பாடல்-751:
“நாம் காவலுக்கு வைத்த அரக்கர்களின் வீரம் அழகு!
அடடா! எத்தனை அழகு! என்ன வியப்பு!
மலையை
சோலையை
ஒரு குரங்கினால் அழிக்கச் செய்து விட்டு
அதனை இங்கு வந்தும் சொல்றார்கள்
மூடர்களும் இப்படி பேசமாட்டார்கள்!”
பரிகாசம் செய்தான் இராவணன்.
பாடல்-752:
“இராவணன் திருவடியில் விழுந்து
புகார் செய்த தேவர்கள்
“அரசனே
அந்தக் குரங்கின் உடலைத் தாங்கும்
பூமி வலிமை புகழ்ச்சிக்கு உரியதுதான் ஆனால்
அனுமனின் வலிமையோ
மும்மூர்த்திகளில் ஒருவன் எனப் புகழ்ந்தாலும் அடங்கிவிடாதது
ஐய! அந்தக் குரங்கை காணுங்கள்” என்றனர்.
பாடல்-753:
அப்போது அந்த இடத்தில்
அனுமன் வருகையால் பூமி பிளக்க ஆரம்பித்தது
கடல் நீர் புகுந்து பாய்ந்தது
எட்டுத் திசை யானைகளும் தேவர்களும்
நிலை கெட்டு ஓடினர்
கொவ்வை வாய் அரக்கியர்கள்
கருவும் சிதைந்து சோர்ந்தனர்
அண்டமே வெடிக்க அனுமன்
“ஆம்” என ஆர்த்தான் ஆர்ப்பரித்தான்.
பாடல்-754:
அனுமனின் ஒலி
பெரிய மலைக்குகை தாக்கும் இடியின் ஒலி
பிரளய கால கடல் பொங்கும் ஒலி
சிவதனுசை இராமன் ஒடித்த ஒலி
இத்தனை ஒலிகளும்
இராவணனின் பத்து தலைகளைக் குலுக்கின
இருபது செவிகளை இறுக்கின!
பாடல்-755:
இராவணனுக்கு அப்போது புல்லிய முறுவல் எனும்
புன் சிரிப்பு தோன்றியது பொறாமையும் தோன்றியது
எல்லையிலா ஆற்றல் கொண்ட
எண்ணற்ற பேரை ஏவினான்
அவர்கள் கிங்கரர்கள்
“ஆகாய வழி அடையுங்கள்
கொல்லாமல் கொண்டு வாருங்கள் அக்குரங்கை” என்றான்.
பாடல்-756:
இராவணன் ஆணைக்கு
நிலவுலகம் அழிக்கும் பிரளயகாலக்கடல் போல
கிங்கரர்கள் கிளம்பினார்
சூலம் -வாள் - உலக்கை -வேல் - தோமரம் - தண்டு
பிண்டி பாலம் எனும் வகை வகையான ஆயுதங்களுடன்!
பாடல்-757:
அந்த அரக்கர்கள் அசாதாரணமானவர்கள்
போர் என்றால் அவர்களுக்கு கற்கண்டு
போர் என்றால் மதுவின் போதை
அந்த இயல்பை எப்படிக் கூறுவதெனில்
அவர்களது போர் வெறி
பரந்த காட்டை விடப் பெரிது
உடலின் தோற்றமோ மலையினும் பெரிது.
பாடல்-758:
தேவர்களும் அசுரர்களுமே எமக்குஅற்பம் எனில்
இச்சிறு குரங்கா எமக்கு ஈடு?
பூச்சிகளும் பழங்களும் தின்று வாழும் குரங்கோடு போரா?
என்று பல நாட்கள் வருந்தும் நெஞ்சம் உடையவர்கள்.
பாடல்-759:
அந்த அரக்கர்கள் இடையில் வாள்
உடம்பில் கவசம்
காலில் வீரக்கழல்
திசை முட்டும் தோள்கள்
ஆகாயம் தொடும் தலைகள்
மலைகளை இடறும் கால்கள்
அவர்கள் பேச்சோ
ஓங்கி அடிக்கும் பேரிகை ! மேகத்தின் இடி!
பாடல்-760:
தேவர்கள் எறிந்த ஆயுத காயங்களும்
அசுரர்கள் தந்த ஆயுதத்தழும்புகளும்
அந்த அரக்கர்களின் அணிகலன்கள் ஆகும்
அரக்கர்கள் வாய் எனும் குகையால்
வாரி விழுங்க
ஆண் யானையும் பெண் யானையும் ஏற்றவை
பிறைச்சந்திரன் போல வளைந்த பற்கள் கொண்டவர்கள்
கோபத்தால் கொதிக்கும் கண்கள் கொண்டவர்கள்
பாடல்-761:
என்ன ஆயுதமில்லை அவர்களிடம்! அடடா!
சக்கராயுதங்கள்
உலக்கைகள்
தண்டுகள்
கூரிய வாள்கள்
இரும்பு வளை போட்ட தடிகள்
சங்க வாத்தியங்கள்
சம்மட்டிகள்
முசுண்டி
எறி ஈட்டிகள்
வேல்கள் சூலங்கள்
முக்கோல்கள்
பொன்பிடி இட்ட வச்சிராயுதங்கள்
பகைவரை இழுத்திட கயிறுகள் கோடாலிகள்
வில் அம்புகள் கூர் நுனிதடிகள்
பாடல்-762:
அந்த அரக்கர்கள்
உடல் வலிமை மட்டுமே பெற்றவர்கள் அல்ல
தெய்வத்தன்மை மிகு அணிகலன்கள் அணிந்தவர்கள்
ஆயுதமும் கோபமும் தமது விழிகள் ஆக்கி நின்றவர்கள்
அவர்களை நோக்கி
“ஏன் நெருக்கித் தள்ளுகிறீர்கள்” என்றால்
“நீங்கள் விரைவாக ஏன் செல்லவில்லை” என்பார்கள்
தமக்கு முன்னே நிற்பவரையோ
தமது வெப்ப மூச்சினால் தீய்ந்து போகச் செய்வார்கள்.
பாடல்-763:
அவர்கள் வாய்
சினத்தால் மடிந்தே இருக்கும்
அவர்கள் முகத்தில் ஆயுதம் பிரகாசிக்கும் ஒளி
அவர்கள் கரங்களில் வில்
விரைந்து நடக்கும் கால்கள்
பிரளய கால மேகம்
மழை பொழியக் காத்திருக்கும் கருமேகம் போன்றது
அவர்களது உடம்பு.
பாடல்-764:
அந்த அரக்கர்களுக்கு
கொதிக்கும் மனது உருவாயிற்று
ஒருவரை ஒருவர் முந்தி நடந்தனர்
காரணம் -
“அசோகவனத்தையும் செய்குன்றத்தையும்
ஒரே குரங்கு அழித்ததாம்” என்பதால்!
அவர்கள் செருக்கு காயமானது
இதை விட அவமானமில்லை என்பதால்.
பாடல்-765:
முரசுகள் அடிக்கும் ஒலி
வில்லில் நாண்பூட்டும் ஒலி
வீரக்கழலில் பிறந்த ஒலி
சங்கு ஒலி
அனைத்து ஒலிகளும் ஒருமித்து எழுந்தன
அந்த ஒலி
ஊழிக்கால மழை ஒலியை அடக்கிற்று
ஊழிக்கடலின் இரைச்சலையும் அடக்கிற்று
பாடல்-766:
அந்த அரக்கர்களில் சிலருக்கு
தெருவில் நடக்க இடம் இல்லை
அதனால் வானம் வழி சென்றனர்
தம் புருவங்களையும் வில்லையும் வளைத்து
கோபக்கனலுடன் புகையுடன் பெருமூச்சு விட்டனர்
வரிசையாகச் செல்லும் சிலர் முந்தியதால்
முறை தவறியதால்
கோபம் கொண்டனர்
“இலங்கை பரந்துபட்டதாக இல்லை” என்று விழித்தனர்.
பாடல்-767:
அரக்கர்கள் பல வகைப்பட்டனர்
வாள்களை அசைப்பவர்கள்
கோபத்தால் வாயை மடிக்கிறவர்கள்
வழியில் காணப்படும் கற்களைத் தூளாக்குபவர்கள்
எடுத்த காலை கீழே வைக்க தரை இல்லாமல்
செருக்கு கொண்டு நெருக்குபவர்கள்
தமது வலிமை மிகு பற்கள் கடித்து
நெருப்பு போல கொதிக்கின்றவர்கள்.
பாடல்-768:
அந்த அரக்கர்கள் அனைவரும்
மலை போல் நின்றனர்
பலவகைக் கருவிப்பயிற்சி பெற்றவர்கள்
பெற்ற வரத்தால் ச்¢றப்பு பெற்றவர்கள்
இடிப்பேரொலி எழுப்பும் குணம் பொருந்தியவர்கள்
தேவர்களை வென்றவர்கள்
அசுரர் உயிர் கொன்று தின்றவர்கள்
அனைவராலும் அசோகவனத்தின்
அகன்ற பூமி நெளிய ஆரம்பித்தது!
பாடல்-769:
மின்னல் ஒளியும்
வீரக்கழலும் கொண்ட நாகர்களை மோதி
புறமுதுகு காட்டி ஓடச் செய்து சிரித்தவர்கள் அரக்கர்கள்
குபேரனுடைய புகழே அழியும்படி
அளகாபுரியை அழித்து வென்றனர்
“நம்மோடு போரிட எவரேனும் கிடைப்பார்களா”
என்று தேடுகிறவர்கள்.
பாடல்-770:
அரக்கர்களால்
ஆகாத காரியங்கள் எவையுமில்லை
மலைகளை இடற வேண்டுமா?
அலைகடலை முழுதும் குடிக்க வேண்டுமா?
சூரியனை மண்ணில் விழச் செய்ய வேண்டுமா?
வான் மேகங்களைப் பிழிய வேண்டுமா?
பாம்புகள் தலைவன் ஆதிசேஷனை
தரையோடு தரையாக அரைக்க வேண்டுமா?
நிலத்தைப் பெயர்த்து எடுக்க வேண்டுமா?
இவை எல்லாமும் செய்ய
ஒரே ஒரு அரக்கரே போதும்!
பாடல்-771:
அந்த அரக்கர்களின் நடையில்
புழுதிப்படலம் கிளம்பிச் சென்று
உயர்ந்து உயர்ந்து சென்றது
தேவர்களின் விழிகளில் படிந்தது
அனுமனை நோக்கி அரக்கர்கள் நடை -
சிங்கங்களின் தொகுதி போல
கொல்புலிக்கூட்டங்கள் போல
வான் தொடும் பேய்கள் வரிசை போல
கடல் கடைந்த போது உண்டான நஞ்சு போல
மேகங்கள் மலை நோக்கி வருவது போல இருக்கின்றது
பாடல்-772:
அசோகவனத்தை சூழ்ந்த
அரக்கர் கண்களில் தீப்பொறி வந்தது
மூச்சுக் காற்றில் புகை வந்தது
எல்லாத் திசைகளிலும் இடி போல முழங்கினர்
அவர்கள் நடையில்
கொடிய பிரளயக்காலக் காற்று வீசியது
இடிகளின் கூட்டம் கூட பயந்து விட்டது
அதனால் பூமிக்கே வராமல் காற்று அஞ்சியது
பாடல்-773:
அரக்கர்கள் ஊதும் கொம்பின் ஒலி
கார்கால மேகம் போல இடிக்கும் முரசு ஒலி
மண்ணுலக உயிர்கள் அஞ்சும் போர் ஒலி
ஒலிகளின் கூட்டு சக்தி
அனுமனை மிரட்டி மோதிட வந்தன
அனுமனோ
விண்ணை முட்டும் கயிலை மலை போல நிற்கிறான்
வெயில் தரும் கதிரவனும் அஞ்சி விலகினான்.
பாடல்-774:
எந்தச் செயல் பொருத்தமானது? எதைச் செய்வது உயர்வு ?
எதைச் செய்வது வெற்றி ?
எவரினும் அதிகம் உயர்ந்தோன் என
கம்பன் புகழும் அனுமன்
“பக்குவமான இயல்புடைய அறிவு உண்டாவதே
வாழ்வின் வெற்றி” என அறிந்தவன்
அசோக வன அழிவினால்
அரக்க வீரர்கள் தோற்றோடுகின்ற
வலிய போர்ச்செயலும் இனிதே நிகழ இருக்கிறது”
அனுமனின் உள் நெஞ்சு குதூகலித்தது.
பாடல்-775:
“இவன் தான்! இவன் தான்! இவன்தான்!” என
அனுமனைச் சுற்றி நின்றனர் அரக்கர்கள்
பிடிப்பதே நமது பணி என முற்பட்டு எதிர்த்தனர்
காற்று போல போரிட்டனர்
அரக்கர்கள் உடல் கருப்பின் நிறம்
பகலில் ஒரு இரவு எனத் தெரிகின்றது
அரக்கர்களின் படை கருவியோ மிக வலிது
மண்ணும் , மலையும், வானமும் , ஒப்பற்ற இலங்கையும்
ஒரு சேர அதிரும்படி
தப்பாமல் நஞ்சு போல் கொல்கின்ற படைக்கருவிகளை
அனுமன் மீது செலுத்துகிறார்கள்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment