Saturday, 1 August 2015

எ(மது) எம்.எஸ்.வி



எம் என்பது எமது ! எமது எஸ். விஸ்வநாதரே!
அதிசயம் தான்!
அன்று உம்மைச் சந்தித்தேன்
மகிழ்ச்சியின் வெள்ளைவேட்டி நடை கொண்டு
ஓர் திருமண வரவேற்பில் ஏவிஎம் மண்டபத்தில்
பணிவின் பனிக்குடமாக! எத்தனை மூளை சுறுசுறுப்பு!
சட்டென சொல்லாமல்
காலில் விழுந்தேன் இசை நாயகா!
கவிஞன் எனக்கு அதில் அகமகிழ்வு!
எத்தனை இசைக்கருவிகள் தொட்டகரங்கள்!
அத்தனையும் ஆர்மோனிய விரலாச்சு உனக்கு
உன் விபூதி குங்குமசந்தன நெற்றிக்கண்  உற்சாகக் குரல்
இன்றும் காதில்  கேட்கிறது எனக்கு!
சுசீலா டி.எம்.எஸ் பாலசுப்ரமணியம் குரல்களில்
கவியரசு கண்ணதாசன் சாறு கலந்து
இசைத் தேன் கலந்து பெருக
காலத்தேர் ஓட்டிய இசைத் தேவனே
நீ தற்கொலை புரிய முயன்றாய் மூன்று முறை
1.உன் தாய் இறந்தபோது
2.கண்ணதாசன் இறந்தபோது
3.எம்.ஜி.ஆர் இறந்தபோது
இப்போது இசைப்பாடல்கள் என்ன ஆகும் நீயே பாடு
மன அழுத்தம் தவிர்க்க தமிழனுக்கு ஒரு வழி 
எம்.எஸ்.வி பாடல்களின் ஜீவன் !
மனிதர்கள்  அன்புபேச என்றும் உன் இசை வாழுமய்யா இசை விஸ்வ நாதரே.
 

அழகிய கலாமும் அழகிய காலமும்


              
கடவுளுக்கு நினைத்து நினைத்து நன்றி கூறி
இதயம் பூத்த இராமேஸ்வர ஜோதி மலரே ஏன் முடிந்து போனாய்!
அலட்சிய  மனங்கள் நடுவே
இலட்சிய பூமி மீது நெய்த செயல் நிலமே எங்கே விரைந்தாய்?
இலட்சியப் பொறி பற்றிய ஞான வீணையே
மேகாலயத்தில் இணைந்த தமிழ்மேக லயமே
நிம்மதி தேடி ஒடுங்கும் மூப்புப் பருவம் நடுவே
ஓடி ஓடி உழைத்த முதிய இளைஞரே
அழிவைத் தரும் அணுச் சோதனை பயம் போக்கி
துணிச்சலில் நிமிர்ந்த விஞ்ஞானமே
இஸ்ரோ விண்கலச் சரிவுக்குமட்டுமல்ல எதற்குமே
மனம் முறியாமல் அடுத்த சோதனைக்கு வித்திட்டாய் வித்தகமே
திருச்சி புனித ஜோசப் கல்லூரிப் புறாவே
இதய வால்வு ஸ்டண்ட் மெலிய எடை தந்த சுவாசமே
சிந்திப்பவர் ஞானமெல்லாம்
திருக்குறளாக இருக்கும் என்று வாழ்ந்த அன்பு கலாமே
ஆக்கபூர்வ எண்ணங்களில்
மரம் நடு விழா துவங்கிய நல் மனிதமே
நடு வகிடு எடுத்த நரை முடிச் சிரிப்பில்
குழந்தைகள் இளைஞர்கள் சிந்திக்கவைத்த நேசமே
முடிவில்தான் ஆரம்பம் இருக்கும் என்பதால்
முதியவர்கள் ஞானமெல்லாம்
மாணவப் பருவம் நோக்கித் திருப்பிய உணர்வே
பகவத் கீதையின் கர்மயோகம் பயின்ற இஸ்லாமே
கல்விப் பேச்சுரை ஆற்றும்போதே சரிந்த
தமிழ் மூச்சுரையே
திருமணமே புரியாமல்
இந்தியாவைத் திருமணம் செய்த மணமே
வீசும் உன் புகழ் இனிமேல்தான் இன்னும் இன்னும்!