Saturday, 12 December 2015

துன்பங்களின் கூட்டுத்தொகை !


ஓம்.

துன்பங்கள் வந்தால் துடித்துப்போகாதார் யாருமில்லை. மொத்த துன்பங்களும் தொகுப்பாக வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கொரு பாடல் இருக்கிறது. “அர்த்தமுள்ள  இந்துமதம்” கண்ணதாசன் நூலில் படித்தேன். அந்த பாடல் எழுதியவர் பெயர் அதில் போடவில்லை. ஆனால் “வாழையடி வாழை” வடலூர் மேட்டுக்குப்பத்திலிருந்து வெளிவரும் இதழில் ராமச்சந்திர கவிராயர் என இருந்தது. அந்த இதழை நடத்துபவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். நன்றி.
               அழகான ( படா அவஸ்தையான) அந்தப் பாடல் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் தன்மைகள் கொண்டிருக்கிறது. அது இதுதான்:-
                     “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
                      அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக
                      மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
                       வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
                       சாவோலை கொண்டொருவன் எதிரே வர
                        தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
                        கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க
                       குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே”
இந்தப்பாடலின் பொருளை சிந்திப்போம். ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். வீடே நச நச என இருக்கும். காரியம் ஒன்றும் புரியாது. (இப்போதைய வெள்ளம் வந்த சென்னை வீடு மாதிரி) காய்ந்த இடம் இல்லாமல் இருக்கும். அப்போது மழையும் பொழிந்தததாம். வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லையாம். வீடும் விழுந்து விட்டதாம். வீட்டு வேலைக்கார அடிமை உதவி கேட்கலாம் என்றால் செத்துவிட்டானாம்.  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடினானாம். வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டாராம். நெருங்கிய உறவினர் இறந்தார் என்று சாவோலை அதே நேரத்தில் வந்ததாம். அதே நேரத்தில் மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் வந்துவிட்டாராம். பாம்பும் தீண்டியதாம். அரசர் எதிரே வந்து நிலத்துக்கு கட்டவேண்டிய கடனைக் கேட்டாராம். அதே நேரத்தில் குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்றாராம்!
              
                    
                   

No comments:

Post a Comment