Friday, 25 December 2015

அப்பா! உனக்கு ஆயிரம் வார்த்தைகள்


அப்பா என் ஆருயிர்த்தேனே
அடியோடு உன்னை இழந்து என் ஆவி சோர்கின்றேனே
செப்டம்பர்30 நள்ளிரவு ஏன்தான் வந்ததுவோ காந்திபோல்
எளிமைக்கு வந்ததுவோ உன் பிறப்பின் இரசியம்
என்றும் போல் இருப்பதில்லை மரண நாட்கள்
இருப்பது போல் இருந்து சந்தன ஊதுவத்தி மணமாய் மறைய
உன்னிடம்தான் கற்க வேணும்
ஏதோ கூப்பிட்டதுபோல
மாசிவ் அட்டாக் நிகழ்ந்து நெஞ்சு அடைக்க
சுழன்ற நாக்கை கடித்துக்கொண்டு இரத்தம் ஒழுக
பாத் ரூமில் சரிந்து கண் மூடி மறைந்தாயே
சிவன் தான் வந்தானோ
எஸ்.ஆர். எம். ஆஸ்பத்திரியில் விட்டோமே என
கவ்விடத்தான் கொண்டானோ
பொக்கெனப் போனீரே
சிறு மூச்சா பெரு மூச்சா
காண வேண்டும் மரணக்காரா நீ அறிவிப்பாயா
30ம் தேதியே வாடகைப்பணமும் மளிகைப்பணமும்
அட! கரண்ட் பில்ல்லும் கூட கட்டிவிட்ட
நிதி உணர்வு தனி உணர்வு விழிப்புணர்வு
 அட ! 84 வயது உனக்கென்றால் எவர்தான் நம்புவர் காண்
தடங்கல்களில் சுலபமாய் நீந்திய அன்புப் படகே
எங்கே போனாய்
உனக்கு பென்ஷன் 85லும் வாங்கும் ஆசையும்
பெருமிதமும் ஆரோக்கியமும் குரல் பலமும் இருந்தன
இரவுப்பணி நள்ளிரவில் எலக்டிரிகல் சாதனப்பணி பயம் என்றேன்
வான் கலந்த மாணிக்க வாசகரின் திருவாசகம்
துன்பம் வரும் நேரமெல்லாம் படி என்றாய் ஆஹா
சிவபுராணம் சொல்லிக்கோ என்றாய் சகஜமாய்
நான் கவ்விக்கொண்டேன் பயம் போயிற்று
தொற்றிய பயம் துரத்தும்போது தப்பிட
உன்னையறியாமல் எப்போதோ கற்பித்தாய்
என்றாலும் நான் பற்றினேன்
எத்தனை எத்தனை இன்பங்கள் நீ தந்தாய்
அத்தனையும் கூறிட
ஒரு நெஞ்சு எனக்குப் போதுமோ ஏன் பிரிந்தாய்
நெஞ்சு கரிக்கும் என்று சொல்லி
எந்த உணவு பின்னாலும் உனக்குப்பிடிக்கும்
மாவடுவும் பழைய சோறும் காம்பினேஷன்
இரவில் நீ உண்ணும் ஓசை
உறிஞ்சும் ஓசை அள்ளி அள்ளி உண்ணும் ஓசை
இப்போதும் கேட்குமப்பா
ஆயிரம் கதைகள் சொல்லி ஆயிரம் அனுபவங்கள் சொல்லி
மகனை மகளை மாணவரை மாணவியை
காண்பவர் எவராகினும் அறிவின் சிகரமாக்க
பேதமில்லாமல் முயன்ற
உன் அன்பை வெட்ட வெளி ஞானம் என்பேன்
குளத்தில் சிமெண்ட் கட்டை மீதிருந்து
என்னைத் தூக்கி வீசிப்போட்டு
ஐயோ அப்பா காப்பாற்று என்று கத்திக்கொண்டே
நீரை அழுத்தும்போது “அதாண்டா நீச்சல்!” என்ற துணிவு
மணக்கால் குளத்தில் நீச்சல் கற்றுத் தந்து
 மீன்கள் போல் நீரில் நீந்தும் ஆசை தோற்றுவித்தாய்
பேராசிரியர் சத்திய சீலன் உன் தோழன்
அவர் பெயரே எனக்கும் சேர்த்து
நட்பின் பெருமை பூண்டாய் உலகில் உன் போலுண்டோ
மேடையேறி பேசுக என் மகனே என  நீ
நேரடியாய் சொல்லாமல் இரவென்றும் பகலென்றும்
சத்தியசீலன் அறிவொளி பட்டிமன்றம் கூட்டிச்செல்வாய்
உன் நட்பெல்லாம் எனக்காக்கி
இளம் வயதிலேயே
என்னைத் தமிழ்க்கிழவனாக்கினாய்
தனித்த நறும் சொல் மட்டும்தானா
அன்பென்ற இணைப்பெல்லாம் இலக்கியமெல்லாம்
புதுக்கவிதை சாரம்தான் என்று
சுஜாதா எனை பாராட்டிய கணையாழிக் கூட்டம் வந்தாய்
இலக்கியபீடம் விக்கிரமன் ஐயா நெய்வேலி விருதுதர
அப்போதும் என் அருகே வந்தாய்
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ப்ரேமி தொடரில்
என் கவிதையை ஜேம்ஸ் ஐயராக அவர் முழங்க
ஊருக்கு ஊர் என் பையன் கவிதை என் பையன் கவிதை என்றாய்
நிமிடத்தில் சுதந்திர உணர்வு கொள்ளும் சுதந்திர எண்ணம்
உனக்குண்டு ஆதலினால்
எப்போதும் விரைந்து பறக்கும் பேச்சிலே வித்தை செய்தாய்
காவியத் தலைவன் போல் ஒரு கணம் உன்னை உணர்வாய்
கால் நொடியில் நாம் ஒன்றுமில்லை என்பாய்
ஞான நிலை தத்துவ நிலை
இரண்டின் நிலையும் மாறி மாறி பயணம் போனாய்
கல்வியிலே உனைப்போல விடாமுயற்சி இளைய தலைமுறை
பெற வேண்டும் என்று எனை நினைக்க வைக்குமளவு
மலை போல் இரவு முழுதும் விழித்துப்படிப்பாய்
ரோடு மேஸ்திரிக்குப் பிறந்த எட்டாவது பையன்
என்ற மனப்பான்மை பெருமையாய் கூறுவாய்
காபி ஆற்றும் வேலை செய்து புத்தகம் இரவல் வாங்கி
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பாய்
திருப்பராய் துறையிலும் சிதம்பரத்திலும் கற்றாய்
நான் டிப்ளமா சிதம்பரத்தில் படித்தபோது
நீ M.Ed படித்தாய்
இரவு நேரத்தில் வாடகை வீட்டின் வெளிச்சம் போதாமல்
ஒரே ட்யூப் லைட்ட்ட்டின் கீழ் படிப்போமே அப்பா!
திரிசிரமலை புராணம் நீயும் சத்தியசீலனும் கலந்து எழுதிய
பக்திக்காப்பியம் ஆனாலும் நீ தீவிர பக்தனல்ல
உலக வாழ்க்கை பக்தன் என்றே உன்னைக்காட்டி வந்தாய்
எல்லோரும் நம்பி விட்டோம்
தம்பிக்கு பெரம்பலூரில் வேலை கிட்டியதும்
சிதம்பரம் நடராஜர் பொன்னம்பலத்தை
மொட்டை அடித்த தலையோடு அங்கப் பிரதஷ்ணம் செய்தபோது
உன்னையுமறியாமல் உன் பக்தி உலகுக்கு
சிறு முளை காட்டிற்று
உலகுக்கு இருக்கும் ஒரே வழி
நமசிவாய மந்திரமே என்று
ஒரு தரம் ஒப்புக்கொண்டாய்
“எனக்கு ஒரு முறை நீச்சல் வராமல்
குளத்தில் இறக்கும் நிலை
வந்தபோது இராம நாமம் காப்பாற்றியது அதனால்
அதுவே எனக்கு இலகுவாய் வருகிறது”  என்றும் சொன்னாய்
நடப்பு செய்தி எதுவானாலும்
உன் கருத்து உன் சிந்தனை
அதனை மறுக்கும் முதலில் பிற்பாடு வளையும்
நாக்கில் ஒலிக்கும் சொற்கள்
நெகடிவ் தன்மை போல் அச்சம் தரும்
இங்கே இருப்பதை எதிராளிக்குப் போய் சொல்லி விடும்போல
செய்தி சொன்னவரை கலங்க வைக்கும்
கீதை கண்ண பரமாத்மா போல
எல்லோருக்கும் பொது என்ற தன்மை கொண்டதனால்
எல்லோரும் உன்னை வா வா என்றாலும் ஏதோ
உள்ளே கொஞ்சம் அஞ்சினர்
ஆனாலும் பொது மனிதர் ஒருவர் பொது ஜன விரோதி என
நினைக்க இடம் ஆனாய்
ஆனாலும் என் கடமை பொதுக்கருத்தே என்றாய்
என் கருத்தை எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்
என்று கண்ணதாசன் போல  எடுத்துச்சொன்னாய்
புத்தகம் அச்சிடுகிறேன் என்று சொன்னால் போதும்
உடனே கவலைப்பட்டு முதல் ஆளாய் தடுத்திடுவாய்
புத்தகம் விருது வாங்கினாலோ
“என் பிள்ளை !” என்று உச்சி மோர்வாய்
உன் சிடுக்குகளும் நேர்ப்புள்ளிகளும் கோணல்களும்
என் திருமண வாழ்க்கைக்குப் பின்
என்னைத் திணற வைத்தன
ஆனாலும் என் மனைவி கஸ்தூரிபா போல
என் இயலாமை மாற்றி  தனைக் கொடுத்து எனக்கு பலம் தந்தாள்
உன் முதுமையெல்லாம் அவள் ஆதரவாக கனிவுடன் இருந்து
எனக்கு நான்கு கரங்கள் என இயங்கினாள்
கடைசியாய் தீபாவளிக்கு காரில் அழைத்து வந்தபோது
“தலை தீபாவளி மாப்பிளை!”  எனப் பெருமிதப்பட்டாய்
(அது கடைசி என்று யாருக்குத் தெரியும்)
அவசரத்தில் தவறாகப் புரிந்து கொள்வதில் உன்னைப்போல்
அசகாய சூரர் யாருமில்லை என்றாலும்
அத்தனையும் வெளிப்படையாய் சொல்வாய் குழந்தை போலே!
குஷ்ட ரோகிக்கு உதவுவதென்றாலும்
இல்லாதவர்க்கு இரக்கப் படுவதென்றாலும்
கனிவு உந்தன் சொந்தம்
ஆனால் சிறுகணமும் அவமானம் தாங்காய்
திருக்குறளில் முந்திரி பருப்பு போலே
முத்து முத்து வாக்கியம் பகிர்வாய்
“குணம் என்னும் குன்றேறி நின்றார் சினம்
கணம் ஏனும் காத்தல் அரிது” என்பதாக
உன் சினம் நியாயம் செய்வாய்
எத்தனை எத்தனை ஊன்று கோல் சொற்கள்
அத்தனையும் நீ உருவாக்கின சொல் சிற்பங்கள்
அடடா அடடா
“எதிர்பார்த்தால் ஏமாற்றம்”
“பணம் கிடக்கு பாஷாணம்”
“கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
யாரே அனுபவிப்பார் அந்தப்பணம்”
“நான் முந்திண்டா நோக்கு நீ முந்திண்டா நேக்கு”
“If you save a penny , a penny will save you”
“A thing for a place and a place for a thing”
“Waiting for mahatma”
“ a stitch i time saves nine”
எத்தனை எத்தனை
கொத்து கொத்தாய் நெஞ்சில் கொட்டிவிட்டுப் போனீரே
மரியாதையாய் நடத்துகிறேனா அப்பா என்றால் -
“நீ எனக்கு அப்பா ஆயிட்டேடா நாங்க உன் பிள்ளைகள்” என்றீர்
கோமாளிகளோடு பேசவும் தெரியும் அப்பாவுக்கு
அப்துல் கலாம் ஆங்கிலமும் குறட்பாவும் சிந்தனையும் தெரியும்
அப்பா! நீங்க நல்லாசிரியர் விருது வாங்கலியே ? என்றால்
அடுத்தகணம்
அது “நல்- ஆ- சிறியர்!” விருதுடா என்பீர்
எதுவும் எகத்தாளம் செய்யப்படாமல்
உன்னிடம் தப்பியதில்லை
உன் அன்னைப் பாசமும்
மேட்டுக்குப்பம் சிவப்பிரகாச சாமிகள் பாசமும் தவிர!
எதையோ இழந்தது போல்
நானும் என் மகளும் என் மகனும்
உணர்ந்து கலங்குகிறோம்
அப்பா நம்முடன் தான் உள்ளார்
என்கிறாள் குழம்பிய மனைவி
கடைசியாக போனில் “வாரா வாரம் பேசும்மா”
என்றாரே என்கிறாள்
இல்லை இல்லை நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
நான் அவர் வேட்டி சட்டை உட்பட
மேட்டுக்குப்பம் இல்லத்திற்கு கொண்டு சென்றோமே
அப்படி எனில் அப்பா இல்லை தானே என நினைக்கிறேன்

“என் சாம்பலை மேட்டுக்குப்பம்
சிவப்பிரகாச சாமிகள்ட்ட கொடு”என்ற தியாக
உணர்ச்சி வாக்கியம் நெஞ்சை அறுக்கிறது  
இல்லை இல்லை என்கிறேன்
நீங்கள் இருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் என்றும் சொல்கிறேன்
அதற்குள் டெத் சர்டிபிகேட் வந்துவிடும்போல் உள்ளது
இருப்பதும் இல்லாமையும்  கலந்து துன்பமுறுகிறோம்
இன்பமான நிலை இல்லை இது
மந்திர ஒலிகளால் அஞ்சலி செய்ய
சோதக கும்பம் - திதி மாசிகம் வந்து வந்து போகுது
அப்பா உனக்கு உன்னை அறியாமலே
ஆண்டவன் அருள் துரத்திற்று
ஆதலினால் நெருப்பில் வாய் வைத்தாலும்
முடிவில் அது இனிப்பாகவே மாறி உனைத் தூக்கிற்று
 அந்த கால அனுபவ முத்திரைகள் என்றாலும்
அவர் அவர் அனுபவம் மதிப்பாய் விலகுவாய்
Everybody is an individual என்பாய்
“கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்” 
கண்ணதாசன் பாட்டை எம்.எஸ்,வி. குரலில் பாடுவாய்
ப்ரீசர் பாக்சில் இருந்து எங்களை யெல்லாம் பார்த்தாய்
வறுமைக்கு கலங்காதே உன் நேர்மை உன் சொத்து
அஞ்சாதே என்றாய்
கற்பதில் உன்னைபோல் மாணவ மனம் எனக்கு கொடப்பா
அஞ்சாமையில் அன்பில் நட்பில் இயற்கை நேசிப்பில்
எனக்கு உன் பலம் கொடப்பா
Be bold ! say yes or no! உன் இஷ்ட வாக்கியம்
What is lost! Un conquerable will that i have
என்பது உன் ஜீவ வாக்கியம்
ஏசு பிறப்பு நாளில் எழுதுமிக்கவிதை கண்டு
எழுந்து வா என் அப்பா என்றால்
“மேப்படியான் மோகனய்யர் பாத்துப்பான்” என்பீரோ
அழுகின்றேன் கண்ணீர் வாராமல்
அதுக்கும் ஏதேனும் சொல்வீரே அப்பா
“நானேதான் நீ ஆயிடுக”
அழுத்திச்சொன்னீர் செல்போனில்
ஆசி தருக அருள் தருக தெம்பும் வழியும் தருக!



No comments:

Post a Comment