Wednesday, 11 December 2013

சுந்தர காண்டம் 701 -725





பாடல்-701:
சூரியனும் சந்திரனும் வலம் வரும் மேருமலைக்கு சமமான
இரண்டு தோள்களையுடைய தனது வடிவத்துடன்
அசோகவனத்தை அழித்தான் அனுமன்
இரணியாட்சன் பூமியை
சுருட்டிச் சென்றதை மிட்டு எடுத்த
வராக மூர்த்திக்கு சமமாக
அடர்ந்த அசோகவனத்தை
கால்களால் துகைத்து அழித்தான்.

பாடல்-702:
அனுமன் கால்களால் தாக்கப்பட்ட
அசோகவனத்து மரங்கள் பிளந்தன
முரிந்தன நெரிந்தன
மடிந்தன பொடிந்தன மறிந்தன
எரிந்து கரியாய்ப் போயின ஒடிந்தன
துவண்டு சாய்ந்தன
உதிர்ந்து சின்னாபின்னம் ஆயின.

பாடல்-703:

சில மரங்கள் வேரோடு விழுந்தன
வெந்து போயின
வானத்தின் மேகத்தோடு நெருங்கின
காற்றினால் கடலில் வீழ்ந்தன
வண்டுகளுடன் வானோரின் ஊர் சென்றன
இன்னும் சில மரங்கள் உருவிழந்து சிதைந்தன.

பாடல்-704:
அனுமன் கழற்றி வீசிய மேக உயர மரங்கள்
எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளுக்கு
தழை உணவு ஆயின
இன்னும் சில
வான வழியே சென்று
தேவர்களின் சோலைகளைச் சிதைத்தன.

பாடல்-705:
அனுமன் வீசிய மரங்களால்
கடலில் அலைகள் அலைவுற்றன
அரக்கர் வீடுகள் பொடியாயின
இன்னும் பல மரங்கள்
மலை மீது மோதி தூளாயின
மரங்களின் வெண் மலர்கள் நிலை கலங்கின
நட்சத்திரங்களுடன் கலந்து கீழே விழுந்து சிந்தின.

பாடல்-706:
அனுமன் பிடுங்கி வீசிய மரங்கள்
மதம் கொண்ட திசை யானைகளின் தந்தங்கள்
நடுவே தொங்கின
பெண் யானைகளுக்கு உதவ
துதிக்கைகளில் இடுக்கி வைத்திருப்பது போல
மரங்கள் காணப்பட்டன.



பாடல்-707:
அனுமன் வீசி எறிந்த மரங்கள்
எல்லா உலகிலும் சென்று வீழ்ந்தன
அதனால்
நஞ்சு மிகு இராவணன் சோலை மலர்களை
செம்பஞ்சு பாதம் கொண்ட பெண்களால்
வித்தியாதரர் வாழும் உலகிலும் பறிக்க முடிந்தது!
இயக்கர்கள் வாழும் மலையிலும் பறிக்க முடிந்தது!
மரணமிலாத தேவர்கள் வாழும்
சுவர்க்கத்திலும் பறிக்க முடிந்தது.!

பாடல்-708:

பொன்னில் பதித்த இரத்தினங்களால்
செய்யப்பட்ட இராவணன் வீட்டை
தடிமனான அசோகவன மரங்கள் சுற்றி வருவதால்
மின்னல்போல் தெரிந்தன
பல மரங்கள்
சூரியன்கள் திரிவது போலவும் தெரிந்தன
வீசி எறிந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தூளாகி
ஊழிக்காலத்தில்
கீழே விழும் நட்சத்திரங்களை ஒத்திருந்தன.

பாடல்-709:
அனுமன் வீசிய மரங்கள்
கடலில் விழுந்த போது விழுந்தவை பட்டியல் இது :
“மரத்திலிருந்த பறவைகள்!
வண்டுகள்!
தேனீக்கள்! நறுமண மலர்கள்!
தேன் அரும்புகள் ! தளிர்கள்
இனிய காய்கள்” இவை அத்தனையும்
மீன் கூட்டங்களால் மகிழ்ச்சியாக விழுங்கப்பட்டன
அடடா -
உண்டு முடித்த மீன்களின் மேல் மரங்கள் வீழ
அவை இறந்து போயினவே.

பாடல்-710:
அனுமன் வீசிய மரங்களின் மலர்கள்
கடலில் உள்ள
புலால் மணத்தை மாற்றி
மலர் நறுமணம் வீசச் செய்தன
அதுமட்டுமா!
தேவர்கள் தம் மனைவிகளுடன்
மகிழ்ந்து குளிக்கும் குளமாக ஆகின கடல்கள்!

பாடல்-711:
அனுமன் பறந்து கடக்க வேண்டிய கடல் அல்ல
நடந்தே கடக்கலாம்! ஆம்!
அனுமன் பறித்து எறிந்த
மாணிக்க மயமான மேடைகளும்
அசோகவன மரங்களும்
கடலில் படிந்து வழி உண்டாக்கியதால்!

பாடல்-712:
மலை பொடியாவது போல்
வான் இடியால் உடையும்
பெரிய மலைகள் ஒத்த அசோக மரங்கள்
கோடை சூரியன் போல ஒளி விடுகின்றன.

பாடல்-713:

அனுமன் கோபமுடன் வீசிய
அளவிலாத மரக்கூட்டங்கள்
வானில் தழைத்துத்  தெரிவதால்
வலிமை மிகு இராவணன் அசோகவனம்
விண்ணிலும் இருக்கிறது என  நினைத்தனர் சிலர்.

பாடல்-714:
அனுமனால் வீசப்பட்டு
ஆகாயத்தில்பறக்கும் மாணிக்க மயமான மரங்கள்
தேன் துளி சிதற
பறவைகள் ஒலியோடு
நட்சத்திரங்களை நொறுக்கின
வாள் போல வில் போல ஆகாய விமானம் போல
பறக்கும் மரங்களின்
ஒளி தெரிகின்றது.

பாடல்-715:
ஒப்பற்ற போர் புரிவதில்
யானைக்கு சமமான அனுமன்
வீசி எறிந்த மரங்களும்
மரங்களின் கிளைகளும் இலைகளும்
வானம் வரை உயர்ந்து சென்று கடலில் விழும்போது
கடல் நீரை முகக்கும் மேகங்களை ஒத்துள்ளன.

பாடல்-716:

இராவணன்
முன்னர் கற்பக மரங்களை
கொடை குணம் மிக்க குளிர்ச்சியான
விண்ணுலகிலிருந்து மண்ணுலகம் கொண்டு வந்தான்
இப்போது  அவை பெயர்த்து வீசப்பட்டன
சுவர்க்கலோகம் சென்றன
தேவர்கள் சொர்க்கம் செல்வது போல காட்சி தந்தன.

பாடல்-717:

மாணிக்கங்கள் பதித்த
திண்ணைகளை இடித்தான்
மண்டபங்களை துண்டாக்கி உடைத்தான்
ஒளி பொருந்திய வலிமையான சுவர்களை
இடித்துத் தள்ளினான்
உயர்ந்த குன்றுகளையும் அழித்தான்.

பாடல்-718:

வேங்கை மரங்களையும்
ஆச்சா மரங்களையும்
கீரை போல இலகுவாகப் பறித்தான் வீசினான்
கற்பக மரங்களைப் பூக்களோடு ஒடித்தான்
சண்பக மர வரிசைகளையும் பறித்து எறிந்தான்
மாங்கனிகளோடு கிளைகளோடு
பெரும் மரங்களை வீசி முறித்தான்.

பாடல்-719:

மன்மதன் வரும் முன்பு
இளவேனிலாகிய வசந்தம் எனும் வசந்தன் வருவான்
பூஞ்சோலைகள் கலங்கி
நிலை குலைந்ததால்
வசந்தன் முகம் இப்போது பொலிவிழந்தது
சந்தன மரங்கள்
விறகுகளாய் எரிந்து சிந்தி அழிந்தன.

பாடல்-720:

“காமரம்” எனும் பண் பாடும் வண்டுகள் கலங்கும்படி
மரங்கள்
மண்ணோடு மண்ணாகி வீழ்ந்தன
அரங்குகள் தகர்ந்தன
பூ மரங்கள் எறிந்து பொரிந்தன.

பாடல்-721:
இலைகள்
சிறு கிளைகள் கொடிகள்
குயில் குலங்கள் தங்கும் தளிர்கள்
மென் மலர்கள் கொண்ட வாசல்கள்
வாசனைப் புதர்கள்
தேன் மழை
வண்டுகள்
மயில்கள்
எல்லாமும் அனுமனால் அழிந்தன.

பாடல்-722:

மேகங்களை மின்னல்கள் சுற்றிக் கிடப்பது போல
அனுமன் வீசிய பவளக் கொடிகள்
இலங்கை சூழ்ந்த மலைகளைச் சுற்றிக் கொண்டன
அனுமன் வீசி எறிந்த
பொன்மயமான கிளைகளும் மரங்களும்
மலைகளில் கிடப்பது
கவளம் கவளமாக உண்ணும்
யானைகளின் முகபடாம் போல ஒளி வீசின.

பாடல்-723:

அனுமன்
அசோக வனம் அழிக்கும்போது
பறவைகள் ஆர்த்த ஒலி ஓசை
மரங்கள் ஒடியும் இடி ஓசை
அறவடிவன் அனுமனின் குரலோசை
அண்டத்திற்கு அப்பாலும் கேட்டதே...
பாடல்-724:

பாதிரி மரங்களும்
கோங்கு மரங்களும்
பறவைகளோடு குஞ்சுகளோடும்
இசையுடன் குளிர்ப்பாடல்கள் பாடும் வண்டுகளோடு
அலைகள் கரைகளை அலம்பும் கடலில்
ஓசையுடன் விழுந்தன.

பாடல்-725:

ஆற்றின் கரையோர ஆச்சா மரங்கள்
வண்டலோடு கூடிய நல்ல நீர் கொண்ட
மண்ணுலக ஆற்றில் மடிந்தன
அனுமனால் வீசப்பட்ட
நீண்ட நீண்ட மரங்கள்
திருமால் கால் அலம்பிய
ஆகாய கங்கையில் விழுந்தன.

-அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment