Wednesday, 30 December 2015

மார்கழி எனும் பெண்ணும் - மனம் எனும் பெண்ணும் ! (1 -14)



ஆஹா என சந்திக்கிறார்கள்
இயற்கை மனம் என்ற பெண்ணும்
மார்கழி என்ற குளிரால் செய்த பெண்ணும்!

ஒருவரை ஒருவர் அழைத்து மகிழ்வர்
ஆண்டாள் திருப்பாவை முழுதுமே ஆனந்தக்குளிர்தான்
பெருமிதமான தமிழின் செல்வக்குளிர்
வெளிப்படையான பேச்சு இது அன்று
காதலின் பூமி முழுதும் கண்ணன் எனும் தெய்வத்தின்
இளமை பூசிய இரகசியத்தின் உச்ச கட்ட உரையாடல்கள்
ததும்பி வழிகின்றன பரிசுத்தமான ஆன்மாவின் கேவல்களாய்!
காதலின் குளிர்காலத் திருக்குறள் காமத்துப்பால் இது
இதில் முழுதும் அன்பின் ரசம் மட்டுமே உள்ளது
பூக்காத பூக்களெல்லாம் மணன் வீசுகின்ற மார்கழி இது
(1)
இயற்கை பேரான்மா
மனித உடலில் சிறு தங்கல் ஜீவான்மா
பெரிதுதானே சிறிதை அழைக்கும்! இதோ அழைப்பு !
ஒருத்தி அழைக்கிறாள்
எப்போது உங்கள் மதி நிறைகிறதோ
அப்போதே அது நன் நாள் தானடி! வா!  நீராடப்போவோம்!
நாராயணனின் அம்சமான கண்ணன்
நமக்கே நமக்கு அருள் தருவானடி
ஆமாம்! நமக்கே என்கிறேன் கவனியுங்கள்
பறை தருவான் அவனைப் பாடிப்புகழ்வோம் வருகிறாயா எழுவாயா
எப்போதும் உயர்ந்தோனுக்கே ஆசையுறு
எவன் சிங்கம் போன்ற உச்ச ஆண்?
கூர்வேல் நந்தகோபன் - அழகிய யசோதா மகன் தானே?
தெரியுமா அவனுக்கு சூரியன் போல கண்கள்
மேனி நிறம் மேகநிற கருப்பு!
(2)
வையத்துப் பெண்களே ! ஒன்று செய்வோம் வருகிறீர்களா..?
மனதாலேயே பாவை செய்வோம்
ஆமாம் மனசால்தான்
உடம்புதான் நெய் கேட்கிறது பால் கேட்கிறது
கண்கள் மை கேட்கிறது
கூந்தல் மலர் கேட்கிறது
பிறர் குறை கூற -  வாய் வம்பு கொடு  என்கிறது
மெல்லத் துயில் கொண்ட நம் பரமன் திருவடி பாடுவோம்
உய்ய வேண்டும் பிறவி தாண்ட வேண்டும்
துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் தானம் செய்ய வேண்டும் 
அது மனம் எனும் பாவையால் சாத்தியம்! சத்தியம்!
(3)
பெண்களே நாம் நன்றாக நம் கணவனுடன் வாழ
நமக்கு செல்வம் வேண்டும்... !ஆமாம்தானே? ஆனால்
நாம் நமக்கு மட்டும் வேண்டலாமா? அது தவறு
நாடு முழுதும் மாதம் மூன்று மழை பொழியவேண்டும்
அதை நம் மனப்பாவையிடம் சொல்வோம்
ஆக்க பூர்வமான கற்பனை கொள்வோம்
அதற்கு என்ன வழி ?
தனன் சிறிய கால்கள் ஓங்கிட
மூன்று உலகமும் அளந்த உத்தமன் பேர் பாடினால் போதுமடி.
வயல்களில் நீரும் மீனும்  நெல்லும்
குவளை மலர்களில் வண்டும் பிறகு வரும்
கறவைப்பசு மாடுகளை வள்ளல் பெரும் பசுக்கள் ஆக்கிட
அவன் பேர் மட்டுமே போதும்! புரிகிறதோ?
(4)
ஆழி மழைக் கண்ணா!
கடல் நீரே ஆவியாகி மழை நீர் ! ஒப்புக்கொள்கிறோம்
நீரின்றி அமையாது உலகு! ஒப்புக்கொள்கிறோம்
ஆனால்
சமீப 2015 டிசம்பர் மழையாய் பொழியாதே
எமது கணவர் மட்டுமல்ல நாங்களும் பணிக்குச் சென்று வரவேண்டும்
அப்படிப் பட்ட மழை பொழிய வை
அந்த மழை மிலிடரி படை போல சீரான கடமை மழையாக இருக்கும்
அப்போது மார்கழி நீராட மிகப்பிடிக்கும் கண்ணா
ஆனால் எமக்கு மட்டுமே மழை கேட்க மாட்டோம்
உலகம் முழுதும் உன் அன்பு மழை பொழிய வேண்டும்
எப்படி என்று எங்களைச் சொல்ல வை! கண்ணா
சாரங்கம் என்ற வில் விட்டு நீங்கும் சர மழை அது
இடி ஓசை வலம்புரி சங்கு போல் அதிரும்
மின்னல் ஒளி பத்மநாபன் சக்கரம் போல் ஒளிரும்!

(5)
பெண்களே ! எது நமக்கு பாரம் தெரியுமா?
நினைவுகள் தான்!
என்ன செய்யலாம் நெருப்பினில் வீழ்ந்த தூசு போல்
மனம் லேசாக வேண்டும்
ஒரு வழி இருக்கிறது
நம் மன்ப்பாவை தூய்மையானவள்தான்
அவள்தான் அந்த அழகிய வழி சொன்னாள்
கண்ண பெருமானை வாயினால் பாடி
மனதினால் சிந்திக்க வேண்டும் ! simple!
(6)
வருங்கால மணப்பெண்ணே நிகழ்கால மனப்பெண்ணே
உனக்கு ஒரே ஒரு சிக்கல்
புவி வெப்ப மயமாவதுபோல்
உன் உன் உள்ளம் துன்புறுகிறது
ஆனால் இதை சுலபமாக சமாளிக்கலாம்
ஆண்டவன் கண்ணன் நமக்கு ஒரு நல் வழி செய்தான்
அது என்ன
எத்தனை பெரிய size ஓசை என்றாலும்
நமது சிறிய காதுகளால் நாம் கேட்க முடியும்
கேளாதனவெல்லாம் கேட்பிப்பான் என்கிறார்கள்
அவன் தந்த அந்த அகச்செவியால்
 மார்கழி மாதத்தில் முனிவர்களும் யோகிகளும்
“ஹரி ஹரி” என்று ஒலிக்க எழுகின்ற ஓசை மட்டும்
உன் உள்ளம் புகுந்திட அனுமதி பெண்ணே!

(7)
கீசு கீசு என்று ஆனைச்சாத்தன் குருவி கத்தினாலும்
ஆய்ச்சியர்
தயிர் கடையும் ஓசை கேட்டாலும்
கேட்டுக்கொண்டே இருக்க
கண் மூடி தூங்க முற்படுகிறோமில்லையா
அப்போது நாம் பெண்கள் அல்ல
பேய்ப்பெண்கள் ஆகிறோம்
கண்கள் மூடினால் அவன் உலகம் இருளுமா
செவிகள் மட்டும் திறந்தால் தரிசிக்க இயலுமா
அவன் வர வேண்டும் என்று வாசல் நோக்கு
 நாராயணன் மூர்த்தி கேசவன் புகழும் பாடினார்களே
அடடா! அப்போதும் கேட்கவில்லையா
நீ பேய்ப்பெண் list தானா! கதவைத் திற! அகம் திற.
(8)
எனக்கொரு யோசனை
ஏன் அவன் அருள் இன்னும் கிட்டவில்லை
அவனோ தேவாதி தேவன்
எல்லாம் தெரிந்தவன் ..
ஆனாலும் அவனுக்கு ஏன் புரியவில்லை
சன்னதி முறையீடு என்பார்களே ஆம்! நேராகச்சென்று
அவன் சந்நிதியிலேயே நம் மனக்குறை சொல்வோம்
கிருஷ்ணன் அவன் இருக்குமிடம் சென்று நாம் சேவித்தால்
“ஆ!” என்று ஆச்சரியப்படுவான் பிறகு “வா!” என்று ஆராய்ந்து
அருள் செய்வான்

(9)
மனம் என்னும் விளக்கு அவனை நி¨னைகிறதடி
இருந்தாலும்
தூமணி மாடம் முழுதும்
சுற்றிலும் ஏன்
விளக்கை வைத்து விட்டுப்போனார்கள் தோழிகள்?
விளக்குக்கு முன் விளக்கு எரிய வேண்டும்
அவன் உள்ளே உள்ளான் என்று தெரிந்தால் போதுமா
வெளியிலும் நினை
மாமாயன் வைகுந்தன் மாதவன் என்று அவன் நாமம் சொல்க!
(10)
இப்போதல்லடி!
முற்பிறவியிலேயே அவனுக்காக நீ நோன்பு இருந்துள்ளாய்
அதனால்தானடி நீ சொர்க்கம் புகுந்தாய்
கவலைப்படாதே
மனம் மயக்கப்படாதே
விழிப்பு நிலை தவற விடாதே
நிச்சயம் அந்த பொன் கணம் வரப்போகிறது
உன்னை ஆட்கொள்வான் பாரேன்
தூங்காதே ! கும்பகர்ணன் தூக்கம் உனக்கு வேண்டாம்
(11)
பசு மாடுகள் பால் கறக்கவும் தெரியும்
பகையை போரில்  அழிக்கவும் அவனுக்குத் தெரியும்
குற்றம் ஒன்று கூட சொல்ல முடியாத அவனின்
செல்வப்பெண்டாட்டி நீ அல்லவா
எதற்காக உறங்குகிறாய்
அவன் மனைவி நீ! விழிப்பு நிலை பெறடி !
(12)
மனதுக்கு இனியானைப் பாடினால்
என்ன செய்ய வேண்டும்?
கொட்டும் பனி எமது தலையில் வீழ
உன்  வீட்டு வாசலில் பாடும்போது
வாய் திறந்து ஏதாவது சொல்லலாமே!
தூங்குவது போலும் சாக்காடு உனக்குத் தெரியுமே
அவன் உனக்காக நீ அவனுக்காக இது தெளிவு
அவன் பாடல் புகழ் பாடேன் ஆனால் எழ வேண்டும் நீ
அனைத்து வீட்டிலும் உள்ள பெண்கள் அனைவருமே உணர்ந்தனர்
அவன் பெருமை பாடப் பாட
அவன் பிரிவு உணராமல் விழிப்பு நிலை உணரப்படும்
எம் பாவாய்!
(13)
நீராட நீ வா பெண்ணே
குளிர் நீரில் நீராட நீ வா பெண்ணே
உன் உயரம் குள்ளமாகும்படி
சில்லெனப்பிழியும் ஒரு மின்னல் குளிர்தான்!
ஆனாலும் நீ தாங்க முடியும் ! எழு குளி நீராடு
பூக்காம்பை கிள்ளுவதுபோல் சீதை நாடிய இராவனன் தலை
கொய்யப்பட்டது அன்று
வெறும் குளிருக்கு
உறக்கம் எனும் தற்காலிக இன்பத்துக்கு
படுக்கையில் கிடக்கிறாய் இன்று!
நீ மட்டுமெழுந்து நிகழ்காலத்தை உணர்ந்தால்
கவலை எனும் மனக்குளிரும்
குளிர் நீர் எனும் உடல் குளிரும் போய்விடுமே கண்மணீ! 
 (14)
ஏய் என்னடி சொன்னாய் நேற்று!
“எனக்கு விழிப்பு நிலை அதிகமாகி விட்டது
நாளைக்கு நானே வந்து எழுப்புவேன்” என்றவளே
Over confidence அது!

ஒன்று தெரியுமா
உடம்புக்கு வெட்கம் உண்டு
நாக்குக்கும் வெட்கம் வேண்டும் என்றௌ அறிந்துகொள்
உன் வீட்டில் மலர்கள் வாய் நெகிழ மலர்ந்தன
உன் வீட்டுக்கு வெளியே
செங்கல் நிற ஆடைத்துறவிகள்
வெண்பற்கள் இருளில் ஒளிவீச நடந்துசெல்கிறார்கள்
சங்கு ஒலிக்க கோயில் நோக்கி விரைகிறார்கள்
பார்த்தாயா இல்லையா! 
                        - தொடரும்

No comments:

Post a Comment