Thursday 25 August 2016

கவிஞனின் தேகம் (கவிஞர் ஞானக்கூத்தன் நினைவுகள்)


                                            ஒரு சாலை விபத்து 22.8.2016. கோமா ஸ்டேஜ் சென்றார்  . நல்லவிதமாக சிதை மூட்டப்பட்டார். 
அலுவலக வேலைகளால் மாலை நேரம்தான் இறந்தவர் வீட்டுக்கு என்னால் போக முடிந்தது.  
இடுகாட்டுக் காரியங்கள் முடிவுற்று- அலம்பிவிட்ட வீட்டில்- இறந்து மூணு மணி நேரம் ஆன வீட்டில்- 
மெல்லத் தேங்கி நின்ற - ஆனால் - மீண்டும்  மனமில்லாமல் இயல்புக்குத் திரும்பத் தயாராகிற வீட்டில் துக்கம் விசாரிக்கிறபோது- அங்கே திரும்பிக்கொண்டிருந்த - 
மெல்ல நுழைய முற்பட்ட அமைதி- என்னைக்கண்டதும் நண்பரின் சொந்தக்காரர் முகத்தில் சட்டென மீண்டும் கப்பியதை உணர்ந்தேன். 
             ஆம். துயரங்கள் நேரமாக நேரமாக அதிகமாகவும் செய்யலாம். 
“பேசும் புதிய சக்தி “ இதழில் எஸ்.சங்கர நாராயணன் கட்டுரை படித்தபோதும் ஞானக்கூத்தன் நினைவில் நிகழ்ந்தார்.
          இறந்தவர் மீது படிந்த நெருப்பு அவர்கள் இல்லாதபோதும் சுடுகிறது.
 இது சாதாரண மனிதர்கள் இறப்பில் ஒரு தளத்திலும் - கவிஞர்கள் இறக்கும்போது மலையளவு அதிகமாகவும் தோன்ற எது காரணம்? கவிஞர்கள் நம் வீட்டுக்கு சம்பாதித்துப்போட்டார்களா? கூடவே இருந்தார்களா? அவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்தோமா? ஏதுமில்லை.
அவர்கள் விட்டுச்சென்ற சொல்லால் நாம் தூண்டப்படுகிறோம். கவிஞனின் உடம்பு சொற்களால் ஆனது. 
எலும்புகள் கொண்ட  ரத்தமல்ல. கவிஞர்கள் இறந்தபிறகு புகழ் ஜனனம் எனும் கண்ணதாசன் வாக்கு மெய்யே. வாழை வீழ்ந்தபிறகு அடி வாழை தோன்றுவதுபோல என்றும் உவமித்திருப்பார் கவியரசர்.
                   கணையாழி என்ற இலக்கிய பத்திரிகையில் “போய்ச்சேராக்கடிதம்” (1993)என்ற  கவிதை வெளியாகியிருக்க அதை எழுதிய மகிழ்ச்சி பொங்க மாதாமாதம் கணையாழி இலக்கிய வட்டம் என்ற கூட்டம் ஆழ்வார்பேட்டையில் நேராகவே செல்லும் மகிழ்ச்சியோ இன்னும் அலாதி. சுஜாதா தலைமை. கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் போன்ற ஜாம்பவான்கள். 
முகம் தெரியாத முத்தான இலக்கியவாதிகள். கேட்டு கேட்டு அறிமுகம் செய்து கொள்வேன் - புது மருமகள் புதிய உறவினர்களை அறிய முற்படும் படபடப்போடு. 
ஏனெனில் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்ற ஆசை. அதை அல்ப ஆசை என்பதற்கில்லை. அது ஒரு மகத்தான துடிப்பு அப்போது.
                      எப்போதுமே கூட்டம் முடிந்த பின் நடக்கிற சிறு விவாத கூட்டம் உடனே கலைய முடியாமல் ஒரு மழை சொட்டு செடியில் நின்று வழிவதுபோல் சொட்டு தேங்கி நிற்கும்.
 அப்படி ஒரு சிறு வளைவில் கூட்ட அறையின் வழிநடையில்அழுத்தமான கண்ணாடியோடு வேறு ஒருவரின் கவிதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர்.
 எனக்கும் ஆசையாக இருந்தது. ஏனெனில் அடங்கிய குரல். ஆனால் தெளிவும் தொலை நோக்கும். 
அவர் பெயர் அறியும் ஆசையை விட அவர் ஏதாவது சிலாகித்தால் நன்றாயிருக்குமே என்று மனதார ஆசைப்பட்டேன்.
                      அவர் என் கவிதையை வாங்கிப்பார்த்தார். “போய்ச்சேராக்கடிதம் “அவரிடம் சென்றது. சம்பிரதாயமாக நல்லாருக்கு என்று சொன்னதுபோலிருந்தது. 
ஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை வேறு ஒரு கவிதை வர்ணித்து சொன்னபோது புரிந்து கொண்டேன். கவிதைக்கு விவரங்களும் உவமையும் வர்ணிப்பும் முக்யம் . 
குறிப்பாக சூழல்.ஆம். அவர் சொன்ன ஒரு கவிதையில், 
ஏதோ ஒரு சூழலில் ஆட்டு மாமிசம் தொங்கும் கடையில் ஒரு அந்தணர் எதிலும் பட்டுவிடாமல் நுழைகிறார். அவர் எச்சரிக்கையை வர்ணித்தார் ஞானக்கூத்தன். 
சட்டென அந்தணர் முதுகில் ஒரு பெரிய ஆட்டின் உடல் மோதி விடுகிறது என்று சொல்லிவிட்டு முகத்தைபார்த்தார் ஞானக்கூத்தன். 
சட்டென எதுவோ முதுகில் இடித்த உணர்வு.  “அதுதான் கவிதை” என நிறுத்தினார்.
                      வருஷங்கள் ஓடின. மூன்றாம் கவிதைத்தொகுப்புக்கு அடியேனின் “மீன்கள் கடிக்கும் மரம்” தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன்.
எந்த தயக்கமும் இல்லாமல் வாரி வழங்கிய கவிமனம்அவருடையது. எஸ்.சங்கர நாராயணன் கூறியதைபோல இளைஞைர்கள் மீது முழு நம்பிக்கை. 
“அப்பாமுகம் “ கவிதையை ஆஸ்திரிய கவிஞரை நினைவு படுத்தியதாக கம்பீரமாக மனமார எழுதிக்கொடுத்தார்.  
           அவர் எழுதின முன்னுரை பெற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் அவர்  வீட்டுக்குச்சென்ற போது சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து அவர் எழுதும் அழகைக் கண்டேன். 
வேஷ்டி மடித்துக்கட்டின பளீரென்ற ஆரோக்கிய நிறம். என்ன செய்கிறோம் என்ற தெளிவு மிக்க நடை. கால் பதிய அழுத்தி நடந்து வந்தார்.
        “நெய்வேலியில் வேலையா? என்னை மாதிரியெல்லாம் பண்ணாத. லீவு போட்டு எழுதுவேன்” தனக்கும் எனக்குமாக அண்ணனின் ஆதூரத்தோடு சொன்னவருக்கு முன்னுரை சன்மானமாக ஏதேனும் தர எண்ணி எதுவும் தோன்றாமல் வரும்போது ஒரு கடையில் வாங்கிய ரெனால்டு பேனாவை அளித்தேன். வெள்ளை உடம்பும் நீல மூடியுமாக இருந்ததை வாங்கி முதன் முதலாக பேனாவைப் பார்ப்பவர் போல அடியிலிருந்து நுனி வரை பார்த்தார். என்ன ஒரு பார்வை! எவ்வளவு அர்த்தம்!
                        அதுவே கவியின் பார்வை.  அதற்குப்பிறகு விழுப்புரத்தில் பழமலையோடு ஓட்டலில் ஒருமுறை சந்திப்பு. 
ஞானக்கூத்தன் கவிஞர்களில் மகுடம். அவருக்கு இப்போது பிறப்பு ஆரம்பம். ஆம். கவிஞனின் உடம்பு சொற்களில் ஆனது. 
                        நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் 
                         மலையினும் மாணப்பெரிது
           அழகிய சிங்கர் நவீன விருட்சம் வெளியீட்டில் “பென்சில் படங்கள்” போல எழுத இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். வாழிய கவிஞர்கள் ஆத்மா.ஓம்.
                         

                            

No comments:

Post a Comment