Wednesday, 12 December 2012

அவல் அளவு நிம்மதி



சொல்லிக்கொள்ளமுடியாத அளவுக்கு வேலைகளும் வரலாம். அடுத்தடுத்து ஏற்படும் செலவுகளில் கவலைகள் வரலாம். இதையெல்லாம் தீர்ப்பதற்கு வடலூர் சேஷாயி நகர் உறை ஆபத்சகாய ஈஸ்வரர் சிவன் கோவிலில் பேங்க் ஒன்றும் இல்லை. அம்பாள் கனகாம்பிகை கரத்தினில்  பணக்கட்டுகள் காய்க்கவில்லை. இருந்தாலும் அங்கு உட்கார்ந்து குடும்பத்தோடு மாலை சாற்றிக்கொண்டு சபரிமலைக்கு கிளம்புகிற ஐயப்ப சாமிகளுக்கு தாடியோடு தாடியாய் எவ்வளவோ பணத்தேவைகள், உடல் வலிகள், தூங்காமை  இருக்கும்.அனுசரனையாய் இருந்து வேன் ஏற்றி விட வந்திருக்கிற மனைவியிடம் பேசாத வார்த்தைகள் அதைவிட இருக்கும்.மகள்கள் இரட்டை சடை பின்னலோடு பொழுது போகாமல் அப்பாவின் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உயரத்திற்குப் பொருத்தமில்லாத பேண்ட் அணிந்த மீசை அரும்பாத பையன்கள் அம்மன் சன்னதி அருகே இருந்த வாழைப்பழங்களை நோக்குகிறார்கள். நாற்பது பேராவது இருப்பார்கள். கதம்பமான புளிசோறு வாசனை அடிக்க இரவு நேரக்குளிரின் அருகில் செல்லாமல் வேனுக்காக காத்துள்ள மக்களுக்கு எவ்வளவோ கவலைகள் எனினும் நடுவே சிரிக்கத்தான் செய்கிறார்கள். கோவில் கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமல் என்னாகுமோ ! அந்த தனி நபர் குருக்களும் கவலைப்படவே செய்கிறார். அம்மன் சந்நிதியில் இருந்து “எல்லாம் நல்லபடியா நடக்கும்”  என்று மற்ற மற்ற பக்தர்களுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை,வெற்றிலைப் பாக்கு மஞ்சள் பையில் போட்டு குருக்கள் தருகிறார். கோபுரத் தூண்களுக்கு சிமெண்ட் பூசிட மூட்டைகள் இறக்கியவன் உட்பட கடன்தான். அர்ச்சனைகள் நிற்கவில்லை. நம்பிக்கையும் நிற்கவில்லை. விநியோகம் செய்கிற தாம்பாளத்தில் உள்ள அவலில் இருக்கிற செர்ரி பழங்களை மட்டும் பொறுக்கி உண்கிற பையனை அவன் பாட்டி அதட்ட குருக்கள் சொல்கிறார்: “ எடுத்துக்கட்டும் எடுத்துக்கட்டும் நாளைக்கு வந்து கேட்டா என்னால கொடுக்கவா முடியும்!” அவரவரிடம் இருக்கிற அவல் அளவு நிம்மதியை ஒருவருக்கொருவர் அன்றே பரிமாறிக்கொள்ள சிவனும் அம்மையும் வாழும் கோயில்கள் இருக்கும்வரை பேங்க் பணக்கட்டுகளை விடவும் மதிப்பு இருக்கவே செய்யும்

1 comment:

  1. அவரவரிடம் இருக்கிற அவல் அளவு நிம்மதியை ஒருவருக்கொருவர் அன்றே பரிமாறிக்கொள்ள .../

    உங்க கண்ணும் கருத்தும் எங்களையும் உடனுக்குடன் அடையச் செய்யும் பதிவுகள்!

    “ எடுத்துக்கட்டும் எடுத்துக்கட்டும் நாளைக்கு வந்து கேட்டா என்னால கொடுக்கவா முடியும்!

    ReplyDelete