Friday, 14 November 2025

 கவலை விடுபடல்

இத்தனை பெரிய ஊரில்

யாருமில்லை என் வீட்டைப் பாதுகாக்க

ஒவ்வொரு சேமிப்பும் ஒவ்வொரு பொருளையும்

தனியே விட்டு ஊர் கிளம்ப

குசுகுசுக்கும் பயம் நெருடிற்று

செம்பருத்தி தனியே வீழுமே

தோட்டம் நீரற்றுக் காயுமே

ஒட்டடை குமிந்து கூடுமே பூட்டுகளை நம்பியா

ஒரு ஒரு மனிதனும் வீட்டைத் 

தனியே விட்டிட அஞ்சுகிறான் ?

குனிந்து கிழவி போல  கொல்லைப்புற மாமரம்

ஓரோர் இலை போடும் சப்தம் கேட்கும்

நண்பர் வந்து ஏமாறுவர் சப்தம் கேட்டு!

வீட்டைப் பாதுகாக்க 

யாரேனும் தோழனை

இரவிலே படுக்கச் செய்யும் ஏற்பாடுகள் தோல்வி

அவரவர்க்குள்ளும் ஆயிரம் முட்கள்

ஆயிரம் காரணங்கள் கூறி தட்டிக் கழிக்க

பூட்டிய வீட்டை தனியே விட

பயச்சங்கிலி தாக்கும்போது 

நீண்ட வெகு நீண்ட

காலங்களுக்குப் பிறகும்

தொங்கும் சருகுக் குப்பை என அலட்சியமாய்

எடுத்துப் போடாமல்

நான் விட்டிருந்த கூடு நோக்க நேர்ந்தது!

தன் கூடு இருக்கிறதா என்று பார்க்க சீறிப்பாய்ந்து

கூரை கீழே காற்றில் பளபளத்தது 

அந்த மஞ்சள் மார்புக் குருவி ஓ! கடுகுக்கூர் அலகினால்

உள் சன்னல் வழியே அதன் கண் காணக்கிடைத்தது.

“வீட்டைப் பாதுகாக்க ஆள்வந்தாயிற்று”

விட்டு விடுபடலானேன் எனக்கென்ன மனக்கவலை!

***


No comments:

Post a Comment