Thursday, 9 July 2015

உடல் பயணச் சலிப்புகள்




கதவின் கீல்
ஒவ்வொரு தடவை  திறந்து மூடும்போதும்
சத்தமிட்டுக் கொண்டே அன்றாடம்
அரைவட்டத்தில்தான் இயங்குகிறது
அலுவலக லிப்ட்
ஒவ்வொரு தடவை ஏறி இறங்கும்போதும்
சத்தமிட்டது தெரியாமல் இரும்புக் கயிறால்
மேலும் கீழும் ஒரே விதமாய்த்தான் அன்றாடம்
ஏறி ஏறி இறங்குகிறது
கதவின் கீலுக்கு என்ன பணியோ
அந்த இடத்தில்தான் அது இயங்க முடியும்
லிப்டுக்கு என்ன நிர்மாணமோ
அதற்குள்தான் அது இயக்கப்பட முடியும்
கடன் தீர வாழ்கிறோம்
கடமை என்பதே கடன் + மை தானே
சலிக்காதிரு மனமே சுதந்திரம் தேடாதிரு மனமே கசப்பில்லை
நீரில் கொப்புளங்கள் போல் தோன்றிய வாழ்க்கை
பெரும் நீர் வீழ்ச்சியில் சங்கமம் ஆவோம்
யார் புகழ்ந்து யாருக்கென்ன நிகழ்ந்தது அதுவும் ‘குபுக்'தான்
பம்பரத்தை சுற்றிவிட்டு தெருவில் சிறுவன்
வேறு விளையாட்டுக்குப் போவது போல்
இறைவன்  இயக்கியதிவ்வுடல் பயணம் .ஆஹா அனுபவி.

சார்பு

  
அன்றும் இன்றும்
பறவைதான் அநியாயத்தை முதலில் அறிகிறது
சீதை கடத்தும் இராவணன் மார்புக் கவசம் அறுத்தது ஜடாயு
காது குண்டலங்களை அறுத்தது ஜடாயு
இராவணன்  வில்லினைப் பறித்து வானில் எறிந்தது ஜடாயு
இராவணன் தேர் நகரவிடாமல் சிறகு பரப்பிற்று ஜடாயு
இராம இலக்குவனுக்கு செய்தி செப்பும் வரை உயிர் விடவில்லை
இன்றும் சிட்டுக்குருவிகள்
ஜடாயு சார்பாக
இயற்கை எனும் சீதை காக்க
பாலிதீன் பையை கொத்தி எறிகிறது
வானிலோ மின் கம்பித்தடத்திலோ அலைந்து
அது வாடுகின்றதோ இல்லை எச்சரிக்கின்றதோ !

(இலக்கியச் சிறகு இதழில் வெளிவந்த கவிதை)
*****