Saturday, 19 April 2014

சுந்தர காண்டம்1176 - 1200







பாடல்-1176:

இலங்கை நகர் முழுதும்
அனுமன்சீதையை தேடினான்
அறிவினால் உணர முடியவில்லை
ஆனால்
அரக்கர்கள்
அனுமனை
இலங்கை முழுதும் இழுத்துச்சென்று
காட்டியபோது அனுமனால் காண முடிந்தது-
பொறிகள் முன்னே செல்ல
அதன்பின் செல்லும் அறிவுபோல.

பாடல் -1177

முழுவதும்
எல்லாமும் பார்த்தான்
ஊர் முற்று பெறும் பகுதி கடந்தது.
தப்பிச்செல்லும் தருணமிது என எண்ணிணான்
உடனே-
தன்னை வலிமையாகப் பற்றியிருக்கும்
இரண்டு லட்சம் தோள்களை
தன்னனோடு இழுத்துக்கொண்டு பறந்தான்
கயிறுகள்-
வானிலிருந்து தூண்கள் போல் தொங்கின
அரக்கர் கூட்டங்கள் கீழே விழுந்தன.

பாடல் -1178

கீழே விழுந்த
ஒரு லட்சம் அரக்கர்கள் உயிர் இழந்தனர்
தனது உடலை
வலிமையாகக் கட்டியிருக்கும் கயிற்றுடன்
பறந்திடும் அனுமன்
பாம்புக்கூட்டம் சூழ
பறந்திடும் கருடன் போல் உள்ளான்.

பாடல் -1179

“முன்பு
சிவபெருமான்
பகைவர்களின் முப்புரம் எரித்த தொழில் வெட்கப்படும்படி
பெரும் தீ மூட்டுவேன்
அரக்கர்களின் மாளிகைகள் எரிந்திட
நெருப்பு மூட்டுவேன்” என
ஐயன் அனுமன் எண்ணும்போது
தன் மன்னன் இராமனை வாழ்த்தி
பொன்மயமான இலங்கை மீது
போர் வாளாகிய
போர் வாலினை
நெருப்புடன் போகவிட்டான்!
அக்கினிக்குஞ்சொன்று செய்தான்!
தத்தரிகிட தித்தோம் !


பாடல் -1180

அனுமனது வாலின் தீ
இலங்கையின் பரப்பு முழுதும்
விரைவாக தீய்த்தது
பரவுகின்ற தீயின் வேகமும் திறமும்
மேரு மலையை வில்லாக்கி
செந்நிற சிவபெருமானின் தோள் வலிமை
எய்திட்ட அம்பு போல பவழ நிறத்தில் இருந்தது

பாடல் -1181

விஸ்வகர்மன் எனப்படும்
சிற்ப நூலில் வல்ல தேவதச்சன்
வருந்தி வருந்தி
தனது கைகளால்
பொன்னாலும், வெள்ளியாலும் செய்த
அழகிய மாளிகைகள் தோறும் நெருப்புடன்
முற்றம் முற்றமாக தாவிச்சென்றான் அனுமன்
ஊழியின் இறுதிக்காலத்தில்
மலைமேல் விழும் இடிகள் போல
காளை போல இருந்தான்
வாலில் ஒளிரும் நெருப்பு அனுமன்.

பாடல் -1182

கறுத்த உருவ அரக்கர்கள்
இத்தனை   வருடமாய்
நெய் சொரியும் வேள்விகளை நிறுத்தியதால்
பசியுடன் இருந்த நெருப்பு தேவன்
அனுமன் வாலை அன்புடன் பற்றிக்கொண்டானோ!
ஆலம் உண்ட சிவன்
அனைத்தும் அழித்து அனுமனுக்கு ஊட்டி விட்டானோ!
ஊழிக்கால வேள்வி நெருப்பில்
உலகமே ஆகுதியாக இடப்பட்டு
உண்டு வளரும் நெருப்பு போல
இலங்கை நகர் முழுதும்
நெருப்பால் தின்றான் அனுமன்.

இலங்கை எரியூட்டும் படலம்

பாடல்: 1183

அனுமனது வாலின் தீ
கொடிகளில் பற்றியது
மேலும் பலவற்றை எரித்தது!
நீண்ட தூண்களைத் தடவியது
நெடியச் சுவர்களை
வாலினால் முழுதும் சுற்றியது!
சுற்றிய சுவர்களொடு
வீடுகளை முற்றிலும் அழித்தது.

பாடல்-1184:

அனுமன் வால் தீ
வாசலில் தீயானது
வாசல் தீ
மாளிகைகளை மொய்த்தது
நிலை கெட்டனர் நகர மக்கள்
ஊஞ்சல் போல
முன்னும் பின்னும் ஓடினார்கள்
தப்பி ஓடிட வழி தெரியவில்லை
வருத்தத்தின் ஒலியும் வலியும் புறப்பட்டன!

பாடல்-1185:

இரத்தின  ஒளி மாளிகைகள்
செந்நிறத் தீ ஒளி பெற்றன
அதனால்
தீப்பற்றிய இடம் து?
தீப்பிடிகாத இடம் எது? என
அறிய முடியாமல்
வளையல் அணிந்த வணிதையர்கள்
அலமந்து போனார்கள்!

பாடல்-1186:

தேன்மலர்க்காடுகள் முழுதும்
நெருப்பு மொய்த்தது
நெடுந்தூரம் வரை புகை பரவியதால்
மயில்சாயல் மங்கையர்களுக்கு
எந்த திசையில் செல்வதெனப் புரியவில்லை
வாய்விட்டுப் புலம்பினார்கள்.

பாடல்-1187:
அரக்க மகளிருக்கும் ஆடவர்களுக்கும்
தலைமுடி நிறமும் நெருப்பு நிறமும்
ஒன்றாகவே இருப்பதால்
தீப்பிடித்த இடம் எது
தீப்பற்றாத இடம் எது உணராதவர் ஆயினர்
கூச்சலிட்டார்கள்
நடுவர் தலையில் ஒருவர் நீர் சொரிந்தனர்.


பாடல்-1188:

நெருப்பின் பாய்ச்சலும் விரைவும்
மாயையை எரித்து
சான்றோர் அடையும் ஞானம் போலிருந்தது
அரக்கர்களின் வீட்டிலிருந்த நெருப்புகள் எல்லாமும்
இராவணன் சொல்லிய சொல்லுக்காகப்
புறப்பட்டு வெளியே வந்தது போலிருந்தன.

பாடல்-1189:

வாமன வடிவத்தில்
குறுகிய குறட்பா போல சிறிதென
அடி எடுத்து வைத்து
உலகெலாம் அளக்க விரிந்து
“இன்னொரு உலகம் கொடு” என எழுந்து
உயரும் திருமால் போல
பறந்து உயர்ந்தது தீ!

பாடல்-1190:

நீலநிற யானைகள் யாவும்
நெருப்பு பற்றியதால்
உடல் வெந்து
தோல் நீங்கி
மதமயக்கமும் கொடும்கோபமும் கொண்டு
வெள்ளை யானைகள் ஆகின.

பாடல்-1191:

வெப்பமான புகை
தீயோடு சூழ்ந்திருப்பது போல் காணப்படுவதால்
மேகங்கள் ஏமாந்து
ஆறுகளில் விழுகின்றன எருமை போல!
அன்னபறவை போல
பெண்களும்
கடலோரம் ஒதுங்குகின்றனர்.

பாடல்-1192:

பொடித்து
பொடிப்பொடியாக எழுந்தது பெரும் பொறி!
இடியின் வம்சமோ என
நெருப்புப் பொறிகள் வெடித்து வீழ்கின்றன
எல்லா இடமும் வெடித்து விழுவதால்
கடல் கொதித்து அதனால்
மீன்கூட்டங்கள் உயிர் சோர்ந்தன!


பாடல்-1193:

எதையும் பருகும் நெருப்பு
உள் வாங்கிடப் புகுந்து புகுந்து  எரிகிறது
மாளிகைகளில் உள்ள
பொன் பொருள்கள் உருகி ஓடி
கடலில் நடுவே புகும் போது
கெட்டிப்பட்டு
நெடிய
பொன் தண்டாகத் திரண்டு விட்டது.

பாடல்-1194:

மலை போன்ற மாளிகைகள் என்ன!
வரிசையாக நிற்கும் சோலைகள் என்ன!
நகரத்தின் தரை முழுதும் தங்கமாயிருந்தது என்ன!
எல்லாம் நெருப்புபட்டு உருகின வெந்தன
சாபமொழி போல!

பாடல்-1195:

நெருப்பின்
புகை படிந்து படிந்து
கல் கற்றை போல படிந்து
தேவலோகம் இருட்டானது
உயர உயரமான தேர்கள்
மணிகள் பதித்த சக்கரங்கள்
எல்லாமும் எரிந்து
ஒரே தொகுதியாகத் திரண்டன.

பாடல்-1196:

தீயவர்களின் இடத்திற்கு சென்றால்
தீயவர்கள் அங்கே இல்லையென்றாலும்
தீமை செய்யவே இயலும் என்பது போல
அரக்கர்களின் மதுச்சாலையில்
புகுந்த நெருப்பு
அங்குள்ள மதுவை அருந்திய நெருப்பு
தீங்கு செய்தது.

பாடல்-1197:

இலங்கையைத் தழுவும் நெருப்பு
கடலை உலை நீர்போல் கொதிக்க வைத்தது
கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள்
குழுவாய்ச் சென்று
குளிர் மேகத்தையும்
கொதிக்க வைத்ததே!


பாடல்-1198:

நிலத்தின் வெப்பம்
“பேய்த்தேர்” எனப்படும்
கானல் நீரை உண்டாக்கியது
தம் உடலைக் குளிர்விக்க
காட்டாறு எனக்கருதி
வானம் வழி ஓடும் அரக்கமகளிர்
அதில் குதித்தார்கள்!

பாடல்-1199:

தேன் மலர்ச் சோலை
தீயில் விழுந்தது அறியாமல்
தேன்மலர்களில்
எப்போதும்போல்
தேன் அருந்தும் வண்டுகள் ஏமாந்து
பரவிச் சென்ற நெருப்புச் சுடர்களை
“ஓகோ! பெரிய தாமரைக்காடு”
என நினைத்துக் கொண்டன.

பாடல்-1200:

வில் புருவம் கொண்ட மகளிர்
வீட்டிலேயே இருக்க முடிவு செய்தனர்
“நமக்கு ஒரு பொறுப்புத்தான் உண்டு
நம் உயிர் நாயகரான அரக்கர்கள்
இறந்து போய்விட்டனர்
தீப்பற்றிய பிறகு
வெளியில் செல்லக் கூடாது”

--அனுமனோடு மீட்போம்.


Friday, 11 April 2014

சுந்தர காண்டம்1151 - 1175


பாடல்-1151:

அனுமன் சொல்லி முடித்ததும்
“இப்படியெல்லாம் சொன்னது ஒரு குரங்காம்!
இது நல்லது! நல்லது!” என்று
பெரும் சிரிப்பு ச்¢ரித்தான்
ஆம்!
வெற்றியைத் தவிர வேறு அறியாத இராவணன்.

பாடல்-1152:

“குரங்காகிய சுக்ரீவன் சொன்னது இருக்கட்டும்
மனிதனாகிய இராம இலக்குவன் வெற்றி இருக்கட்டும்
அடேய்!
தூதாக புகுந்து வந்த நீ
அரக்கர்களை எதற்கு அழித்தாய்?
அதைச் சொல்” என்றான் இராவணன்.


பாடல்-1153:

பதில் புறப்பட்டது
“இராவணனாகிய உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை
அதனால்
நறுமண அசோகவனம் அழித்தேன்
அதனால் என்னைக் கொல்ல வந்தவர்களை வீழ்த்தினேன்
பின்பு உன்னை
மென்மையோடு அடக்கத்தோடு வந்தது ஏன் எனில்
உன்னைக் காணவேண்டும் எண்ணத்தினால்தான்!”

பாடல்-1154:

அனுமன் சொன்ன அடுத்தகணம்
மின்னும் வாள் போன்ற பற்கள் கொண்ட இராவணன்
நெருப்பு போல் பெருங்கோபமுடன்
சினம் வீங்கினான்
“கொல்லுங்கள் இதை !” என்றான்
கொல்லும்படை சூழ்ந்த போது
“நில்லுங்கள்” எனத் தடுத்தான் நீதியுடைய விபீஷணன் !

பாடல்-1155:

எழுந்து  நிற்கின்ற அண்ணலை
சினமுடன் நிற்கின்ற அரக்கனை
நீண்ட கைகளால் வணங்கினான் விபீஷணன்
“மூண்ட கோபம் முறையல்ல
அறிய வேண்டும் உண்மையை” என
மெல்ல
மெதுவாக விளம்புகின்றான் விபீஷணன்


பாடல்-1156:

“வேதங்களில் வல்லவனே ..
எத்தகுதியும் பெற்றவனே ..
மூன்று உலகமும் ஆதி காலத்தில்
அறநெறி மூலம் படைத்த அந்தணன் பிரம்மனின்
ஆற்றல் மரபில் வந்தவன் நீ
ஆன்ற தவநெறி உணர்ந்தவன் நீ
இந்திரன் கூட 
உனக்குப் பணி செய்யும் அளவு
உயர்ந்து விட்ட இறைவன் நீ !
“தூது இயம்ப வந்தேன்” என்ற சொன்ன பிறகும்
அனுமனைக் கொல்வாயோ!”

பாடல்-1157:

“பூலோகம் முழுதும் பார்
அண்ட கோளத்தின் உள்ளேயும் பார்
பொய் தீர்ந்த வேதங்கள் இயங்கும்
வேறு  வேறான இடங்களில் உள்ள
மற்ற மற்ற வேந்தர்களையும் பார்
மாதர்களைக் கொன்றிருக்கலாம்
தூதர்களைக் கொன்றார்கள் யாராவது உண்டா? யோசி !”


பாடல்-1158:

“தூதன் என்பவன் யார்?
பகை கொண்ட நாட்டுக்கே வருவார்கள்
தன்னை அனுப்பியவர்கள் பகர்ந்த
செய்திகளைக் கூறுவார்கள்
அது கேட்டு
பிறர் தரும் ஏற்படும் கோபம் அடக்கிக்கொள்வார்கள்
உண்மை விளம்பவேண்டும் என்ற விரதம் கொண்டவர்கள்
நேர்மையான அறிவுத் தொழில் செய்கிறவர்கள்
அவர்களை அழிப்பது
நகைப்புக்கு உச்சமாகும்
நல்குலமே பழி சுமக்கும் ! அறிவாயா நீ ?”

பாடல்-1159:

“உலகங்களைக் காக்கும் இராவணனே
உன் பகைவர் ஏவியதால் வந்தவனைக்
கொல்லுதல்  என்பது
மட்டமான செயல்
மூன்று தலைகள் உடைய சூலம் ஏந்திய ஈசன்
திருமால், பிரம்மன் மட்டுமல்ல
நம் ஆக்கம் கண்டு பொறுக்காத தேவர்களும்
எள்ளி நகையாடுவார்கள்.


பாடல்-1160:

“இளையவள் சூர்ப்பனகையைக் கொல்லாமல்
இராம இலக்குவ வீரர்கள் 
இரு செவிகளை மூக்கினை அறுத்தார்கள்
“இங்கு நடந்ததை அங்கு சொல்” என அனுப்பினார்கள்
இராவணா! யோசி!
அனுமன் உயிரை நீ எடுத்து விட்டால்
இங்கு இவன் கண்டதை
அங்கு சொல்லாமல் தடுத்தவன் ஆகிறாய்” என்று
பொருந்துமாறு கூறினான் விபீஷணன்.

பாடல்-1161:

இராவணன் இதயம் கட்டுப்பட்டது
நல் வார்த்தைகள் பேசியது
“நம்பிக்கைக்கு உரியவனே ! நல்ல நீதி கூறினாய்
அனுமன்  குற்றம் செய்தவன் தான்
ஆனாலும் நாம் கொல்வது குற்றமே”
என்ற இராவணன் மேலும் கூறினான்
“அனுமனே நீ விரைந்து ஓடிச்செல்
இராம இலக்குவனிடம் இங்கு நடந்ததைக் கூறு”

மேலும்  கூறுகிறான்
“இந்த வானரத்தின் வாலை
அடியோடு அழியும்படி சுட்டெரித்து
நகரைச் சுற்றி வரச் செய்க
பிறகு எல்லை கடக்க அனுமதியுங்கள்”
“பலே ! பலே !” என குதித்தது அரசவை
ஆரவாரம் செய்தது
நடக்கப்போவது அறியாமல்!

பாடல்-1162:


அமரர்களையும்  போரில் வென்ற
இந்திரஜித் கூறுகிறான்:-
“பிரம்மாஸ்திரம் பிணித்த ஒருவரை
தீயிடல் கூடாது ..
சிறந்த கயிறுகளால் கட்டுவோம்.. “ என்று
ஆணையிட்டுக் கொண்டே
பிரம்மாஸ்திரத்திலிருந்து அனுமனை மீட்டான்.
‘ஏ' என்ற எழுத்து உச்சரிப்பதற்குள்
அரக்கர்கள்
பருமனான கயிற்றால்
அனுமனைக் கட்டி இழுத்தார்கள்.

பாடல்: 1163

அனுமனைக் கட்டுவதற்காக
தேவைப்பட்ட கயிறுகளால்
தங்கள் கயிறுகளை இழந்தவை பட்டியல் இதோ !
“வீடுகளின் ஊஞ்சல்கள்!
தேர்கள்!
பந்தியில் கட்டப்பட்ட குதிரைகள்
போர் யானைகள்!”

பாடல்: 1164

“இவை மட்டுமா?
இராவணன்  திக்கு விஜயம் செய்தபோது
கொண்டு வந்த கயிறுகளும் தேவைப்பட்டன
தேவர்களிடமிருந்து 
வலியப் பறித்தவையும் தேவைப்பட்டன
அசுரர்களிடமிருந்து பெற்ற கயிறுகளும் தேவைப்பட்டன
கண்ணில் கண்ட கயிறுகள் எல்லாம் கொண்டு
அனுமனைக் கட்டினர்
தப்பித்தவைகள் பட்டியலில்
பெண்களின் தாலிக்கயிறுகள் மட்டும் இருந்தன!


பாடல்: 1165


“கடவுள் படையாகிய
பிரம்மாஸ்திரம் எனும் அறத்தின் ஆணையை
அனுமன் நான் மீறிவிட்டேன்”  என ஆகாமல்
பகைவர்களே இப்போது விடுவித்தார்கள்
என்னைக் கட்டிய
இவர்களது வெற்றியை
நான் வெல்வதற்கான வாய்ப்புதான்
எனது வாலினை இப்போது இவர்கள் கொளுத்தும் செயல் !
‘ இந்த ஊரைச் சுடுக ' என்று மறைமுகமாய்
எனக்கு சொல்லாமல் சொன்ன செயல் !”
அரக்கர்கள் நடுவில் இருந்து
நினைத்ததைச் செய்ய
நேரம் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்
எதற்கும் கவலையில்லாத அனுமன் !


பாடல்: 1166

பிடித்திருந்த  கயிறுகளை அறுக்க
வலிமையில்லாதவன் போல உடல் வாடி
பொறுமையாக இருந்தான்
கொடிய அரக்கர்கள் அங்கும் இங்கும்
அலைக்கழித்தார்கள்  அப்போதும்

விரைவு காட்டவில்லை  ஐயன் !
மெய்ஞான வித்தை காட்டவில்லை
அறிந்தும்
அறியாதவன் போலவே  காட்டிக் கொண்டவன்
அஞ்ஞானம் எனும் பொய்யை
மெய்போல் ஏற்று 
நடிக்கின்ற யோகி போன்ற  அனுமன் போகின்றான்.


பாடல்: 1167

இராவண வேந்தனின்  அரண்மனை  வாசலை
விரைவாகக் கடக்கும்படி
அனுமனை இழுத்துக் கொண்டு சென்றனர்
பொறுமையில்லாத அரக்கர்கள் - 
அனுமனின் நீண்ட வால் முழுதும்  துணி சுற்றினர்
முழுவதையும் எண்ணெயில் நெய்யில் தோய்த்தனர்
காந்தும் கடும் தீயினால்  கொளுத்தி விட்டு
அண்டம் கலங்கும்படியாக
சந்தோஷப்பட்டார்கள்.


பாடல்: 1168

பலப்பல கயிறுகள் சேர்த்தயிற்று
அழியாத வலிமை கொண்ட கயிற்றினால்
அனுமனைக் கட்டியாயிற்று
இரண்டு பிரிவாய் நின்ற
இலட்சம் பேர் பற்றிக் கொண்டார்கள்
காவலுக்கு வருகிறவர்களோ
கடல் போல விரிந்திருந்தார்கள்
திசை எல்லை வரை  பரவியிருந்தார்கள்
வேடிக்கை பாத்தவர்கள்  அளவு எவ்வளவு  என
எண்ணிக்கை கூட  
சொல்ல இயலாது.

பாடல்: 1169

தெருவில் வாசல் முழுதும் நின்று
வேடிக்கை பார்க்கிறவர்கள்  சத்தமாய்ச் சொல்லினர் :-
“இலங்கை நகர் அழித்த குரங்கு
காவல் கொண்ட அசோகவனம் அழித்த குரங்கு
அக்க குமாரர்களையே அழித்த குரங்கு
சீதையோடு பேசி
மானிடர் வலிமைத் திறம் அறிவித்த குரங்கிற்கு
உற்ற கதியைக் காண  வாருங்கள் ! வாருங்கள் !!”

பாடல்: 1170

அரக்கர்கள்  மகிழ்ச்சியினால்
ஆர்ப்பரித்தார்கள் - 
அண்டத்துக்கு அப்புறமும் கேட்பதும் போல !
அங்கு மட்டுமல்ல
இங்கும் முரசு ஒலித்தனர்
இடிமுரசு போல  குரல் எழுப்பினார்கள்
அனுமனை அதட்டினார்கள்
அனுமனை எல்லா பக்கமும் வேடிக்கை பார்த்தார்கள்
ஓடிச் சென்று  ஜானகிக்கும் சொன்னார்கள்
அவளும் உயிர் துடித்தாள்
உடல் வேர்த்தாள் விம்மினாள்
விழுந்தாள்
பெருமூச்சு விட்டாள்.


பாடல்: 1171

சீதையின் கோரிக்கை இதுதான்
“நெருப்பு தேவனே பார்!
எவ்வுயிர்க்கும் தாய் போல் கருணை கொண்ட
வாயுவின் துணையே!
பெருமை குணமிலா நாய்களாம் அரக்கர்கள்
அனுமனை நலிவு செய்யக் கண்டும் நீ
அருள மாட்டாயோ?
உலகுக்கு எடுத்துக்காட்டான நெருப்பே
உனக்குத் தெரியும்
கற்பினில் நான் தூயவள் என்றால் நெருப்பே
அனுமனைச் சுடாதே!”என்றாள்.

பாடல்: 1172

வெண்மைப் பற்களும்
மெல்லிய நகையும் மிக்க சீதை
இவ்வாறு சொன்னபோது
ஒளி மிக்க அக்னிதேவன் உள்ளம் அஞ்சிற்று
அனுமனின் மயிர்க்கால்கள் குளிர்ந்தன
தளிர்த்தன
வெப்பம் குளிர்ச்சியாயிற்று!
அனுமனின் வாய் முதல் எலும்பு வரை
வெம்மை தண்¢ந்தது
குளிர்ச்சி உண்டானது.!

பாடல்: 1173

சீதை வாக்குக்கு அடங்கியது நெருப்பு
கட்டுப்பட்டது நெருப்பு
அனுமன் உடலில் மட்டுமா குளிர்ந்தது?
கடலில் உள்ள
வடவா முக அக்னியும் குளிர்ந்துவிட்டது.
முனிவர்கள் காக்கும் மூன்று அக்னிகள்
(காருக பத்யம் -ஆசுவனீயம் - தட்சண அக்னி)
முப்புரம் எரித்த விரிசடை சிவனின்
நெற்றிக்கண் அக்னியே குளிர்ந்துவிட்டது.

பாடல்: 1174

அண்டம் கடந்து
சத்திய லோகத்தில் வாழும்
பிரம்மனின் கைகளில் உள்ள நெருப்பும் குளிர்ந்தது.
பிரம்மனின்
வேள்வி அக்னி குண்டங்கள் குளிர்ந்தன.
மேகங்களில் உள்ள இடிகள் குளிர்ந்தன.
வெற்றியும் வெப்பமும் மிக்க
சூரியமண்டலம் குளிர்ந்தது.
இருள் விழுங்கும்
அழிவற்ற சூரியன் குளிர்ந்தான்.
மீளமுடியாத
நரகமும் குளிர்ந்தது!

பாடல்: 1175

மலையளவு  கொண்ட தனது வால் பக்கம்
வெப்பமான தீ சுடாமல் குளிர்வது
நினைவால் நோக்கினான் அனுமன்
இதன் காரணம்-
ஜனகனின் மகள் கொண்ட கற்பின் வலிமை
என்று பெரும் களிப்பு ஆனான்
அன்பின் தொடர் அறுகாத அனுமன்.


--அனுமனோடு மீட்போம்.

Thursday, 3 April 2014

குரு வடிவம்


                    

“குருவே சிவமென்று கூறினன் நந்தி” என்று திருமூலம் பேசுகிறது. இந்த உலகிற்கு நம்மைக் கொண்டு வர இரண்டு பேர் தேவைப்பட்டனர். ஆனால் இந்த உலகில் இருந்துக் கொண்டே இன்னொரு உலகை நாம் அறிய உதவுகிறவர் குரு ஒருவரே. குருவின் கண்களில் வாழ ஒருவன் சேவை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பயன் கருதாத சேவை. “இன்ன செய்தால் இன்னது வரும்” என்ற எதிர்பார்ப்பு இல்லாத சேவை ஒன்றைச் செய்து தனது மனதை தானே செதுக்கும் சிற்பியாகவும்; உளி அடித்து உருவான சிலையாகவும் முயற்சிகளை மேற்கொள்வது குருவை நோக்கி அவனை நகர்த்தும் .
குரு நேரில் வந்து “நாளை முதல் நானே உனக்கு குரு” என்று சொல்லிக் கொள்வதில்லை. “அறிந்தவர் அறிவாராக” என்று மவுனமாக தனது செயல்களைப் புரிகிறார் குரு. ஆலமரத்தின் கனிகளில் , எது ஒன்று நிறைவு நோக்கிப் பழுக்கும் என்று அறிந்திருந்தும் மவுனம் காப்பவர் குரு. குருவின்  காலடிகளில் தனது எதிர்காலத்தை வைத்துவிட்டு நிகழ்காலத்தின் கத்திமுனைகளை ஆரஞ்சு சுளைகளைப் போல கடித்துச் சுவைக்க தனது சிஷ்யனை தயாராக்குவது குருவின் மாண்பு.
“மலை உச்சி அடைய எந்த வழியாக ஏறத்துவங்கலாம்? என்று சிஷ்யன் பவ்யமாக பணிவாகக் கேட்கிறான். “உச்சியிலிருந்து துவங்கு” என்கிறார் ஜென்குரு. அதாவது மலை உச்சியை இப்போதே அடைந்துவிட்டவனைப் போல உன் மனநிலையை உயர்த்திக் கொள். மலையின் உயரம் உன் மன உயரமாகட்டும். அந்த மனோநிலைக்கு உன்னை நீ வசியப்படுத்திக் கொண்டு மலை ஏற ஆரம்பி என்று அர்த்தம்.
நாம் தேடும் குரு எப்படி இருப்பார் என்று ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் ஏங்கியிருப்போம். வாழ்வின் துன்ப சுவடுகளில் அழுந்தி அழுந்தி அடி வாங்கிய பின்பும் நம்மை நடத்திச் செல்லும் பூரண சக்தி நம்மைத் தாண்டிய சக்தி வடிவான குருவிடம் உள்ளது என்று நமது அறிவு ஒத்துக்கொள்வதில்லை. “அறியும் அறிவை  நீ தந்துவிடு” என்று நாம் மனம் கசியக் கேட்பதுமில்லை. கேட்காத ஒன்று எப்படிக் கிடைக்கும்?

                                           (குருவைத் தேடுவோம்) 

சுந்தர காண்டம் -1126 to 1150







பாடல்-1126

“அப்படிப்பட்ட இராமனின் அடிமையேன்
அடியேன் நாமம் அனுமன் என்பேன்
அழகிய நெற்றியாள் சீதையைத் தேடி
மிகப்பெரும் நான்கு திசைகளும்
தேடி அலைந்த வாலியின் புதல்வன் அங்கதன்!
அவனது தூதன் நான் மட்டும் வந்தேன்இங்கு”

பாடல்-1127:

அனுமன்  கூறிவிட்டான்
கருமேகம் நடுவே மின்னல் தெரிவது போல
இராவணன் பற்கள் தெரிய சிரித்தான்
“வாலி மகன் அனுப்பிய தூதனே
வலிமை மிகு வாலி நலமா!
வாலி அரசு நலமா?”என்றதும்
நாயகன் இராமனின் தூதன் சிரித்தான்.

பாடல்-1128:

“அஞ்சாதே அரக்கனே!
பெரும் சினமுடைய வாலி
வானுலகம் எப்போதோ அடைந்தான் !
அவன் வாலும் போய்விட்டது ! எப்படி என அறிவாயா?
மை போன்ற கருநிற இராமனின்
ஒரே ஒரு அம்பினால் அழிந்தான் வாலி
எமக்கு தற்போது அரசன் வாலி அல்ல
சூரியன் புதல்வன் சுக்ரீவன்”

பாடல்-1129:

“எதற்காக இராமன் மனைவி சீதையை
அங்கதன் தேட வேண்டும்?
எதற்காக வலிமை வாலியை
அம்பினால் இராமன் கொன்றான்?”
வாயு மகன் அனுமன் பதில் சொன்னான்.

பாடல்-1130:

தேவியை நாடி வந்தான் செங்கண்ணான்
எங்கே எங்கே எனத்தேடுகின்ற  இராமனுடன்
நட்பானான் சுக்ரீவன்
இன்னொரு உயிராக இராமனுடன்  இணைந்தான்
“வாலியால் வந்த  துன்பம் துடைத்திடுக” என்றான்
ஓவியர்களும் எழுத இயலா உருவன் இராமன்
சுக்ரீவன் மனைவி உருமையை மீட்டான்
செல்வத்தை முன்னே கொடுத்தான்
வாலியையும் கொன்றான்

பாடல்-1131:

“சுக்ரீவனுடன் இராமன்
நான்கு மாதம் தங்கியிருந்தான்
வானர சேனை சூழ இனிது இருந்தான்
“நீங்கள் தேடுங்கள்” எனப் பணித்தான்
இப்படித்தான் இலங்கை வந்தோம்” என
தூதன்  சொன்னான்.

பாடல்-1132:

“உங்கள் குலத்தலைவன் சுக்ரீவனோடு
ஒப்பிட முடியாத வலிமை வாலியை
அம்பினால் கொலை செய்த இராமனுக்குத்
அடிமைத் தொழில் செய்யும்
உங்கள் புகழ் அழியவே அழியாது!
அப்படி அழிந்தால்
உலகம் பேதமை உடையது
என்று ஏளனமாகச் சொன்னான் இராவணன்.

பாடல்-1133:

“தன் சகோதரன்  வாலியைக் கொல்லச் செய்தவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிக் கொன்றவன் மீதே அன்பு செலுத்துபவன்
உங்கள் தலைவன் சுக்ரீவன்!
அப்படிப்பட்டவனின் தூதன் செய்தி என்ன!
போரிட்டது ஏன்?
தூதனைக் கொல்லமாட்டோம்
நெஞ்சம் அஞ்சாமல் சொல்க”என்றான் இராவணன்.

பாடல்-1134:
இராவணன் சொல்லிய சொற்களை
தொகுத்து ஆராய்ந்து
“உலக பொது நீதியை உணர்த்தினால்
அது பொருத்தம்” என நினைத்து
அருங்குணத்தான் அனுமன்
சொல்லத் தொடங்கினான்.

பாடல்-1135:

தூதனாக நான் வந்தேன்
சூரியன் புதல்வன் சுக்ரீவனுக்கு!
அச்சொற்களின் நீதியை உணர்வாயெனில்
“குற்றமற்றன” என உணர்வாய்
உன்னிடம் சொல்வேன்.

பாடல்-1136:

“உன் வாழ்வை வீணே கெடுத்தாய்
அறத்தை சிறிதும் நோக்கவில்லை
தீமை செய்தாய்
அழிவு காலம் நெருங்கிவிட்டது
எனினும்
என் சொல்லைக் கேட்டால் உன்
உயிரை நீண்ட காலம் காக்கமுடியும்”

பாடல்-1137:

பெருந்துன்பத்திலும்
குற்றமற்ற கற்புடைய சீதையை
தீயைக்காட்டிஉம் தூய சீதையைத் துன்புறுத்தினாய்
அதனால்
புலன்களை வென்று போற்றிக்காத்த
தவத்தின் பயன்
உன்னை விட்டுக் காய்ந்து போய்விட்டது.

பாடல்-1138:

தேவர்களை வென்ற பெருமை
முன்பு அழிந்தது
இன்று அதில் சிறிது அழிந்தது
நாளை அதிலும் சிறிது அழியுமே தவிர
நிறைந்து நிற்குமா?

பாடல்-1139:

“பாவத்தால்
புண்ணியத்தை அழிக்கமுடியாது”
எனும் உண்மையை விட்டு நீங்கினாய்
மாதவம் செய்து
அதனால் பெற்ற தூய்மை நிலை நீங்கினாய்
தூய்மை மிகு சீதையிடம் கொண்ட
ஆசை எனும் நோயால்
உன் தூய்மையை துடைத்து அழிக்கின்றாய்”

பாடல்-1140:

திறம் நிரம்பிய காமசெருக்கினால்
அறமுறை மறந்தவர்கள்
தன்னுடைய அறிவுக்குள்ளேயே
சுழன்று சுழன்று மயங்கி
இறந்து இறந்து
மேலும் மேலும் தாழ்ந்து அழிவார்கள்
அறம்மாறி நடந்தவர்களில்
அழியாமல் வாழ்பவர்
உலகில் யார் உள்ளார்கள்


பாடல்-1141:

உலகில் எல்லாவற்றுக்கும் கணக்கு உண்டு
ஆனால் இளமை மிகு மகளிரிடம்
முறையற்ற காமத்தால் அளவு கடந்தவர்கள்
கணக்குக்கு எல்லை இல்லை!
களிப்பு கொண்ட வண்டுகள் மொய்க்கும்
மாலைகள் அணிந்த ஆடவர்கள்
நேர்மையற்ற செயலால்
மறைந்தவர்கள் எண்ணிக்கைக்கு
எண்ணிக்கை இல்லை.

பாடல்-1142:

ஞானமுள்ளவர்கள் இருளாக நினைப்பது
பொருளாசை காம ஆசை மட்டுமே!
வறியவர்களுக்கு ஈதல்கருணையுடன் நடத்தல்
பொருளாசை காம ஆசை தீர்தல் என்பதையே
தெளிவு என நினைப்பார்கள்!

பாடல்-1143:

காம இச்சைத் தன்மையால்
பிறர் மனைவியை விரும்பி
தினமும் பிறர் எள்ளி நகையாடினாலும்
வெட்கம் அற்றவன் ஆனாய்
உனது பசுமையான தேகம்
காமதாபத்தால் உலர்ந்தது
பழிபடுகின்ற ஆண்மை
சிறந்த குணங்களில் ஒன்றாக ஆகுமோ!

பாடல்-1144:

அலைகடல் சூழ்ந்த உலகினில்
உன் போன்ற அரக்கர்களில்
உன்னைப் போல அறிவும் நீதியும் பெற்றவர் எவர் உண்டு!
வேத நீதியின் விதிப்படி நடந்திட
காதல் கொண்ட நீ
அறத்தின் எல்லை கடந்து விடவா செய்வாய்!

பாடல்-1145:

வெறுப்பு உண்டான ஒருத்தியை விரும்பி
அவள் மறுத்த பின்பும்
வாழ்கின்ற வாழ்வை விட
முகத்தின் நடுவே ஓங்கிய மூக்கை அறுத்துக் கொண்டு
“அது அழகு” என்று கூறுதல்
ஏற்புடையது ஆகும்!

பாடல்-1146:

உலகையே அழிக்க வல்ல கைகளும்
ஆயிரம் தலைகளும் இருந்து என்ன பயன்?
அறம் தவறும்போது
அவை உன் உயிர் காக்குமோ
ஊரெல்லாம் அழிக்கின்ற
கொடு நெருப்பில் அகப்பட்ட
நூறு துணிகளைப் போல் அழியும்.

பாடல்-1147:

நீ எதை மறந்தாய் தெரியுமா?
திரிபுரங்களும் தப்பமுடியாமல்
பெரும் நெருப்பால் கோபமுடன் அழித்த சிவன்
வீணை நரம்புகள் கொண்டு
நீ இழைத்த பாடலுக்கு மகிழ்ந்து அளித்த வரம்
அறம் தவறினால் அழியும் என்பதை மறந்தாய்
வேதநெறி விலகாத இராமனின்
அம்புச்சக்கரம் குறி தப்பாமல் அழிக்கும்
என்பதும் மறந்தாய்.

பாடல்-1148:

தெளிந்த ஞானிகளும் விரும்பும் அளவுக்கு
சிறப்பு உடையவனே
அழியாத நின் வாழ்நாள் சிதையுமாறு
எல்லாச் செல்வமும் அழிய
எளியவனாக மாறி
எல்லோரும் ஏளனம் செய்யும்
இழி தொழில் செய்வதில் ஈடுபடுவாயோ!


பாடல்-1149:

உலகில் பிறந்தவர்கள் மட்டுமல்ல
உலகில் பிறவாத வீடுபேறு  பெற்றவர்கள்
தேவர்கள்
தேவர்களுக்கெல்லாம் தேவராகச் சிறந்தவர்கள்
எவருமே இராமனை  மறந்தவர்கள் அல்ல
இது சத்தியம்.

பாடல்-1150:

“ஆதலால் இராவணா!
அருளும் செல்வமும் உறவினரையும்
இழக்காமல் பெற்றிட
சீதையைத் தருக” எனச் செப்பினான்
சூரியன் மகன் சுக்ரீவன்” எனப்படும் அனுமன்.

--அனுமனோடு மீட்போம்.