Monday, 7 December 2015

ஆனாய நாயனார் குருபூஜை (7.12.2015)



அது ஒரு சிறிய கருவிதான். ஆனால் அவர் இலட்சியம் குறிக்கோள் எண்ணம் உயர்வாக இருக்கும்போது கருவியின் பயன்பாடு பெருமை பெற்று விடுகிறது.ஆனாய நாயனார் அவர் பெயர். அவர் கையில் இருந்த கருவி புல்லாங்குழல். (மேல் மழநாடு என்பது முந்நாள் பெயர்)ஊர் லால்குடி அருகில் உள்ள திருமங்கலம்.
              கருவி காரணமா? இசை காரணமா? எது மூலம்? கருவியிலிருந்து இசை வருவது இல்லை என்பதே உண்மை. அன்பு உள்ளே இருக்க வேண்டும். அன்புதான் இசை ஆகிறது. பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம என்பதை புல்லாங்குழல் இசையில் பயின்றார் ஆனாயர்.
                     அன்பு ஊறியது. ஊறிய அன்பு இசையானது. பொங்கியது.அமுத இசை ஒலித்தது. ஒலியால் வன்பூதப் படையாளியாகிய சிவனின் ஐந்தெழுத்தையும் துதித்தார். வாழ்த்தினார்.ஊதும் அளவு முறையாக ஒலிக்க என்ன ஆனது? எந்த உயிர்களின் எலும்பிலும் கரைந்து உருக்கும் இன்னிசை அவரது புல்லாங்குழலுக்குள் சேர்ந்தது.
                       ஆனாய நாயனார் மாடுகள் மேய்ப்பவர். பசுக்கூட்டங்கள் அவர் வாசிக்கப் போவதை அறிந்து கொண்டு சூழந்து வந்தன. அப்போது சுற்று சூழல் பற்றி வர்ணிக்கலாம். ஆனால்சேக்கிழார் பெருமான் காலத்தை வருணிக்கும் அழகு அசாத்தியமானது. அது இதுதான்:
                        நீல நிறம் கொண்ட மயில்கள் அகவின. கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்பண் பாடின. முல்லை அரும்புகள் புன்முறுவல் செய்தன.அப்போது வானில் வருகின்ற மின்னல் என்பது இடையாக மாலைப் பொழுதே கொங்கையாக அசைந்தபடி உலகம் என்கிற பெரிய அரங்கி ஆடிட காலம் என்ற பருவத்தை உடைய மங்கை வருகின்றாளாம்! 

No comments:

Post a Comment