Sunday, 18 August 2013

எனக்கென்று..

எனக்கென சிறுநதி வைத்திருந்தேன்  அதில்தான்
எருமைகளின் காலைக்குளியல்
எனக்கென கொஞ்சம் வானம் சட்டைப்பையில் வைத்திருந்தேன்
அதில்தான் பட்டம்விடுவேன் என்கிறார்கள் தெருவாசிகள்
எனக்கென ஒரே ஒரு இயற்கை ஓவியன் வைத்திருந்தேன்
திருவிழாவில் கதவிலக்கம் எழுத மட்டுமே
அழைக்கிறார்கள் ஊர்க்காரர்கள்
எனக்கென கால்கள் ஓரம் நடைபாதைபுற்கள் இருந்தன
அதை உண்ணவே எனது பேதமை ஆர்வமாகிறது
எனக்கென வாங்கிய புல்லாங்குழல் துளைகளில்தான்
குளவிப் புழுக்கள் மண்கொண்டு மூடும் 
எனக்கென இருந்த நண்பன் ஒருவன்
அநீதியாய் வேலை துறந்தான்
எனக்கென ஒலிக்கும் இசைப்பாடல்கள் நடுவில்தான்
அறுபதுக்கும் மேலே விளம்பரங்கள்
எனக்கென இருந்த அம்மாவின் இதயம் முழுதும்
தேவையே இல்லாத தனிமை அழுத்தங்கள்
எனக்கென உணரும்  மரியாதைமிகு அவதிகளை வைத்திருந்தேன்
அதைச்சொன்னால்
சில்லு சில்லு கண்ணாடியாய் உடைப்பார்கள்
என்ன ஒரு கருணை
எனக்கென ஊதினால் உலகம் முழுதும் விரியும் ஒரு பலூன்
வைத்துள்ளேன்
நல்லவேளை கடவுள் அதனை எனக்குள் விட்டுவிட்டார்!





No comments:

Post a Comment