ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது
பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி
மழையாக கீழே உதிர்த்துவிட்டு
ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.
வானமே நீ என் தாத்தா மாதிரி தோணுகிறாய்.
வேட்டியை சரியாக கட்டாமல்
தோட்டத்தில் அலைகிறது மாதிரி
உன் மேக வேட்டியை திரிய விடுகிறாய்.
ராத்ரியெல்லாம் - ஒரு பத்தரை மணி
ஒரே மின்னல் காடாக்கிவிட்டாயே ஏன்.
ஞானியர் உலகத்தில் பாயும் நல்லொளி மாதிரி இருந்தது அது.
மூணு வயசு அபி பாப்பா
பாயில் போர்வையில் நத்தை மாதிரி சுருண்டு கொண்டு;
“ஏம்பா .. நம்மள எல்லாம் நல்லவங்களான்னு
சாமி லைட் அடிச்சுப் பார்க்கிறாரான்னு” கேட்டது.
நான் என்னத்தைக் கண்டேன்!
சரடு சரடாக இங்கிலீஷ்ல “Y” எழுத்து போடறா மாதிரி
கம்பி கம்பியாத் தெரியற
மின்னல் கோட்டைப் பார்த்ததும்
அது மறைஞ்சதும்
வயதான தாயின் நடுமண்டையில ஓடற
வெள்ளைமுடிக் நரைக்கற்றை ஞாபகம் வந்தது
உண்மையிலேயே மின்னல் வரும் போது
கண்ணை மூடிக்கிற பய புத்தியைக் கழுவறத்துக்கு
கடையில சோப்பு இருக்கா தெரியலை.
ஆனா மேகமே..
இந்த அறை கூட
சில்லுன்னு ஆயிட்டுது
ராத்திரியெல்லாம் பெஞ்சு வச்சிருக்கே!
தோட்டமெல்லாம் தார் ரோடெல்லாம் ஈரம்.
மைனாக்குருவி
ஒன்னு இறக்கை நனைஞ்சிருந்தது
ராபின் நாய்க்குட்டி கூட சாக்குல சுருண்டு கிடந்தது.
கண்ணு கூட அரைக்கண்ணுதான் திறக்குது
சுதந்திர தினம் இன்னும் இரண்டு நாள்ல வருது
மேகமே உனக்கு கேட்குதா இந்தியாவின் சந்தோஷ சத்தம்?
***
No comments:
Post a Comment