Saturday, 23 April 2022

 நட 


காற்றை நோக்கி நட

உடனே கிடைக்காது தான்

ஆனாலும் நட

எதிர் வீட்டான்

பக்கத்து வீட்டான்

கழிவறைகள்

பூனை வரிசை

மாடுகள் நிற்றல்

தொழு நோயாளி பார்வை

செவி துளைக்கும் முதிர் கிழத்தனம் பேச்சு அடர்த்தி 

யாவையும் தாண்டி விடை பெற்று நடக்கப் பழகு

கிட்டலாம் ஒரு வேளை சிலீரெனக் குளிர்ந்து

மார்கழித் தன்மையுடன்

இளம் வெயிலால் சலவை செய்யப்பட்ட காற்று

நீ மறுமலர்ச்சி அடைய மறுமுனையில்

காத்துக் கிடக்கலாம்

எழுந்த எண்ணம் அதனை நிறுத்தாமல் போ

கிளம்பு 

காற்றுடன் கல





Sunday, 17 April 2022

 ஓம்.


14.4.2022 கோபுராபுரம் சென்று வந்தோம்.

ஆச்சர்யம்தான். அம்மை , பசு வடிவில் ( கோ) அவதரித்து, சிவம் தோன்றிட , பர்வதம் (மலைகள்) நிறைந்த இத்தலத்தில் தவம் புரிந்தமையால்,  “கோ பர்வதபுரம்” ஆகியுள்ளது. தற்காலத்தில் கோபுராபுரம் என்கின்றனர்.  

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274 ல் கோபுராபுரம் இக்கோவில் இல்லை. குருநாதர் சிவபிரகாச சுவாமிகளிடம் வினவினோம். தேவார நால்வர் வருகை தந்தும், பாடல்கள் செல் அரித்திருக்கலாம். அப்படிப்பட்ட தலம் இது என்றார்.  

விருதாசலம், பழைய பஸ் டெப்போ ஒட்டிய மண் சாலையில்  சென்றால், பாலக்கொல்லை செல்லும் வழியில் 8 கி.மீ பயணத்தில் வருகிறது மிக ஆச்சரியமான ஆதிபுரீஸ்வரி ஆதிபுரீஸ்வரர் கோவில். அம்மை நின்ற திருக்கோலம். பெருமான் உருவம் மிக வித்யாசமாக லிங்கம் பாணம் அற்று காணப்படுகிறது.

நந்திபாராயணர் என்பவர் மிகச்சிறந்த ஞானி யோகி. அவரது ஜீவ சமாதி, கோவிலின் சுற்று வளாகத்தில்  லிங்கோத்பவர் கோஷ்டம் எதிரே லிங்க வடிவில்  உள்ளது. அவரை இரு கரங்களும் குவித்து சசிவர்ணன் என்பவன் எந்நேரமும்  வணங்குகிறான். 


சசிவர்ணன் யார்? பாவம் செய்து செய்து அவன் பெயரைச் சொன்னாலே பிறருக்குப் பாவம் ஒட்டியது.  பாவங்களின் உச்சி ஆகிவிட்டான்.

கடைசியில் மிகப்பெரிய பாவங்கள் பலவும் செய்து வினைகள் துரத்த .நந்திபாராயணரை சரண் புகுந்தான். வணங்கி  இக்கோவில் குளத்தில் நீராடி முக்தி பெற்றதான ஐதீகம். இக்குளமே இன்று சசிவர்ண குளம்.

சசிவர்ணன் ., தான் எந்நேரமும் தொழும் நந்தி பாராயணர் மீது, சசிவர்ணன் இரண்டு நூல்கள் இயற்றியுள்ளார். அவை 1)மோக வதை பரணி 2)அஞ்சு அவத்தை பரணி என்பன. இவை வேதாந்த சாத்திரத்தில் (மொத்தம் 16) இடம் பிடித்துள்ளன. 

பரணி என்பது போரில் பாடப் படுவது இதை எப்படி ஏற்க முடியும் என அன்று நந்திபாராயணர் புகழ்பாடும் இந்நூல்கள் மறுக்கப்பட்டன.  ஒரே நேரத்தில் இங்கு வந்துள்ளோர் அத்தனை பேர் மனதையும் உனது குரு ஆட் கொண்டால், ஏற்கிறோம் என்றனர். 

ஷண நேரத்தில் அனைவரும் நந்தி பாராயணரால் யோக நிஷ்டை கூடினர். 

பிறகு அரசன் நம்பி ஏற்றான். நந்தி பாராயணர் சக்தி நமக்கும் வர வேண்டுவோம்.


கோபுராபுரம் கோவிலில் எத்தனை அமைதி ! எத்தனை சிலைகள். சிவம் கொடி பறக்கிறது அங்கே. மனதில் படரும் அமைதியோடு திரும்பினோம்.



 

   










Sunday, 10 April 2022

 புரிகிறது..


தோட்டச் செடியைப்பார்த்தேன்.. என்ன செடியோ?

என்ன பெயரோ...?

சிந்தித்தாலும் தெரியவில்லை

பெயர் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்

பெருங்கூட்டத்தில் வயலின் வாசிக்கும் ஒருவனின் இசை போல

தனிப்பெயர் இல்லையென்றாலும் அது வாழ்கிறது

பூமிக்கு அனுப்பியாகிவிட்டது இருந்தாக வேண்டும் அது

நம் பயன் என்ன ?

நாம் ஆற்றும் செயலின் பயன் எங்கு போகிறது?

எதுவும் தெரியாது சொல்லப்படுவதில்லை நமக்கு

வாழ்ந்தாக வேண்டும் .. யாருக்காகவோ .. 

எதற்கோ..எங்கோ.. ஆனால் சந்தோஷமாக!