Friday, 28 June 2013

பாடல்-151:

சிறப்பு மிக்க அனுமன் மேல்
தேவர்கள் சொறிந்தனர் பூ மழை!
அவை -  
மண்ணில் விழவில்லை
இராவணனுக்கு பயந்து
நட்சத்திரங்களாய் விண்ணில் நிற்கின்றன!

பாடல்-152:

மல்லிகை மலர்களின்
தேன் உண்ண வண்டு வரும்
ஆனால் - 
இங்கோ பகைமை உண்டாகிவிட்டது
இருளும் ஒளியும் பகை தானே? ஆம்!
வண்டுகள் - 
இருளின்  துண்டுகள் போல் இருப்பதால்!
மல்லிகைகள் -  
நிலவின் துண்டுகள் போல் இருப்பதால்!

பாடல்-153:

கிளர்ச்சி தருகிறது சந்திரன்
சந்திரனின் வெள்கதிர் தொகுதி
எல்லா இடங்களிலும்
இராவணனின்  காவலில் உள்ள
மதில்களின் மேல்
உறையாகப் போர்த்தியது போல் உள்ளது!

பாடல்-154:
இகழ்ச்சிக்கு இடமற்ற இராமன் எய்த
அம்பின் வேகமே - 
அனுமனின் இலங்கைப் பயணம்!
அகழி கடந்து
அரண் கடந்து
தடையின்றி
இலங்கை  நகரில் பரவிய
சந்திரன் ஒளி போல்
அனுமன் பயணம்!

பாடல்-155:

எவ்வழியில்
இலங்கை நுழையலாம் என
ஆராய்ந்த அனுமன்
செவ்வழியாகிய
நேர்வழி என்ற முடிவு செய்து
தேவர்கள் வாழ்த்த
அரக்கர் ஊருக்குள்
செல்லத் தொடங்கினான்
வெல்லத் தொடங்கினான்!

பாடல்-156:

இலங்கை மதிலுக்கு - 
கடலே அகழி!
தேவர்கள் உலகம் வரை
உயரம் கொண்டது
இலங்கை மதில்!
ஊழியிலும் அழியாதது
இலங்கை மதில்!
அதில் கால் பதித்தான் அனுமன்
இராம நாயகன் உள்ளிருக்கும் தைரியத்தில்!

பாடல்-157:

“நிலை கலங்காத சூரியன்
நிலை கலங்காத கோள்கள்
வேல் கொண்ட இராவணனுக்கு அஞ்சி
இலங்கை மீது
விரைந்து செல்வதில்லை” என்பது
உண்மையல்ல!
இலங்கையின் மதில் மீது
சூரியனால் ஏற முடியவில்லை
அதுவே உண்மை என வியந்தான் அனுமன்!

பாடல்-158:

எண்ண முடியாத அரக்கர்கள்
தங்கும் அளவுக்கு
இலங்கையின் மதில் உள்ளது
என்று சொல்லிவிட்டால்
பெருமை முடிந்து விடுமா!
அண்டம் எத்தனை உயரம்
அத்தனை உயரம் இந்த மதில்!
வியப்பு மேலும் மேலும் விரிந்தது அனுமன் மனதில்.

பாடல்-159:

எமனின்
அளவில்லாத சேனைகள்
வாய் திறந்தால் எப்படியோ
அப்படி இருந்தன
மூதூரின் வாசல்கள்!
அதன் அருகில்
ஆண் சிங்கமும்
மத யானையும் வெட்கமுறும் தைரியமுடன்
அனுமன் நெருங்கினான்

பாடல்-160:

வியப்பு விரிந்தது அனுமனுக்கு!
மேருமலையைக் குடைந்து
மதில்வாசலை உருவாக்கினார்களா!
இவை தேவலோகப் படிக்கட்டுகளா அல்லது
ஏழுலகங்களும் அசையாமல் நிற்க
முட்டு கொடுத்த தூணோ!
கடல் நீர் புகுந்து செல்ல
அமைந்த மதகு வழியோ!


பாடல்-161:

“ஏழு உலகிலும் வாழும் உயிர்கள் அனைத்தும்
எதிர்த்து
ஒரே நேரத்தில் வந்தாலும்
இலங்கை வாசல் உள்ளே
அடைபட்டுவிடும் போல உள்ளதே!
அப்படியிருக்காது எனில்
இலங்கைவாழ் அரக்கர்கள் வந்து செல்லும்
வழக்கமான வழி என்று  கொண்டால்
நமது பகைவர்களின் எண்ணிக்கை
ஏழு கடல்களின் அளவுக்குள் அடங்காதே!:”
நினைத்தான் அனுமன்.

பாடல்-162:

அப்போது அரக்கர்கள் - 
“இரு நூறு வெள்ளம்” எண்ணிக்கையில்
வீரம் - வஞ்சனை- வலிமை கொண்டு
நிற்பதைக் கண்டான்
இரு  கைகளிலும் முள் போல் வாளுடன்
இகழ முடியாத காவலர்களெனப்
புரிந்து கொண்டான் அனுமன்.

பாடல்-163:

சூலம் - மழு - வாள்
வேல் - பெரிய ஈட்டி - இரும்பு
உலக்கை - எமன் போன்ற வில் - அம்பு
கப்பணம் -முசுண்டி - கோல்
வளைந்த தடி -சக்கரம் -வச்சிராயுதம்
உடைவாள் -கை ஈட்டி -பிண்டி பாலம்
இத்தனை  ஆயுதங்கள் ஏந்திய
ஆயுதங்களாய் நிற்கிறார்கள் அரக்கர்கள்!

பாடல்-164:

இத்தனை  ஆயுதங்கள் மட்டுமல்ல!
அங்குசம் -  
கல் எறியும் கவன்
“பாசம்” எனப்படும் நுனியில் கூர்மையால் அறுக்கும் கயிறு
என்பனவும் இருந்தன.

அரக்கர்களுடைய
முகம் கோபத்தால் சிவப்பன
முகம் மட்டுமல்ல
தலைமுடியும் செம்பட்டை நிறம்

தொலைவிலிருந்து பார்த்தால்
பங்குனி மாதம் பூக்கின்ற
முள் முருங்கை பூக்களின் காடு போல் உள்ளனர்!

பாடல்-165:

அனுமன் கண்டான் - 
அங்கே உள்ள விளக்குகளை
எண்ண முடியாதவையாக இருக்கின்றன
அதனால்
வெளிச்சம் இருட்டினம் தின்று பிரகாசிக்கிறது.
கல்மணம் கொண்ட எமனும் அஞ்சுவானே..
கடல் படை என நிற்கிறதே -
சோர்விலாத அரக்கர் கூட்டம்.

பாடல்-166:

“அரக்கர்கள் நிறைந்த நெடிய வாசல் இது!
இதனைக் கடப்பதற்கு
தேவர்கள் யார் உள்ளனர்!
அசுரர்கள் யார் உள்ளனர்!
அத்தனை சிறப்பு மிக்க காவல் இது
எவ்வளவு வியப்பு இது
இராமனும் நாமும்
இவர்கள் மீது போர் தொடங்கினால்
என்ன நடக்குமோ!”
அனுமன் எண்ணங்கள் இவை.

பாடல்-167:
அனுமனின் எண்ணங்கள் தொடர்கின்றன
“கருங்கடலைக் கடந்து வருவது சிரமம் அல்ல
நகர் காக்கும் படைக்கடலே சிரமம்!
நம் எண்ணம் சிறிது பெயர்ந்தாலும்
அரிய கடமை முடிப்பது அரிது
ஆம்
அரக்கர்களோடு போரிட நெருங்கினால்
பலநாட்கள் நடக்கும்!”


பாடல்-168:

“இவ்வளவு பாதுகாப்பு கடந்து
வாசல் வழியே போக இயலாது
அதுமட்டுமல்ல
ஆராய்ந்து பார்த்தால்
வல்லவர்களுக்கு
பிறர் வைத்த வழி அழகல்ல
எனவே -  
கதிரவனும்கடக்க இயலாத இந்த மதிலை
விரைவாக தாவிக்கடப்பேன்”
நினைத்தான் பறந்தான் அனுமான்.

பாடல்-169:

இலங்காதேவி!
இலங்கை நகரின் ஆயுள் கொண்டது போல இருக்கிறாள்
தூண்கள் போன்ற தோளுடைய
அனுமனைக் கண்டாள்
அது - 
கதிரவனை விழுங்க வரும்
இராகு கேதுவின் கோபப் பார்வையுடன்
மறித்தாள் அனுமனை.

பாடல்-170:
இலங்கை தேவி
எப்படி இருப்பாள் ?
எட்டுத் தோள்கள்! நான்கு முகங்கள்!
ஏழுலகங்களும் தொடுகின்ற பேரொளியின் நிறம்!
சுழலும் விழி!
எவரேனும் மோதினால்
விண்ணுலகையும் அடியோடு பெயர்த்துவிடுவாள்!
மூவுலகையும்  அடியோடு பகைத்து மோதினால்
மூவுலகையும்  கட்டிப்போடும் வலிமை!
பொறுமை அற்றவள்!

பாடல்-171:

அவள்-  
எட்டுத்திசைகளின் மேய்ப்பவள்
கருமேகங்களின் மழை போல முழக்கம்
கேட்டால் அச்சம் வரும்
சிலம்பு அணிந்த கால்கள்
மின்னல் ஒளி நகைகள்
வியர்வை வழியும் மேனி!


பாடல் -172:

வேல் வாள் சூலம் கதை இருந்தது
பாசக்கயிறு சங்கம் கோல் குந்தம் இருந்தது
எட்டுக்கருவிகளும் ஏந்திட
எட்டுக்கரங்கள் கொண்டவள்
இமயமலை போன்றவள்
சந்திரனைப் பிளந்தது போல பற்கள்
புகை கக்கும் வாய்
காலனைக் கலங்கச் செய்யும் கடும்கோபம்!

பாடல்-173:

அவளுக்கு - 
பஞ்சவர்ணத்தில் ஆடை
பாம்புகள் அஞ்சும் கருடனின் வேகம்
கருணையற்றவள்
பொன்னாடையே மேலாடை
அழகிய நத்தைகள் ஈன்ற முத்துக்களை சேர்த்த
மாலைகள் ஆகியவற்றால் ஆன மாலையை
அணிந்திருந்தான் அனுமன்.

பாடல்-174:

அவள் - 
மணம் வீசும் சந்தனக்குழம்பு பூசியவள்
அவள் சொற்கள் -  
யாழில் வாசிக்கப்படும் “தாரம்” எனும் இசைக்கு சமம்!
ஒலிக்கும் வண்டுகள் - 
காந்தாரம் எனும் பண் பாடிக் களிக்க இடம் தருகின்றன.

பாடல்-175:

இலங்கா தேவி யார்?
இலங்கை என்னும் மூதூருக்கு
நன்மை செய்பவள்
கண்ணின் கருமணியை
கண்கள் காப்பது போல் காப்பவள்
அனுமனைக் கண்டாள்
“நில்லாய் ந்¢ல்லாய்” என அதட்டியது தான் மிச்சம்
முன்னை விட வேகமாய் அனுமன் பயணப்பட்டான்.
திரும்பினான் அனுமன்
“நில்லாய்! நில்லாய்!” என அதட்டினாள்
வருக என அனுமன் கூறினான்
திசை வழியே சென்று “நின்றான்” அனுமன்.

 
                                                                      --அனுமனோடு மீட்போம்.

Monday, 17 June 2013

பாடல்-126 :

தொய்யில் என்பது
செந்நிற குங்குமப்பூக் குழம்பினால் எழுதும் கலை !
அரக்கர்கள் -  
அரக்கியர்களின் இளமுலைகளில் தொய்யில்  எழுதினர்
அன்பினால்
அரக்கியர் தழுவும் போது
அரக்கரின் கறுத்த மேனியில் ஒட்டியதால்
அழகு வந்தது
ஊடல் கொண்டு உதைத்தபோதும்
அரக்கர்கள் அழகாயினர்
எப்படி?
அவர்கள் காலில் இருந்த தொய்யில்
அரக்கர்கள் தலையில்!

பாடல்-127 :

விளரி எனும் பண் கொண்டு
இனிய சொற்கள் பேசும் மங்கை போல் உள்ளது
இலங்கைக்கடல்!
அது மட்டுமல்ல - 
கடலில் மிதக்கும் பவளக்காடு போல் இலங்கை உள்ளது
குவளை மலர்க்கண்கள்
நிரம்பிய நீர்க்குளம் போலவும் தோன்றுகிறது!



பாடல்-128:

அரக்கர்கள்
எழுந்து திரிவதால்
அவர்கள் எண்ணிக்கையை
தாமரையில் வாழும் பிரம்மனும் கூறி விட இயலாது
அவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால்
அண்டம் கிழியவில்லை என்பதும் அறியலாம்.

பாடல்-129:

அரக்கர்கள் யார்?
உடல் அளவில் மட்டுமா பெரியவர்கள்?
அளவிலா வீரத்தில்
உலகை அழிப்பதில்
கணக்கற்ற வரங்கள் பெற்றதில்
எவரும் உணரா மாயத்தில்
அனைத்திலும் !
சரி -  
இலங்கையின் தெருக்கள் எப்படி இருக்கும்
ஒரு ஒரு தெருவும்
ஒரு நாடு !

பாடல்-130:

வீரக்கழல் கொண்ட கால்கள்
கூற்றுவன் போல் வேல் ஏந்திய கைகள்
கனல் தெறிக்கும் கண்கள்
இப்படிப்பட்ட ஆடவர்கள் மட்டுமே
இலங்கையில் உண்டு
பெண்கள் வடிவம் எப்படி இருக்கும்?
வண்டுகள் மொய்க்கும் கூந்தல்
செம்பஞ்சுக் குழம்பு கொண்ட குழல்
யாழ் போன்ற மழலைக்குரல்
சிவந்த வாய்!

பாடல்-131:

இலங்கை நகர யானைகள்
வண்டுகளால் சூழப்படும்
புலால் மணம் வீசும்
செந்நிறத்தலைகள் பெற்றிருக்கும்
கருநிற உடல் பெற்றிருக்கும்
உள்ளத்தில் களிப்பு அதிகம் பெற்றிருக்கும்
இதனால் - 
யானைகளும்
செம்பட்டை முடி கொண்ட அரக்கர்களே!

பாடல்-132:

இலங்கை அரக்கியர் மனம்
தேவமகளிர் பூ இடை
சோர்வது போல வருந்தியது!
எனினும்
வெண்ணிறப்புன்னகை அரக்கியர் முகத்தில் தோன்றியது
நாணம் வந்தது அரக்கர்களுக்கு
எனினும்
அரக்க மகளிர் குரவைக்கூத்து கண்டு
மகிழ்வதை நிறுத்தவில்லை!

பாடல்-133:

அனுமன் - 
இவ்வாறு
இலங்கை நகரம் கண்டதும்
ஒரு நினைப்பு வருகிறது:-

“ நாம் இந்நகரை அழிப்பது இருக்கட்டும்
எப்படியாவது வாரை சேனை
இங்கு  வந்து சேர்ந்து விடலாம்தான்
ஆனால்....
ஆனால்....
அரக்கரும் அரக்கியரும்
இத்தெருக்களில்
வீசியெறிந்த அணிகலன்களைக்
கடந்து வர இயலுமா !! ”

பாடல் - 134 :
கடல் ஏன் ஆழமாக உள்ளது ?
 ஓ!
இலங்கை நகரின்
சந்தனக் குழம்பு
யானைகளின் மத நீர்
குதிரைப் படைகளின் வாய் நுரை
எல்லாம் ஆறுகளாகி
கடலில் விழுவதால் !
அது மட்டுமில்லை - 
அந்த ஆறுகள்
வீதியில் எறிந்த
பொன் மலைகளையும்
காதணிகளையும்
 அணிகலன்களையும் எடுத்து
கடலில் கொண்டு சேர்க்கின்றன !

பாடல் - 135 :
இதுவரை அடியேன் கண்டதெல்லாம்
என் உயிர் நாயகன் இராமனிடம் கூற வேண்டுமே...
என்னவென்று கூறுவேன்...
வில் படை பெரிது என்பேனா
வேல் படை பெரிது என்பேனா
வாள் படை வலிது என்பேனா
இரும்பினால் செய்த
யானை நெருஞ்சி போன்ற
“ கப்பணம் ” என்ற கருவிகள் அதிகம் என்பேனா
எறியும் ஆயுதமான
“ பிண்டி பாலம் ” அதிகம் என்பேனா...,.


பாடல் - 136 :
அனுமன்
இவ்வாறு பலவும் நினைந்தான்
“ இந்த இடத்திற்கு வந்து
அரக்கர்கள் என்னைக் காணக் கூடும் ”
என நினைத்து
பெரிய உடலை சுருக்கினான்
அழகிய சாரல் பவள மலையில் நின்று
இத்தனையும் முடித்த போது
மேற்கு திசைக் கடலில்
கதிரவன் மூழ்கினான்

பாடல் - 137 :
அப்போது இருள் சூழ்ந்தது
அந்த இருளின் வலிமை
கனத்து இருந்தது
சூழ ஆரம்பித்தது
அது எப்படி இருந்தது.... ?
முற்பிறவி நல்வினையால்
அடைந்த செல்வம் போல !
நல்லது - தீயது ஆராயும்
மனமற்றவன் மனம் போல !
அறிஞர் சொல் கேளன் மனம் போல !
இந்தத் தன்மைகளால்
தனக்கு கேடு வருமே என நினைக்காத மனம் போல !
உண்மை இல்லாத மனத்தனின் பாவச் செயல் போல !

பாடல் - 138 :
அந்த இருட்டுக்கு
இன்னொரு உவமையும்  உண்டு
முப்புரம் எரித்த
மழுவாயுதம் ஏந்திய சிவபெருமான்
தாருகா வன முனிவர்
உண்டாக்கிய  யானையின் உரித்த தோலைக் கொண்டு
உலகுக்கு
உரை செய்து போர்த்தியது போல
இருக்கிறது இருட்டு !

பாடல் - 140 :
சீதை வழி எது ?
கொடை வள்ளல் ஜனகனின் மரபு வழி
பெண்மை நீங்காத கற்பு வழி
அப்படிப்பட்ட திண்மை நிறைந்த சீதையை
இராவணன்  சிறை வைத்தான் எனும் இகழ்
உலகம் முழுதும் பரவியது போல
இருக்கிறது இருட்டு !

பாடல் - 141 :
இப்படிப்பட்ட இருள் எனினும்
எத்திசையிலும் செல்கிறார்கள் -              
அரக்கர்கள் !
எதனால் ?
மந்திர ஆற்றலால் !

பாடல் - 142 :
அரக்கர்களுக்கு
இராவணன் உத்தரவே முக்கியம்
இந்திரனின் வளநகர்
அமராவதிக்கு ஏவப்படலாம் !
சந்திலோகத்துக்கு ஏவப்படலாம்
கோபப்படாமல் - 
எமனது உலகுக்கும் செல்லலாம் !

பாடல் - 143 :
தேவலோகப் பெண்கள்
வித்தியாதர மகளிர்
நாக நங்கையர்
இயக்கர்
பாள வயர்
ஒருவரை முந்திக் கொண்டு
மின்னல் கூட்டமென நெருங்கி விரைவது
அரக்கர்கள் சொல்லும் வேலை முடிக்க !

பாடல் - 144 :
 அது -  
இருள் நேரம்தான்
எனினும் பகலாகத் தெரிந்தது !
தேவர்கள்
அசுரர்கள்
செங்கண் நாகர்கள்
இயக்கர்கள்
வித்தியாதரர்கள்
தேவகணத்தினர் மற்றும்
உடலின் ஒளியால் !




பாடல் - 145 :
 சித்திரத்தால் வரைந்த பாவை
உயிர் பெற்றால் எப்படியிருக்குமோ
அத்தனை மெல்லமாக தேவர்கள் நடந்தனர்
“ காலம் தாழ்த்தி விட்டோம்
 இராவணன் கோபிப்பான் ” என
முத்து மாலைகள் சரிய
மலர் மாலைகள் சரிய
மேலாடைகள் சரிய
ஓடினார்கள் தேவர்கள் !

பாடல் - 146 :
இராவணன் எனும்
கோடை சுட்டது
அறம் வற்றியிருந்தது
மாருதி எனும் மாவீர மழையால்
அறம் துளிர்த்தது போல
சந்திரன் வானில் வருகிறான் !

பாடல் - 147 :

மகிழும் கூந்தலும் அழகு நெற்றியும் பெற்ற
கிழக்குத் திசை எனும்
அழகுப்பெண் முகம் மலர்வது போல
“இராமனின் தூதன் வந்தான்
எமது தூதன் இந்திரன் வாழ்ந்தான்” என
எண்ணி மகிழ்ந்தது நிலவு!

பாடல்-148:

கடலின் வெண்ணிற நிலைகள்
வெண்தாமரை போல் வீசின
அப்போது -  
குளிர்ச்சி மிகுந்த வெண் சந்திரன்
இந்திரனது  வெண் கொற்றக்குடை போல் வெளிப்பட்டது.
“எம் பகைவனாகிய அரக்கர் குலம் அழிந்தது”
என்கிற மகிழ்ச்சியும் வெளிப்பட்டது.

பாடல்-149: 

சந்திரன் எனும் வெள்ளிக்குடத்தால்
பாற்கடலின் பாலை முகர்ந்து
ஊற்றியது போல -  
வெண்ணிலவின் ஒளியும்!
வீண்மீன்களின் ஒளியும்!

பாடல்-150:

வானம் -  
அருந்தவ முனிவன் வசிட்டனின் காமதேனு!
சந்திரன் உதிக்கின்ற இடம் -  
காமதேனுவின் மடி!
சந்திரன் -  
முலை!
சந்திரகிரணங்கள் - 
பாலின் தாரைகள்!
நிலவின் தோற்றம்-  
பெருகும் பால்!


                                                                -அனுமனோடு மீட்போம்


Sunday, 9 June 2013

பாடல் - 101 : 

இதற்கு இணை என ஒன்றை
இந்திரன் வாழும் அரண்மனைக்கு உவமை என்று கூறினால்
அந்தச் சொல்-
குற்றமுடையதாகும்
பொருத்தமற்றதும் ஆகும்
பொருத்தம்தான் என்று கூறினால்
துல்லியமாகச் சொல்லவில்லை
என்பது வெளிப்பட்டு விடும்!
எனவே-
இலங்கை அரக்கரின் செல்வத்திற்கும்
மாளிகைகளுக்கும் பொருத்தமான உவமை இல்லை!

பாடல்-102:

உலகில் உள்ள சிறப்பான மணிகள்
திருமால் மார்பில் உள்ள
கெளஸ்தூப மணியை விட
சிறந்தது இல்லை-  
தேவசிற்பியான விஸ்வகர்மா
அமைத்த அழகிய நகரத்தின்
தொழில்நுட்பம் இலங்கை போல இல்லை!

பாடல்-103:

தவத்தினால்
எந்த மனிதரும்
எதுவும் அடையலாம்
அதன் உதாரணம் இராவணனே!
அவன் தவம் செய்த தவத்தால் -  
இலங்கை மரங்கள் - கற்பக மரங்கள்!
இலங்கை மாளிகைகள் - பொன்!
பணிப்பெண்களும் -தேவமங்கையர்!
பணியாட்கள்- தேவர்கள்!

பாடல்-104:

தேவர்கள் என்று புகழ் பெற்றாலும்
அவர்கள் - 
இராவணன்  ஏவலுக்கு அடிமைகள்

எண் வகை மூம்மூர்த்திகளிலும்
உயர்ந்தவன்
இராவணன் தான்!

இவை எப்படி நிகழ்ந்தன ?
தவத்தினால்!

பாடல்-105:

இலங்கையில்
எட்டுயானைகள் மட்டும் இல்லை
முன்பு அவை
இராவணனுடன் போர் செய்து பயந்து
எட்டு திசைகளில் நிற்கின்றன
இலங்கையில்
ஐங்கரன் என்னும் விநாயக யானை தவிர
மற்ற எல்லா யானைகளும் உள்ளன!
இலங்கையில்
ஒற்றைச் சக்கரமுடைய
சூரியத்தேர் மட்டும் தான் இல்லை!

பாடல்-106:

சூரியனின் தேரில் பூட்டிய
ஏழு குதிரைகள் தவிர
மீதி எல்லாமும் இலங்கையில்!

உலக உயிர்கள்
ஒரு சேர வாழும் அளவு
பெரிதாயிருக்கும்
திருமாலின் வயிறு போன்றது
இலங்கை நகரம்!

பாடல்-107:

கடலின் ஆரவாரம் தவிர
வேறு என்னவோ கேட்கிறதே!
ஓ... அது- 
பேரிகைகள் பெருமுழக்கம்!
பெரும் களிறுகள் பேரொலி!
ஆனால்-  
பேரிகை ஒலிகள் அடக்கப்படும் -    
புல்லாங்குழல் போல் ஒலிக்க ஆரம்பித்துவிடும் -
மழலை பேசும் மகளிர் சிலம்பொலியால்!

பாடல்-108:

மரகதமணிகள் அணிந்த குதிரைகள்
அழகு செய்யப்பட்ட குதிரைகள்
குதிரைகளோடு  தேர்கள்
தேர்களின் கூட்டங்கள்
தேர்க்கூட்டம் கொண்ட கொட்டில்கள்
அடடா
இலங்கையின் வளம் கண்டால்
சொர்க்கம் என்பதும்  நரகமே!

பாடல்-109:

சூரியனின்
பொன்னொளி பாயும் இலங்கை
கருப்பு நில அரக்கர்களையே பொன் நிறம் செய்துவிட்டது!
உப்புக்கடல் பொன்நிறமாகி
கருமை இல்லாமல் போனது!
சந்திரனுக்கும் களங்கம் இல்லை!
பசும் பொன்னை உருக்கி ஊற்றியது போல்
கடல் சிவப்பானது
ஆம் - 
பொன் கடல்!


பாடல்-110:

அண்டம் முழுதும்
நிறைந்த இருளை
சூரியன் அகற்றுகிறான்
அதற்காக -  
இலங்கையில் உள்ள மாளிகைகள்
வெளியிடும் கதிர்கள்
இருளை  அகற்றுவதோடு ஒப்பிட முடியுமா!
அப்படிச் செய்தால் - 
சூரியன் முன்
மின்மினிப்பூச்சிக்கு
எந்த தகுதியோ
அந்தத் தகுதியைக் கூட
சூரியனால் பெற முடியாது! 

பாடல்-111:

கடல்களில் வாழும் மீன்களின்
புலால் நாற்றம் போய் நறுமணம் வீசுகின்றன!
எதனால் எனில் -
மலர்த்தேன்
சந்தனக்குழம்பு
கஸ்தூரி வாசனைக் கலவை
அப்போது தான் பூத்த
வானூலகக் கற்பக மலர்கள்
வலிமையான யானைகளின் மதநீர்
எல்லாமும் கடல் நீரில் கலந்ததால்!


பாடல்-112:

சிறப்புமிகு இலங்கை உருவாக்கிய
யாரைப் புகழ்ந்தால் சரியானது?
தேவசிற்பி விசுவகருமா?
இராவணனின் சத்தியமான தவம்?
பிரமன் வரம்?
எனது சிந்தை தொய்கிறதே...
யாருக்கு உரியது புகழ்?

பாடல்-113:

இலங்கையில்
காடுகள் சோலைகள்
பொன்னிற தங்கத்தாலும்
மணிகளாலும் ஆனவை
ஆனால் -   
மலர்ந்த தேன் , கனி உட்பட
யாவும் இயற்கை போலவே தெரிகின்றதே
இது போல் எங்குமில்லை!

பாடல்-114:

இலங்கை கோபுரம் கண்டு - 
நீர் - நிலம் -நெருப்பு -காற்று - வானம்  
இவை ஐந்தும் தமது வளர்ச்சி
சிறப்பில்லை என உணர்ந்தன
மாமேரு மலை பார்த்தால் -   
நாணப்படுமோ...
உடல் முழுதும் வெளிறிப்போகுமோ..!

பாடல்-115:

சூரியன் -         
இலங்கை நகர் உச்சி மேல்
செல்லாமைக்கு காரணம்
“இராவணன் பயம்” என்பார்கள்
அது உண்மையல்ல -  
இலங்கை மதிலின் ஒளியால்
சூரியனின் கண்கள் வழுக்குகின்றன!

பாடல்-116:

மதில்கள்
எவ்வளவு உயரம் அமைத்தான்
இராவணன் கருத்தென்ன?
முன்பு ஒரு முறை - 
கயிலை மலை எடுத்தபோது
தேவர்களால்  தீங்கு வரலாம் என
தேவலோகத்தை விட உயர்மதில் அமைத்தான்
ஆகாயம் முழுதும் கடந்த
மதில் அமைத்துவிட்டான்!


பாடல்-117:

அழகிய மதில் கடந்து
மதிலின் உட்புறத்தில் காற்று புகாது
சந்திரக்கதிர்கள் புகாது
கூற்றுவன் ஆற்றல் புகாது
எனவே -  
தேவர்களும் புகமாட்டார்கள் என்ற வீண் வாதம்
அனைத்தும் அழித்து அத்தனையும் அழிந்து
அதன் பின் நிலைக்கும்
அறமும் 
இந்நகரில்  புகாது!

பாடல்-118:

மேகங்கள் - 
இலங்கைக் கடல் மீது படிகின்றன
இலங்கை அரண்மனை உயரம்
வானை எட்டுகிறது
இலங்கை நகரின் அமைப்பு
திருமால் - 
தனது உந்தியில் உண்டாக்கிய
அண்டம் போலிருக்கிறது.

பாடல்-119 :
இலங்கை நகரில் - 
பாடுவோர் பலர்
ஆடுவோர் அதனினும் பலர்
இசைக்கருவி இசைப்போர்
இன்னும் பலர் !
அரக்கர்கள் - 
தேவர்களை ஆட்டுவித்து
ஆடல் நிகழ்ச்சி கண்டு
ஆனந்திக்கிறார்கள்.

பாடல்-120 :
இலங்கை
ஆடல் கலைக்கும் புகழ் பெற்றது

தேவ மகளிர்
சிறப்பாக நடனம் ஆடுவர்
அவர்களை விட வித்தியாதர மகளிர்!
அவர்களை விட இயக்கர் மகளிர்!
அவர்களை விட அரக்கியர்!
இப்படியாக மிஞ்சிடும் நடனம் கண்டு
பிற நாட்டினர் வியக்கின்றனர்.

பாடல்-121 :

இழையும் அணிகலன்கள்
ஆடைகள்
சந்தனம்
எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை
நவநிதியங்கள்
ஏவலாளி போல் ஏந்தி
அரக்கர்க்கு கொடுக்கின்றன

இந்த போகம் குறித்து -   
வாயினால் வர்ணித்தால்
சொற்கள் சோர்ந்து போகும்
வாயும் சோர்ந்து போகும்
மனதால் நினைத்தால்
“ சாத்தியமில்லா ஒன்றை நினைக்கிறாயே ” என
மனம் அதனை
மாசு என்றுதான் சொல்லும்.

பாடல்-122 :

இலங்கை நகரம் -                             
நான்முக பிரம்மன் சிந்தனை !
மாமேரு மலை நவமணிகள் கொண்டு
தேவசிற்பி
விசுவகருமா
சிருஷ்டித்த உழைப்பு !

பாடல்-123 :

இலங்கையில்
வாசிக்கப்படும்
மகர வீணை நாதத்தில்\
கடலின் பேரொலி சிறிய ஒலியாக
கரைந்து விட்டது !
வான் தொடும் தம் கூந்தலுக்காக
மங்கையர்
ஊட்டிய சந்தனப் புகையில்
மேகக் கூட்டம் காணவில்லை

பாடல்-124 :

பளிங்கு மாளிகையில் காண்கிறேன்
பசுந்தேன் வழியும்
கற்பக மரச் சோலை  காண்கிறேன்
மதுவைக் குடித்து
ஆடிப்பாடும் அரக்கர்கள் காண்கிறேன்
கவலையில் ஒருவருமில்லை.

பாடல்-125 :

அரக்கியர்களுக்கு
அரக்கர்களே உயிர் போன்றவர்கள்
அதனால்  -
அரக்கியர்கள் தரும் - 
மது பருகினர்
இசை பருகினர்
செவ்வாய் அமுதநீர் பருகினர்
இனிய சொற்கள் பருகினர்
கடும் சொற்கள் பருகினர்
ஊடல் மாறியது
அதுவும் ஏற்றனர் 

                   --அனுமனோடு  மீட்போம்