பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவும் பொருளுக்காகவும் அலைந்து
துக்கம் மிகுந்த இடங்களில் வலம் வந்து சஞ்சரித்தேன்
உன் கோவில் வலம் வர உன்னைப் பணிய நினைத்ததில்லை
பெருத்த செல்வமுடையோரை கை கூப்பி புகழ்ந்தேன் வாழ்த்தினேன்
உன் சந்நிதியில் கை கூப்பி வணங்கியதில்லை
அற்ப நெறி மனிதர்களான மிண்டர்களை வியந்தேன்
நினது தொண்டர்களை கூடவும் இல்லை
ஆன்ம விசாரணை செய்யவுமில்லை
காண்பவரை கடுகடுத்து வெறுத்த முகத்துடன் பார்ப்பேனே தவிர
எந்த நாளிலும் முகமலர்ச்சி ஏற்றதில்லை
நல்நெஞ்சமாம் சிவநெஞ்சை பிறரும் பெற வேண்டி தொண்டர்கள்
உன் புகழை நவில்வது கேட்டு
கல் நெஞ்சை சிறிதும் கரைத்தது இல்லை
தண்ணீரின் தண்மையும் தன்மையும் ஒத்திட்ட
பண்களால் பாமாலையால் துதித்து
கண்ணீர் கொண்டு உன்னை யான் துதித்ததில்லை
தண்ணீர் போல் நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பரை
அஞ்சேல் என ஆட்கொண்டதுபோல்
என்னை ஆட்கொண்டதில்லை
“இவர் மெய் அடியார்” என மேலோர் புகழ்வதற்காக
வித்தகா! உன் பொன் அடிக்குப் பொய் வேடங்கள் பூண்டுள்ளேன்
மெலிவைத் தருகின்ற ஆனால் புதுமை மிகுந்த
பணத்திற்காக புணர்ச்சியில் ஈடுபடுத்தும் பெண்கள் புணர்ச்சிக்காக
கலவி எனும் பிறவி தரும் குழியில் நான் விழுந்தது உண்டு
தூயவர்களைக் கூட மதித்து எண்ணாமல்
அவர் முன்னே ஒரு விதமாக
இல்லாத இடத்தில் ஒரு விதமாக என் இயல்பில் பேசியது உண்டு
மானத்தைப் போற்ற வழியில்லாமல்
மனம் நொந்து இரப்பவர்களுக்கு
தானம் செய்பவரைத் தடுத்தது உண்டு
வழக்கு உண்டாகும் போது
குறைவிலாத அன்பு வார்த்தைகள் பேசாமல்
ஒருதலைபட்சமாக நின்றது உண்டு
உன் அடியே தஞ்சம் எனத் தாழாமல்
ஈரம் இல்லாத நெஞ்சருடன் கூடித் தாழ்ந்தது உண்டு
குற்றமில்லாத தாய்மை கொண்ட உன் சந்நிதி வந்தும்
அன்பு வெளிப்பாடு இல்லாத ஒதிய மரம் போல் நின்றதுண்டு
தீயவினைகளை நிறுத்திக்கொள்ளாத
செல்வர்வீட்டு வாசலில் செல்வத்திற்காக
கேட்கக்கூடாத சிவநிந்தை கேட்டதுண்டு
புலால் உண்ணும் புலையர்கள் போல்
கொடிய ஆணவத்தால்
புண்ணியரை சொல்லாத வசை எல்லாம் சொன்னதுண்டு
நல்லவர்களைப் போற்றாமல்
பொய் உடம்பைப் போற்றி பாதுகாத்துக்கொண்டு
உடம்பின் மூலமாக சிவஞானம் பெற
சிவபூசை செய்யாமல் இருந்ததுண்டு
“இறையன்பனே! எனக்கு சோறுதா” என்று இரக்கும்போது
கோபம் கொண்டு நாய் போல் குரைத்து
வெருட்டியது உண்டு
மனம் வாக்கு செயல் மூன்றும் வேறு வேறு திசை போகவிட்டு
சிவஞானம் சித்திக்காமல் என் தந்தையே
உன்னைத் தொழாமல் இருந்தது உண்டு
நீருக்குள்ளேயே கிடந்தாலும் கல் இளகாதது போல
ஞானிகள் அறிவுரை கேளாமல்
நிலப்பாதையில் எல்லைக்கல் போலவும் நின்றதுண்டு
சஞ்சிதவினை எனும் முன்னை வினை ஆழ்த்துவதால்
அழுக்கு உலகின் அற்ப மகிழ்ச்சிக்கு மயங்கி
உன்னை வாழ்த்தாமல் மறந்ததுண்டு
எலும்புகளை அணிகலனாகப் பூண்டவனே
நிலையான நின் பொன் வடிவம் காண முயலாமல்
வீண் காலம் தாழ்த்தியதுண்டு
தாங்கள் உயர வேண்டும் என முயற்சிக்காமல்
தனக்குரிய பெருமைகளைக் கொள்ளாமல் இருக்கும் நாட்டிலே
இரை தின்றும் பிறருக்கு உழைத்தும்
இரண்டு கால் மாடு போல் வாழ்ந்ததுண்டு
( தொடர்வோம்)
No comments:
Post a Comment