Sunday 5 April 2015

எழுத்தறியும் பெருமான் மாலை (புதுக்கவிதை வடிவம்)



“அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” எனும் மகா மந்திரம் அருளிய இராமலிங்க அடிகளார் அருளிச்செய்த “ எழுத்தறியும் பெருமான் மாலை” திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் பாடப்பெற்றது. வள்ளல் பெருமானார் மனம் கசிந்து பாடிய சொற்களில் கருணையின் கனிவு குழைந்து உள் உருக்குவன. நம் தலையில் என்ன எழுத்து எழுதி இருக்கிறது என்பது அங்குள்ள எழுத்தறியும்பெருமான்  அறிவிக்க இந்தப் பாடல்களின் வரிகளில்
பயணமாகிய போது தோன்றிய மறு ஆக்கமாக இதனை இணைய தள ஆன்மீக அன்பர்களுக்கு அளிக்கின்றேன்.இதனை எழுதிட உதவிகளும் ஒத்துழைப்பும் என் மனைவி லாவண்யா மற்றும் டைப் செய்து அளித்த மகள் மருத்துவத் திலகம் அபிநயா அவர்களுக்கும் நன்றி .
கோடை வாட்டினாலும் கடந்த 10 நாட்களாக கல்லங்குடியில் கலியபெருமாள் ஆலயத்தில் ( சாலை விபத்தில் உண்டான தனது உடல் நலிவை பற்றி கவலையே படாமலும்) 25 ஆம் ஆண்டாக அன்னதானம் செய்து பசிப்பிணி ஆற்றும் அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் காலடியில் நவீன கவி வடிவில் ஆன இம்மாலையை அணிவிக்கின்றேன்.
பா.சத்தியமோகன்
வடலூர்-5.4.2015 (பங்குனி -22)
 

1.
 
சிந்தை மயங்கி இயங்குகின்ற ஒரு நாய் நான்
என்னுடைய முன்வினை தொலைத்து
உன் திருஅடிக்கு ஆள் ஆக்காமல்
சலித்து சலித்து
குறை சொல்லும்நோயால் என்னை இயக்குவது நீதியோ
எனக்கு அப்பா நீதானே
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

2.
கல் மன நெஞ்சுகொண்டவன் நான்
வஞ்சகன் நான்
வலிய நோயை
தானே சென்று பற்றிக் கொள்ளும் பைத்தியம் நான்
அருமையான நாட்களை வீண் செய்யும் பேய்
இப்படிப்பட்ட நாயேன்
உனக்கு ஆளாக வேண்டுமெனில் எத்தனை நாளாகுமோ
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

3
நல்ல நெறியில் செல்லும் அன்பர்களை நாடிட வைத்தாய்
உன் புகழின்  நல்லநெறிகளைச் சேர்ந்திட வைத்தாய்
எனக்கும் உனக்கும் முன் தொடர்பு பின் தொடர்பு
துளி கூட தெரியவில்லையே
எப்படிப்பட்ட மிகப்பெரும் மூடன் நான்.
பிரதி உதவியாக கைம்மாறாக
இங்கே எனக்கு என்ன செயல் என்று எப்படி அறிவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

4
மை படிந்து வழியும் கண்கள் கொண்ட பெண்கள் மேல்
ஆசை கொள்ளச் செய்வாயோ
இரண்டு கைகளும் படிந்திட உன்னைத் தொழுது
உன் திருவடி நினைக்கச் செய்வாயோ
இப்படியோ இல்லை அப்படியோ
எதுவும் அறியாதவன் நான்
உன் சித்தம் எப்படியோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

5

இந்த உடம்பு நிலைக்கப் போவதில்லை
ஆனால் நிச்சயம்தான் நிலைதான் என்றே நேசிக்கின்ற
பொல்லா நெஞ்சுக்காரன் நான்
புலை கொலைத் தொழில் புரிகிறேன்
இந்த உலகில்
யாரிடமும் சொல்ல முடியாத மனநோயால்
சோர்வுறுகிறேன் அலைகிறேன் ஐயா
என் துன்பம் எல்லாமே அறிந்த
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

6
தீமை அறிவேன்
அணு அளவு கூட நல்லது செய்யேன்
வீணாக நாட்களைக் கழிக்கும் பேச்சு அறிவேன்
வஞ்சகன் நான் வலிய வினைகள் செய்துள்ளேன்
வாய்மை அற்றவன் நான் சூது மட்டுமே அறிவேன்  
இப்படிப்பட்ட நான்
திருமாலும் பிரம்மனுமே
சொல்ல முடியாத அளவு பெருமை கொண்ட
உன் பெருமையை எந்த விதம் என்றோ
எப்படிப்பட்டது என்றோ அறிய முடியுமா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
7
மாறாத வலிமையான பிணியால்
ஆழ்ந்து போய் ஆழ்ந்து போய் நெஞ்சம் அயர்ந்து
கூற முடியாத கொடிய துன்பக் கடலுக்குள் வீழ்ந்தேன் அடியேன்
துன்பம் தாளாமல்  அரற்றி அழுகின்றேன்
உன் காதுகளில் அது ஏறாதோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

8

புண்ணியனே
உள்ளே வலிய வினை என்னுள் ஆடுகின்றது
வலிய வினைகள் ஓயாமல் கட்டிப் பிணிக்கின்றன
உழல்கின்றேன்
நெந்சம் புண் ஆகிப் புழுங்க ஆரம்பித்தேன்
உனைக் கண்டால் கண்கள் பசி தீரும்
இப்படிப்பட்ட எனக்கு
 உனது கருணைஅளிக்க விரும்புவாயோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

9
மாறாத தீய செயல்கள் மட்டுமல்ல
ஒழுக்கமிலா மங்கையரின்
வலிய செயல்களாலே மயங்குகிற வஞ்சகன் நான்
கொன்று போடும் எமன் 
மாறாமல் தப்பாமல் வந்து விடும் நேரம்
என்ன செய்யப் போகிறேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

10
சங்குடைய கிருஷ்ணன் தாமரை வாழ் பிரம்மன்
இருவரும் உனது திருவடி காணவில்லை
திரு முடியும்  காணவில்லை
குளிர் கொன்றை அணிந்த எப்போதும் குளிர்ந்த
கங்கை அணி சடையாய்
கோதை உனது ஒரு பங்காக உடைய சிவமே
ஏழை முகம் பார்க்காமல் தள்ள்¢விட்டால்-
எங்கு போய் எதில் விழுவேன்! எதை அடைவேன் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

11
“எல்லோரும் காணுகின்ற மேடையில் நடனம் செய்கின்ற
மாணிக்க மலையே
வெற்றி கொள்ளும் மழு ஆயுதம் கையில் கொண்ட
வித்தகனே! ஈசனே !”என்று பலவிதமாக
தாய்ப்பசு தொலைத்த கன்றுக்குட்டியை விடவும்
அயர்ந்து அழ ஆரம்பித்தேன்
கண்ணீர் துடைத்து அருள
என்று வருவாய் ஐயா?
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

12

“கங்கை அணி சிவன்” என மிகப்பெரும் தவம் செய்தவர்கள் நினைக்கும் போது
சோதியாய் நிலைத்து ஒளிர்பவனே.
அவர்கள் வேண்டிடும் அதே கணத்தில்
அவர்கள் துன்பம் ஒழிப்பாய் ஆனால்
அது எனக்கு மட்டும்  இதுவரை பலிக்கவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


13

மீண்டும் மீண்டும்
மின்சார ஒளி போல் மின்னி மறையும் இச்சை
என்னை வெம்பிடச் செய்கின்றது ஆனாலும்
தன்னைப் போல என்னை நினைக்கின்ற தெய்வமே
எனை ஈன்ற தாய் போன்ற தெய்வமே
நான் சொல்கிறேன்  என்பதற்காகச்  சார்ந்து
ஏதேனும் ஒன்றை உரைக்காமல் இருக்கின்ற தங்கமே
உனது அருள் மட்டும் இப்போதே பெற்றுவிட்டால்
உறுதி!என்னைப் போல் எவருமே இல்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

14
ஐயா! உனது பொன் அருளை
பூவில் தேன் அள்ளிப் பருகும் வண்டு போல
புண்ணியர்கள் அருந்துகிறார்கள்
நினது திருப்பாதத்தின் கீழ் சார்ந்து நிற்கின்றார்கள்
ஐயோ! நான் என்ன செய்கிறேன் -
காமம் எனும் கடும் இருட்டில்
கள் உண்ணுகின்றேன்
கண் மூடி ஏமாறுகின்றேன்
இது என்ன நிலையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
15

ஐயா! உனக்குத்தான் பொறுப்பு
ஆம் உனக்கே பொறுப்பு! பாதகன் நான்
இந்த பூமியில் வயிற்றுப்பாடுக்கே உழல்கின்றேன்
உனது பொன்னார் திருவடிகள் போற்றாமல் சூழாமல்
திறந்த புண் போல வாழ்கின்றேன்
குற்றம் தான் இது குற்றம் தான்
எனது அருமைத்தாய் நீயே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

16
எனது மனத்தை ஆராய்ந்தேன்தேடினேன்
அடங்கவில்லை எனது தீய மனம்-
வீட்டுக்கு அடங்காத விளையாட்டுப் பிள்ளை
செய்யும் துயரம்
ஏட்டில் எழுத முடியாத  அளவு விரிந்து கொண்டே செல்கிறது-எதைப்போல?
பாடும் பாட்டில் அடக்க முடியாத
உனது பக்தித் தொண்டாளர்கள்
திருவடிப் புகழ் போல!  அடக்குவீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

17
பின்னிப் பின்னிப்  பேசுகின்ற எனது மனம்
எந்தத் தன்மையுமே இல்லாமல்
என்னை முழு அளவில் பாதகன் ஆக்கிற்று
ஞானச் சூரியனின் வெம்மைக் கதிர்கள் சூழும்போது மட்டும்
எனது மும்மலக் குற்றங்கள் காய்ந்து
அருள் நீர் தாகத்தால் நிலை கலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ ஐயா
திருவொற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!


18
என் மனம் கல்லுக்குச் சமம்
அதுவும் கடைப்ப்பட்ட  மனம்
அதுவும்
காட்டில் எந்த நெறியும் இல்லாமல் திரிகின்றது
புல்லை மதிக்கத் தெரிகின்றது ஐயோ!
பசுமையான பூவையோ இகழ்கின்றது
பொய்யின் பாதங்களுக்குச் சேவகம் செய்கின்ற
பொய் அடியேன் எனது வேதனைக்கு
எல்லை எது என்றே அறிய முடியவில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

19

தங்கத்தை மதிக்கத் தெரிந்த எனக்கு நின்
தங்கம் ஒத்த திருவடியை போற்றாத கல் மனம்
ஆதலால்
கலங்குகின்ற தவம் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்
இன்னல்களில் உழல்கின்ற ஏழைகளுக்கெல்லாம் ஏழை நான்
என்னைக் காண்பாய் என்னக் கை விடாதீர் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

20

ஆசை, கன்மம், மாயை  எனும் மலக்கடல்
மிகப்பெரும் சுவர் போல் தடுத்து வீழ்ந்தேன்
உலகினர் எவரும் உதவாமல் அலைகின்றேன்
இரங்கத்தக்க நிலையில் உள்ள
பரிதாபமான என்னை
திருவொற்றியூர் சிவனே நீ ஆளாவிட்டால்
என்னை பார்க்கவும் கூசுவார்களே
அடியார்களெல்லாம் கை கொட்டிக் கூடி சிரிப்பார்களே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

21

உத்தமனே சிவனே
உன் ஊர் சொல்வேன் பேர் சொல்வேன்
நினது திருத்தாள் புகழ் சொல்வேன்
நீ மட்டும் என்னை
உன்னுடன் சேர்க்காமல் அகற்றிவிட்டால்
“ நீ செய்வது சரியல்ல”  என்று உனக்கு
யார் சொல்வார் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

22

உனது மெய் அடியார்கள் அனைவரும்
நீக்கமில்லாத நேசம் உடையவர்கள்
பொய் அடியனாகிய எனக்கோ
ஊக்கம் இல்லாத நெஞ்ச ஓட்டமே உள்ளது
தன்னை மறக்கும் தூக்கம் வேண்டாம்
உன்னை நினைக்கும் ஆனந்தத் தூக்கமே வேண்டும்
வேறு ஏக்கம் எனக்கில்லை ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

23
      
அழிகின்ற வஞ்சகர்களை போக்கிவிடு
உன் பொன்னடிக்கே ஆளாகின்ற
மேலோர் திருவடி வாழ்த்தாமல்
வாழ்கின்ற நாயேன் எனக்கு
பாகை விட சிறந்த சுவையான
நினது அருளை என்று  தருவாயோ  ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

24

“தனது ஊழ்வினையை அகற்ற
தனது மனதையே உளவு பார்த்து எச்சரித்து
எதைச் செய்ய வேண்டுமோ
அதைச் செய்து தடுக்காத பொய்யன் இவன்
இவனுக்கு இருப்பது பீழை மனம்
இவன் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டான்
இவன் மனம் கொடியது” என
என்னைத் தள்ளிவிட்டால் என்ன கதி ஆவேன்  ஐயா
நான் ஏழை! .
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

25

ஆழம்  காண முடியாத அளவுள்ள
மல இருட்டில் சென்றுவிட்டேன்
மனம் கடுக்கிறது அதுவும்எல்லை  தாண்டிவிட்டது
புலன்களால் கட்டிச் சுமக்கப் படுகின்றேன்
இனி மேல்
தொகுப்பதற்கு துன்பமேயில்லை என்ற அளவு ஆனபின்
துன்பச்சுமையை இனி எடுக்க முடியாதே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

26  
நெஞ்சம் முழுதும் முட்கள் நிரம்பிய
புலை நிரம்பிய மாதர்களிடம்
கள் குடித்த நாயை விடவும் கடைப்பட்ட எனக்கு
அன்பர்கள் உள்ளவரைக்கும் உதவுகின்ற
உனது திருவடி மீது
அன்பு என்பது
சிறு எள் அளவு கூட  இல்லையே ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
27 

மீண்டும் இது போல் மனிதப்பிறப்பு
அடைய முடியுமா என்று
நினைக்கவும் தோன்றாத  பலவீனன் நான்
நலம் தேடி மீண்டும் மீண்டும் வாடுகிறேன்
அமுதமாகிய நீயோ
உண்ணமுடியாத அளவு பரந்துள்ளாய்
உன்னைத்தவிர யாரால் இதை அமைத்து
எண்ண வைக்க முடியும் ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
\.
28 
பலருக்குப் பலபிறப்பிலும் தீங்கு செய்த
மிகக் கொடியவிஷமுள்ள தேள் போல
செய்த வினைகளுக்காக வெதும்புகின்றேன்
அந்த மனதை ஒளித்து மறைக்க விரும்பாமல்
உன்னை அழைக்கின்றேன் அழுது வாடுகின்றேன்
இங்கு உலகுக்காக நஞ்சு சாப்பிட்ட
என் அருமை அப்பா அல்லவா நீ
எங்கே ஒளிந்துள்ளாய்ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

29  
காமம் கொண்ட பெரும் பேய்ப்பித்தன் நான்
ஆணவம், பொய் ,பொறாமை , சினம், வஞ்சம்கொளல் மட்டுமா
சகல பாவங்களும் நான் தான்
என்னைப் பார்ப்பீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

30

ஒரு சொட்டு கூட மிச்சமிலாது
உலகின் மீது விஷம் படாமல் காக்க
அத்தனை விஷமும் குடித்த தயவு நிதி நீ அல்லவோ
இங்கு அயர்ந்து நிற்கின்ற என் முன் ஒரு சொல் சொல்லாயோ
தூய திருக்கோயிலில் நீ இல்லையோ ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!

31

நீ உன்னை மட்டுமே கொண்டாய்
நீயே உலகம் முழுதும் உள்ளாய் உனையன்றி இல்லை
மனைவி , மக்கள் வீடு எனும் வாழ்க்கை நடுவே
இழிவையே பெற்ற என்னை ஆள்வது உன் கடனே
என்னை உன் உடையவனாக்குவீரா ஐயா
திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே! தியாகேசா!
.
*****






 

1 comment:

  1. சுவையதுவேயான மறுபாத்திரம் மாறிய அமிழ்து!

    ReplyDelete