Thursday, 27 March 2014

சுந்தர காண்டம்-1101 -1125




பாடல்-1101:

“இராமனனின் இதயமாம் சீதையை
சிறை வைக்கப்பட்டதைக் கண்டும்
செயல்படாமல் இருப்பதில் என்ன இருக்கிறது?
தேவர்களும் அசுரர்களும் கண்டிட
மகுடம் அணிந்த இராவணன் தலையை
பறித்து எறியாவிட்டால்
பாவகாரி இராவணனுக்கு அழிவைத் தராவிட்டால்
இராமனிடம் என் அடிமை தனத்துக்கு
என்ன பெருமை இருக்கிறது!” துடித்தான் அனுமன்.

பாடல்-1102:

அனுமன் மேலும் நினைக்கின்றான்
“சீதையைத் தேடி வந்து ஒரு குரங்கு
இராவணன் அருகிலுள்ள மகளிர் திகைக்க
மகுடம் அணிந்த பத்து தலைகளையும்
பத்து திசைகளில் உருட்டியது கொடிய குரங்கு” எனும் புகழ்
சிறிய புகழா?
நிச்சயம் சிறிய புகழ் அல்ல.

பாடல்-1103:

இது வரை என் உயிரை சுமந்தேன்
நீண்ட வாள் பற்கள் இராவணனைக் காண!
வசை மட்டும் வீசி விட்டுச் சென்றால்
எனக்குப் பழிதான் சேரும்
ஆனால்
போரிட்டு நான் மாண்டாலோ புகழே கிட்டும்
புகழ் நிச்சயம் கிட்டும்


பாடல்-1104:

என் தோளில் இறுக்குகின்ற
நாகபாசம் அறுந்து விழும்படியாக  பாய்வேன்
மலையில்வாழும் ஆற்றல்மிகு ஆண்சிங்கம் போல
ஒரே குதி குதிப்பேன்! சென்று அடைவேன்!
சிந்திக்கும் போதே
“இப்படிச் செய்யக்கூடாது” என
நீதியால் நினைத்தான்!

பாடல்-1105:

இந்த  இராவணன்
கொல்லக்கூடிய எளிய வலிமை கொண்டவன் அல்ல
இவன் வெற்றிகளை கவனித்தால்
பிறரால் வெல்லும் நிலைமை கொண்டவன் அல்ல
இருளின் திரட்சி போன்ற இவனை
இராமன் தவிர பிறர் வெல்லமுடியுமோ? முடியாதே!

பாடல்-1106:

என்னை வெல்லவும் இவனால் முடியாது
இவனை வெல்லவதும் என்னால் முடியாது
வெற்றி தோல்வியின்றி காலங்கள் கழியும்
ஆதலால்
கடினமான ஒரு போர் தொடங்குதல்
தூய்மையானதல்ல!

பாடல்-1107:

“உலகங்கள் ஏழிலும் உள்ள மக்கள்
இன்ப மடையுமாறு
இராவணனின் வலிய தோள்கள் மட்டுமல்ல
பத்து தலைகளையும் பூமியில் புரட்டுதல்
என் இலட்சியம்” என ஊழியான் இராமபிரான்
விளம்பிய சபதம் ஒன்று இருக்கிறதே
அதை நான் மறக்கலாமா!”

பாடல்-1108:

நான் இராவணனுடன்
போர் செய்து பொழுது போக்கினால்
இன்னும் ஒரு மாதமே இருப்பேன் நான்!
இது நாயகன் இராமன் மீது ஆணை” என்ற
அழகு விழி சீதையும் உயிர் விடுவாள்


பாடல்-1109:

ஆதலால்-
“போர்த்தொழில் அழகல்ல
தூதுவனின் தன்மையே நல்லது” என உணர்ந்தான்
வேத நாயகனின் தனித் துணைவன் அனுமன்
நெருங்கினான் -  
வெற்றியும்  பகைமையும்  கொண்ட
இராவணனின்  அரியாசனத்தை !

பாடல் -  1110 :

இலங்கை வேந்தன்  இராவணன்  இருந்தான்
தீட்டிய வாள் எனக் கூறத் தக்க   மனைவியர்கள் குழு நடுவே !
பாற்கடல் அமுதம்  உண்ட தேவர்களை
ஓட ஓட  விரட்டிய  இந்திரஜித் காட்டினான் அனுமனை 
இராவணனுக்கு !

பாடல் -  1111 :

எத்தனை புவனங்கள்  உண்டோ
அத்தனையும்  போரினால்   கடைந்தவன் இராவணன்
போரினால் கடந்தவன் இராவணன்
அவனிடம் அனுமனை  
மூன்றே சொற்களில் சொல்கிறான் இந்திரஜித் :-
“  இவன் திருமாலின்  உருவம்
இவன் சிவன் ! செங்கண்கள் உடையவன்  ”

பாடல் -  1112 :

கைகூப்பி வணங்கி  இந்திரஜித் கூறிமுடித்தான்
அனுமனை நோக்குகிறான் இராவணன்
நோக்குதலில் உண்டானது கனல் பொறி
நோக்குதலில் உண்டான பொறிகளால் -    
அனுமனின்  உடல் மயிர் ‘ சுறு சுறு ' என தீய்ந்தது
 அனுமனின்  உடலினை -  
வெப்பமும் புகையும் 
நாகபாசம் போல     
இன்னும் இறுக்கின.

பாடல்  - 1113  :

கொடும் கோபம்  !
எமனின் வடிவம் இராவணன் !
தேவர்கள் நடுங்கிட
சுற்றிலும் நின்றவர்கள் நடுங்கிட
“எதற்கு இவன் வந்தான்? நீ யார்?”என
அனுமனின் தன்மை வினவினான்

பாடல் : 1114
சக்ரதாரி திருமாலோ?
வச்சிரதாரி இந்திரனோ?
சூலாயுதபாணி சிவனோ?
பூமிதாங்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனோ?
உன் பெயரும் உருவமும் மறைத்தாய்
அழிவதற்கு வந்திருக்கிறாய்!

பாடல் ; 1115

எதிரே நின்று
பாசக்கயிற்றால் உயிர்கவரும் கருநீலமான எமனோ?
குன்று பிளக்க வேல் எறிந்த கந்தனோ?
தென் திசை உரிமை எமனோ?
எந்த திசையில் ஆட்சி செய்கிறாய் நீ ? எவன் நீ?

பாடல் 1116

அந்தணர்கள் வேள்வியில்
கிளம்பிய கொடிய பூதமா நீ ?
இலங்கை அழிக்க
தாமரை மலர் பிரம்மன் படைத்த்¢ட்ட
அஞ்சாமை மிக்க தெய்வமோ நீ ?

பாடல் 1117

தேவர்கள் புகழை வேரோடு பறித்த இராவணன்
மேலும் கேட்டான்
“இவர்களில் நீ யார் ?
எதற்கு வந்தாய் ?
யார் உன்னை அனுப்பினர்?
என் கட்டளை! சொல்லிவிடு தப்பாமல்!”

பாடல் 1118

நீ சொன்ன யாரும் அல்ல நான்
அற்புதமான வலிமையாளர்களின்
ஏவலுக்காகவும் வரவில்லை
அழகிய செந்தாமரையே போன்ற
செங்கண்கள் கொண்ட வில்லி
இராமபிரான் தூதன் நான்
இலங்கை வந்தேன்

பாடல் 1119
அப்படிப்பட்ட வில் வீரன் யார் என
அறியவில்லை எனில் சொல்கிறேன்
முனிவர்கள்
அமரர்கள்
மும்மூர்த்திகள்
எத்தன்மை பெற்றவர்கள்  யாராயினும்
நினைக்கவே முடியாத பெரும் செயலை
செயலாக்கிட அவதாரம் செய்தவள்

பாடல் 1120

உங்களது தேகபலம் மட்டுமல்ல
தவ வலிமை
புதிது புதிதான படைகள்
தேவர்கள் தந்த நல்ல வரங்கள்
பெற்ற சிறப்புகள்
இன்னும் பிற எது இருந்தாலும்
தனது
ஒற்றை அம்பினால் அழிக்க வல்லவன்.

பாடல் 1121

அந்த வில்லாளன் இராமபிரான்
தேவர்களும் அல்ல
மற்றவர்களும் அல்ல
திசை காக்கும் காவலன் அல்ல
மும்மூர்த்திகள் அல்ல
மற்ற முனிவர்களும் அல்ல
பூமி முழுதும் ஆண்ட அரசனின் புதல்வன் !

பாடல் -  1122 : 

அவன் -  
ஞானம் பொருந்தும் வேள்வியின் பயன் !
மாபெரும் தவங்களின் தீரா வரங்கள்  அவன் !
இது மட்டுமல்ல - 
அவன் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்
காரணம் வேண்டுமா ?
வேதமும் அறமும்  புகழும்
மெய்யாகிய அற மூர்த்திதான் அந்த வில்லாளன் !

பாடல் -  1123 :

பரம் பொருளாகிய இராமபிரான்
அரச குமாரனாய் அவதரிக்க
காரணம் எதுவென  நீ கேட்டால் சொல்கிறேன்
அவன் - 
முடிவில்லாத வேதங்கள் ஆவான்
வேதங்கள் முடிவான உபநிடதமும் அவனே
அவை இதுதான் என விளக்க முடியாத
அறிவின் அறிவு அவன்
கஜேந்திரன்  எனும் யானை ஒன்று
சிறப்புப் பெயர் கூறாமல் பொதுவாக
‘ ஆதிமூலமே '  என்ற  அழைப்பிற்கே  அன்று  வந்தான்
இன்று - 
அமரரைக் காக்க வந்துள்ளான்

பாடல் -  1124 : 

மூலம் இல்லாதவன்   
நடு இல்லாதவன்
முடிவும் இல்லாதவன்
மூன்று காலங்களும் கணக்கும் நீத்தவன்
அனைத்துக்கும் காரணன்
சூலம் - சக்கரம் - சங்கு - கமண்டலம் துறந்தான்
வெள்ளி மலையாம்  கயிலை துறந்தான்
தாமரை மலரும் துறந்து
அயோத்திக்கு
வில்லுடன்  மட்டும் வந்த  பரம்பொருள்.
அவனே இராமன்.

பாடல் -  1125 : 

தன் பொன்னடிகள்  போற்றுவாரின்
பிறப்பை அறுப்பான்
அறம் தலை நிமிர நிறுத்துவான்
கருணையுடன் வேதம் கூறிய நீதியை
உலகம் அறிந்து அவ்வழியில் நடக்க
கொடியவர்களை  அழிப்பான்
நல்லோர் துன்பங்கள் துடைப்பான்
அவர்களை ஆள்பவன் .

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 20 March 2014

ரக்பி விளையாட்டு!



                பயங்கரமான கனவு கண்டேன். ரக்பி மேட்ச் ஆடுகிறேன். (அதாவது பந்தினை கையில் தூக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம்)  ஆட்டம் ஆரம்பிக்கிறது.யாரோ சில ரவுடி ப்ளேயர்கள் வருகிறார்கள். ரெப்ரீ எனும் ஆட்ட நடுவரைத் தாக்குகிறார்கள். இப்போது அது மிக நல்லதாக இருக்கிறது.எல்லா ஆட்டக்காரர்களுக்கும் ஒரே குறிக்கோள்தான். பந்தினை விரட்டி விரட்டி எதிர் அணியின் கோல் போஸ்ட்டில் சேர்க்க வேண்டும். சொந்த கோல் போஸ்ட் நோக்கி பந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். நிறைய விளையாட்டுக்காரர்களுக்கு காயம் ஏற்படுகிறது. சரியான அடி பலருக்கு.
               நிஜமாக சொல்ல வேண்டுமானால் எனக்கும் தலையில் பலத்த காயம் ஒரு ரெளடி பிளேயரால் ஏற்பட்டுள்ளது. ஏன் என்னை அடித்தான் என்று ரத்தம் துடைத்துக்கொண்டே யோசிக்கிறேன். ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது. ஒன்றுமே புரியவில்லை. இது ஒரு கனவுதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பலத்த தலைக்காயங்களுடன் சில விநாடிகளில் இறந்துபோகிறேன். ஹெல்மெட் அணியாமல் செத்துப்போனேனே என்று ஒரே ஏக்க ஏக்கமாய் வருகிறது. கடைசி நிமிட ஏக்கம். ரக்பி விளையாட ஏற்பாடு செய்தவர்கள் நடுவர் எனும் ரெப்ரீயை காப்பாற்றியிருக்கலாம். சை! கனவு கலைந்து எழுந்து உட்கார்ந்தேன்!
                     மறு நாள் இன்னொரு கனவு. ரக்பி மேட்ச்! இந்த முறை நான் ஹெல்மெட்டோடு ஆடுகிறேன். ரவுடிகள் நுழைந்து தொப் தொப் என நடுவருக்கு அடி விழுகிறது. சில விநாடிகளில் மயங்கிப்போய் விழுகிறார். எப்படியோ ரக்பி ஏற்பாடு செய்தவர்கள் டாக்டரை அழைத்து வர ரெப்ரீ காப்பாற்றப்படுகிறார்.நான் இந்த முறை ஆட்டத்தில் தோற்றாலும் நிம்மதியாகவே உணர்ந்து வீட்டுக்கு வருகிறேன். ஏதோ திருப்தி. 
                     இரண்டு கனவுகளையும் அழ்ந்து சிந்திக்கிறேன். முக்யத்துவம் ஆராய்ந்தேன். ரப்பி மேட்ச் என்பது வாழ்க்கையின் குறியீடு என்பது புரிந்தது. நாம் இந்த வாழ்க்கையில் பிறப்பு எடுத்து வந்ததற்கு காரணமே இந்த பிரம்மாண்டத்தின் படைப்பில் பங்கு பெறவே. இதில் இன்னொரு கருத்து இல்லை. அது புரிந்தால் வெற்றி. இல்லையேல் தோல்வி. அதுவும் கனவில் வருகிறது. நான் இந்த விளையாட்டில் எனது பதப்படுத்தப்பட்ட ஈகோவுடன்  ஆடியிருக்கிறேன். இப்படியிருந்தால் இப்படி நடந்து கொள்வேன் என பொத்தி பொத்தி வளர்ந்த ஈகோ அது.  என்னுடைய உடம்பு, என்னுடைய ஐந்து புலன்கள்,எனது மனம், எனது சாதுர்யமான புத்தி ஆகியவை என்னுடன் ரக்பியில் விளையாடிய மற்ற மற்ற ப்ளேயர்கள். அவர்கள் என்னோடு சேர்ந்து சேர்ந்து ஆடினார்கள். நான் ஓடும்போதெல்லாம் அவர்களும் ஓடி மகிழ்ந்தார்கள்.
                     எதிர் டீமில் விளையாடியவர்கள் யார்? அவர்கள் என்னுடைய மற்ற மற்ற புலன் இன்பங்கள்.அவை எனது பேராசைகள். எனது கோல் போஸ்டில் நான் எவை எதற்கு எதிராக நிற்கிறேன் தெரியுமா? என்னுடைய காயங்கள், என்னுடைய அதிருப்திகள்,எனது கோபங்கள் ஆகியவற்றை யாரும் பார்த்துவிடாமல் தடுக்க நான் எனது கோல் போஸ்ட்டில் நிற்கிறேன். நடுவர் யார்? அவர்தான் ஆன்மீக விழிப்புணர்வு.
                    இந்த பூமியில் நாம் இயங்க சில விதிகள் இருப்பதுப்போல ஆன்மீக விதிகளையும் நாம் பின்பற்றாமல் வாழ்வு விளையாட்டை விளையாட முடிவதில்லை. ரக்பி விளையாட்டுபோல - வாழ்க்கை விளயாட்டுக்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு . ஆன்மீக விழிப்போ என்கின்ற ரெப்ரீ எனும் நடுவர் நம் தவறை சுட்டிக்காட்டும்போது நாம் அவரை வீழ்த்தி விடுகிறோம். அதன் பிறகு - நமது பதப்படுத்தப்பட்ட ஈகோ, உடம்பு, ஐந்து புலன்கள்,  புத்திசாலித்தனம் என்பவை  இன்பங்களைத்தேடி வீரவெறியோடு போரிடும் நார்வே போர்வீரனைப்போல ஈகோவுடன் போரிட்டு  வலிகளும் தாக்குதல்களும் பெறுகின்றது .ரத்தம் கட்டிப்போய் கன்றிப்போன காயங்களுடன் - திருப்தியின்மையுடன் - கடைசியில் ஒரு நாள் இறந்து போகிறோம். அப்போது நினைக்கிறோம்  மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்து நிச்சயம் நன்கு விளையாடுவோம் என்று. இந்தச் சுழல் முடிவதே இல்லை.
                         இரண்டாம் கனவில்- நடுவரை - ரெப்ரீயை ரக்பி அமைப்பாளர்கள் மூச்சை தெளியவைத்தது எதனைக் குறித்தது எனில் - சற்குரு நமது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்றுக்கொண்டு நம்மை காப்பாற்றிவிடுதல் ஆகும். அதன் பிறகு நமக்கு வாழ்வு எனும் விளையாட்டின் விதிகள் புரிகின்றன. வென்றாலும் தோற்றாலும் நமது வாழ்வு அவர் ஆசிர்வாதமாகிறது. விளையாட்டு முடிகிறது. நாம் நமது இல்லம் திரும்புகிறோம். அங்கே நாம் நமது உண்மையான “நாம்”- க்குள் நுழைவோம்.விடுதலை உணர்வு. நிறைவு ததும்பும் ஆனந்தம் கிடைக்கிறது. மீண்டும் வாழ்வில் பிறந்து விளையாடும் எண்ணம் வருவதேயில்லை. 
               


  *****

சுந்தர காண்டம்1075 - 1100






பாடல்-1076

மிகப்பெரிய வானப்பரப்பை
உருவி ஊடுருவினாய்
அதற்கு மேலும் வளர்ந்து நின்றாய்
கலைகள் யாவும் முற்றும் கற்றாய்
ஒரு கள்ள அரக்கனால் கட்டப்பட்டாய்
இதுதான் அறத்தின் தன்மையோ?

பாடல்-1077:

கடல் கடந்து
இலங்கை புகுந்தாய்
அரக்கர்கள் உடல்கள் பல கடந்தாய்
வென்று அழித்தாய்
உன் ஆயுள் அழியவில்லை
வெற்றித் தோள்கள் திரண்ட ஐயனே
இராமனைப் பிரிந்த இடர்கள் மேல்
இப்போது இன்னொரு இடர் தந்தாய்!

பாடல்-1078:

அனுமா ...
இராமனது ஆழி( மோதிரம்) காட்டினாய்
அதனால் என் உயிரை மீண்டும் எனக்கே காட்டினாய்
ஊழிக்காலம் வரை வாழ்க என உரைத்தேன்
அது பலிக்கும்
எனினும்
உன் மலைத்தோள் வலிமை காட்டி
பழிப்பு பெற்று அதுவும் காட்டுகிறாய்.

பாடல்-1079:

“என் அரிய உயிரை மீட்ட நீ
நன்றாக அறிந்த இந்த இடங்களை
இராமனுக்குக் கூறுவாய் என நம்பியிருந்தேன்;
கடும் போரில்
இராவணன் கொல்லப்பட்டபின்
சிறை மீட்கப்படுவோம் என இருந்தேன்”
அந்த நம்பிக்கை என்னை
தாண்டிப் போகச் செய்துவிட்டாய் அனுமா!

பாடல்-1080:

தீயைச் சுடும் கற்பு எனும் தீ போன்ற சீதை
அப்படியே தளர்ந்தாள்
மயக்கம் அடைந்தாள்
உயிர் தேய ஆரம்பித்தது
எதிரிகளிடம் சிக்கிய கன்றுக்காக
துவளும் தாய்ப்பசு போல தளர்ந்தாள்.

பாடல்-1081:

பெருமைக் குணத்தான் அனுமன்
பெரியோன் அனுமன்
அப்படிப்பட்ட அனுமனைக்கட்டிய இந்திரஜித்
இராவணன் அரண்மனை சென்றான்
தவப்பயனால்
மூன்று உலகும் ஆள்கிற
இராவணன் அரண்மனை அது.

பாடல்-1082:

இராவணன் கொற்றக்குடை வெள்ளைநிறம்
மூன்று உலகுக்கும் ஒளி வழங்கும்
இன்னொரு சந்திரனோ!
குளிர் நிழல் பேரொளி!
அந்த வெண்கொற்றக்குடை
இராவணன்
வானம் வரை தூக்கிய
கயிலை மலை போல் திகழ்ந்தது.

பாடல்-1083:

இராவணன் தோள்களில்
கருடக்கொடி திருமாலின் வச்சிராயுதம் உண்டு
முக்கண் சிவனின் சூலாயுதம் உண்டு
தழும்புகள் உண்டு
தேன் சொரியும் மகளிர் வாள் நகங்கள் பதித்த
வடுக்கள் உண்டு.

பாடல்-1084:

இராவணன் பத்து தலைகளில்
செந்நிற மயிர்க்கற்றை ஒளி
எத்திசையும் நிறைந்து ஓங்கியது
கோபமான பெருமூச்சு
பெரும் புகை உண்டாக்கிற்று
கடலில் ஒரு வடவைக் கனல் போல்
இராவணனை அது காண்பித்தது. 

பாடல்-1085:

இராவணனின் மகுடங்களில்
மரகதங்களின் செழுமை ஒளி உண்டு
மாணிக்க மணிகளின் நீண்ட ஒளி உண்டு
இரண்டு ஒளிகளும்
நரக லோகத்தின்
அசையாத இருளையும் விழுங்கின
இப்போது இராவணன் தோற்றம்
பாம்பரசன் ஆதிசேஷன்
எத்திசையும் செல்லுமாறு
அரசு செலுத்துவது போலிருந்தது.

பாடல்-1086:

இராவணன் மேலாடையில்
பலவிதமான இரத்தினங்களின்  ஒளி!
இராவணன்  தோள்களில்
சுடர் நிறைந்த அணிகலன்களின்  ஒளி!
கருங்கடல் பூமியில் பரவிய மேருமலையை
பொன்மகுடமாக சூடிவிட்டானோ இராவணன்!

பாடல்-1087:

சிவப்புநிற ஆடை
இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டு
காணப்பட்டான் இராவணன்
வரிசை வரிசையான வெண்முத்துக்கள் கொண்ட
அணிகலன்கள் ஒளி
வெண்ணிலா ஒளிக்குச் சமமாக இருந்தது.
இராவணனின்  இத்தோற்றம்
அந்திவானத்தை ஆடையாக
நட்சத்திரங்களை அணிகலனாக
சந்திரனாம் வெண்கொற்றக்குடை நிழலில்
காணப்படும் இருள் போல இருந்தது.
ஆம்! இராவண இருள்!


பாடல்-1088:

இராவணன்
கொலைத்தன்மைக்கு இருப்பிடம்!
சிறந்த வேதங்களுக்கு இருப்பிடம்!
வலிமையின் உச்சத்திற்கு இருப்பிடம்!
பத்து தலைகளும் கண் பார்வை வீசினால்
எண் திசை காக்கும்
எட்டு யானைகளுக்கு பயம் வரும்.
அது மட்டுமல்ல
விண்ணிலிருந்து காக்கும் துருவனும்
மண்ணிலிருந்து காக்கும் ஆதிசேடனும்
பெரும் பயம் கொள்வார்கள்.

பாடல்-1089:

உலகங்கள் அனைத்திற்கும் ஒரே நாயகன்
ஏக நாயகன்
இராமபிரான் தேவி சீதையைக் கண்டபின்
இராவணனுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது
நாகர்கள் வாழும் பாதாள லோகம்
பிரமன் வாழும் சத்தியலோகம்
இடைப்பட்ட உலகம்
அனைத்திலும் உள்ள அழகிய மங்கையர்கள்
அனைவருமே ஆண்களாகத் தெரிந்தனர்
காதல் பெண்களாகவே இல்லை!

பாடல்-1090:

இராவணனுக்கு ஏவல் செய்ய
புலால் படிந்த வேல்கள் ஏந்திய
அரக்கர்களோடு பணி செய்ய
எல்லோருமே சூழ்ந்து நிற்கிறார்கள்
சுற்றி நில்லாதவர்கள் பட்டியல் இது
சிவன்!
திருமால்!
அற்பத் தொழில் புரியும் மனிதர்கள்
முனிவர்கள்!

பாடல்-1091:

நரம்புக்கருவியாம் வீணை
தேன் தருகிறது!
பிரம்ம தாளம் எனும் இசைக்கருவியும்
சில்லரி எனும் இசைக்கருவியும்
குறகு எனும் இசைக்கருவியும்
வீணை இசைத்தேனுக்குத் தாளமிடுகிறது
தேவமகளிர் பாடல் கலக்கிறது
இத்தனையும்
இராவணன் இருபது  செவிகளில் சேர்கிறது.

பாடல்-1092:

தாளத்தோடு பாடல் இசைந்து
முழவின் ஒலியும் இசைகிறது
மலர் போன்ற சிறிய பாதமும் மனமும்
கைகளும் ஒன்றுபட்டு
மேனகை நடனம் இயங்குவதைப் பார்த்தால்
“முக்தியே வேண்டாம்” என
முனிவர்களைச் சொல்லச் செய்யும் ஆற்றல் புரிகிறது.

பாடல்-1093:
இராவணனின் முகங்கள்
ஒவ்வொன்றும் ஒரு செயல் செய்கின்றது
ஊடிய மகளிர் முகத் தேனை ஒரு முகம் நுகர்ந்தது
கூடிய மகளிர் முகக்களிப்பு எனும்
கள் அருந்துகிறது இன்னொரு முகம்
மற்ற மகளிர் காதல் பருகியது இன்னொரு முகம்
மகளிர் அழகு எனும்
அமுதம் குடிக்கிறது இன்னொரு முகம்

பாடல்-1094:

பணி செய்யும் தேவர்களுடன்
அரசியல் செய்யும் ஒரு முகம்
படைத் தலைவர்களுடன்
மந்திர ஆலோசனை செய்கிறது ஒருமுகம்
பாவ காரியங்களை சிந்தித்து
அந்த எண்ணங்கள் கொண்டது ஒருமுகம்
பூவை  சீதையின்
வெளி உருவத்தோடு ஒரு முகம் பொருந்துகிறது.

பாடல்-1095:

“காந்தள் மலர் போன்ற
மெல்லிய விரலைப் பெற்ற ஜானகியின்
கற்பு எனும் கடல் நீந்துதல் எவ்விதம்?” என
ஒரு முகம் நினைக்கிறது
சந்தனம் பூசிய கொங்கை மங்கையர்
இராவணனுக்கு கண்ணாடி காட்ட
அதில் தனது எழிலை நோக்குகிறது ஒருமுகம்.

பாடல்-1096:

மரச்செறிவில் இருக்கும் தேனை
பருக விரும்புகிறது வண்டு
மனம் வாடுகிறது
வேட்கையால்
செருக்கு துறக்கவும் முடியாத வண்டு
இராவணன் மனம் இப்படியிருக்க
இராவணன் மீது மோகம் கொண்ட பலவகை மகளிர்
மனம் கலங்குகினார்கள்
உடல் நலிந்தார்கள்
கொங்கை மீது கண்ணீர் விடுவார்கள்
இராவணன் இருபது தோள்கள் தாக்க
கண் அம்பு விடுவார்கள்.

பாடல்-1097:

தென்றல் இரு வித செயல்கள் செய்தது
மலர்களில் மகரந்தத் தேன் பருகி
மகளிர் அரும்புக் கொங்கைகள் பூசிய
சந்தனச் சேற்றிலே கலந்தது ஒரு செயல்
அதே நேரம்
இராவணன் உடலில் பகையுடன்
நஞ்சு போல் நுழைகிறது!

பாடல்-1098:

இராவணனும் இருவித செயல்கள் செய்தான்
பிறைச்சந்திரன் ஒளி நெற்றி மகளிர்
சிவந்த வரிகள் பெற்ற
கயல்மீன்  கண்கள் பெற்ற முகங்களுக்கு
தாமரை மலர்களுக்கு சூரியனாக ஆனான்
தாமரைப் போல்
கைகூப்பி வணங்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
சந்திரனாகவும் ஆனான் .

பாடல்-1099:

எட்டுத்திசைகளுக்கும்
உரிமை பெற்ற இராவணனை
அனுமன் எதிரே கண்டான்
“அனுமனின் சினம் -
கருநாகம் கண்ட கருடனின் சினம்!
சிறந்த எனது தோளில் உள்ள
நாகபாசம் எனும் பிரம்மாஸ்திரம் சிதறச் செய்வேன்
நச்சு இராவணன் மீது இப்போதே பாய்வேன்” என
கோபம் கொண்டான்.

பாடல்-1100:

“முன்பு
இராவணன் உறங்கும்போது
கொல்வது குற்றம் எனவிட்டுவிட்டேன்
இப்போது
பொன் அரியாசனத்தில் இருப்பதை கண்டேன்
பலவகையாகச் சிந்திப்பது எதற்கு?
இராவணன் தலைகளைச் சிதறடிப்பேன்
அறத்தின் வடிவம் சீதையை மீட்பேன்
சீதையுடன் புறப்படுவேன்” எனவும் எண்ணினான்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 13 March 2014

சுந்தரகாண்டம் 1051 - 1075


 
பாடல்-1051:

அனுமனுக்கோ களிப்பு தான்! ஆம்!
கூர் நெருப்பு ஒத்த ஆயுத வீரர்கள்
பெரும் யானைகள்
கொடி பறக்கும் தேர்கள் குதிரைகள்
மர வீச்சினால் உடைப்பட்ட மாளிகைகள் கூட்டம்
எல்லாமும் கண்டான் களித்தான்.

பாடல்-1052:

தன்னைத் துன்புறுத்தும் ஆயுத வரிசையை
எறும்புக்கூட்டம்
தன் மேல் ஏறுவதை அனுமதிக்கும்
பழைய மரம் போலிருந்தான்
அனுமனின் தோள்களை அருகில் முற்றிலும் காண
அரக்க மகளிரே அஞ்சுகிறார்கள்
பற்கள் நடுங்கி இதழ்கள் வருந்தின
வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
சிலர் மயக்கமும் அடைந்தனர்.

பாடல்-1053:

அனுமனை நேரில் காண அஞ்சி
ஆரவாரம் அடங்கிக் கிடந்தவர்கள் பலர்
அனுமன் செய்த அழிவுகளைச் சொல்கின்றவர் மிகப்பலர்
நேருக்கு நேரே பார்க்க அஞ்சி
சிதறி ஓடுகிறவர்களோ இன்னும் பலப்பலர்!

பாடல்-1054:

சில அரக்கர்கள்
மிகத் தெளிந்த கூரிய அறிவோடு பேசினர்
“இந்தக் குரங்கு சாமானியமல்ல
எரிக்கும் ஆற்றலும் கொடுமையும் கொண்ட
நச்சுப் பற்கள் கொண்ட நாகத்தினால் இவனைக் கட்டினோம்
இவன் முகமோ
பூமாலையால் கட்டியது போல் ஒளி விடுகிறது
ஆதலால் மிக கவனமுடன் இருக்கவும்!”

பாடல்-1055:

அரக்கர்களில்
ஞானமும் கலந்த நிலையுடன் சிலர்
நினைப்பு இப்படி இருந்தது
“அனுமனின் இந்த எளிய அடங்கிய நிலை
நாகபாசம் எனும் நாகக் கயிறால் நிகழவில்லை
இக்குரங்கின் எண்ணம் வேறு”
அது மட்டுமா?
“அனுமனே !
களிப்பு மிகு சிந்தையால் எம்மைக் காண்க
கோபிக்காதே” எனத் தொழ ஆரம்பித்தனர்.


பாடல்-1056:

பசும் பொன்னால் ஆன வீரக்கழல்
அனுமனின் கால்களில் கொண்ட அனுமனைக்
கட்டியிருந்தார்கள்  நாகபாசம் எனும் பாம்பினால்!
அனுமனை  இழுத்துச்செல்ல
கருடனைப் போல் மூன்று மடங்கு வலிமை பெற்ற
ஐம்பதாயிரம் அரக்கர்கள் தேவைப்பட்டனர்!

பாடல்-1057:

மிகுந்த ஆற்றல் மிகு அரக்கர் கர்வம் அடங்க
அழியாத தன் உருவை
அனுமன் வடிவம் கொண்டு
வந்திருக்கிறான் எமன் !” என்றனர் பலர்.

பாடல்-1058:

இழுத்துச் செல்லப்படும் அனுமனைக் காண
வரிசையாய் நிற்கிறார்கள்
வளையல் அணிந்த அரக்க மகளிர்!
கூட்டம் கூட்டமாய் ஆண்கள்
மாளிகை நிலா முற்றத்தில் நிற்கின்றார்கள்
பலகணிகளில்!
முரசு முழங்கும் வாசல்கள்
எல்லாவற்றிலும் ஏறி நிற்கிறார்கள்.


பாடல்-1059:

பலர் கூறியது இதுதான்
மயில் போன்ற சீதையின் கற்புச்சிறப்பினால்
கூரிய பற்கள் கொண்ட குரங்கின் வடிவு கொண்டு
இங்கே வந்திருப்பது
மழுவாயுதம் ஏந்தி வாழும்
கயிலை சிவபெருமான்தான்!”

பாடல்-1060:

தேவமகளிர்
வித்தியாதர நாட்டுப் பெண்கள்
யாழ் நரம்புகளைவிட 
இனிய பேச்சு கொண்டநாக நங்கையர்
கரும்பு போல் இனித்திடப்பாடும்
சித்தர் இனப் பெண்கள்
எண்ணிக்கைக்கு அளவேயில்லை!


பாடல்-1061:

“இது குரங்கே அல்ல
பெரும் சக்ராயுதம் கொண்ட பாற்கடல் பெருமாளும்
ஒப்பற்ற மலர்களின் மாலை அணிந்த பிரமனும்
கலந்து உண்டான உடல் கொண்ட அனுமனை
எவரால் வெல்ல முடியும்?” என்றனர் பலர்.

பாடல்-1062:
அப்போது
அரக்கர் அல்லாதவர் குழாமும்
அரக்கியர் அல்லாதவர் குழாமும்
தமது கண்ணீரை மறைக்காமல் சொரிந்தனர்
அப்படிப்பட்ட தேவர்களின் அழுகை
மணம் வீசும் கூந்தல் கொண்ட சீதையின்
துன்பம் எண்ணியதால் வந்த கண்ணீரோ!
அனுமனிடம் கொண்ட இரக்கமோ!
அறத்தின் வலிமை
இப்படி எளிமையாகிவிட்டதே என எண்ணியோ!

பாடல்-1063:

ஆண்மையாளன் அனுமன்
அவர்களோடே போனான்
மீளவில்லை
வேறு செயலும் விரும்பவில்லை
“தொடர்ந்து போவோம்
இலங்கை வேந்தனைக் காண்பதே நல்லது” என
கருத்தில் எண்ணினான்.

பாடல்-1064:

“என் தந்தை வாயுதேவன் அருளால்
இராமன் சேவடி தியானிக்கும் நலத்தால்
சீதை தந்த வரத்தால்
தேவர்கள் தந்த வரத்தால்
பிரம்மாஸ்திரம் எனும் நாக பாசமும் அறுப்பேன்
எனினும் அவ்வாறு செய்யக்கூடாது” என
தளர்ந்து இருந்தான் அனுமன்.

பாடல்-1065:

வளைந்த பற்கள் உடைய
அரக்கன் இராவணனை அடைவேன்
அவனுக்கு மந்திர ஆலோசனை தரும்
அளவற்ற முதியவர்களிடம்
நடக்கப்போகும் விளைவை நான் கூறும் போது
இராவணன் இளகுவான்
மிதிலைச் செல்வி சீதையை ஒப்படைப்பான்.

பாடல்-1066:

அது மட்டுமல்ல
இராவணன் துணைவர்களுக்கும்
நமது பலத்தின் எல்லை தெரிந்திருக்கும்
இராவணன் நிலையும் மனமும்
தெரிந்து கொள்ளவும் முடியும்
இராமனிடமிருந்து புறப்பட்ட என் முகமே
அவனுக்கு தூது சொல்லிவிடுமே.

பாடல்-1067:

கருநீல நிற இராவணன் நெஞ்சுக்கு
வாலியின் மரணம் தெரியும்
ஏழு மராமரங்களுக்கு உற்ற நிலை தெரியும்
கொடிய குரங்குப்படை வலிமை தெரியும்
சுக்ரீவன் வலிமையும் மேன்மையும் தெரியும்
அவன் நெஞ்சில் தைத்தவை தான் இவை,.

பாடல்-1068:

“ஆதலால்
அரக்கன் இராவணன் அடைவோம்
இராமபிரான் ஆற்றலும் நீதியும்
மனம் கொள்ளுமாறு நிறுவுவோம்
உணராவிடில்
மிச்சமிருக்கும் சேனைகளையும்
பாதிக்கு மேல் அழித்து
பையப் போய்விடுவோம்” என அனுமன் போனான்

பாடல்-1069:

இந்திரஜித் !
தேவர்களின் அரசன் இந்திரனை வென்றவன்
கடல் போல் படை சூழ
கட்டுண்ட காளை போன்ற வீரன் அனுமனை
கொற்றக்குடை பெற்ற இராவணன் அரண்மனைக்கு
கொண்டு போனான் இந்திரஜித்.


பாடல்-1070:

தூதுவர்கள் ஓடி வந்தனர்
இராவணனைத் தொழுதனர்
“மன்னா முன்பு தொல்லை தந்த குரங்கு
தாமரை மலர் பிரம்மன் அஸ்திரத்தால்
பிணிக்கப்பட்டது” என்றனர்.

பாடல்-1071:

அதைக் கேட்ட அடுத்த கணம்
இராவணன் நெஞ்சு
மகிழ்ச்சியால் நிமிர்ந்தது
ஒளி அற்ற வானம் என
இருள் விழுங்கிக் கிடக்கும் கறுத்த மார்பிலிருந்து
திசை யானைகளோடு மோதிய
மிகப்பெரிய முத்து மாலையைப்
பரிசாக நீட்டினான் இந்திரஜித்துக்கு.

பாடல்-1072:

அளவற்ற மகிழ்ச்சியால்
பூரித்தன தோள்கள்
கள் வடியும் பூக்கள் அவன் கரம் தழுவ
ஆணையிட்டான் இராவணன்
“விரைவாக ஓடுக! சொல்க! என் ஆணை!
கொல்லாமல் கொணர்க” என்றான்.

பாடல்-1073:

தூதர்கள் ஓடினர்
பகை என்பதே இல்லாமல் அழிந்த
இந்திரஜித் அறியச் செய்தனர்
இவர்கள் இங்கு உரைக்க
அங்கு
பழியற்ற அசோகவன சீதை நிலை சொல்வோம்.

பாடல்-1074:

“அனுமன் அசோகவனம் அழித்தான்
எண்ண முடியாத அளவுக்கு
பலரைக் கொன்றான்” என்ற போது மகிழ்ந்தாள் சீதை
இப்போதோ
உயிர் வெறுக்கின்றாள்
வீரன் அனுமனுக்கு உற்றதை
களங்கமில்லா திரிசடை
வருத்தமுடன் உரைத்தாள்.

பாடல்-1075:

புகையுண்ட ஓவியம் போல்
காணப்படுகிறாள் சீதை
ஒளிரும் பூவின் மேன்மை மிகு சீதை இப்போது
பாவி வேடனின் கையில் சிக்கிய
அன்னக்குஞ்சுக்காக வருந்துகிற
தாய் அன்னம் போல் வருந்திச் சொல்கிறாள்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 6 March 2014

சுந்தரகாண்டம் 1026 - 1050







பாடல்-1026:
வெற்றிக்கு உரியவன் அனுமன்
ஆயுதங்கள் அற்றாலும்
இராம ஆசியே அவன் ஆன்மா
ஆதலால் அவன் உடலில்பட்ட ஆயுதங்கள் யாவும்
அவனால் உதறமுடிந்தது
இந்திரஜித் தேரில் குதித்தான் அனுமன்
வல்லமையுள்ள  வில்லைப்பறித்து
வானில் பறந்து முறித்தான்.

பாடல்-1027:

இந்திரஜித் சாமான்யன் அல்ல
அனுமன் முறித்த வில் ஓசை ஒலித்து அடங்குமுன்
மீண்டும் ஒரு ஆயுதம் எடுத்தான்
அதுஒளி மிகுந்த படைக்கருவி
மலைகளின் சிறகுகளையே அறுத்த இந்திரன்
விட்டுச் சென்ற வில் அது.


பாடல்-1028:

மாறாத வெஞ்சின இராவணன் மகன் இந்திரஜித்
நூறு நூறு அம்புகளாக
அனுமனின் நெடுமேனியில் பாய்ச்சுகிறான்
இராம சேவகன் இராமதூதன்
சிறிது தளர்ந்தான்.

பாடல்-1029:

இதனைக்கண்டு
தேவர்கள் தளர்வுற அறிவுமயங்க
ஆதரவான அனுமன் தளர்ச்சி நீங்கினான்
பிறர் அன்பும் ஆதரவு முகமும்
தனக்கும் அவசியம் என அனுமன் புரிய வைத்தான் நமக்கு!
தேவர்கள் மனம் உயிர்ப்புற்றனர்
அழகிய கைகளால் மரம் பறித்தான் அனுமன்
இந்திரஜித் பாய்ச்சிய அம்புகள் வரிசையை
மரத்தால் ஒடித்தான்
மணி மகுடம் பதித்த இந்திரஜித் தலையில்
மரத்தால் அடித்தான் அனுமன்.

பாடல்-1030:

தேவர்களையே வென்ற இந்திரஜித்
வலியதும் பெரியதுமான மரத்தினால் பட்ட அடியால்
மகுட மாணிக்கங்கள் ஒளிக்கற்றைகள்
கீழே சிதறக் கதறினான்
மலை அருவி போல
கொழும் குருதி வர உடல் சோர்ந்தான்.

பாடல்-1031:

சிறிது நேரம் தான்!
திகைப்பு சிறிது நேரம்தான்
பிறைச்சந்திரன் போல் வளைந்த பற்களைக்கடித்து
மறுபடி எழுகிறான் இந்திரஜித்
தேவர்கள் திகைக்க அசுரர்கள் திகைக்க
ஆயிரம் அம்புகளை எய்கிறான் அனுமன் மேல்!

பாடல்-1032:

இந்திரஜித் விடுகின்ற அம்புகள் பாய்ந்தன
மார்பிலும் கரத்திலும் அனுமனைத்தாக்கின
வெறுத்துப்போன சிந்தையோடு அனுமன்
அதிகபட்ச கோபமுடன்
வில்வித்தகன் இராமனின் அம்பைவிடவும் வேகத்தோடு விரைந்து
இந்திரஜித்தை
தேரொடும் வேரொடும் பிடுங்கி வீசி
வானில் எறிந்தான் ! ஆரவாரம் செய்தான்.
பாடல்-1033:

மேலே சென்ற கண் இமை
கீழே வந்து கூடுவதன் முன்
அளவிட முடியாத வலிமையுடைய  இந்திரஜித்
தேரோடு வானம் சென்றான்
புண்ணின் மீது வழியும் குருதியுடன்
பசும் புலால் நாற்றமுடன்
மண்ணில் வந்து விழுந்தான்.

பாடல்-1034:

வான் வரை வீசி எறியப்பட்டவன்
பூமியை அடையும் முன்
பெரு வடிவு கொண்ட அனுமன்
மணிக்கூட்டம்  கொண்ட தேர்கள் முழுதும்
உளுந்து உருளும் நேரத்துக்குள்
சிதைத்துவிட்டான்.

பாடல்-1035:

ஏறிச் செல்ல தேரும் இல்லை இந்திரஜித்துக்கு
மீண்டும் அனுமனுடன் போரிட வலிமை இல்லை
கொடும் கோபம் மட்டும் இருந்தது
நெருப்பு போல வானில் திரிந்தான்
செய்ய எச்செயலும் இல்லாமல்
பிரம்மதேவன் பிரம்மாஸ்திரத்தை
அனுமன் மேல் எறிந்தான்.

பாடல்-1036:

அனுமனை வீழ்த்திடும் ஆசைக்கு மட்டுமே
வலிமையுள்ள இந்திரஜித்
அரை நொடிக்குள்  மானசீக பூஜை செய்கிறான்
அந்த பிரம்ம அஸ்திரத்துக்கு!
மலர்களால் ஒன்று
மலர் போன்ற வெண்சோற்றால் ஒன்று
தீப ஆராதனையால் ஒன்று
நறுமணப்புகையால் ஒன்று
பிறகு
உலகம் படைத்த நான்முகன் அஸ்திரத்தை
கையில் எடுக்கிறான்!

பாடல்-1037:

வெற்றி உடைய வில் அது
நாண் ஏற்றினான்
அனுமனது தோளுக்கு குறி வைத்தான்
பூமி நடுங்க
திசைகள் நடுங்க
சந்திரன் தோய்ந்த விண் நடுங்கிட
வில் செலுத்துகிறான் இந்திரஜித்.

பாடல்-1038:

பிரம்மாஸ்திரம்
எவராலும் அடக்கமுடியாதது
பாம்புக்கூட்டங்களின் அரசன் வடிவம் கொண்டு
அச்சம் தரும் விழிகளுடன் பாய்கிறது பிரம்மாஸ்திர அம்பு
கருடனுக்கும்
நடுக்கம் தரும் விதமாக பாயும் அஸ்திரம்
பெரிய அனுமனின் தோள்களை இறுக்கிற்று.

பாடல்-1039:

அனுமனின் உறுதி வாய்ந்த உடலை
பிரம்மாஸ்திரம் கட்டிவிட்டது
அனுமன் கீழே விழுந்து சாய்ந்தான்
ஊழி இறுதியில்
சந்திரன் -
மற்ற கோள்களுடன் விழுவது போல!
அறக்கடவுள் கண்ணீர் சிந்திட
அனுமன் வீழ்ந்து கிடக்கின்றான்.

பாடல்-1040:

கீழே விழுந்தது
அனுமன் மட்டுமே
அனுமனது ஞானம் அல்ல
அதனால்
“பிரம்ம அஸ்திரத்தை அவமதித்து
அகன்று போகக்கூடாது” என எண்ணி
கட்டுப்பட்டு கண்மூடி இருந்தான் அனுமன்
அரக்கன் இந்திரஜித் -
“இவன் வலிமை ஓய்ந்தது!” என அருகில் வந்தான்.


பாடல்-1041:

பதுங்கிய மற்ற அரக்கர்களும் வந்தனர்
வாள் பற்கள் கொண்ட அரக்கர்களும் பலர்
அனுமனைச் சூழ்ந்தனர்
பிரம்மாஸ்திரமாகிய
துவாரம் கொண்ட பற்கள் பெற்ற பாம்பை இழுத்தார்கள்
அனுமனை அதட்டினார்கள்
பலரும் ஆர்ப்பரித்தார்கள்.

பாடல்-1042:

இலங்கை நகரமே
பெரு முழக்கம் செய்கிறது!
இலங்கை இப்போது அலைகடலாகவும்
அனுமன் இப்போது மந்திரமலையாகவும்
பாம்பு அம்பாகிய பிரம்மாஸ்திரம்
வாசுகி பாம்புக்குச் சமமாகவும் தெரிகிறது!
அதைப் பிடித்து இழுக்கும் தேவர் கூட்டம்
அரக்கர்கள் போல உள்ளது!

பாடல்-1043:

கரு நிறமான பிரம்மாஸ்திரப் பாம்பு
பொன்நிற அனுமனின் உடலை கட்டியது
ஒளி பொருந்திய ஆதிசேஷன் எனும் பாம்பினால்
மேருமலை சுற்றப்பட்டது போல இருக்கிறது
அறக்கடவுளுக்கு அனுமன் ஒருவனே துணை என நின்ற
அனுமனும் வீழ்ந்துவிட்டான்
இலங்கையில்  இனி என்ன நடக்குமோ!

பாடல்-1044:

வெற்றி  குதூகலிப்பால்
அரக்க ஆடவர் ஒலியும்
அரக்க மகளிர் ஒலியும்
வானை மோதியது
எத்திசையும் பரவியது
மேகம் மோதியது போல முழக்கம் எழுப்பினார்கள்
அந்த மகிழ்ச்சிக்கு சமம் எதுவெனில்
இந்திரனை
இந்திரஜித்  சிறை செய்த போது
பெற்ற மகிழ்ச்சிக்கு சமம்!

                                  (பாசப்படலம் முற்றியது.)

13. பிணி வீட்டுப் படலம்


பாடல்-1045:

கட்டுண்ட அனுமனை நோக்கி
அரக்கர்கள் நிலை பலவிதம்
“அம்பினால் எய்க !
வாளால் வெட்டுக !
ஈட்டியால் குத்துக
கோடலியால் பிளந்து
கூறு கூறாக்குக
மண்ணில் தேய்த்து த்¢ன்னுக
இந்த குரங்கின்  உயிரை விட்டு வைத்தால்
நமக்கு உயிர் இல்லை!” என பலப்பல குரல்கள்!

பாடல்-1046:

அனுமனைச் சுற்றியிருக்கின்றார்கள்
மைதீட்டிய கண் கொண்ட மகளிரும் - மைந்தரும்
எல்லோரும் கோபமுற்றார்கள்
கனன்றார்கள்
“இத்தனை நேரம் இந்த குரங்குப்பயலை
விட்டு வைக்கலாமா?” என்றார்கள்
கொல்லவும் மொய்த்தார்கள் சிலர்!

பாடல்-1047:

“நஞ்சு ஆயுதங்களால் சாகின்ற
சாதாரண குரங்கல்ல இது
அலைகடலில் தள்ளி
உச்சம் தலையை அழுத்த வேண்டும்
வச்சிர உடல் குரங்கை நெருப்பில் இட வேண்டும்”
என்றும் சிலர் கூறினர்.



பாடல்-1048:

நீ கொன்ற
என் தந்தையைக் கொடு
என் தம்பியைக் கொடு
பிறகு நீ போகலாம்” என அனுமனைத் தடுத்தனர்
தேவர்களே இதன் காரணம் ஆதலால்
தேவர்களைக் கொல்வோம் என
மறுகினார்கள் பலர்.

பாடல்-1049:

இது வரை பிரியாத
மலை போல வலிமை கொண்ட கணவரை
இவனால் இழந்தோம்
வருத்தம் தீர அனுமன் தலை மீது ஏறி
எம் திருமங்கலம் நீக்குவோம்” என
அழுகின்றார்கள் பல மாதர்கள்.

பாடல்-1050:

அனுமனை இழுத்துச் செல்கிறார்கள்
வேடிக்கை பார்க்கிறது இலங்கை மக்கள் கூட்டம்
அதிகமாக ஆர்ப்பரிக்கிறது
ஆர்ப்பாட்ட ஒலி உலகம் முழுதும் பரவுகிறது
கழுத்து அறுபட்டு கணவர்களை இழந்திட்ட
குண்டலம் தரித்த மகளிருக்கு
அந்த ஒலி ஆறுதலாகிறது.

-அனுமனோடு மீட்போம்.

Monday, 3 March 2014

சுந்தரகாண்டம் 1001 - 1025



பாடல்-1001:

நீர்த்தன்மை கொண்ட இரத்த வெள்ளம்
அதனால் பேரலைகள் கொண்டது  கடல்!
கடலில் மட்டும் நீந்தவில்லை இந்திரஜித்
பிணக்குவியலிலும் நீந்தியும் இடறியும் செல்கின்றான்
தேய்க்கப்பட்டு இறந்து கிடக்கிறது தம்பி உடல்
கோபத்தால் சிவப்பு உண்ட கண்களுடன்
தீயில் காய்ச்சிய செம்பு போலாகிய கண்களுடன்
மனதில் சோகக் கறுப்புடன் காண்கிறான் இந்திரஜித்.

பாடல்-1002:

தாருகாசுரன் இரத்தக் குருதியில்
தம்பியின் உடல் கிடந்தது
ஒப்பற்ற நரசிங்கம் கூர் நகத்தால் பிளந்த
இரணியன் உடல் குழம்பிக் கிடப்பதுபோல!
தம்பியைக் கண்டதும் தேர் நின்றது
வீரத்தின் வில் நழுவி விழுந்தது
கண்ணீர், இரத்தம், நெருப்புப்பொறி
மூன்றும் ஒன்றாகச் சிந்தின இந்திரஜித் கண்கள்!

பாடல்-1003:
என் ஐயாவே!
இலை  வடிவ கூரிய வேல் கொண்ட
உன் தந்தை சினம் நினைத்தால்
உன் உயிர் வாங்க எமனும் அஞ்சுவானே!
வேறு வேறு உலகினரும் அஞ்சுவரே!
எம்மை விட்டு எளிதில் எந்த உலகம் அடைந்தாய்!
என் அப்பனே!

பாடல்-1004:

இந்திரஜித்
ஆற்ற முடியாத துன்பத்தினன் ஆனான்
அன்பின் மிகுதியால் அறிவு அழிந்தது
அயர ஆரம்பிக்கும் வேளையில்
சினம் என்ற ஒன்று
தானே மேல் நிமிர்ந்து ஓங்கியது
துன்ப நோயை உள்ளடங்கச் செய்த அந்தக் கோபம்
எதற்கு சமம் எனில்
உள்ளே போன முதல் ஆணியின் மேல்
அடித்துத் தைக்கப்பட்ட
இரண்டாம் ஆணி போல இருந்தது.

பாடல்-1005:

சூரியனால்
விரைவாகச் செலுத்தப்படும் தேர் போல
இந்திரஜித்  அனுமனைத் தாக்கிட வருகின்றான்
முப்புரம் அழிக்க முற்படும் சிவனைப் போல
வீரக்கழல் அணிந்த ஆண்மை பெற்ற அனுமன்
கோபமுடன் பார்த்தான்.

பாடல்-1006:

அனுமன் சொல்கின்றான்:-
“இதன் முன்பு சில வீரர்களை வென்றேன் எனும்
உண்மைதான் இவனை விரைவாக
இங்கு வரவழைத்தது! அம்மா!
அடுத்து நடப்பது
வெல்லுதல் தோற்றல் இரண்டில் ஒன்றே!
அதுவும் இன்றை சமைந்துவிடும்
இவன் இந்திரஜித்! ஆம்! இவன் இந்திரஜித்!”

பாடல்-1007:

மணம் வீசும் மாலை
கட்டப்பட்ட மாலை அணிந்த வீரன்
காளை  இந்திரஜித் என் கைகளால் இறந்தால்
அதுவே இராவணனுக்குப் புரிந்துவிடும்
“கெட்டுவிடுவோம்” என எண்ணுவான்
கற்புக்கரசி சீதையை விட்டு விடுவான்
அது மட்டுமல்ல
அரக்கரும் சினம் தீர்வார்கள்
அமைதி பெறுவார்கள்.

பாடல்-1008:

இந்திரஜித் கொல்லப்பட்டால்
ஒரே ஒரு நன்மை மட்டுமா கிடைக்கும்?
பலப்பல!
ஒளி பொருந்திய அவன் இறப்பு -
இந்திரனுக்கு  துன்ப விடுதலை தருமே
இலங்கையின் காவல் அழியுமே
இராவணனையும் வேரொடு வென்றவன் ஆவேனே.
பாடல்-1009:

அனுமான் நினைக்கும் அக்கணத்தில்
மூன்று உலகமும் வென்ற இந்திரஜித்
யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை மற்றும்
குதிரைப்படைகளோடு களத்தில் புகுகின்றான்
ஆரவாரிக்கின்றன படைகள்
அனுமன் வெகுண்டான் சினமானான்
பெரும் உரு எடுத்து
ஒரு பெரும் மரத்தை எடுத்துக் கொண்டான்.

பாடல்-1010:

யானைக்களிறின் வதம் ஆரம்பம்!
அனுமனால் சில யானைகள் உதை உண்டன
சில யானைகள் உதைப்பட்டு உருண்டன
இது மட்டுமா?
சில யானைகள் மிதிபட்டன
சில கீழே விழுந்தன
சில யானைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி
மண்ணில் புதைபட்டன
போரினால் சில யானைகள் வதைபட்டன
மண்ணில் விழுந்தும் சில மரணமாயின.

பாடல்-1011:

தேர்க்கூட்டங்கள் வதம் ஆரம்பம் !
அனுமனால்
சில தேர்க்கூட்டங்கள் முறிந்து விட்டன
சில இடிந்து சரிந்தன
சில அச்சு முறிந்து சிதைந்தன
சில பொடிப்பொடியாகின
சில நெருங்கி நொறுங்கின
சில மண்ணில் சாய்ந்தன.

பாடல்-1012:

குதிரைப்படைகள் வதம் ஆரம்பம்!
அனுமனின் தாக்குதலால்
குதிரைகளின் தலை நொறுங்கின
கருவிழிகள் சிதைந்தன
வலிமையான கால்கள் முறிந்தன
முதுகுகள் ஒடிந்தன
கிண்கிணி மாலைகளோடு மார்புகள் உடைந்தன
ஒரே நேரத்தில் பல இடங்களில் இரத்தங்களாயின
ஒளி விடும் பொன் குளம்புகள் நொறுங்கின
வளைந்த கழுத்துகள் ஒடிந்தது ஒடிந்ததுதான்!




பாடல்-1013:

அனுமன் வீரத்தாக்குதலால்
அரக்கர்கள் கொண்ட காலாட்ப்படை
வதை பட ஆரம்பிக்கிறது
பிடிக்கப்பட்டவர்கள் பலர் பிளக்கப்பட்டார்கள்
இன்னும் பலர் பெரும் தோள்கள் முறிந்தனர்
இன்னும் பலர் தலை உடைந்தார்கள்
உடலில் அடிபட்டவர்கள் கழுத்தினை இழந்தார்கள்
கரத்தினால் அடிபட்டவர்களும்
அச்சப்பட்டவர்களும் எண்ண இயலாதவர்கள்!

பாடல்-1014:

அரக்கர்களின் அம்புத் திறம் சொல்ல எளிதோ!
வட்டமாக வளைந்த கொடிய வ்¢ல் அம்புகள்
வலிமையான ஆயுதப்படைகள்
வீரன் அனுமன் மேல் வீழ்ந்தன! ஒன்றும் பலனில்லை!
பழுக்கக் காய்ச்சிய இரும்பு
பட்டடைக்கல்லை சுட முடியாது போல செயலிழந்தன !

பாடல்-1015:

கோபமான
அரக்கர் சேனையின் சுடர் மிகு அம்புகள்
அனுமனின் உடலில் பட்டாலும்
அனுமனின் உடல் வெப்பம் தாளாமல்
அம்புகள் புகையுடன் சரிந்து வீழ்ந்தன
தேவர்களின் உள் மனங்களோ
மகிழ்ந்து புன்னகை பூத்தன.

பாடல்-1016:

தேர்கள் அழிய
யானைகள் அழிய
குதிரைகள் அரக்கர்கள் அழிய
அனைத்தும் வதைத்து கொன்ற பின்
“வாருங்கள்! வாருங்கள்!” எனப் போருக்கு
அழைக்கின்றான் அனுமன்
பருத்த தோள்களுடன் கோபப்புன்னகையுடன்
போரிட வருகின்றான் இந்திரஜித்.

பாடல்-1017:

இந்திரஜித் தனது கொடிய வில்லில்
நாண் தெறிக்க எழுப்பும் ஒலியால்
இந்திரன் தலையே அஞ்சியது நடுங்கியது
வான் மேகங்களின் இடித்தொகுதிகள் நடுங்கின
நிரந்தரமாய் பூமி தாங்கும் ஆதிசேஷனின்
ஆயிரம் தலைகளும் நடுங்கின.

பாடல்-1018:

எல்லா உயிர்களும் ஆளுகின்ற
இராமதூதன் அனுமன் பலம் சும்மாவா?
அனுமன் தன் அழகிய தோள்களைத் தட்டும்போது
அண்டம் பிளந்த ஒலி கேட்கிறது
மலைகள் பொடிபடும் ஒலி கேட்கிறது
நீண்ட நிலம் பிளக்கும் ஒலி கேட்கிறது
இந்திரஜித் வில்நாண் அலறும் ஒலியும் கேட்கிறது!

பாடல்-1019:
இந்திரஜித் உரைத்தவை இவை:
“அனுமனே நீ மிக நல்லவன்
இவ்வுலகில் உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை
மாறுபட்டு போரிட மிகவும் வல்லவன் நீ
நீ கொண்ட வாழ்நாட்களின் எல்லை இன்று காண்பாய்
வா போருக்கு!”

பாடல்-1020:

அனுமன் உரைத்தான் இப்படி:
“கொடியவர்களே
உலகை உறுத்தும் உங்கள்
வாழ்நாளுக்கு எல்லை உண்டு
கொடிய செயல்களுக்கு எல்லை உண்டு
வாளுக்கு முடிவு உண்டு
என் தோள்பலத்துக்கும் வலிமைக்கும்
எல்லை ஒன்று இல்லை
வா போருக்கு!”




பாடல்-1021:

பகைஞன் இந்திரஜித்
“அனுமனே !
உன் நம்பிக்கையைத் தொலைப்பேன்” எனகர்ஜித்தான்
வச்சிராயுதம் காட்டிலும் வலிதான
கூர்மையான அம்புகள் எய்தான்
அனுமனின்  தலையிலும் மார்பிலும்
பச்சை இரத்தம் வெளிப்பட்டு ஒழுகியது
தேவர்கள் துடித்தனர்.

பாடல்-1022:

நெடும் சினம் கொண்டான் அனுமன்
தன் உருவை
வானம் வரை உயர்ந்ததும்
அதையும் தாண்டி
அதிகரித்தான்
அந்த உயரமும் நிமிர்வும்
எதுவரை இருந்தது?
தன் சிற்றன்னை கைகேயி திருமொழி
தலையிலே தாங்கி
உலகம் முழுதும் பரதனுக்கே தந்து
நல்நெறி நின்ற இராமபிரான் புகழ்
நிமிர்வதற்குச்  சமமாக இருந்தது.



பாடல்-1023:

இந்திரன் !
விரிந்த வானம் உள்ளிட்ட
பத்து திசைகளும் கொண்ட
அளவற்ற உலகின் தனித்தலைவன்!
அவனது பருத்த தோள்களையே கட்டியவன் இந்திரஜித்
மேகநாதன் எனும் சிறப்பு பெயர் பெற்ற இந்திரஜித்!
அப்படிப்பட்ட இந்திரஜித் இன்று
“அனுமனின் ஒரு பகுதி மட்டும் தானே
காணமுடிகிறது! என்று
திகைப்புற்றான் வியப்புற்றான்!

பாடல்-1024:

வான உயரம் தாண்டி
இராமன் புகழ் போல் உயர் அனுமன்
இந்திரஜித்  வீசிய கொடிய அம்புகளை வாங்கி
அரக்கன் மீதே வீசினான்
வலிமை மிகு தேரில் பூட்டப்பட்ட பேய்களையும்
தேர்ப்பாகனையும்
நிலத்தில் விழுந்து இறக்குமாறு
அடித்து நொறுக்கினான்.

பாடல்-1025:

 தேர் இழந்த அடுத்த கணம்
ஊழிக்காற்று போல செல்லும்
குதிரைகள் கொண்ட தேருடன்
ஒரு பாகன் உதவியோடு
இந்திரஜித் பாய்ந்து ஏறினான்
சக்ராயுதங்கள் போன்ற அளவற்ற அம்புகள் பாய்வதால்
மாருதி மேனி எங்கே என்றே தெரியவில்லை
அவ்வளவு அம்புகள்!

--அனுமனோடு மீட்போம்.