Wednesday, 18 December 2013

சுந்தர காண்டம் 726-750



பாடல்-726

அனுமன் பல வகை மரங்கள் வீசினான்
அதனால்
பெரும் தாமரைத் தடாகம்
சிவந்த சந்தனக் கட்டை அரைத்துக்
கரைத்தது போல் ஆனது
அசோக வனத்து மரங்கள் விழுந்து விழுந்து
உப்பு நீர்க் கடல் இப்போது
சாமரம் எனும் இசை பாடும்
வண்டுகளுடன் மலர்க்கடலாக மாறியது

பாடல்-727:

ஒவ்வொரு திசையிலும்
அனுமன் வீசிய நொச்சி மரங்கள்
கடலின் நீண்ட அலைகளில் மிதக்கின்றன
அரக்கர் மாளிகை மேல்
சந்தன மரங்கள் விழுந்து
வாசல் கதவுகள் முறிந்து தூளாயின.

பாடல்-728:

நந்தவனத்தில் இருந்த பூக்களை விட
ஆகாய நட்சத்திரங்கள் போல
அனுமன் வீசிய மரங்களின் பூக்கள் அதிகம்
அனுமன் வீசிய புளிய மரங்கள்
எங்கே சென்று விழுவது என
கடலில் சிதறி விழ
கடல் சங்குகள் அதிர்ச்சியுற்றன அதனால்
தமது முத்துக்கள் சிந்திட நிலை கெட்டு ஓடின.

பாடல்-729:

அனுமன் வீசிய மரங்கள் எளிதானவை அல்ல
பல வகை பொன்னாலும் மணியாலும் ஆனவை
அவை
இரவில் ஒளிரும் இந்திரன் வில் போலத் தெரிந்தன
:”இப்போதே அனுமன்
அனைத்து அரக்கரையும் கொல்வான்” எனும் குறிப்புடன்!

பாடல்-730:

அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்களால்
அழிந்த இடங்கள் அதிகம்
யானை கட்டும் இடங்கள்
ஆடல் அரங்குகள்
கள் குடிக்கும் இடங்கள்
குதிரைகள் கட்டும் இடங்கள்
இவை மட்டுமா?
அழகு செய்த தேர்களும் தான்,.

பாடல்-731:
அசோக வன மரங்களை மட்டுமா
பிடுங்கி வீசினான் அனுமன்?
பொன்னால் செய்த கொடிகளை
அறுத்து எத்திசையிலும் எறியும் போது
சூரிய கிரணக் கதிர்கள் அறுந்து விழுந்து
மேகம் படிந்த உடலில் புகுவது போல் உள்ளன.

பாடல்-732:
பேரொளி வீசும் பொன்மயமான மதில்கள் -
அனுமன் வீசும் மரங்களையும்
பெரு குன்றுகளையும்
தாங்க முடியாமல் நெரிகின்றது
மாளிகைகள் சாம்பலாயின
இலங்கையின் எல்லா இடமும் அழிந்தன.

பாடல்-733:

விண்மீன்களின் தலைவன் சந்திரன் வியந்தான்
ஆனால் மறைந்து ஒளிகிறான்
ஏன்
இராவணன் கண்டால் கேள்வி கேட்பான்
“என் மீது பகை கொண்ட குரங்கு
சோலையை அழிக்கும்போது
வேடிக்கை பார்த்தாயா ! ” என்று.

பாடல்-734:

குற்றமற்ற மணிகளால் ஆன பொன்மரங்கள்
மன்மதன் இருப்பிடம் போன்ற மரங்கள்
இரண்டு  கைகளாலும் அனுமன் பறித்து வீசிய போது
பேரொளி வீசிட
உலகமே ஒளிமயம் ஆனது.

பாடல்-735:

விலங்குகள் யாவும்
அச்சத்தால் கலங்கின கத்தின
கண்கள் புண்ணாகிப் பொங்கின
கடலில் பறவைகள் விழுந்தன
விழாதவையோ பறக்க முயன்றன
சில
சிறிது நேரம் சிறிது தூரம் சில பறந்தன
சிறகுகளை உதறின
சிறகுகள் ஒடுங்கி இறந்தன.

பாடல்-736:

அனுமனின் மலை போன்ற தோள்களும்
சூரியன் போல் பரந்த மார்பும்
கோபமாய் தீண்டியபோதே
மலர்களும் இதழ்களும் கூட்டுப் பறவைகளும்
தெய்வத்தன்மை மிகு மரங்களும்
சுவர்க்கம் புகுகின்றது என்றால் -
அருள் புரிந்தால்
வரும் பலனை நம்மால் கூறமுடியுமோ!

பாடல்-737:

அசோக வனத்தில் அனைத்தும் அழிந்தன
பொய்யையே தமது ஒழுக்கமாகக் கொண்ட
அரக்கர்கள் பாதுகாக்கும் சோலையில் அனைத்தும் அழிந்தன
ஆனால்
அதிசயிக்கத்தக்க மென்மையுடன்
சோலையை விட மென்மையான உள்ளமுடைய
அன்னம் போன்ற சீதை வாழும்  மரம் மட்டும் வாழ்ந்தது
மூன்று வகையான உலகங்களும் அழியும்
ஆனால் ஊழியின் இறுதியில்
திருமால் வீற்றிருக்கும் இலை உடைய ஆலமரம் மட்டும்
அழியாமல் வாழ்வதுபோல!

பாடல்-738:
எல்லா அணிகலன்களையும் வீசி எறிந்த சீதை
மிகுந்த ஒளியுடைய சூளாமணி மட்டும்  வைத்திருந்து
அதையும் இராமனுக்கென
அனுமனிடம் தந்து விட்டாள்
அலைகடல் தனக்குள் யோசித்தது
அழகிய சிகாமணி இவளுக்கு
இன்னொரு சூளாமணி இதோ என
சூரியன் எடுத்துத் தந்தது!

பாடல்-739:

சீதையும் மரமும் தவிர
அசோகவனம் முழுதும் அழித்த அனுமன்
தன்னந்தனியாக நிற்கிறான்
பதினான்கு உலகம் அளந்த திருமால் போல!
பாற்கடலைக் கடைந்திட நிற்கும்
மந்தாரமலை போல!
ஊழி இறுதியில் உலகமெல்லாம் அழித்து நிற்கும்
உருத்திர மூர்த்திப் போல!

பாடல்-740:

இத்தனை அழிவுகள் நிகழ்ந்த பின்
உறக்கம் கலைந்த  அரக்கியர்கள்
மனம் கொதித்தனர்
பொன் மலைபோல் நிற்கும்
புனித அனுமனை உற்றுப் பார்த்தார்கள்
“அம்மா! யார் இவன்” என்று அச்சம் அடைந்து
பிறகு சீதை நோக்கி
“நங்கையே இவனை அறிவாயா” என்றனர்.

பாடல்-741:

அரக்கிகள் வினவியதும் அற்புதமான பதில் தந்தாள் சீதை
நல்லவர் உலகிற்கு
ஆறுதல் மருந்து போல ஒரு சொல்!
“தீயவை என்பதை தீயவர்கள் தான் உணர்கிறார்கள்
நல்லவர்களோ எல்லாமும் நம்புவார்கள்”
மாரீசன் எனும் மாயமான் வந்த போது
“இது தீயவர் மாயம்” என இலக்குவன் உணர்த்தியும்
உண்மை என மயங்கியவள் நான்.

பாடல்-742:

சீதை கூறியதும்
அரக்கிமார்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
அப்போது வானமும் கடல்களும் குலைந்தன
அருகில் ஒரு மிச்சமாக நின்றது ஒரு மலை!
“நீக்குவேன் இதனை” என அனுமன் தனது
மலை போன்ற கைகள் நீட்டினான்.

பாடல்-743:

அந்த மலை சாதாரண மலை அல்ல
வானவெளி அடைக்கும் மலை
நாணத்தால்
வானத்தின் மனம் புண் ஆக்கும் மலை
கண்ணால் உயரம் காணமுடியா மலை
மேகம் மூட முடியா மலை
வலிய காற்று அடையாத மலை
இரவும் மூட முடியாத மலை
அட! இந்த உலகமே அதன் சுமைதாங்க முடியாத மலை.

பாடல்-744:

சந்திரன்
பல நாட்கள் பொழிந்து
பெருகி வரும் புதிய பால் ஒளி மட்டுமல்ல
அதன் கறை இருளையும்
வாரி நக்கும் பொன் குன்று அது!
இராவணன் கட்டளையால்
பிரம்மன் தனித்து உருவாக்கியது,

பாடல்-745:

அந்தக் குன்றின் ஒளி
சிவப்பு ஒளியைத் தனது சீதனமாகக் கொண்ட
சூரியனுக்கே அணிகலன் என ஒளிரும் ஒளி கொண்டது
அந்த மலையில்
தூண்  போல நிமிர்ந்த இடங்களில் இரத்தினங்கள்!
மலையின்  சுற்றுப்புறங்களில்
தங்கமும் முத்துக்களும் பதித்த ஒளி!
இவ்வளவு சிறப்பு பெற்ற மலை
எம்மால் புகழக்கூடிய பொதுவான தன்மை பெற்றதல்ல!

பாடல்-746:

அழகிய வெள்ளி மலையான கயிலையை
கொடுந்தொழில் இராவணன்
வேரோடு பறித்ததைக்
கேள்விப்பட்டுள்ளான் அனுமன்
அச்செயல் சாதாரணம் என நினைக்கும் அளவு
பொன்மலையை மண்ணிலிருந்து எடுத்து
இலங்கை மீது வீசினான்!
மலையினால் மோதப்பட்ட
வானுயர் மாளிகைகள் பொடியாயின.

பாடல்-747:

அப்போது தோன்றிய
நெருப்புப் பொறிகள்  தெறித்தன
எப்பக்கமும் சுட்டன
அரக்கர்கள் அஞ்சி அழிந்தனர்
பிறருக்குத் தீமை செய்பவர்கள்
அந்தத் தீமையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு
இந்த அழிவே சாட்சி.

பாடல்-748:

இராவணனிடம்
அலறி அடைக்கலம் புகுந்தவர்கள் பட்டியல் இதுவே:
அசோகவனம் காக்கின்ற
ஆறு பருவத்துக்கும் உரிய தேவர்கள்;
அச்ச நெருப்பு மூண்டவர்கள்;
தம் உடையிலேயே சிறுநீர் பீறிட்டவர்கள்
மரங்களில் கிளைகள் கிழித்து குருதி வழிபவர்கள்
கால்கள் பின்னிட ஒரே காலுடன் நடப்பவர்கள்
திறந்த வாயுடன் ஊளையிடுபவர்கள்.

பாடல்-749:

சிங்கம் போல கர்ஜிக்கும் கோபமுடைய
இராவணன் திருவடி சேர்ந்தார்கள்
“திசை யானைகள் எல்லை வரை
காவல் காக்கும் மன்னனே
இப்போது
அசோகவனம் கூட
காவல்  செய்ய முடியாமல் ஆனோம்
மலைத் தோள் உடைய ஒரு குரங்கு
மரங்களை முறிக்கிறது
காவல் மிகுந்த சோலை இப்போது
தீப்பட்ட ஆடை!” என்று கதறினார்கள்.

பாடல்-750:
“இராவண மன்னா!
அக்குரங்கு செய்த அழிவு
சொல்ல முடியாத அளவு மன்னா!
தன் கால்களாலும் கைகளாலும்
அசோக வனத்தை
புல்லும் துகளும்
பொடியும் இல்லாத அளவு அழித்துவிட்டது
பொன் ஒளி வீசும் செய்குன்று
பிடுங்கி வீசப்பட்ட நகரம்
சிறிய இடம் மட்டுமே அழியாமல் உள்ளது” என்று கதறினர்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment