Wednesday, 22 April 2015

அவர் வலக்கையைத்தொட்டுள்ளேன் !


“தமிழ்நாட்டில் ஞானச்செருக்கு மூன்று பேருக்குத்தான் இருக்கிறது - பாரதிக்கு,எனக்கு,மூன்றாவதாக ஜெயகாந்தன்” என்று கண்ணதாசனால் புகழப்பட்டவர். “சில நேரங்களில் சில மனிதர்கள்”   “யுக சந்தி” “சினிமாவுக்குபோன சித்தாளு” “கங்கை எங்கே போகிறாள்” “பாரீசுக்குப்போ” ( சொல்லிக்கொண்டே போகலாம்)      தைரியமான மனோ ஓட்டம் கொண்டு ,சாட்டை வீசிய சமுதாயப் பங்களிப்புகளும் அதிகம். சமஸ்கிருதம் அவசியம் என மொழிந்த திறந்த தைரியமும் அதிகம். நிற்க.  
       சிதம்பரத்தில் அடியேன் டிப்ளமா படித்துக்கொண்டிருந்தபோது(1982) கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில்தான் பொதுக்கூட்டம் அரசியல் கூட்டம் எல்லாமே நடக்கும். அங்கு நடந்த அவரது பேச்சின் சாரம் இளைஞர்களுக்கான அறிவுரை மீசையோடு முறுக்கிப் பேசிய கம்பீரம் நினைவிருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லோருக்கும் அலை போல் கை அசைத்தார். ஆர்வம் மிகுதியில் அவர் கை நீட்ட எல்லோருமே ஆர்வத்தோடு மேடை நோக்கி எக்கி எக்கித் தொட்டோம். அடியேனும் அவர்களில் ஒருவன். எவ்வளவு பஞ்சாக மெத்தென்று இருந்தது! அதில்தான் எத்தனை நெருப்பு !
        கார்ல் மார்க்ஸ் பற்றி “எங்களை விட அவர் அதிக உயரம் பார்த்தார்” என்று ஏங்க்ல்ஸ் குறிப்பிட்டதுபோல தமிழுக்கு ஜெயகாந்தன் திகழ்வார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்,விஸ்வநாதன் குரலில் அவர் எழுதிய ஒரு சினிமா பாடல் இது:-
             “கும்பிடச்சொல்லுகிறேன்
             உங்களைக் கும்பிட்டுச்சொல்லுகிறேன்
             எனை நம்பவும் நம்பி கெடுவது உம் தலையெழுத்தென்றால்
              எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ!”

Monday, 20 April 2015

வேப்பம்பூத் தங்கங்கள்

சிறு சிறு துன்பத்திற்கும்
பெரும் கோபமுடன்
வார்த்தை உதிர்க்கும்
என் சுயநலம் கண்டு
போதிமரமானது வேப்பமரம்
கோடைப் பெரும் வெய்யிலுக்கும்
உள்ளுக்குள்
ஓயாது தன்னை மலர்த்தி
ஏராளமாய் சிறு சிறு பூக்கள்
மண் எங்கும் தெளித்தது அது.

Tuesday, 14 April 2015

மனிதநேயம் வளரட்டும் !

அனைவருக்கும் அன்பு இணைய தள நட்பு மனங்களுக்கும் அனைத்து நலங்களும் முருகப்பெருமான் அருள பிரார்த்னை செய்து கொண்டு
அன்பு வாழ்த்துகள் பகிர்கிறேன்.
மேலும் பாண்டிச்சேரி வானொலியில் (MW1215 khz) 14.4.21015 காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் என் கவிதையும் இதோ உங்கள் சிந்தைக்கு:-





அன்னைத் தமிழ்ப்புத்தாண்டு
மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது
“மன்மத ஆண்டு !” என்று நாட்காட்டி சொன்னது
அன்று
ஒரு நகரின் வெட்டவெளியில்
இருவருக்கான மேடை போட்டிருந்தது
பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்
நீண்ட வருடங்களாக
முகமூடிதரித்த ஒருவர் !
இரயில் பயணங்களிலும் பொது இடங்களிலும்
365 நாட்களும்
எதிர்பாராமல் அவ்வப்போது
அடிவாங்கிய காயமுடன் ஒருவர்!
அடி கொடுப்பவருக்கு பதுங்கி வாழ்கிறவருக்கு - மூடிய முகம்
அன்றாடம் அடி வாங்கினாலும் - இவருக்கு கனிவு முகம்
தின்று கொழித்து செழித்திருந்தார் அவர்
ஒல்லியாய் ஆனால் ஆன்மீக தெளிவுடன் இவர்
அவர்கள் இருவரும் யார் என்று .
கூர்மையுடன் கவனித்தார்கள் மக்கள்
பேட்டி உரையாடல் ஆரம்பமானது
“என்னை அறிக!
என் பெயர் “தீவிரவாதம்” என்றான் ஒருவன்
அன்பிலே கருத்தரித்த அடியவன் பெயர்
“மனித நேயம்” என்றான் இவன்
பொதுமக்கள் சலசலத்தார்கள்
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்தார்கள்
“என் பெயரில் மொத்தம் ஆறெழுத்து! தெரியுமா!”
என்றான் அவன் வலிமையாக!
ஆறுதலைத் தரும் மலையில் பிறந்து
வேலில் உண்டானேன் ! எனக்கும் ஆறெழுத்துதான்!”
என்றான் இவன் - உண்மையாக.
“எதற்காக என் கைகளைக்கட்டிபோட கயிறு தேடுகிறாய்?
ஏழை வயிறு போல் ஒட்டிபோன பசியால்
நீ என்னடா செய்வாய்?”என்று விரட்டியது அது
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே!” என்று
வள்ளலார் அருட்பா பாடியது இது!
“நான் இருளின் பிள்ளை” என்றது தீவிரவாதம்
“நான் ஒளியின் கொழுந்து அன்பின் மருந்து” என்று
புன்னகைத்தது மனிதநேயம்
“என்னைப்போல் உன்னால் ஒரே நாளில்
எல்லா டி.வி.சேனலிலும்
பெயர் வாங்க முடியுமா” என்றது தீவிரவாதம்
“என்னைப்போல் தியாகம் செய்து அன்பின் பெயர் சூட்டு
அன்று உனக்குப் புரியும்” என்றது அன்புவாதம்
“நீயும் நானும்
எந்த விதத்திலும் சமரசம் ஆக முடியாது” என்றது அது
‘அன்பிற்கு தாழ்ப்பாள் போட்டு அடைக்க முடியாது
விழும் கண்ணீர் உன் மீது என் காதலாகும்! ” என்று விவரித்தது இது
“நீ பாய்ந்து தாக்க வந்தால்
உன் கால்கள் வெட்டுவேன்!” என்றது தீவிரவாதம்
“முள்ளாகி
காற்றைக் கீறுவதாய் நீ நினைக்கிறாய்
காற்றாகி
நான் உன்னைத் தழுவுவதாய் நான் நினைக்கிறேன்”
என்றது மனித நேயம்.
“யானையாகிய எனக்கு மதம் பிடித்தால்
நொறுக்குவேன் உன்னை!” என்றது அது!
“யானைக்குத்தான் மதம் பிடிக்கும்
மனிதநேயத்திற்கு மதம் பிடிக்காது” என்றது இது.
“சந்திர நிலவொளியும்
பட்டப்பகல் சூரியனும் எப்படி சந்திக்கும்?
உன் குணங்கள் எனக்கு எப்படிப் பிடிக்கும்?” - அது சொன்னது!
“அறம் வளர்க்கும் காவிரியில்
நீராய் மாறி ஓடி வா
பயிர்கள் செழிப்பாக
உன் அன்பில் பூக்கள் போல் நான் மிதப்பேன்” என்றது இது!
“சுட்டெரிக்கும் துன்பம் தீர்க்க ஆயுதமே வழி” என்றது அது
“அஹிம்சை என்பது
மலர்களில் செய்த மனசாட்சி” என்றது இது
“அடித்துப் பேசினால்தான் சரிப்படுவாய் நீ !” என்றது கோப முகம்
“என் எலும்பைக்கூட
நீயே எடுத்துக்கொள்”என்றது திருக்குறளாய் சொன்னதுஅன்பு முகம்
“உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மிரட்டியது பலம்!
“இருப்பவனை விட
இல்லாதவனின் நியாயமே பலமுள்ளது” என்றது இது.
“என்னுடன் கைகுலுக்கு! என்னைப் போலாகி விடு!” என்றது அது
“சூரியனின் நிறம்
கருப்பாகும்போது கூட
அன்பின் நிறம் மாறாது” என்றது இது
“முடிவாக என்னதான் சொல்கிறாய்?
உன்னைப் போல் என்னால்
பாவம் செய்யாமல் இருக்கமுடியாது” என்றது அது.
“அதிகம் வேண்டாம்!
ஏழே ஏழு பாவங்கள் மட்டும் செய்யாது விட்டுவிடு
என்று கெஞ்சியது மனிதநேயம்.
“குழைவாகப் பேசி
என் கல் மனம் கரைக்காதே” என்றது அது.
“தண்ணீரைக் கூட சல்லடையில் ஏந்தலாம்
பனிக்கட்டியாக மாறும் வரை
பொறுமையாய்க் காத்திருந்தால்” என்றது இது
“நீ மிகவும் பேசுகிறாய்! கைகள் தூக்கு!
உன்னைத் தீர்த்துக் கட்டப் போகிறேன்! கவுண்ட் டவுன்!
கடைசி ஆசை என்னவெனச் சொல்” என்றது அது
“மீண்டும் சொல்கிறேன் நண்பா !
ஏழுபாவங்கள் விட்டுவிடு அது போதும் என்றது இது
“உச்சி வெயில்
பசி நேரம் வந்துவிட்டது சாப்பிட்டுவிட்டுச் சொல்” என்றது அது
“உழைக்காமல் வந்த செல்வம் ஒரு பாவம்
ஒழுக்கமில்லாத கல்வி ஒரு பாவம்
கொள்கையில்லாத அரசியல் ஒரு பாவம்
தியாகமில்லாத வழிபாடு ஒரு பாவம்
நாணயமில்லாத வியாபாரம் ஒரு பாவம்
மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்
மனசாட்சியில்லாத இன்பம் ஒரு பாவம்”
ஆஹா இனிமை இனிமை - இதெல்லாம் சொன்னது யார்?
மகாத்மா காந்திஅடிகள் தானே!
மனித நேயத்தின் புத்தாண்டு செய்தி இது!
மன்னித்து விடு ! மனம் திருந்தினேன்! என்றது தீவிரவாதம்
“சினிமாவில் வருவதுபோல்
எப்படி அரை நிமிடத்திற்குள்
உன் மனம் மாறியது என எனக்குத்தெரியும் !
பசியால் துடித்த என்னை நோக்கி
முதலில் சாப்பிடு பிறகு பதில் சொல்”
என்றபோதே புரிந்துகொண்டேன்!! என்றது மனிதநேயம்
பொதுமக்கள்
கைத்தட்டிப் பாராட்டினார்கள்
தேவர்கள் பூ மாரிப் பொழிந்தார்கள்
அன்புப் பசியும் அங்கீகாரப் பசியும் தீர்ந்து
மகிழ்ந்தது தீவிரவாதம்!
வயிற்றுப்பசி தீர்ந்து
மகிழ்ந்தது மனிதநேயம்!
மன்மத ஆண்டு முதல்
இருவரும் ஒற்றுமையாய் ஆனார்கள்
இருவரும் ஒருவராகி
ஒரே பெயர் மனித நேயம் எனப்பெற்றார்கள்!
“மனிதநேயம் வளரட்டும் வாழ்க வாழ்க!”
என்று வாழ்த்தியது உலகம் முழுதும் மனித குலம்!!
******

Sunday, 5 April 2015

எழுத்தறியும் பெருமான் மாலை (புதுக்கவிதை வடிவம்)



“அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” எனும் மகா மந்திரம் அருளிய இராமலிங்க அடிகளார் அருளிச்செய்த “ எழுத்தறியும் பெருமான் மாலை” திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் பாடப்பெற்றது. வள்ளல் பெருமானார் மனம் கசிந்து பாடிய சொற்களில் கருணையின் கனிவு குழைந்து உள் உருக்குவன. நம் தலையில் என்ன எழுத்து எழுதி இருக்கிறது என்பது அங்குள்ள எழுத்தறியும்பெருமான்  அறிவிக்க இந்தப் பாடல்களின் வரிகளில்
பயணமாகிய போது தோன்றிய மறு ஆக்கமாக இதனை இணைய தள ஆன்மீக அன்பர்களுக்கு அளிக்கின்றேன்.இதனை எழுதிட உதவிகளும் ஒத்துழைப்பும் என் மனைவி லாவண்யா மற்றும் டைப் செய்து அளித்த மகள் மருத்துவத் திலகம் அபிநயா அவர்களுக்கும் நன்றி .
கோடை வாட்டினாலும் கடந்த 10 நாட்களாக கல்லங்குடியில் கலியபெருமாள் ஆலயத்தில் ( சாலை விபத்தில் உண்டான தனது உடல் நலிவை பற்றி கவலையே படாமலும்) 25 ஆம் ஆண்டாக அன்னதானம் செய்து பசிப்பிணி ஆற்றும் அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் காலடியில் நவீன கவி வடிவில் ஆன இம்மாலையை அணிவிக்கின்றேன்.
பா.சத்தியமோகன்
வடலூர்-5.4.2015 (பங்குனி -22)
 

1.
 
சிந்தை மயங்கி இயங்குகின்ற ஒரு நாய் நான்
என்னுடைய முன்வினை தொலைத்து
உன் திருஅடிக்கு ஆள் ஆக்காமல்
சலித்து சலித்து
குறை சொல்லும்நோயால் என்னை இயக்குவது நீதியோ
எனக்கு அப்பா நீதானே
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

2.
கல் மன நெஞ்சுகொண்டவன் நான்
வஞ்சகன் நான்
வலிய நோயை
தானே சென்று பற்றிக் கொள்ளும் பைத்தியம் நான்
அருமையான நாட்களை வீண் செய்யும் பேய்
இப்படிப்பட்ட நாயேன்
உனக்கு ஆளாக வேண்டுமெனில் எத்தனை நாளாகுமோ
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

3
நல்ல நெறியில் செல்லும் அன்பர்களை நாடிட வைத்தாய்
உன் புகழின்  நல்லநெறிகளைச் சேர்ந்திட வைத்தாய்
எனக்கும் உனக்கும் முன் தொடர்பு பின் தொடர்பு
துளி கூட தெரியவில்லையே
எப்படிப்பட்ட மிகப்பெரும் மூடன் நான்.
பிரதி உதவியாக கைம்மாறாக
இங்கே எனக்கு என்ன செயல் என்று எப்படி அறிவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

4
மை படிந்து வழியும் கண்கள் கொண்ட பெண்கள் மேல்
ஆசை கொள்ளச் செய்வாயோ
இரண்டு கைகளும் படிந்திட உன்னைத் தொழுது
உன் திருவடி நினைக்கச் செய்வாயோ
இப்படியோ இல்லை அப்படியோ
எதுவும் அறியாதவன் நான்
உன் சித்தம் எப்படியோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

5

இந்த உடம்பு நிலைக்கப் போவதில்லை
ஆனால் நிச்சயம்தான் நிலைதான் என்றே நேசிக்கின்ற
பொல்லா நெஞ்சுக்காரன் நான்
புலை கொலைத் தொழில் புரிகிறேன்
இந்த உலகில்
யாரிடமும் சொல்ல முடியாத மனநோயால்
சோர்வுறுகிறேன் அலைகிறேன் ஐயா
என் துன்பம் எல்லாமே அறிந்த
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

6
தீமை அறிவேன்
அணு அளவு கூட நல்லது செய்யேன்
வீணாக நாட்களைக் கழிக்கும் பேச்சு அறிவேன்
வஞ்சகன் நான் வலிய வினைகள் செய்துள்ளேன்
வாய்மை அற்றவன் நான் சூது மட்டுமே அறிவேன்  
இப்படிப்பட்ட நான்
திருமாலும் பிரம்மனுமே
சொல்ல முடியாத அளவு பெருமை கொண்ட
உன் பெருமையை எந்த விதம் என்றோ
எப்படிப்பட்டது என்றோ அறிய முடியுமா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
7
மாறாத வலிமையான பிணியால்
ஆழ்ந்து போய் ஆழ்ந்து போய் நெஞ்சம் அயர்ந்து
கூற முடியாத கொடிய துன்பக் கடலுக்குள் வீழ்ந்தேன் அடியேன்
துன்பம் தாளாமல்  அரற்றி அழுகின்றேன்
உன் காதுகளில் அது ஏறாதோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

8

புண்ணியனே
உள்ளே வலிய வினை என்னுள் ஆடுகின்றது
வலிய வினைகள் ஓயாமல் கட்டிப் பிணிக்கின்றன
உழல்கின்றேன்
நெந்சம் புண் ஆகிப் புழுங்க ஆரம்பித்தேன்
உனைக் கண்டால் கண்கள் பசி தீரும்
இப்படிப்பட்ட எனக்கு
 உனது கருணைஅளிக்க விரும்புவாயோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

9
மாறாத தீய செயல்கள் மட்டுமல்ல
ஒழுக்கமிலா மங்கையரின்
வலிய செயல்களாலே மயங்குகிற வஞ்சகன் நான்
கொன்று போடும் எமன் 
மாறாமல் தப்பாமல் வந்து விடும் நேரம்
என்ன செய்யப் போகிறேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

10
சங்குடைய கிருஷ்ணன் தாமரை வாழ் பிரம்மன்
இருவரும் உனது திருவடி காணவில்லை
திரு முடியும்  காணவில்லை
குளிர் கொன்றை அணிந்த எப்போதும் குளிர்ந்த
கங்கை அணி சடையாய்
கோதை உனது ஒரு பங்காக உடைய சிவமே
ஏழை முகம் பார்க்காமல் தள்ள்¢விட்டால்-
எங்கு போய் எதில் விழுவேன்! எதை அடைவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

11
“எல்லோரும் காணுகின்ற மேடையில் நடனம் செய்கின்ற
மாணிக்க மலையே
வெற்றி கொள்ளும் மழு ஆயுதம் கையில் கொண்ட
வித்தகனே! ஈசனே !”என்று பலவிதமாக
தாய்ப்பசு தொலைத்த கன்றுக்குட்டியை விடவும்
அயர்ந்து அழ ஆரம்பித்தேன்
கண்ணீர் துடைத்து அருள
என்று வருவாய் ஐயா?
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

12

“கங்கை அணி சிவன்” என மிகப்பெரும் தவம் செய்தவர்கள் நினைக்கும் போது
சோதியாய் நிலைத்து ஒளிர்பவனே.
அவர்கள் வேண்டிடும் அதே கணத்தில்
அவர்கள் துன்பம் ஒழிப்பாய் ஆனால்
அது எனக்கு மட்டும்  இதுவரை பலிக்கவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


13

மீண்டும் மீண்டும்
மின்சார ஒளி போல் மின்னி மறையும் இச்சை
என்னை வெம்பிடச் செய்கின்றது ஆனாலும்
தன்னைப் போல என்னை நினைக்கின்ற தெய்வமே
எனை ஈன்ற தாய் போன்ற தெய்வமே
நான் சொல்கிறேன்  என்பதற்காகச்  சார்ந்து
ஏதேனும் ஒன்றை உரைக்காமல் இருக்கின்ற தங்கமே
உனது அருள் மட்டும் இப்போதே பெற்றுவிட்டால்
உறுதி!என்னைப் போல் எவருமே இல்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

14
ஐயா! உனது பொன் அருளை
பூவில் தேன் அள்ளிப் பருகும் வண்டு போல
புண்ணியர்கள் அருந்துகிறார்கள்
நினது திருப்பாதத்தின் கீழ் சார்ந்து நிற்கின்றார்கள்
ஐயோ! நான் என்ன செய்கிறேன் -
காமம் எனும் கடும் இருட்டில்
கள் உண்ணுகின்றேன்
கண் மூடி ஏமாறுகின்றேன்
இது என்ன நிலையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
15

ஐயா! உனக்குத்தான் பொறுப்பு
ஆம் உனக்கே பொறுப்பு! பாதகன் நான்
இந்த பூமியில் வயிற்றுப்பாடுக்கே உழல்கின்றேன்
உனது பொன்னார் திருவடிகள் போற்றாமல் சூழாமல்
திறந்த புண் போல வாழ்கின்றேன்
குற்றம் தான் இது குற்றம் தான்
எனது அருமைத்தாய் நீயே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

16
எனது மனத்தை ஆராய்ந்தேன்தேடினேன்
அடங்கவில்லை எனது தீய மனம்-
வீட்டுக்கு அடங்காத விளையாட்டுப் பிள்ளை
செய்யும் துயரம்
ஏட்டில் எழுத முடியாத  அளவு விரிந்து கொண்டே செல்கிறது-எதைப்போல?
பாடும் பாட்டில் அடக்க முடியாத
உனது பக்தித் தொண்டாளர்கள்
திருவடிப் புகழ் போல!  அடக்குவீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

17
பின்னிப் பின்னிப்  பேசுகின்ற எனது மனம்
எந்தத் தன்மையுமே இல்லாமல்
என்னை முழு அளவில் பாதகன் ஆக்கிற்று
ஞானச் சூரியனின் வெம்மைக் கதிர்கள் சூழும்போது மட்டும்
எனது மும்மலக் குற்றங்கள் காய்ந்து
அருள் நீர் தாகத்தால் நிலை கலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


18
என் மனம் கல்லுக்குச் சமம்
அதுவும் கடைப்ப்பட்ட  மனம்
அதுவும்
காட்டில் எந்த நெறியும் இல்லாமல் திரிகின்றது
புல்லை மதிக்கத் தெரிகின்றது ஐயோ!
பசுமையான பூவையோ இகழ்கின்றது
பொய்யின் பாதங்களுக்குச் சேவகம் செய்கின்ற
பொய் அடியேன் எனது வேதனைக்கு
எல்லை எது என்றே அறிய முடியவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

19

தங்கத்தை மதிக்கத் தெரிந்த எனக்கு நின்
தங்கம் ஒத்த திருவடியை போற்றாத கல் மனம்
ஆதலால்
கலங்குகின்ற தவம் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்
இன்னல்களில் உழல்கின்ற ஏழைகளுக்கெல்லாம் ஏழை நான்
என்னைக் காண்பாய் என்னக் கை விடாதீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

20

ஆசை, கன்மம், மாயை  எனும் மலக்கடல்
மிகப்பெரும் சுவர் போல் தடுத்து வீழ்ந்தேன்
உலகினர் எவரும் உதவாமல் அலைகின்றேன்
இரங்கத்தக்க நிலையில் உள்ள
பரிதாபமான என்னை
திருவொற்றியூர் சிவனே நீ ஆளாவிட்டால்
என்னை பார்க்கவும் கூசுவார்களே
அடியார்களெல்லாம் கை கொட்டிக் கூடி சிரிப்பார்களே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

21

உத்தமனே சிவனே
உன் ஊர் சொல்வேன் பேர் சொல்வேன்
நினது திருத்தாள் புகழ் சொல்வேன்
நீ மட்டும் என்னை
உன்னுடன் சேர்க்காமல் அகற்றிவிட்டால்
“ நீ செய்வது சரியல்ல”  என்று உனக்கு
யார் சொல்வார் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

22

உனது மெய் அடியார்கள் அனைவரும்
நீக்கமில்லாத நேசம் உடையவர்கள்
பொய் அடியனாகிய எனக்கோ
ஊக்கம் இல்லாத நெஞ்ச ஓட்டமே உள்ளது
தன்னை மறக்கும் தூக்கம் வேண்டாம்
உன்னை நினைக்கும் ஆனந்தத் தூக்கமே வேண்டும்
வேறு ஏக்கம் எனக்கில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

23
      
அழிகின்ற வஞ்சகர்களை போக்கிவிடு
உன் பொன்னடிக்கே ஆளாகின்ற
மேலோர் திருவடி வாழ்த்தாமல்
வாழ்கின்ற நாயேன் எனக்கு
பாகை விட சிறந்த சுவையான
நினது அருளை என்று  தருவாயோ  ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

24

“தனது ஊழ்வினையை அகற்ற
தனது மனதையே உளவு பார்த்து எச்சரித்து
எதைச் செய்ய வேண்டுமோ
அதைச் செய்து தடுக்காத பொய்யன் இவன்
இவனுக்கு இருப்பது பீழை மனம்
இவன் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டான்
இவன் மனம் கொடியது” என
என்னைத் தள்ளிவிட்டால் என்ன கதி ஆவேன்  ஐயா
நான் ஏழை! .
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

25

ஆழம்  காண முடியாத அளவுள்ள
மல இருட்டில் சென்றுவிட்டேன்
மனம் கடுக்கிறது அதுவும்எல்லை  தாண்டிவிட்டது
புலன்களால் கட்டிச் சுமக்கப் படுகின்றேன்
இனி மேல்
தொகுப்பதற்கு துன்பமேயில்லை என்ற அளவு ஆனபின்
துன்பச்சுமையை இனி எடுக்க முடியாதே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

26  
நெஞ்சம் முழுதும் முட்கள் நிரம்பிய
புலை நிரம்பிய மாதர்களிடம்
கள் குடித்த நாயை விடவும் கடைப்பட்ட எனக்கு
அன்பர்கள் உள்ளவரைக்கும் உதவுகின்ற
உனது திருவடி மீது
அன்பு என்பது
சிறு எள் அளவு கூட  இல்லையே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
27 

மீண்டும் இது போல் மனிதப்பிறப்பு
அடைய முடியுமா என்று
நினைக்கவும் தோன்றாத  பலவீனன் நான்
நலம் தேடி மீண்டும் மீண்டும் வாடுகிறேன்
அமுதமாகிய நீயோ
உண்ணமுடியாத அளவு பரந்துள்ளாய்
உன்னைத்தவிர யாரால் இதை அமைத்து
எண்ண வைக்க முடியும் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
\.
28 
பலருக்குப் பலபிறப்பிலும் தீங்கு செய்த
மிகக் கொடியவிஷமுள்ள தேள் போல
செய்த வினைகளுக்காக வெதும்புகின்றேன்
அந்த மனதை ஒளித்து மறைக்க விரும்பாமல்
உன்னை அழைக்கின்றேன் அழுது வாடுகின்றேன்
இங்கு உலகுக்காக நஞ்சு சாப்பிட்ட
என் அருமை அப்பா அல்லவா நீ
எங்கே ஒளிந்துள்ளாய்ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

29  
காமம் கொண்ட பெரும் பேய்ப்பித்தன் நான்
ஆணவம், பொய் ,பொறாமை , சினம், வஞ்சம்கொளல் மட்டுமா
சகல பாவங்களும் நான் தான்
என்னைப் பார்ப்பீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

30

ஒரு சொட்டு கூட மிச்சமிலாது
உலகின் மீது விஷம் படாமல் காக்க
அத்தனை விஷமும் குடித்த தயவு நிதி நீ அல்லவோ
இங்கு அயர்ந்து நிற்கின்ற என் முன் ஒரு சொல் சொல்லாயோ
தூய திருக்கோயிலில் நீ இல்லையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

31

நீ உன்னை மட்டுமே கொண்டாய்
நீயே உலகம் முழுதும் உள்ளாய் உனையன்றி இல்லை
மனைவி , மக்கள் வீடு எனும் வாழ்க்கை நடுவே
இழிவையே பெற்ற என்னை ஆள்வது உன் கடனே
என்னை உன் உடையவனாக்குவீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
.
*****