Sunday, 6 January 2013

திருப்பாவையில் மனப்பாவை

மார்கழி-பத்தாம் நாள்

“எம்பாவாய்! எம்பாவாய்!” என்று முடிகிறதாகவே திருப்பாவை முழுதும் அமைகிறது. மனம் எனும் பெண்ணை வசியப்படுத்துதல் எளிதல்ல. “ஒன்றையே பற்றி ஊசலாடுவாய். ஒன்றை விட்டு ஒன்று தாவுவாய். என் வார்த்தை கேளாய்” என்று மகாகவி பாரதி “மனப்பெண்” எனும் தலைப்பில் கவிதை எழுதினார்,
அதன் போக்கிலேயே சென்று ,பட்டாம்பூச்சி பிடிப்பதுபோல் பிடிப்பதே நமது கடமை. “சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தையை அம்மா திட்ட மாட்டாள். என் கண்ணல்லவா! என் பட்டு” என்று அதிகமாகக் கொஞ்சுவாள். இந்த வேலையைத்தான் நாமும் நம் மனதிடம் செய்ய வேண்டும். எதற்கு? நமது சொல்படி நடக்க வைப்பதற்கே. திருநாவுக்கரசு சுவாமிகள் நம்முடைய ஐந்து புலன்களை “கள்ளப்புலன்கள்” என்று திட்டுவதுபோல்சொன்னாலும் அதே வரியில் அவற்றை “காளா மணிவிளக்கே” என்கிறார். “கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே” என்பது அப்பர் வாக்கு.
அதாவது எந்த ருசியைத் திருடலாம் என கண், காது ,மூக்கு, வாய் , மேனி என்ற ஐந்தும் அலைகிறதாம். ஆனாலும் அவை உள்நோக்கி திருப்பப்பட்டால் Transformation பெற்று விளக்காகவும் மாறும் என்கிறார். எவர் திருடரோ அவரையே போலீசாக்குவது மனசின் சக்தி என்பதை ஆண்டாள் நாச்சியார் “எம்பாவாய்” என்று அழைப்பதிலேயே புரிகிறது.

திருப்பாடல் 10 :
 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணணும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment