்ணி கவிதை வார்த்தேன்

“கவிதைக்கு ஈடாகாது எதுவும் 

 என்ற பெருமிதமுடன்

மணமக்களை மனதால் தழுவி பாடுகின்றேன் கவியை ;

அன்பு பொழியட்டும் வாழிய நீவீர் 

திருமணப் பொறுப்பு ஏற்கவிருக்கும் உள்ளங்களே 

திருமணம் என்பது என்ன ? எண்ணக்கலப்பு; அன்பின் கொண்டாட்டம்

மணமகன் பொறுப்பு என்ன? நிறையோ குறையோ

கைபிடித்த மணமகள் மகிழ்ச்சிக்கு உரியவர் ஆகிடுதல் 

கண் + அவர்= கணவர் ஆகி, மனைவிக்கு உலகக்கண் திறத்தல் செய்தல்

 நீங்கள் “இருவர்” எனினும்  “ஒன்றே” ஆகிடுக பார்வையும் கருத்தும் .

மணமகள் பொறுப்பு என்ன?

“ஆகாறு” எனும் வரவுக்குள் வாழ்ந்து 

செலவு எனும் “போகும் ஆறு”அகன்று விடாமல் வாழ்ந்து காட்டுதல்

வலப்புறம் நின்று  மணமகனுக்கு வலக்கரமாய் மாறுதல்

இருவரும் சேர்க ! ஆதார் அட்டையும் உரிமையுமாய் இணைக.

குருவருள் பெற்று திருவருளில் நிலைக்க சிவசக்தி தியானிக்கிறோம்

ஆண்டுக்கொருமுறை குலதெய்வ வழிபாடு செய்து

முன்னோர் காட்டிய அன்பு வழியில் வென்றிடுக

பொருளாதாரக் கவலை வேண்டாம் பிறர் பசிப்பிணி நீக்கும் பண்பே

பக்தியுடன் அனைத்தும் தரும் என உழைத்திடுவோம். ஓம். ஓம்

அன்பு நெஞ்சமுடன்....








Monday 19 June 2023

 ஓம். மீண்டும் பிறப்போமா. 

பிறந்தாலும் மனிதப்பிறவி கிடைக்குமா. 

கிடைத்தாலும் சாம வேதீஸ்வரர் கோவிலில் சுவாமி திருமேனி காணவாய்க்குமோ.

லால்குடி அருகே திருமங்கலம் சிவன் கோயில்.

இசை விரும்பும் கூத்தன் என்று சேக்கிழார் வருணிக்கும் தலம்.

பாடல் பெற்ற திருத்தலம்.

ஆனாய நாயனார் புல்லாங்குழலுடன் முக்தி பெற்ற தலம்.

பலா மரம் ஸ்தல விருட்சம்.

தேனும் சுளைகளும் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய , வினை தீரும். 

செல்வம் சேர வேண்டுமென லஷ்மி தேவி துதித்த தலம்.

அன்னையைக் கொன்ற மாத்ரு தோஷம் தீர பரசுராமர் வழிபட்டார் ஆதலால் பரசுராமதீஸ்வரம் என்ற பெயர் கொண்ட தலம்.

தந்தையின் கால்கள் வெட்டிய மகன் சண்டிகேஸ்வரர் தன் பாவம் தீர துதித்த தலம்.

ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000சாகைகளாகப் பிரித்த தலம் இதுவே.

உதங்க முனிவர் தலம்..

அபய கரம் கொண்டு தெஷிணா மூர்த்தி தலம்.

வள்ளி மட்டும் தனி மயிலில் அற்புதம் அருகில் முருகன் தேவானை.

எத்தனை சிறப்புகள் ஒரே ஓரு கோவிலில்!

(தொடர்புக்கு:- 9865422027 பாலசுப்ரமணிய சிவா)



 





Sunday 11 June 2023

 11.6.23  ஓம். மனிதன் தானே பிறக்கவில்லை. பிறக்க வைக்கப்படுகிறான். நல்வினை தீவினைகளை அனுபவிக்கிறான். கடைசியில் ஓரிடம் சேர்கிறான்.

இந்த மூன்று செயல்களுக்கும் இந்து மதம் அழகிய வரையறை செய்துள்ளது. சைவ சித்தாந்தம் அதனை மேன்மைப் படுத்திக் கொடுத்துள்ளது.

கைலாசமே அம்மை அப்பர் நாம் பிறப்பதற்கான ஏற்பாட்டைச் செய்த இடம். அதனை வெளிப்படுத்த  கைலாச நாத நாதர் திருக்கோயில்.அம்மை அகிலாண்டேஸ்வரி. 

நெல்லிக்குப்பத்தில் பிரதான சாலையில் வலது திருப்பத்தில்  ஓர் உள்ளடங்கிய தெருவில்  வேணுகோபால சுவாமி கோவில் தாண்டி, ஓர் முக்கோணத்தின் உச்சி போல அமைந்துள்ளது. ( முக்கோணத்தின் அடியில் இரண்டு புள்ளிகள் போன்ற கோயிலும் நெல்லிக்குப்பத்திலேயே)

சோழ வல்லிய நல்லூர் என்ற பெயர் கொண்ட இத்தலம்  1400 ஆண்டுகள் முன்பு இராஜ இராஜ சோழனின் அக்கா குந்தவை நாச்சியார் புனரமைத்த கோவில் என்ற கல்வெட்டைக் காட்டும் அர்ச்சகர் தெய்வ நம்பி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். அதாவது அதற்கு முன்பே இத்தலம் இருந்துள்ளது என்பதே உண்மை. ஆலயம் ஆண்டுகள் எல்லை தாண்டியது. 

 அம்மை , “உடனே நான் உன் உதவிக்கு ஓடி வருகிறேன்” என்ற நெஞ்சை அள்ளும்  தோரணையில் நின்ற திருக்கோலம்.

அவசியம் அமைதி பொங்கும் இத்திருத்தலம் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் காண வேண்டிய திருத்தலம். 

அர்ச்சகர் தெய்வ நம்பி செல் எண்:8883776060

திரு விளக்கு ஏற்ற தீப எண்ணெயை ஒப்படைத்து விட்டு நெல்லிக்குப்பத்திலேயே இருக்கும் பூலோக நாதர் திருக்கோயில் சென்றோம். 

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக சிவ விஷ்ணு தலம் இது. பிரசன்ன வெங்கடாசலபதி அலர்மேலு நங்கையும்;  பூலோக நாதர் புவனாம்பிகையும் கண்கொள்ளாக் காட்சி.

பூலோகம் கோவில் சுற்றி அழகிய நந்த வனம்.  என் வாழ் நாளில் கடம்ப மரம் இக்கோவிலில் கண்டேன்.உழவாரப்பணி செய்ய வாருங்கள் என்கிறது. நிலம் / வீடு சம்பந்தப்பட்ட  சிக்கல்கள் தீர/ திருமணத் தடை நீங்க  இத்தலம் ஓர் உன்னதம் . பிரதி செவ்வாய் காலை ஆறரை மணி போல வரச் சொல்கிறார் குருக்கள்.ஹரி.

செல் எண்: 94888047647.விளக்குக்கு எண்ணெய் தந்து விட்டு புறப்பட்டோம். எங்கே? சிவலோக நாதர் திருக்கோயில். அதாவது மனிதர்கள் அடைக்கலம் புகல சிவ லோகமே கட்டி வைக்கப்பட்டால் எப்படி ஒரு மாடல் வேண்டுமோ அப்படி உள்ளது.

ஞான பார்வதி ( சிவகாம சுந்தரி) சமேத சிவலோக நாதர் கோவிலில் சர பேஸ்வரர் சன்னதியும் மிக்க அழகு. இக்கோவிலும் குந்தவை நாச்சியார் புனரமைப்பே. 

பிறப்பு - வாழ்வு - முக்தி எனப்படும் மூன்று திருக்கோயில்கள் அமைவிடமும் இணைக்கப்பட்டால் ஓர் முக்கோணம் கிட்டும்.திருக்கண்டீஸ்வரர் தலமும் கண்டோம். அம்மை:-  ஹஸ்த தாளாம்பிகை.. அம்மை தாளமிட அப்பன் ஆடும் தலம் நடன பாதேஸ்வரர்.திருப்பணி நடைபெறுகின்றது. அன்பர்கள் உதவலாம்.






















   


Monday 5 June 2023

 அன்புள்ள வலைதள வாசக மனமே வணக்கம்..

புஸ்தகா வெளியீடாக இன்னும் ஓர் கவிதை தொகுப்பு .

தலைப்பு:- “பறவைகளின் இசையமைப்பாளன்”

பேசப்படும் தொகுப்பாக, உணரப்படும் தொகுப்பாக வாசகன் வசப்படும் கவிதை மலர்கள் கொட்டிக்கிடக்கின்ற கவிதை வனம்.

அன்பு நெஞ்சங்கள் ஆர்வ விரல்களால் இதயத்தில் ஏந்திக்கொள்வார்கள்.

தொடர்ந்து சந்திப்போம்.

நேசமும் அன்பும்

பா.சத்தியமோகன்

5.6.2023







 அன்புள்ள வலைதள வாசக மனமே வணக்கம்..

புஸ்தகா வெளியீடாக ஓர் கவிதை நூல் எழுதியுள்ளேன்.

“உடலெங்கும் ஒரு சிறுமி”

பல ஆண்டுகளுக்கு முன் புதிய பார்வை என்ற பத்திரிகையில் வெளிவந்த எனது இக்கவிதையின் தலைப்பு இப்போதும் என்னை ஈர்த்த வண்ணமாக உள்ளது. 

கணவன் என்ற ஒரு உறவுக்காக, பல உறவுகளைத் தியாகம் செய்யும் , பெண்ணின் உடம்பில் இப்படிபட்ட துள்ளும் சிறுமிகள் (சமையலறையில் அடைபட்ட நிலையில் ) நீங்களும் கண்டிருக்கலாம்.

தொகுப்பு நெடுகவே வசகனுக்கு இனிய கவிதை அனுபவம் காத்துள்ளது.

வாருங்கள். வாசியுங்கள்.

நேசமும் அன்பும்.

பா.சத்தியமோகன்

5.6.2023




 அன்பு வலைதள இலக்கிய அன்பே நலமா

புஸ்தகா வெளியீடு மூலமாக “கொரானா நீக்கிய கந்தர் அலங்காரம்” எனும்  நூலினை 

வெளியிட்டுள்ளேன்.

இது எப்படிப்பட்ட நூல்? 

முருகனிடம் அருணகிரியார் வைத்த வரிகளில் புதுக்கவிதை வடிவம் சேர்த்து, கொரோனா நோய் மரணங்கள் துன்புறுத்தல்கள் விலகிட பலம் கேட்டு வழிகேட்டு ,இயறறப்பட்ட  நூல்.

வாருங்கள். வாசியுங்கள்.

அன்பும் நேசமும்

பா.சத்தியமோகன்.

5.6.2023






 அன்புள்ள வலைதள வாசக அன்பே வணக்கம்.

நலமா?

புஸ்தகா வெளியீடு மூலமாக “திருப்பாவை சொர்க்கங்கள்” என்ற மூன்றாம் நூலை வெளியிடப் பெற்றேன். 

அதனை அறிமுகப்படுத்தவே இப்போது சில வார்த்தைகள்.

நான் வளர்ந்த மணக்கால் (திருச்சி மாவட்டம்) கிராமத்தில் அமரர். ராஜலஷ்மி எனக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஆசிரியை. 

அவர்கள் வீட்டில் நடக்கும் திருப்பாவை பாடல் வகுப்பு அர்த்தம் புரியாமலே ஓர் உன்னத மன வெளிக்கு கொண்டு செல்லும் என்பது அப்போது தெரியவில்லை.

பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு புகட்ட முப்பது நாள் தேன் மண்டலம்.

வாருங்கள்.வாசியுங்கள்.

அன்பும் நேசமும்

பா.சத்தியமோகன்  

5.6.2023