Friday 29 July 2016

கீரை விற்ற மேரி பாட்டி




ஒருவர் இறந்து போவது என்பது எதிர்பார்ப்பல்ல
இறந்த பின் நிகழும் அதிர்ச்சி
மனதின் ஓர் ஏற்பாடல்ல
வடலூரில் கூட்டுரோடு ரவுண்டானா பெரியார் சிலைக்கு
கீழே அமர்ந்திருந்த கருப்பு மேனி இனி இல்லை
அந்த  வதங்கல் முதுமைக்காரி இனி இல்லை
மழையோ பனியோ வெயிலோ
பிற்பகலோ எக்கணமும் எவரையோ நம்பிக்கொண்டு
எத்திசையிலிருந்தும் ஓர் அன்பர் வாங்குவர் என்று
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்த அவள் இனி இல்லை
குனிந்த அண்டங்காக்கை என தன் மீதே தலை தொங்கும்
கார்பன் என் கசங்கிய கோடுகள் கொண்ட முகம் இனி இல்லை
ஒரே ஒரு தடவை புடவையும்
பிறிதொரு நாளில் ஒரு வேளை பார்சல் சாப்பாடும்
பிறிதொரு மழை இரவில்  குடைக்கு கீழே
குளிரோடு நடுங்கியவள் உள்ளங்கை சுடச்சுட வாங்கித்தந்த டீயும்
உறிஞ்சிய மேரி பாட்டி இனி காணக் கிடைக்கமாட்டாள்
இறந்து போனாள் என்றது 29.7.16 ப்ளக்ஸ் போர்டு.
சாக்கு போர்த்திய பொன்னாங்கண்ணி கீரைகள்
தார்ச்சாலையில் சிதறி வாடிக் கொண்டிருந்தன .


No comments:

Post a Comment