பாடல்-776:
மேகங்கள் இடி ஒலி கேட்கவில்லை
அலைகடல் ஒலி கேட்கவில்லை
அரக்கர்களின் முரசு ஒலியால்!
மலைகுகை போல வாய் திறந்தனர்
புகை கவிய பெருங்கோபம் வீசினர்
மூங்கில்காடு தீப்பற்றியது போல
ஆயுதம் எறியும் அரக்கர்கள்
அனுமனைச் சுற்றித் திரண்டார்கள்.
பாடல்-777:
அறமே வடிவாகிய அனுமன்
அறவன் எனப் பெயர் பெற்றவன்
“அசோகவனமே அழிந்தாலும்
தனக்கு உதவி புரிய ஒரு எரிந்த மரம் நிற்கிறது என
அதன் அருகில் சென்றான்
“இப்போது என் ஒரே துணை நீயல்லவா” என
அந்த மரத்தை விருப்பமுடன் கையில் எடுத்தான்
பாற்கடலைக் கடைகின்ற
மந்திரமலை போல நிமிர்ந்து நின்றான்!
பாடல்-778:
அனுமன் அந்த மரத்தினால்
அரக்கர்களை அடித்தபோது
மலைகள் நெறிந்தன பொடியாயின
இடி கூட சிறிதாயிற்று
அரக்கர்களின் இரத்தம்
மலை அருவியில் கலந்து சிவப்பானது
அச்சமுற்ற அரக்கர்கள்
ஒருவர் கையை ஒருவர் பற்றி நின்றனர்
அவர்களது பெரும் தலைகள்
அனுமனால் அடிபட்டு தரையில் உருண்டன.
பாடல்-779:
அரக்கர்களில்
உயிர் பிழைத்த சிலர்
படைக்கருவிகள் எறிந்தனர்
மற்ற பலருக்கும் சேதாரமே உண்டானது
பறை போன்ற கண்கள் இழந்தனர்
தரையில் விழுந்தனர்
பிறைச்சந்திரன் போன்ற பற்கள் இழந்தனர்.
பிடரிகள் தலைகள் பிய்ந்தனர்
குற்றுயிர் சிதற மிதிபட்டனர்
குடலும் குருதியும் குழைவாகினர்
அரை பட்டனர்
முடை நாற்ற உடல்கள் அழிபட்டனர்.
பாடல்-780:
அனுமனின் தாக்குதலால் உண்டான
கனலும் தீப்பொறியும்
அரக்கர்களின் உடல் மயிரை தீய்த்தன
படைக்கருவிகள் உடைப்பட்டன
நீண்ட தோள்கள் உடைந்தன
வயிறுகள் கிழிபட்டன
ஆங்காங்கே
மலை போல விழுந்தார்கள்.
பாடல்-781:
அனுமனின் பலத்தின் முன்
பொருள்களை இருள் மூடுவது போல
உடல் கருத்த
அரக்கர்கள் அப்பளமாயினர்!
கதாயுதம் எடுபடவில்லை
அம்புகள் பயனில்லை
அனுமன் உதையால்
மார்பு நொறுங்கும் ஒலிகள் கேட்கின்றன
வீரமுழக்கமு போனது
விழிகளும் போனது
அச்சத்தில் இரத்தம் கக்குகின்றனர்
நிற்கவும் முடியாதவர்கள்
நீண்ட நேரம் நிலத்தில் புரள்கிறார்கள்
விதைகள் தெளிப்பது போல உயிர்களைத் தெளித்துவிட்டு
பிணங்களாக விழுகிறார்கள்.
பாடல்-782:
அனுமன்
அரக்கர்களின் உடல்களை
மலை மீது மோதிட வீசினான்
குறி தவறி வீசிய உடல்களில் சில
வானவெளி போயின
குபேரனின் அளகாபுரி போயின
கடலில் விழுந்தன
சிதைந்த உடல்கள்
பல பக்கங்களில் சென்றன
மேலே எறியப்பட்ட உடல்களோ
சுவர்க்க லோகம் போயின.
பாடல்-783:
இன்னும் சில அரக்கர்களை
கால்கள் தனியாக தோள்கள் தனியாக பிய்த்து வீசினான்
அந்த உடல்கள்
இறகுகள் அறுக்கப்பட்ட
மலைகளின் கூட்டமாகத் தெரிந்தன
கொடிய அரக்கர்களை
வாலில் பிணித்து
பம்பரமாய் சுற்றவும் செய்தான் அனுமன்.
பாடல்-784:
ஒடிந்தன அரக்கர்களின் வாள்கள்
ஒடிந்தன கட்டான விரல்கள்
ஒடிந்தன கோடாலிகள் சூலங்கள்
அறுபட்டன தோள்கள், கால்கள்
உடைந்தன பற்களின் கூட்டங்கள்
அறுபட்டன பெரிய கைகள்
முடிந்து போயின அரக்கர்கள் ஆயுளும்.
பாடல்-785:
அனுமன் தாக்குதலில்
வலிமையான தலைகள் சிதறின
ஒளி நிறை கவசங்கள் சிதறின
பசும்பொன் வீரக்கழல்கள் கதறின தெறித்தன
பொன் மாலைகள் தெறித்தன
அணிகலன்களும் மாலைகளும் தெறித்தன
வீரப்பட்டங்களும் விருதுகளும் தெறித்தன
குண்டலங்கள் தெறித்தன
கருவிழிகளும் தெறித்தன!
பாடல்-786:
அனுமனின் தாக்குதலில்
சிதறியவை பட்டியல் இன்னும் இருக்கிறது
பற்கூட்டங்கள் சிதறின
தோல்களும் எலும்புகளும் பொடிபட்டன
முகண்டி எனும் கருவிகள்
கப்பணங்கள் சிதறின
பிளக்கப்பட்ட உடல்களின் வழியே
சிந்திப் போயின உயிர்கள்.
பாடல்-787:
அனுமனுடைய அங்கங்கள்
ஒவ்வொன்றுமே
பலப்பல அரக்கர்களை வீழ்த்தின
கால்களால் பலர் இறந்தனர்
கைகளால் பலர்
அனல் விழிகளால் பலர்
அதிகரிக்கும் வலிமை தந்த திகைப்பினால் பலர்
குத்துகளால் பலர்
வாள்களினால் பலர்
அனுமன் எறிந்த மரங்களினால் பலர்.
பாடல்-788:
அனுமன் இழுத்து சிலர் இறந்தனர்
அனுமன் இடித்து சிலர் இறந்தனர்
அனுமன் வீசி எறிந்து சிலர்
அனுமன் பிடித்த போதே சிலர் இறந்தனர்
அனுமன் ஆரவாரிப்பு ஒலி கேட்டே சிலர் இறந்தனர்
அனுமனிடம் அடி வாங்கி சிலர் இறந்தனர்
அனுமனின் கோபப்பார்வையால் சிலர்
சிலர் இறந்ததைப் பார்த்தே
இறந்தனர் சிலர்.
பாடல்-789:
காற்றாடி எவ்விதமாக
திசையெல்லாம் திருப்பித் திருப்பி பறக்குமோ
அது போல் பறந்த அனுமன்
சிலரை ஓடிச்சென்று கொன்றான்
சிலரை
உடலோடு உடல் மோதி கொன்றான்
சிலரை
நெடிய மரத்தினால் அடித்துக் கொன்றான்
பிணங்களின் நடுவே ஒளிந்த சிலரைத்
தேடித் தேடிக் கொன்றான்.
பாடல்-790:
மலைக்குச்சமமான அனுமன்
மலையை விடவும் வலிவான அனுமன்
தன்னை முட்டியவர்களை முட்டிக் கொன்றான்
வரிசை வரிசையாக வந்தவர்களை
நெருங்கிச் சென்று கொன்றான்
பலரைக் கட்டிப் பிடித்தே கொன்றான்
தன்னைத்தட்டியவர்களை
தட்டியே கொன்றான்.
பாடல்-791:
தீப்பொறிகள் பறக்க
அரக்கர்கள் எறிந்த ஆயுதங்களை
பொடியாக்கும் அனுமனிடம்
எந்த அரக்கர் தப்ப இயலும்?
மயக்கமடைந்து உறங்கிய
அரக்கர்களையும் அனுமன் கொல்வான்
உணர்வு பெற்று எழுந்தாலும் கொல்வான்
வானில் பறந்தாலும் கொல்வான்
நிலத்தில் நின்றாலும் கொல்வான்
பாடல்-792:
ஒரு மனிதன்
இரத்தம் கக்குவது கண்டிருப்போம்
இலங்கை நகரமே
இரத்தம் கக்குவது போலுள்ளது
ஆம் -
இலங்கை நகரின் வாசல்கள் எங்கும்
அரக்க வீரர்களின் மூளைகளும் கொழுப்புகளும்
சேறும் வண்டலும் போல் உள்ளன
தூசி நிறைந்த தெருக்களில்
ஆறு போல இரத்தம் காணப்படுகிறது.
பாடல்-793:
நினைக்கும் நேரமே
உலகில் மிகக்குறுகிய நேரம் என்பார்கள்
வேதம் நிகர்த்த அனுமனுக்கோ
அந்த அளவுக்கு கூட நேரம் தேவைப்படாமல்
அரக்கர்களை
வாலினாலும் கைகளாலும் கட்டி
மரத்தின் மீது எறிந்தான்.
ஆலையில் இடப்பட்ட கரும்பாகி
உடலில் பெருகியது குருதி.
ஒலிக்கும் கடலில் சென்று
குருதி கலக்கிறது ஒலிக்காமல்!
பாடல்-794:
தூக்கி எறியப்பட்ட அரக்கர்கள் உடலால்
கொடி பறக்கும் மாளிகைகள் இடிந்து விழுந்தன
பெரும் துதிக்கை யானைகள்
மடங்கி விழுந்து மரணமாயின
கோபுரங்கள் தகர்ந்தன
உயிர் துறந்தவைகளில்
பெண் யானைக்கூட்டமும் உண்டு
குதிரைகளும் உண்டு.
பாடல்-795:
அனுமன் கொன்ற அரக்கர்களின் உடல்கள்
வீசப்படும் போது
சிலர்
தமது சொந்த மாடங்களையே உடைத்தனர்
தமது சொந்த மனைவியரையே அழித்தனர்
தமது சொந்த குழந்தைகளையே கொன்றனர்.
பாடல்-796:
கொல்லும் யானை ஒத்த அனுமன்
சில அரக்கியர்க்கு அருள் செய்து
“வீடு நோக்கிச் செல்க” என்பான்
சிலரை உயிரோடு அனுப்பினான்
ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு
வீடுகள் வரை போய்ச்சேருமாறு உதவினான்.
பாடல்-797:
கொல்லப்பட்ட அரக்கர்களை வீசி எறிந்தான்
அவை விழுகின்றன -
மரங்களில்!
வீட்டுத் திண்ணைகளில்!
நாற்சந்திகளில்!
நகரத்தின் நடு இடங்களில்!
வீதிகளில்!
தேசம் முழுதும் உடல்கள்!
பாடல்-798:
அரக்கர்கள் அனைவரையும்
கொல்லும் தொழிலை
நிறுத்தாமல் செய்தபடியே இருந்தான்
அதனால்
எமனின் தொழில் தடை பட்டது
அனுமன் பறித்து வீசிய உயிர்கள்
விண்மீன்களில் விழ
மேகங்களில் விழ
வானில் விழ
மற்ற மற்ற இடைவெளிகளில் எங்கும் விழுந்தன.
பாடல்-799:
அரக்கர்களின் சினமோ
இன்னும் இன்னும் அதிகமானது
போர் மோகம் அதிகமானது
வானம் முழுதும் சூழ்ந்தார்கள்
அனைத்தும் சூழ்ந்து
அரக்கர்கள் நிறமும் மேகமும் ஒன்றே ஆனது
போரிடும் அனுமனோ சூரியன் ஆனான்.
பாடல்-800:
அரக்கர்களுக்கும் கடலுக்கும்
இப்போது ஒற்றுமை வந்து விட்டது
ஆரவாரத்தால் !
கண்டவர் சோர்வடைய பருத்து தோன்றுவதால்!
வலிமை படைக்கலன்கள்
கடல் மீன்கள் போல ஒளிர்வதால்!
அனுமனோ
கடலையும் கடையும்
மந்தர மலை போலிருந்தான்!
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment