“தமிழ்நாட்டில் ஞானச்செருக்கு மூன்று பேருக்குத்தான் இருக்கிறது - பாரதிக்கு,எனக்கு,மூன்றாவதாக ஜெயகாந்தன்” என்று கண்ணதாசனால் புகழப்பட்டவர். “சில நேரங்களில் சில மனிதர்கள்” “யுக சந்தி” “சினிமாவுக்குபோன சித்தாளு” “கங்கை எங்கே போகிறாள்” “பாரீசுக்குப்போ” ( சொல்லிக்கொண்டே போகலாம்) தைரியமான மனோ ஓட்டம் கொண்டு ,சாட்டை வீசிய சமுதாயப் பங்களிப்புகளும் அதிகம். சமஸ்கிருதம் அவசியம் என மொழிந்த திறந்த தைரியமும் அதிகம். நிற்க.
சிதம்பரத்தில் அடியேன் டிப்ளமா படித்துக்கொண்டிருந்தபோது(1982) கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில்தான் பொதுக்கூட்டம் அரசியல் கூட்டம் எல்லாமே நடக்கும். அங்கு நடந்த அவரது பேச்சின் சாரம் இளைஞர்களுக்கான அறிவுரை மீசையோடு முறுக்கிப் பேசிய கம்பீரம் நினைவிருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லோருக்கும் அலை போல் கை அசைத்தார். ஆர்வம் மிகுதியில் அவர் கை நீட்ட எல்லோருமே ஆர்வத்தோடு மேடை நோக்கி எக்கி எக்கித் தொட்டோம். அடியேனும் அவர்களில் ஒருவன். எவ்வளவு பஞ்சாக மெத்தென்று இருந்தது! அதில்தான் எத்தனை நெருப்பு !
கார்ல் மார்க்ஸ் பற்றி “எங்களை விட அவர் அதிக உயரம் பார்த்தார்” என்று ஏங்க்ல்ஸ் குறிப்பிட்டதுபோல தமிழுக்கு ஜெயகாந்தன் திகழ்வார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்,விஸ்வநாதன் குரலில் அவர் எழுதிய ஒரு சினிமா பாடல் இது:-
“கும்பிடச்சொல்லுகிறேன்
உங்களைக் கும்பிட்டுச்சொல்லுகிறேன்
எனை நம்பவும் நம்பி கெடுவது உம் தலையெழுத்தென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ!”
No comments:
Post a Comment