Thursday, 30 January 2014

சுந்தர காண்டம் -(901 - 925)






பாடல் 901:

மிகப் பெரிய நீண்ட மலை பெயர்த்து எடுத்து
ஆயிரம் தேர்களை
மண்ணில் தேய்ப்பான் அரைப்பான்
“ஏ” என்ற உச்சரிப்பு முடிவதற்குள்
ஒரு மரம் பெயர்த்து எடுத்து
ஆயிரம் யானைகளை அடித்து அழிப்பான்.

பாடல் 902:

அனுமன்
கொடிய யானைகளை கலக்குவான்
தேர்களை மிதிப்பான்
வலிய குதிரைகளைத் தேய்ப்பான்
அரக்கர் தலைகளில் குதிப்பான்
கடிப்பான் குத்துவான்.

பாடல்-903:

அனுமன் ஆகாயத்தில் நிறையுமாறு வீசுவது
குதிரை பூட்டிய தேர்களை, யானைகளை!
அனுமன் ஒன்றாகப் பிசைவது
கடிவாளத்துடன் பாயும் குதிரைகளையும் வேல்களையும்!




பாடல்-904:

நெருப்புப் பொறியென சினந்த கண்கள் கொண்ட யானைகளை
ஆகாயத்தில்
அனுமனது பெரும் கைகள் வீசினான் அனுமன்
கடலில் யானைகள் வீழும் போது
பாய் மரங்களோடு
பெரும் கப்பல்கள் மூழ்குவது போலிருந்தன.

பாடல்-905:

கிண்கிணி மாலை அணிந்த குதிரைகள்
அழகிய சக்கரங்கள் அணிந்த தேர்கள்
அனுமன் வீசி எறிய
கடலில் விழுந்தபோது
சூரியனது தேர்கள் போல இருந்தன.

பாடல்-906:

அனுமன் வலிமையால்
தன் வலிமை இழந்த குதிரைகள்
இரத்தம் பெருகி வானில்  முட்டிக்கொண்டன
கடலில் வீழ்ந்து அழுந்திய குதிரைகள்
வாயில் நெருப்பு கொண்ட
வடவை எனும் பெண் குதிரை போல் உள்ளன.



பாடல்-907:

அனுமனின் வாலினால் கட்டப்பட்டு
வெகுதூரம் விரிய கடலில் வீசப்பட்டு
கடல் நீரில் உழலும் அரக்கர்கள்
வாசுகி எனும் பாம்பு சுழற்றிய
மந்தரமலைக்குச் சமம்!

பாடல்-908:

அனுமனின் பெரிய கைகள் எடுத்துவீசிய
மதநீர் யானைகள்,
தேர்கள்,
குதிரைகள்
அச்சம் தரும் கடலில் வீழும் முன்னரே
அவை சிந்திய
இரத்த ஆறுகள் கடலில்  கலக்க முந்திக்கொண்டன.

பாடல்-909:

அந்தப்போர்க்களம் கண்ட அரக்கர்களின் பிணங்களுக்கு
பிறைச்சந்திரன் போல கோரப்பற்கள்
குகை போன்ற வாய்கள்
கறை செய்யும் இரத்தப்பெருக்கு
நெருப்புப்பொறி விழிகள்!
அளவிலும் பெரிய பிணங்கள்
வானைத்தொடும் தோரணவாசலை மூடி மறைத்து விட்டன.

பாடல்-910:

அனுமனுக்கு எல்லாமே ஆயுதம்தான்
குன்று இருக்கிறது
மரம் இருக்கிறது
“எழு” எனும் இரும்புத்தடியும் ஒன்றல்ல ! பல உண்டு
உயிர் உண்ண எமனும் உள்ளான்
ஐயன் அனுமனின் கையால் இறப்பது தவிர
வேறிடம் செல்ல முடியுமா அரக்கர்களால்!

பாடல்-911:

மும்மூர்த்திகளில் முதல்வன்
நெற்றிக்கண்ணன்
முருகனின் தந்தை
சிவபெருமானின் கையில் மழு இருக்கும்
அரக்கர் கூட்டம் அழித்த
அனுமனின் கையில் இப்போது எழு இருக்கிறது

பாடல்-912:

அரக்கர் சேனை காய்ந்தது உலர்ந்தது
உவகை அடைந்தனர் தேவர்கள்
கடல்சூழ் இலங்கை மக்கள் அழுகுரல்
கடல் ஓசையில் கலந்தது அப்போது
சேனைத் தலைவர்கள் ஐவரும்
அனுமனை நெருங்கினர்.

பாடல்-913:

இரத்த வெள்ளம் நடுவே உள்ள மேடுகள்
விரைய முடியாத தேர்களைத் தடுத்தன
அம்மேட்டையும் தாண்டி வந்த ஐவர்
அஞ்சனை மைந்தன் அனுமனை அணுகி எதிர்த்தனர்
போர் முழக்கம் செய்து
பல்லாயிரம் அம்புகளால்
அனுமனைத் தூர்த்தார்கள்!

பாடல்-914:

ஐவரது அம்புகளையும்
எளிதில்
அனுமன் நொறுக்கினான்
ஐவரில் ஒருவனின் தேரில் குடைந்து ஏறி
அம்புகள் இயக்கும் கடும் இயந்திரத்தை அழித்தான்.

பாடல்-915:

ஓடும் தேர்
உள்ளே புகுந்தான் அனுமன்
தாக்குதல் வரும் முன்பே
தேர் சிதையும் முன்பே
அதிலிருந்து வானுக்கு உயர்ந்தான்
“தூர்த்தரன்” எனும் சேனைத் தலைவன்
 அனுமன் இரும்புத்தூணால் அடிக்க
வில்லினால் தடுக்கின்றான் துர்த்தரன்.

பாடல்-916:

துர்த்தரன் தடுத்த வில் முறிந்துவிட்டது
முறிந்த வில்லையே
அனுமன் மீது எறிந்தான் பிறகு மலை எடுத்து வீசினான்
போர் நுணுக்கம் மிகு அனுமன்
இரும்புத் தூணால் மலை தடுத்தான்
இரும்புத்தூணால் அவன் உயிர் உண்டான்.

பாடல்-917:

மீதி இருக்கின்ற நால்வரும் மோதினர் அனுமனை
இறுதிக் காலத்து தீ நாக்குகள் போல கொதிப்பாகினர்
வில்கள் வளைத்து அம்புகள் செலுத்த
புகைந்தன கண்கள்
அனுமன் தோள்களில்
இரத்தப் பெருக்குகள் கீழே வடிந்து இறங்குகின்றன.

பாடல்-918:

வீரன் அனுமனும் உள்ளம் கொதிப்பானான்
மாய அரக்கர் பலம் உணர்ந்தான்
நெருப்பு கக்கும் கல் பாறை ஒன்றை எடுத்து வீச
தீயவர் நால்வரும் அதனை
பொடி செய்து விட்டனர்.


பாடல்-919:

அரக்கர்கள் செலுத்திய வில் இனம்
அனுமன் மார்பில் பரந்து
அப்பால் எகிறிப்பறந்து போயின
நால்வரில் ஒருவனாகிய விருபாட்சனை
தேரோடு பிடுங்கி
ஆகாயத்தில் வேரோடு வீசினான் அனுமன்.

பாடல்-920:

அனுமன் வீசிய தேர்'
ஆகாயம் முழுதும் நீந்தியது
அத்தனை வேகம் !
ஓய்ந்து வீழும் முன்
தேரிலிருந்து நிலத்தில் குதித்தான் விருபாட்சன்
பாய்ந்த அரக்கன் மேல் மாருதி பாய்கிறான்.

பாடல்-921:

மதயானை மீது
கொடிய ஆண் சிங்கம் பாய்வது போல
வீராதி வீரன் அனுமன் குதித்தான்
பெரும் மலை போன்ற உடம்பினை சிதைத்தான்
குழம்பாக்கினான் கால்களால் மிதித்தான்




பாடல்-922:

உயிருடன் இருந்த மூவரும்
பெரும் சினமுடன் தேர்கள் செலுத்தி
அனுமன் மீது அம்புகள் தொடுத்தனர்
“இனி எங்கு ஓடுவாய்?” என
அனுமன் எதிரே சென்றனர்.

பாடல்-923:

திரண்டு உயர்ந்த தோளுடைய அனுமன்
அஞ்சனை பெற்ற சிங்கமாம் அனுமன்
காவல் மிக்க தேவர்களும் அஞ்சிட
ஒரு காரியம் செய்தான்
வலிமையான மூன்று தேர்களில்
இரண்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

பாடல்-924:

எடுக்கும்போதே -
தேவர்களின் குதிரைகளும் பாகர்களும் இறந்தனர்
பருத்த தோள் அரக்கர்கள் இருவரும் தப்பித்து
வானில் புகுந்து மறைய முயன்றனர்
அனுமன் தாவி அவர்களை அடைந்தான்



பாடல்-925:

அரக்கர்கள் இருவரின்
கொடிய வில்களை கையால் முறித்து
அம்பறாத்துணிகளை  அழித்து
அம்புகளையும் அழித்த பின்
வெம்படை இல்லாத இருவரும்
வானில் நின்று அனுமனுடன்
மற்போர் துவக்கினர்.

--அனுமனோடு மீட்போம்.

Saturday, 25 January 2014

சுந்தர காண்டம் - ( பாடல் 876 - 900 )



பாடல்-876:

சக்கரத் தேர்கள் எண்ணிக்கை ஐம்பதினாயிரம்
முகபடாம் அணி யானைகள் ஐம்பதினாயிரம்
பிரளய காலக்காற்று வேகக் குதிரைகள் ஒரு லட்சம்
வலிய தோள்கள் சிறந்த ஆயுதங்கள் கொண்ட
காலாட் படை வீரர்கள் இரண்டு லட்சம்.

பாடல்-877:

சேனைத்தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம்
சேனைக்கூட்டம் வருகின்றது
வெள்ளம் போன்ற தொடர்ச்சியுடன்!
சுடர் வீசும் ஆயுதத் தயாரிப்புகள்
ஒன்றோடு ஒன்று மோதி உராய்ந்து
நெருப்புப் பொறிகள் பிறந்தன
மேகங்களுக்கு சூடு போட்டன!

பாடல்-878:

அலங்கரித்த சிறந்த குல யானைகளின்
பக்கவாட்டில் தொங்கும் மணிகளின் கூட்டம்
எழுப்பும் ஒலி
மேக இடிகளுக்குச் சமம்!
திடீரென நோக்கினால்
கருமேகங்களிடையே சூரியன் போல தெரிகின்றன
அவை என்ன ?
யானைகளின் கருவிழிக்கூட்டமும்
யானைகளின் கன்னங்களில் பதிந்து
குளிர் இரத்தினக் கூட்டமும்!



பாடல்-879:

“இதுவரை
அனுமன் என்ற குரங்குடன் போர் செய்தவர்கள்
யாரும் உயிருடன் திரும்பவில்லை
உயிர்தர விருப்பமெனில்
நாங்களும் உயிர்விட வருகின்றோம்” என அழு குரல் கேட்டது
வீரர்களின் சுருண்ட கூந்தல் கொண்ட மனைவியிடமிருந்து!
வீரர்களை அவர்கள் மட்டும் தடுக்கவில்லை
சுற்றத்தார்களும் தடுத்தனர்
தாய்மார்கள் தடுத்தனர்.

பாடல்-880:

ஐந்து படைத்தலைவர்கள்
பஞ்ச பூதங்களின் கூட்டல் போல உள்ளது !
“உடல்கள்  மேக வரிசை பெற்றதோ ” என்ற
உவமையை வென்றவர்கள்!
தம்மைச் சுற்றி பரவி நிற்கும் கடலில்
கலந்தார்கள் ஐவரும்!
சூரியன்
நுட்பமான தேரில் வருவது போல
படையோடு வருகின்றனர்!

பாடல்-881:

முன்புறம் வாத்தியங்கள் ஒலிக்கின்றன
சேனைத்தலைவர்கள் ஐவருக்கும்
கோபக்கனல் பொறிகள் சிதறுகின்றன
அம்பு பூட்டிய வில்களை
வளைக்கும் விரல்களும் நாண்களும்
இடி போல் தெறிகின்றது
புகழத்தக்க முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்
அடங்கி நடுக்கும் புலன்கள் போல
ஐந்து படைத்தலைவர்களும்
படையில் பொருந்துகிறார்கள்.

பாடல்-882:

ஐந்து நபர்களின் வலிமையை இப்படிச் சொல்லலாம்
இந்திரனது  வச்சிராயுதம்
வருணனின் வலிய பாசம் (எனும் கயிறு)
எமனது கூரிய தண்டாயுதம்
சிவனது ஒப்பற்ற சூலம்
சேனைத்தலைவர்கள் ஐவரையும்
ஊசிக்குத்தும் அளவு கூட
எதுவும் செய்ய இயலாது
ஆம்! அவ்வளவு வலிமை மிக்கவர்கள்!

பாடல்-883:
அந்த ஐந்து சேனைத்தலைவர்களின்
நெற்றிச் சுட்டிகளில்
முறுக்கித் செருகப்பட்டவை எவை தெரியுமா?
சூரபத்மனைக் கொன்ற முருகனின் மயில்சிறகுகள்
உலகையே படைத்த
பிரம்மனின் அன்னச் சிறகுகள்!


பாடல்-884:

அந்த ஐவரும்
பொன் மார்பு அணிகல இராவணனுடன் போரிட்ட
திசை யானை தந்தங்களை அறுத்து
தங்கள் காதணியாக தரித்தவர்கள்!
திசை யானைகளின் முகபடாம் கொண்டு
மின்னல் ஒளித்தொகுப்பு போல செய்த
வீரப்பட்டம் தரித்தவர்கள்


பாடல்-885:

நிதி நெடும் கிழவன் குபேரன் ஆவான்
அவன் நகர் அளகாபுரி
புற முதுகுகாட்டி குபேரன் ஓடினான் இராவணனிடம்
அப்போது
அங்கிருந்த பொன் அணிகலன் மூட்டைகளை
பஞ்ச சேனாதிபதிகள் அணிந்திருக்கிறார்கள் இப்போது.

பாடல்-886:

ஐவரும்
இந்திரனையே தோற்கடித்துள்ளனர்
வலிமை தந்தங்கள் கொண்ட ஐராவதம் எனும் யானையுடன்
தப்ப முயன்றான் இந்திரன்
யானை வால் பிடித்து
“வல்லமை இருந்தால் செலுத்திச் செல்” எனத்
தடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

பாடல்-887:

உலகத்தவர்கள்
இராவணன் நோக்கி
“விதியை நிறுத்தி ஆட்சி செய்யும் எமன்
உன் ஆட்சியை நினைக்காமல் விட்டு விட்டானே” என்றனர்
இதனால்
கருநீல நிற இராவணன் கோபம் தணிய
ஐவரும்
எமனின் கையும் காலும் கட்டியவர்கள்!

பாடல்-888:

சேனைத்தலைவர்கள் ஐவருக்கும்
மலைகளை கேலி பேசிடும் மார்புகள் உண்டு
கடல் அலைகளை கேலி பேசும் நீண்ட தோள்கள் உண்டு
கொலைத் தொழிலில் எமனையே மிஞ்சியவர்கள்
நெருப்பைக் கக்கும் கண்களோ
கொல்லனின் உலைகளையே கேலி பேசும்.

பாடல்-889:

சேனைத் தலைவர்கள் ஐவரின் ஆற்றல் இது:
திசை யானைகள்
உலகையே சுற்றிக் கொண்டாலும்
முழக்கமிடும் தீ
பேரொலியோடு வந்தாலும்
ஊழிக்காற்று வீசினாலும்
பெருங்கடல்கள் பொங்கினாலும் அடக்குவார்கள் !
பாடல்-890:

இப்படிப்பட்ட புகழ் மிக்க ஐவர்
அனுமன் இருக்கின்ற
தோரணவாயில் அடைந்தனர்
அணிவரிசைப்படி படைகளை நெருக்கினர்
ஐயன் அனுமன்
 “அமைய” நோக்கினான்.


பாடல்-891:

திடீரென அனுமனை நோக்கும்போது
இந்திரனும் தேவர்களும்
இரக்கமும் துன்பமும் அவலமும் கொண்டார்கள்
“அளவிலா அரக்கப்படை முன்பாக
ஐவர் தலைமை முன்பாக
மாருதி
தனிமைத் தன்மையுடன் இருக்கிறானே!” .

பாடல்-892:

தன்னைச் சுற்றி முற்றிலும் நிற்கின்ற
முடிவிலாத சேனையை
சுற்றிலும் பார்த்துவிட்டு
அனுமன்
தன் தோளையும் நோக்கினான்.
“இந்தப்பகலே இவர்களுக்கு  கடைசி” என
கற்று உணர் மாருதி மனம் களித்தான்.


பாடல்-893:

எண்ணிலாத அரக்கர்கள் சந்தேகப்பட்டனர்
“சிறிய தலை உடைய இந்த குரங்கு தானா
தேவர் புகழை வேரோடு களைந்தது!
அரக்கரைத் திருகித் தின்றது!” என அசந்தனர்.

பாடல்-894:

அனுமன்
இந்திரன் தலைநகர் அமராவதியிலிருந்து
அசோகவனத்திற்கு கொண்டு வரப்பட்ட
சிவந்த ஒளி கொண்ட
தோரண வாயில் உச்சியில் இருந்தான்
மிகுந்த உச்சியான ஆகாயமும் கடக்கும் விதமாக
பெரிய வடிவம் எடுத்துக் கொண்டான்.

பாடல்-895:

தீமையே செய்யும் அரக்கர் இனம்
சும்மா இருக்குமா?
வீங்கிய வீரனை வியந்து நோக்கியது
வில்லை வளைத்து அனுமன் மீது அம்புகள் வழங்கியது
ஏங்கிய சங்குகள் ஒலித்தன
இடித்தன முரசுகள் ஒலி!


பாடல்-896:

எறிந்தார்கள்
எய்தார்கள்
எண்ணிக்கையே சொல்ல முடியாத அளவுக்கு
ஆயுதங்கள் எறிந்தார்கள்
அவை
அனுமன் உடலின் மயிர்ப்புறம் சேர்ந்தன
தினவு தீருபடி சொறிந்தன
ஐயன் அனுமன் ஆனந்தமாய் அனுபவிக்க!

பாடல்-897:

ஒன்று சேர்ந்த அரக்கர்கள் திரண்டார்கள்
வெறியுடன் மோதினார்கள்
செருக்குடன் தாக்கினார்கள்
“இப்போது இவர்களை விரைந்து தாக்குவேன்
அப்போதுதான் மற்ற அரக்கரும்
என்னிடம் மோத வருவார்கள்” என நினைத்த அனுமன்
“எழு” எனும் இரும்புத்தடி எடுத்தான்.

பாடல்-898:

அனுமன் அடியில் நொறுங்கி வீழ்ந்த பட்டியல் இவை :-
சிவந்த கண் அரக்கர்கள்
அவர் தம் ஆயுதங்கள்
தாக்க வந்த குதிரைகள்
தடுத்த தேர்கள்
மேக வரிசை போன்ற யானைகள்.

பாடல்-899:

பெருகும் மதநீர் யானைத்தந்தங்கள் பறிப்பான்
பறித்து
யானைகளின் தோள்கள் சிதைப்பான் அனுமன்
சிதைத்த தேர்ச்சக்கரங்களால்
போர்வீரர்களை உருட்டுவான்
வீரர்கள் வாளினால்
கிண்கிணி மாலை அணிந்த
குதிரைகளைத் துண்டாக்குவான்.

பாடல்-900:

அனுமன்
தன் இரு கைகளிலும்
இரண்டு  தேர்கள் ஏந்தி
இரண்டு யானைகள் இறக்கச் செய்வான்
இரண்டு பெரிய யானைகள் ஏந்தி
இரு பக்க குதிரைகளில் மோதுவான்.

--அனுமனோடு மீட்போம்.

ஓ! மாமன்ன சரித்திரமே.. உடையாளூர் வாழ் தெய்வமே








 அன்று முதல் இந்த வினாடி வரை எண்ணி எண்ணி பெருமிதப்பட நமது சரித்திரம் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் தந்துள்ளது, இருந்தாலும் எண்ணி எண்ணி அழுவதற்கும் - நெஞ்சம் குமுறுவதற்கும் சில இடங்கள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முதலிடம் இதற்குத் தரலாம்.
நமது இதயத்தின் அலட்சியத்தை - தமிழர்களின் சரித்திரம் போற்ற அறியாத பேதமையை - தடித்தனத்தை - சுட்டிக்காட்டுகின்றது  வரலாற்று முக்கியத்துவமான இந்த இடம். ஆம். சரித்திரத்தின் மாபெரும் பெருமையாம் ராஜராஜ சோழன் நினைவிடம் தான் நீங்கள் காணும் போட்டோ. கும்பகோணம் அருகில் தாராசுரம் தரிசித்துவிட்டு அப்படியே இருபது நிமிஷப்பபயணத்தில் உடையாளூர் சென்று பார்க்கலாம். நிறைய வீடுகள் நடுவே சிறிய கீற்று கொட்டகையில் மாலை ஏழு மணி சுமாருக்கு என் மகன் அருண்சித்தார்த் எடுத்த புகைப்படம் இது ( 15.1.2014). அந்த மகா மன்னனின் தஞ்சை கோவிலுக்காக அப்படி இப்படி என்று மார்தட்டும் தமிழினம் இராஜ இராஜ சோழனின் நினைவிடத்தை இப்படி விடலாமா? வாய்விட்டு அழலாம் போலிருந்தது.

Friday, 17 January 2014

காணுக தைப்பூச விழா!









“அருட்பெருஞ்சோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி” என்று வடலூர்  சாலை முழுதும் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். வெண் ஆடை உடுத்திய உடலில் திருநீறு அணிந்த மனிதர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். கூப்பிட்டு கூப்பிட்டு சாப்பாடு போடும் தனித்த கனிவு வடலூரில் நிகழ்கிறது. பலப்பல  ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்து அன்னதானம் செய்வது சகஜமாகக் காணலாம். ஏன்?
இன்று வடலூர் தைப்பூசம். ஆம். வள்ளல்பெருமான் என்கிற மகாசித்தர் இன்றுதான் முத்தேக சித்தி பெற்றார். அதாவது தனது மூன்று உடல்களையும் துறந்து - இனி எல்லா உடல்களிலும்  இருப்பேன் என வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் அருட்பெரும்ஜோதி ஆனார் . பூச நட்சத்திரம். தை மாதம்.                      
சத்திய ஞான சபை உள்ளது. மாய வாழ்வின் ஏழு திரைகள் விலக்கி காட்டப்படுகிறது.நமது  மூளையே சிற்றம்பலம். அம்பலக்கூத்தன் நமது அஞ்ஞானத்திரைகள் விலக்கி நமது ஆன்மா நமக்கே புலப்பட்டால் அப்போது திருச்சிற்றம்பலம் ஆகிறது.
வள்ளல் பெருமான் சொன்னவை செய்தவை எழுதியவை எல்லாம் தண்ணீர் போல் எளிமையாக இருக்கும். ஆனால் உணர்வதற்கு ஒரு தாகம் தேவைப்படும். அந்த தாகம் அவர் நமக்குத் தருவது. அது வரை வடலூரில் நிகழ்வன மேலோட்டமான ஒரு செயலாகவே நம்மை மூடிவிடும். திரைகள் விலகுவது அத்தனை எளிதா! எத்தனை பிறவிகளாக வளர்த்துவிட்டோம்! அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஆட்கொள்வீர் என கரைந்து அழுவது தவிர வேறென்ன குறுக்கு வழி இருக்கிறது. “வாய்த்தது நமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” - திருநாவுக்கரசு சாமிகள்.

சுந்தர காண்டம் 851 - 875


பாடல் -851:

கொடி பறக்கும் தேர்கள்
குதிரைக்கூட்டங்கள்
அனுமன் ஒரே கையால் தேய்க்கப்பட்டு அழிந்தன
தந்தங்களுடன் சினமுடன்
வலிய மலை போன்ற யானைகள்
இன்னொரு கையினால் பிசையப்பட்டு அழிந்தன.

பாடல்-852:

கறுத்த அரக்கர்களை
கோரப்பற்கள் உடையவர்களை
பாசக்கயிறு கொண்டவர்களை
சின நெருப்புடன் விழிப்போரை
மழு ஆயுத நிபுணர்களை
கண்டோருக்கு எமன் போன்றவர்களை
பெருமுழக்கம் செய்வோரை அழிப்பதில்
தனித்தனியே அழிக்கும் சிவன் போல இருந்தான் அனுமன்.

பாடல்-853:

எது எது கலக்கக்கூடாதோ
அத்தனை கழிவும் கலந்த காட்சி அது
சக்கரங்கள் தோமரங்கள்
உலக்கைகள் கதாயுதங்கள்
கூரிய வாள்கள் எண்ணிலாத தேர்கள்
குதிரைகள் குடைகள் கலந்து கிடக்கின்றன!
இது மட்டுமல்ல -
இரத்த வெள்ளத்தின் அலைகள்
நீண்ட துதிக்கை யானைகளை உருட்டி
கடலில் தள்ளுவதும் நடந்தது!

பாடல்-854:
அனுமன் வீசிய இரும்புத்தடியால்
வெட்டுப்பட்ட தலைகள்
வான் வரை சென்று
மலையில் மோதி
திசைகளைத்  தழுவி
போர்க்களத்தில் கிடக்கும் தலைக்கூட்டத்தில்
அடிபட்டு உடைந்தன
தட்டுமுட்டு சாமன்களைப் போல ஆடின.

பாடல்-855:

இப்போது மிஞ்சியவன்
எமன் போன்ற சம்புமாலி மட்டுமே!
காட்டில் வாழும் யானைக்கூட்டங்கள் முழுதும்
சிங்கத்தால் கொல்லப்பட்டப்பிறகு
எஞ்சி நிற்கின்ற
ஒரே ஒரு மலை யானை போல் நிற்கின்றான் சம்புமாலி
கண்களில் தேன் நிற சிவப்பு ஆனால்
அத்தனையும் சின விஷம்!



பாடல்-856:

காற்றைக்காட்டிலும் விரைவு கொண்ட
கடிவாளம் பூட்டிய இறந்த குதிரைப்படைகளின் இரத்தசேறு
இறந்த அரக்கர்களின்  இரத்த சேறு
நிணம் படிந்த மண் சேறில்
இரதங்களின் சக்கரங்கள் உழண்டு சிக்கின
இரத்த சகதி படாத இடம் எதுவுமே இல்லை
என்றாலும் போரிட்டே தீர
இரங்கத்தக்க சம்புமாலி வருகிறான் போரிட!

பாடல்-857:

அனுமன் உடலின் புண்கள்
பூக்கள் பூத்த மரம் போலிருந்தன
சம்புமாலியை நோக்கி
“உன்னிடம் ஆயுதமும் ஒன்று தான்
உன்னிடம் தேரும் ஒன்று தான்
இறப்பதைத் தவிர வேறென்ன செய்வாய்?
உன்னுடன் வந்தவர்களை
காக்கும் வல்லமை இல்லாத உன்னை
வலிமையற்ற உன் உயிர் அழித்தல்
நீதியல்ல! போ!” என்றான் அனுமன்.

பாடல்-858:

“நன்று ! நன்று! உன் கருணை!”
நெருப்பு போல சிரித்தான் சம்புமாலி
இறக்கிறவர்களின் ஒருவன் என
என்னை நினைத்தாய் போலும் என்றான்
வலிமையும் திண்மையுமான வயிரம் போன்ற வில்லினால்
கூர்மை வாய்ந்த ஒளி வீசும் அம்புகளை
ஒவ்வொன்றாக
பத்து பத்தாக
நூறு நூறாக
லட்சம் லட்சமாக
அனுமன் மீது பாய்ச்சினான்.

பாடல்-859:
“செய்! செய்! வில்லுடன் வா!
உன் வில் ஆற்றல்
வெறுங்கையுடன் திரிவோரை வெல்ல
உனக்கு உதவும்
இரும்புத்தடி கொண்ட என்னை
வெல்ல உதவுமா?” என முறுவலித்த அனுமன்
மழையை
காற்றின் வலிமை
சிதறடிப்பது போல
அம்பு மழையைத் தடுத்தான்.

பாடல்-860:

சம்புமாலிக்கு
தன் முயற்சியின் தோல்வி புரிந்தது
மிகவும் கோபமானான்
அனுமனைத் தனது தேருடன் நெருங்க முயன்றான்
முடியவில்லை!
அனுமனின் இரும்புத் தடி எனப்படும்
எழு என்ற ஒன்றை
மழு போன்ற முனை உடைய
அம்பினால் அறுத்தான்.

பாடல்-861:
தனது “எழு”எனும் இரும்புத்தடி வீழ்ந்து
மனம் சலித்த அனுமான்
ஒரே கையினால்
சம்புமாலி அம்புகளைத் தடுத்தான்
தேவர்கள் ஆர்ப்பரிக்க
சம்புமாலியின் தேருக்குள் புகுந்து
அவன் வில்லை பிடுங்கினான் அனுமன்
மலை போன்ற அவன் தலையை
வில்லை மாட்டி
மண்ணில் இழுத்துத் தள்ளினான்.

பாடல்-862:

அனுமன்
தேரிலிருந்து குதித்த போது
தேர் பாகனும்
தேர்க் குதிரைகளும் குழம்பாகிட மிதித்தான்
அசோக வனச்சோலையைக் காப்பவர்கள்
அனுமனுக்கு பயந்து
போர்க்களம் விட்டு நகர்ந்து
இராவணனிடம் சொல்ல ஓடிச் சென்றனர்.

பாடல்-863:

இரத்தப் பேராறு பரவியது
அரக்கர்களை இழுத்துச் சென்று
அரக்கியர் வீடுகளில் வீசியது
நிலை குலைந்தது இலங்கை
அந்நகரமே அழுதது
“இன்று தான் அரக்கர் குலம்
அனுமனால் வலிவிழந்தது” என அறக்கடவுள் மகிழ்ந்தது.

பாடல்-864:

புகார் சொல்ல ஓடி வந்தவர்கள்
இராவணனிடம்  ஏதும் சொல்ல முடியாமல்
விக்கிவிக்கி அழுதனர்
அஞ்சி ஏங்கினர் இராவணன் சிரித்தான்
“அஞ்சாதீர்” என்றபின்
“சம்புமாலியும் இறந்தான் ஒருகுரங்கினால்”
என்று சொல்லி முடித்தார்கள்.


பாடல்-865:

எரிந்து பெருகி
கிளம்பும் கோபம் கொண்ட இராவணன்
நினைக்க நினைக்க
அவன் விழிகள் இரத்தக்குமிழிகள் உமிழ்ந்தன
“நானே அக்குரங்கை பிடிப்பேன்” என்றான்
அப்போது சேனைத்தலைவர்கள் வந்தார்கள்
ஐவரும் இவ்வாறு தெரிவித்தனர்.

(சம்பு மாலி வதைப்படலம் முற்றிற்று)

பஞ்ச சேனாதிபதி வதைப்படலம்
பாடல்-866:

விருபாட்சன், யூபாசன், துர்த்தரன்
பிரகசன், பாசகர்ணன் என்கிற
ஐந்து சேனைத் தலைவர்கள் அவர்கள்
இராவணன் நோக்கி கூறினார்கள்:-
“திறலோய்!
சிலந்தியைப் பிடித்து உண்ணும்
ஒரு குரங்குடன் நீ போர் புரிவதா?
திசையானைகள்
கண் பொறி பறக்க முன்பு போரிட்டாய்
அப்போது
மழை பொழியாமல் மலைகள் வறண்டது போல
மதநீர் வற்றிப்போயின யானைகள்
இப்போது நீயே போரிடப் போனால்
மீண்டும் மதநீர் பெருகிவிடும்!”




பாடல்-867:

கொடும் கோபமும்
அழகிய இறகுகளும்
பெருகிய வலிமையும் மிக்க கருடன்
கொசுவுடன் போரிடலாமா?
அப்படி நீ சென்றால்
உன்னால் பெயர்த்து எடுக்கப்பட்ட கயிலைமலை
இரவும் பகலும் தொங்கி அசையும் உன் தோள் மாலை எண்ணி
அஞ்சி நடுங்கிய கயிலை மலை
கவலையற்று விடும்!

பாடல்-868:

ஒரு குரங்குடன் போர் புரிவதா?
என்ன நன்மை கிட்டும் அதனால்?
இதை விட ஏது இழிவு?
உன்னால் வலிமை அழிந்த மும்மூர்த்திகள்
உன்னால் பெருமை இழந்த மும்மூர்த்திகள்
மீண்டும் பெருமை அடைய முடியாத மும்மூர்த்திகள்
ஏளனமாக புன்முறுவல் பூப்பார்களே!

பாடல்-869:

“அரசே ! இதுவரை
தக்க ஆள் பலம் இல்லை என நினைத்து
மெலியோரை அனுப்பிவிட்டாய்
நன்மை காண விரும்பினால்
எம்மை அனுப்ப விரும்புக” என
கைதொழுது வேண்டினர்
அரக்கனும் இசைந்தான்.

பாடல்-870:

உடனே
ஐவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
மூவுலகுக்கும் முதன்மை பெற்றது போல!
நெற்றித்திலகம் மண்ணில் பட
இலங்கை வேந்தனை வணங்கினர்
அரண்மனை நீங்கினர்
கட்டளை இட்டார்கள் இப்படி
“எண்ணிலாத தேர்கள் வரட்டும்
யானைகள் வரட்டும்
குதிரைப்படைகள் வரட்டும்
அரக்கர் படை எழட்டும்”

பாடல்-871:

யானை மேல் அமர்ந்து
அரச கட்டளைகள்
வள்ளுவர் மூலம் முரசு அறையப்பட்டது.
அதற்கெனவே காத்திருந்தது போல
அரக்கர் சேனை பரவியது
நுரைத்த கடல் போல!
பெருமழை மேகம் போல
முரசுகள் முழங்கின!
போர்க்கருவிகள் எங்கும் பளபளத்தன
நட்சத்திர வானில் மின்னல் போல!

பாடல்-872:

அரக்கர் சேனையின் வெண் கொடிகள் உயர்ந்து
மேகங்களைக் குத்தின
ஆகாய கங்கை அலைகள் போல
வெண் கொடிகள் உள்ளன.
அந்தக் கொடிகளின் மிக விரைவான அசைவு
எவரும் மாற்ற முடியா புகழ் மிக்க அனுமனின்
சினப்போரினால்
ஆயுட்காலம் இழந்துவிட்ட
பகைவரின் புகழ் போல இருந்தது!

பாடல்-873:

அரக்க வீரர்கள்
பொன் பொருந்திய
வீரக்கழலை காலில் அணிந்து
அம்புகள் கொண்ட அம்பறாத்துணி
முதுகில் தரித்து
கவசம் அணிந்தனர்
சேணம் பூட்டிய குதிரைகளும்
தேர்களும் யானைகளும்
போருக்காக அலங்கரிக்கப்பட்டன.

பாடல்-874:

யானையின் மதநீர்ப்பெருக்கு
ஆறு  செய்தன
தேர்ச்சக்கரங்கள் உருண்டு
சேறு செய்தன
குதிரைக் குளம்புகளோ
நீறு எனும் புழுதி செய்தன
குதிரைகளின் வாய் நுரைகள் வீழ்ந்தும்
மீண்டும்
நீறு
சேறு ஆகின.

பாடல்-875:

தேர்களின் இடிப்பு ஒலி
குதிரைகளின் மூச்சொலி
முழங்கும் களிறுகளின் அதிர்வு ஒலி
மொய்க்கும் வீரர்கள் கழல் ஒலி
பல இசைக்கருவிகள் ஒலி
யாவும் கூடிய ஒலி
பிரளய காலக்கடல் ஒலியை விட
மூன்று மடங்கு அதிகம் கேட்டது.

--அனுமனோடு மீட்போம்.


Friday, 10 January 2014

சுந்தர காண்டம் 826 - 850




பாடல்-826:

மதநீர் பெருக்கும் ஆண் யானைகள் செலுத்தும் பாகர்கள்
அஷ்டதிக்கு பாலகர்கள் போல் அழகானவர்கள்
வாள் படைத் தொழிலும் தெரியும்
அங்குசம் கொண்டு யானை செலுத்தும் தொழிலும் தெரியும்
தென்மேற்குத்திசை பாலகியாம் நிருதி என்பவளின்
மரபில் பிறந்த வீரர்கள்
நெருப்புப் பொறி விழிகள்
சூரியன் போல் திகழும் உடல் கொண்டவர்கள்.

பாடல்-827:
அழகிய திசைகளின் தன்மை அறிந்தவர்கள்
பதினெட்டு வகை குதிரைகளின் நடை பேதம் அறிந்தவர்கள்
போர் ஆயுதப் பயிற்சி மிக்கவர்கள்
அறிவாளிகள் குதிரை வீரர்கள் மட்டுமா?
தேர்வீரர்கள் யானை வீரர்கள்
அடி மேல் அடி வைத்து
மாலை அணிந்த குதிரைகள் மீது
மனங்கள் பாய போர்களத்துக்குச் செல்கிறார்கள்.

பாடல்-828:

ஒளி வீசும் பற்கள் கொண்ட சம்புமாலி
நால்வகைப்படைகளுடன் செல்கிறான்
தேவர்களையும் அச்சம் சுற்றுகிறது
அவன் நீண்ட கண்கள் கனல் பொங்க
மார்பு கவசம் மின்னி ஒளிவீச
மலை மேல் நெருப்பு போன்ற சினமுடன்
பொன் தேரிலே போருக்குச் செல்கின்றான்.

பாடல்-829:

அதே நேரத்தில்
அசோகவனத்தில் இராமதூதன் அனுமன் எண்ணுகிறான்
“இன்னும் அதிக எண்ணிக்கையில்
போரிட அரக்கர்கள் வரவில்லையே”
அவர்கள் வரும் வழி நோக்கினான்
சந்திரனும் நட்சத்திரங்களும் தழுவிடும் அளவுக்கு
உயரம் கொண்ட வாசல் அது
இந்திரவில் வர்ணம் கொண்ட வாசல் அது
அசோகவனத்தின் தோரணவாசல் அது
அதன் மீது ஏறி அமர்ந்தான் அனுமன்.

பாடல்-830:

மாவீரன் இராமனின் வில்
நாண் ஏற்றும் ஒலிக்குச்சமமாக
அனுமனின் முழக்கம் கேட்டதும்
இடியுடன் மேகங்கள் சிதறி விழுந்தன
அலைகடலின் ஒலி அடங்கிற்று
மலைகளில் புற்றுப்பாம்புகள்
உயிரும் நஞ்சும் ஒன்றாக  கக்கின
கொல்லும் அரக்கர் மனம் பயமாகியது
தேவர்கள் நடுங்கினர்.

பாடல்-832:

அடுத்து
அனுமன் தன் தோள்களைத் தட்டினான்
எட்டுத் திசையானைகளின் கர்வம் அடங்கிற்று
தென் திசை எமன் திடுக்கிட்டான்
மனம் சிதறிப் போனான்
வான நட்சத்திரங்கள் பூக்களாய் உதிர
பூமியும் மலையும் பிளக்க
கடலும் கலங்கிற்று.

பாடல்-833:

அப்போது
அலை நீண்ட கடல் போல
அரக்கர்கள் முழங்கினர்
அனுமன் இருக்கின்ற இடம் செல்ல முடியாமல்
பிணங்களின் பெரிய குவியல் மலை தடுத்தது
இரத்தப் பெருக்கு அதிகரித்தது
எப்படி அனுமனிடம் செல்வது எனத் திகைத்தார்கள்
முன்பு இறந்த தம் சுற்றத்தினர் உடம்புகள் மீதே
இடறி  வீழ்ந்தார்கள் அரக்கர்கள்.

பாடல்-834:
சம்புமாலி
விரைவாக தனது சேனையை
அணி அணியாகப் பிரித்தான்
அனுமனுக்கு இருபுறமும் செல்ல
கட்டளை இட்டான்
வலிய தேரை இயக்கிச் சென்றான்
தோரண வாயிலில் நின்ற அனுமனின் தோள்கள் பூரித்தன
“அப்பாடா! எதிர்பார்த்தவன் வந்து விட்டான்”




பாடல்-835:

அனுமன் என்ன ஒற்றை ஆளா?
அவனே ஒரு படைக்கூட்டம் தான்!
சக்ராயுதம் கொண்ட திருமாலின் அவதாரமாகிய
இராமனின் ஆற்றல் இருக்கிறது
நெய்தீபம் போல சுடரும் நெற்றி இருக்கிறது
அவனது முன் அணிச்சேனை மட்டும்தான் இருக்கிறது!
அவன் உடம்பின் மயிர்த்திரளே
நிமிர்ந்து நிற்கும் சேனை வீரர்கள் அல்லவா!
வலிய நகங்களே பக்க சேனைகள் அல்லவா !
அழகிய வாலே பின் அணிச் சேனை அல்லவா !

பாடல்-836:

ஊது கொம்புகள் ஊதிக் கொண்டு
வெண் சங்குகள் ஊதிக் கொண்டு
வில்களினால் நாண் ஒலி எழுப்பி
இசைக் கருவிகள் முழங்க
பறவைகள் ஓயாமல் ஒலிக்க
கோபமுள்ள அரக்கர்கள் புறப்பட்டனர்
வெயில்கள் போல ஒளி வீசும் ஆயுதங்களை
அனுமன் மீது ஏவினர்.

பாடல்-837:

கருநிறக்கடல் போல் அரக்கர்கள்
எறிந்த ஆயுதங்கள் யாவினையும்
கடலில் விழுமாறு
கைகளால் அடித்தான் அனுமன்
ஒடித்து சிதறிப் போக  பிசைந்து எறிந்தான்
பரவிய தீப்பொறிக்கூட்டத்தின் நெருப்பு போல
கோபம் கொண்டான் அனுமன்
இரும்புத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டான்.

பாடல்-838:

தோரண வாயிலில் இருந்த அனுமன் எழுந்தான்
இறங்கினான் நின்றான்
திரிந்தான் போர் புரிந்தான் என
செயலின் வேகத்தால்
பிரித்துச் சொல்ல இயலாதபடி
திரண்டும்  பரவியும் நின்ற அரக்கர்களை
ஒரே நேரத்தில் அழித்தான்
அடித்துக் கொன்றான் இரும்புத்தடியால்.

பாடல்-839:

எய்யப்பட்டவை
எறியப்பட்டவை
இடி போல நெருங்கி வந்தவை
அத்தனையும் அனுமன் இடக்கையால் அழித்தான்
அவன் வலக்கைக்கு
யானைகளும் தேர்களும் குதிரைக் கூட்டங்களும் அழிந்தன.


பாடல்-840:

அனுமனின் தாக்குதலால்
யானைகள் கன்னங்களை இழந்தன
உயர்த்தும் பெரிய கொடிகளை இழந்தன
பெரிய தந்தங்களை இழந்தன
பெரிய கால்களை இழந்தன
மதம் ஒழுகும் நிலை இழந்தன
மிகுந்த கோபங்களையும் இழந்தன.

பாடல்-841:

அனுமனின் தாக்குதலால்
அரக்கர் தேரின் சுற்றுப்புரங்கள்
அச்சுக்கட்டைகள்
நுகத்தடிகள்
தேர்ச்சக்கரங்கள்
மேல்தட்டுகள்
பூட்டப்பட்ட விரைவு குதிரைகள்
பெரிய தேர்கள்
அத்தனையும் அத்தனையும் தூளாகி நொறுங்கின.

பாடல்-842:

அனுமனின் தாக்குதலால்
குதிரைப்படைகளின் கழுத்துகள் ஒடிந்தன
உருண்டன இறந்தன
இடிபட்டு இறந்தன எரிந்தன
எலும்புகள் நொறுங்கின
சில எழுந்தன பிறகு மடிந்தன
கால்கள் முறிந்தன
மலை போல் குவிந்தன.

பாடல்-843:

அனுமனின் தாக்குதலால்
காலாட்படை வீரர்கள் அஞ்சினர் பாராட்டினர்
மயங்கி விழுந்து தெளிந்தனர்
உணர்வு வந்து மருண்டனர்
புத்தி பேதலித்தனர் வருந்தினர்
மீண்டும் போரிட்டு இறந்து உருண்டனர்
உடனே இறக்காதவர்
மிகுந்த துன்பம் கொண்டு
சுருண்டு புரண்டு முடிவில் இறந்தனர்.

பாடல்-844:

அனுமன்
யானைகளை யானைகளால் கொன்றான்
குதிரைகளை குதிரைகளால் மோதி அழித்தான்
வில் வீரர்களை வீரர்களால் மோதி அழித்தான்
மணி கொண்ட தேர்களும் அப்படியே!

பாடல்-845:

அரக்கர்களின் தோள்களும் வாள்களும்
துவையல் போல அரைபட்டன
கால்கள் தலைகள் சிதறின
மூளையும் இரத்தமும் ஒலியுடன் குழம்பாகி ஓட
சேறு உண்டாகியது அதில்
யானைகள் மூழ்கி இறந்தன!

பாடல்-846:

வலிமை வாய்ந்த வீரர்களை நிலத்தில் மோதி
அப்படி அப்படியே அழித்தான்
வாயிலிருந்த வளைந்த பற்களோடும்
பயணித்து வந்த யானைகளோடும்
பருத்த அடிப்புறம் கொண்ட வில்லோடும் வேலோடும்
வீரமுகத்தோடும் உயிர்களோடும் அழித்தான்!


பாடல்-847:

கண்களில்
கோபக்கனல் புகை கக்கும் அனுமன்
பொறி கக்கும் அனுமன்
ஏதேனும் மீதி உண்டா என
அழிபட்ட தேர்கள் எல்லாமும் ஏறி நோக்குவான்
பெரும் யானைகள்
குதிரைகள்
ஏளனமாகச் சிரித்த படைகள்
படைவீரர்களின் தலைகள்
எல்லாமும் ஏறி ஏறி இறங்குவான்.

பாடல்-848:

வெற்றித் தரும் குதிரைகளின் முதுகு
பகைவர்கள் மார்பு
எல்லா இடத்திலும் அனுமன் குதித்தான்
மணிகள் ஆடும் தேரிலிருந்து
இன்னொரு  தேருக்கு குதித்தான்
மதம் பொழியும் மலை போன்ற யானைகளில் ஏறி
பிரளய கால இடியென குதித்தான் .

பாடல்-849:

அனுமன்  போர்க்களத்தில் திரிவது
நல்வினை தீவினை சாராத நடுவு நிலை நீங்காத
சான்றோரின் அறிவு போலிருந்தது
ஒப்பற்ற செயல் திறம் கொண்ட
செங்கோல் போல இருந்தது
வருகின்ற யாருக்கும்
தனது முலைகளை விலைக்குத்தர விரும்பும்
வேசையர் மனம் போல
காற்றாடியாகத் திரிந்தது.

பாடல்-850:

திருமாலின் அடியவர்கள்
திருமாலின் தன்மை பெற்று
 எங்கும் பரந்து உறைவார்கள்
அது போலவே
அண்ணல் அனுமனின் பெருமை
விண்ணிலும் மண்ணிலும்
போரிட்ட அரக்கர்கள் கண்ணிலும் மனதிலும்
தனித்தனியே கலந்திருந்தது.

--அனுமனோடு மீட்போம்.

Friday, 3 January 2014

சுந்தர காண்டம் 801 - 825



பாடல்-801:

கைகளால் கால்களால் வாலினால்
அனுமன் நெரித்த போது
மணிகள் பதித்த கிங்கரர் தலைகள்
நிலத்தில் சாய்ந்தன
தேவர்கள் அமுதத்தை கைப்பற்றிய போது
காவலாய் வந்த நாகர்களை
விரட்டிய கருடன் போல இருக்கிறான் அனுமன்!

பாடல்-802:

அழிக்க அழிக்க புறப்பட்டார்கள் அரக்கர்கள்
பகையினால் இன்னும் சூழ்ந்து கொண்டார்கள்
யானை போன்ற அரக்கர்கள்
மீன்கள் நிறைந்த கடல்சூழ் இலங்கையில்
பெருகிக் கொண்டே இருந்தார்கள்
அனுமனின் ஆளுமையோ
விலங்குகளை அடக்கும் சிங்கத்திற்கு சமம்.

பாடல்-803:

இத்தனை யுத்தம் புரியும்
அனுமனின் உடம்பு எப்படி உள்ளது?
அனுமன் தோளில் உள்ள விழுப்புண்கள்
எவை எவையால் உண்டாகின?
அரக்கரின் ஆயுதங்களால் அடித்தவையால்
எய்தவையால்
வெட்டியவையால்
குத்தியதால்
பொத்தியதால்
துளைத்தவையால்
பிடித்தவையால்
குடைந்தவையால் ஏற்பட்டது என்று
எண்ணிச் சொல்ல முடியுமா! முடியாது முடியாது.

பாடல்-804:

போரில் ஆரவாரம் செய்யும்
வெண்பற்கள் கொண்ட அரக்கர்கள் ஒலியாலும்
அச்சத்தாலும்
கடல்களுக்கே வியர்த்தன
அரக்கர்களின் ஆரவார ஒலியை
ஒரே ஒரு ஒலி மிச்சம் இருந்தது
அது
புகழ்ந்து ஆரவாரம் செய்யும்
தேவர்களின் பேரொலி!

பாடல்-805:

போரின் சின்னமான அரக்கர்கள்
போரில் சினமானார்கள்
கோடி கோடி படைக்கருவிகளால்
அனுமனின் தோளில் புண்களும் கோடி தந்தார்கள்!
துன்பங்கள் மட்டும் தனியாகவா வரும்?
இன்பங்களும் அதில் கலந்தவைதான் என்பதுபோல
தேவர்கள் தேவமகளிர்
தேவமுனிவர்கள் பொழிந்த மலர்களும்
அனுமனின் தோளில் கோடி கோடி விழுந்தன!

பாடல்-806:

அனுமனின் உடல் எத்தனை பெரிது!
எனினும் அது
ஒரு காற்றாடி போல இடமும் வலமும் பெயர்ந்தது
விண்ணிலே தாவியது
மண்ணிலே குதித்தது
அரக்கர்களை அயர்வுறச் செய்தது
அனுமனுக்கோ இந்த செயல்களால் -
வியர்வையும் வரவில்லை! பெரு மூச்சு கூட வரவில்லை
அறவீரன் அன்றோ!

பாடல்-807:

அரக்கர்கள் அனைவரும் இராவணன் கட்டளையால்
நஞ்சு உண்டவர்கள் போல
அனுமனுடன் போரிட்டு மடிந்தார்கள்
யாருமே அதில்
புறமுதுகிட்டு ஓடியவர்கள் இல்லை
இப்படிப்பட்ட சிறந்த வீரர்களே அரக்கர்கள்.

பாடல்-808:

போருக்கு வந்தனர் கிங்கரர்கள்
“ஏ!” என்று உச்சரிக்கும் மாத்திரை அளவில்
அனுமனால் மடிந்தனர்
நந்தவனப் பாதுகாவலர்கள்
விரைந்து ஓடிப்போனார்கள் நடுங்கினார்கள்
பின் வாங்கும் காலினர் ஆனார்கள்
நடுங்கும் கையினர் ஆயினர்கள்
அச்சம்
கழுத்தைப் பிடித்துத் தள்ளியது
ஆயிரக்கணக்கான பிணக்குவியலில்
புதைசேற்றில் கல் விழுவதுபோல் விழுந்து வருந்தினார்கள்.

பாடல்-809:

ஓடி பயந்து அலறி ஓடிய அரக்கர்கள்
இராவணன்  முன் விம்மினார்கள்
வாயினால் எந்த வார்த்தையும் சொல்ல இயலவில்லை
கைகளினால் சைகையினால் காட்டி உரைத்தார்கள் சலித்தார்கள்
நான்கு திசையும் கண்டு மிரண்டார்கள்
இராவணன் புரிந்து கொண்டான் தோல்வியை.

பாடல்-810:

கருப்பு உடல் இராவணனுக்கு
மூன்று வினாக்கள் எழுந்தன
பத்து வாய்களிலும்  கோபக்கனலுடன்
கேட்கின்றான் கேள்விகளை
“நான் அனுப்பிய கிங்கரர்கள் இறந்துஒழித்தனரா?
என் ஆணைக்கு
அடி பணியாமல் போருக்கு செல்லாமல் போயினரா?
தோல்வி அடைந்து நாட்டை மறந்து
வேறெங்கேனும் சென்று விட்டார்களோ
என்ன நடந்தது !”

பாடல்-811:

நந்தவனத்தின் பொறுப்பாளர் இராவணனுக்கு பதில் கூறுகிறார்
“கோபம் தலைக்கேறிய கிங்கரர்கள்
போருக்கு அஞ்சவில்லை
அத்தனை அரக்கர்களும் ஒருவர்விடாமல்
ஒரே ஒரு குரங்கினால் அழிந்து போனார்கள்
தன் அறிவு அறிந்தே பொய்ச்சாட்சி சொல்பவர்
குலம் அழிவது போல!”

பாடல்-812:

ஏவலுக்காக நின்ற
எட்டுத்திசை காக்கும் காவலர்களை நோக்கினான்
“இவர்கள் முன் இப்படி நடந்ததே!” என
இராவணன் சிந்தை நாணினான்
மூன்று உலகமும் விழுங்கும் கோபமுடன்
இராவணன் கூறுகின்றான்
“நடந்தது என்ன என அறியவில்லை போலும்”

பாடல்-813:
நந்தவனத்து நாயகர்கள்
பொறுப்பாளர்கள்
நடந்ததை மீண்டும் உரைக்கவில்லை
பயத்தினால் விம்ம ஆரம்பித்தார்கள்
பல இன மலர்மாலைகளும்
மகுடமும் புனைந்த இராவணன்
“அரக்கரை வீழ்த்தியது குரங்கு” என்பது கேட்ட செய்தியா?
கண்ணால் உண்ட செய்தியா? கூறுக!” என்றான்.

பாடல்-814:

“ஒருபுறம் ஓரம் நின்று
கண்களால் கண்டோம் மன்னா
தெளிந்த அலைகடல் போல்
சூழ்ந்து வளைத்த சேனையை
எப்புறமும் வளைத்தது ஒரு குரங்கு
மரத்தினால் அடித்தே கொன்றது
அனைவர் உயிரும் உண்டுவிட்டது
அந்தக்குரங்கு இனம்
அங்குதான் உள்ளது” என்றனர்.

சம்புமாலி வதைப் படலம்

பாடல்-815:
கூப்பிய  கைகளுடன்
குன்று போல் தோள்களுடன்
பாம்பு போல் அஞ்சாமையுடன்
நிற்கிற சம்புமாலியை இராவணன் ஏவுகின்றான்
“குதிரைப் படையோடு செல்க
குரங்கினை வளைத்துப் பிடிக்க!
கயிற்றால் கட்டிக் கொண்டு வருக
என் மனச்சினம் தணித்திடுக ”

பாடல்-816:

சம்புமாலி வணங்கினான்
பெருமை உற்றான்
“எண்ண முடியாத அரக்கர்கள் இருக்க
எனக்கு இந்த ஆணை கிடைத்தது எனில்
என்னை விடபெருமை உற்றார் யார்!”
இலங்கை வேந்தன் இராவணனின் போர்ச்சினம்
வடிவெடுத்தது போல்
நடந்து செல்கின்றான் சம்புமாலி.

பாடல்-817:

அனுமனுடன் போரிடும் பெரும் பேறு பெற்ற
சம்புமாலியுடன் சென்ற படைகள் எவை எவை?
இராவணன் அனுப்பிய சேனை!
சம்புமாலியின் தந்தை பிரகதத்தன் அளித்த
மின்னல் ஒளி வாள் படை!
காவல் படை!


பாடல்818:

சம்புமாலியின் படையில்
சிவந்த கண்கள் வெண் தந்தங்கள் கொண்ட 
முகபடாம் அணிந்த நெற்றியுடன்
மலை போன்ற யானைகள்
போர் அலங்காரத்துடன்
இடி போல் பிளிறுகின்ற யானைகள்!
மேகங்களின் முற்றுகையோ எனும்படி
யானைகள் வட்டமிட்டன
பெரிய தேர்களும் ஏராளம்
முத்துமாலைகள் சூழ்ந்த துகில் கொடிகள்
மிகப்பெரும் சக்கரங்கள் கொண்ட தேர்கள் !

பாடல்-819:
காற்றைப் ப்¢டித்து
காற்றின் திசைகளில் கால்களைப் பொருத்தி
உயிரையும் சேர்த்து
உயர்சாதி குதிரைகள் ஆக்கினார்களோ!
அதில் எமனை ஏற்றியது போல்
வீரர்களைச் செய்தார்களோ!
இது தவிர
காட்டுப்புதர்கள் , மலைகளிலிருந்தும்
படைகள் திரட்டப்பட்டன
அரக்கர் படைகளின் முகமும் கண்களும்
ஆண்புலிகளின் கூட்டம் ஒத்தன.


பாடல்-820:

போர்வீரர்களின் கருவிப்பட்டியல் மிகவும் நீளமானது
தோமரம்
உலக்கை
கூர்வாள்
கூர் கோடாலிகள்
வச்சிராயுதம்
அங்குசம்
அரத்தினால் கூராக்கிய வேல்
நெருப்பு ஒளி வீசும் சக்கரம்
வில்
தண்டாயுதம்
இரும்புத்தண்டுகள்
ஒளி விடும் இரும்பு நெருஞ்சி முள் படைகள்
பெரிய மரங்கள்
பாசக்கயிறு போன்ற படைக்கருவி
வளையங்கள்
கொடிய அம்புகள்.

பாடல்-821:
போர்ப்படைகள் செல்கின்றன
பாராட்டுக்குரிய வேல்கள்
எறியீட்டிகள் இரும்புத்தடிகள்
மழை பொழியும் கருமேகங்களில் மோதி
பொத்தல் செய்து மழை நீர் வழிகிறது!
நீர்த்தாரைகள் ஆயுதங்களில் பட்டு வழிகின்றன
கொடிக்கம்புகளில் சுற்றிப்பற்றும் கொடிகள் போல்!

பாடல் -822:

பலவகை இசைக்கருவ்கள் ஒலி
அழகிய சங்குகள் ஒலி
பொன் தேர்ச்சக்கரங்கள் உருளும் ஒலி
குதிரைகள் கனைக்கும் ஒலி
நெருங்கிய பொன் கிண்கிணி மாலைகள் ஒலி
நின்ற இடத்திலேயே ஒலிக்கும் வில் ஒலி
யானைகள் ஆரவாரிக்கும் ஒலி
எல்லாம் கூட்டாகி வானில் ஒலிப்பதால் -
தேவர்கள் தமக்குள் பேசும் பேச்சு
கேட்க முடியாமல் சிரமப்பட்டனர்!

பாடல்-823:
கடல் சூழ்ந்த பொன்நகர் இலங்கை உடைந்தது போல
சம்புமாலியின் சேனை சென்றது
அதன் பொங்கின புழுதிகள் பரவின
எளிய மலைகள் பொன் புழுதி படிந்த மேருமலை ஆனது
பழைய நகரங்கள்
பொன் புழுதி படிந்து சுவர்க்க நிறம் பெற்றன.

பாடல்-824:

கொடியவன் சம்புமாலியின் தேர் செல்ல
அதனைச் சுற்றி
அரக்கர்களின் தேர் பதினாயிரம்
யானைகள் இருபதினாயிரம்
குதிரைகள் நாற்பதினாயிரம்
காலாட்படை குதிரைகள் எண்பதினாயிரம்

பாடல்-825:

தேர்ப்படை வீரர்கள் என்ன சாதாரணமா?
தனுர் வேதம் எனும் வில் வேதம் கற்றவர்கள்
பல வகைக் கலைகள் அறிவர்
மிகுதியான வரங்கள் பெற்றவர்கள்
வீரவிழிகள் பெற்றவர்கள்
உறுதியான தோள்கள்
வீரவம்சம் கொண்டவர்கள்
அம்பறாத்துணி கொண்ட முதுகு கொண்டவர்கள்
கல் போன்ற மார்பினை
செம்பொன் கவசத்தால் மூடியவர்கள்.

--அனுமனோடு மீட்போம்.