Sunday, 1 December 2013

சுந்தர காண்டம் 676 -700




பாடல்-676

நங்கையே
எண்ண முடியாத பெரிய வானர சேனை
நாளையே இந்நகருக்குள் வரும்
அப்பொழுது அவை நடுவில்
கருடன் மேல் திருமால் போல்
இராமனை என் முதுகில் நீ காண்பாய்.

பாடல்-677:

அங்கதன் தோள் மேல்
இராமனின் இளவல் இலக்குவன் வருவான்
மலையில் பொங்கும்
வெம்மையான சூரியக்கதிர்கள் என விளங்குவான்
போரிடும் முடிவோடு வானரப்படை இலங்கையில் தங்கும்
எனவே
கவலைகளும் கலக்கமும் நீங்கி விடுக
உனது தனிமை நீங்கப் போகிறது.

பாடல்-678:

“குராமலர்கள் சூடிய குழலியே
நீ குறிப்பிட்ட நாளில்
இந்த பெரும் சிறையிலிருந்து உன்னை மீட்காவிட்டால்
பழியும் பாவமும் தொடர்வதற்கு
அந்த இராமனே இராவணன் என ஆவான்
இந்த இராவணனே இராமன் ஆவான்” என்றான்.

பாடல்-679:

குற்றமற்ற
அனுமனின் மொழி கேட்டு
மயிலாகிய சீதை அறிவிலே தெளிவுற்றாள்
உவகையால்  மனம் களித்தாள்
உயிர் பெற்றாள்
“இவன் இராமனிடம் போவது நன்று” என்பதை
புத்தியில் வைத்தாள்
இப்படியாக சில வாசகம் சொன்னாள்:-

பாடல்-680:
“ஐயனே
மேன்மையானவனே
இராமனிடம் விரைக
தீயவை எதுவரினும் வெல்க
இனி ஒன்றும் சொல்ல என்ன இருக்கிறது
இப்போது நான் சொல்வதும்
முன்பு நிகழ்ந்தவைவும்
கோமகனுக்கு விளங்கும்” எனச் சொன்னாள்
இனிய சொற்கள் இசைக்கும் சீதை.

பாடல்-681:

அனுமனே.. இதனை நினைவூட்டு
அப்போது வனவாசத்தில் இருந்தோம்
சித்திரக்கூட மலையில் இருந்த எனது அருகில்
ஒரு காகம் வந்தது
கூர் வாள் நகத்தால் என் மார்பு கீறியது
அந்தக் காகத்திடம் இராமன் கோபித்தான்
அருகில் கற்கள் நடுவே
வளர்ந்திருந்த புல் கொண்டு
விரைவும் கொடுமையும் கொண்ட
பிரம்ம அஸ்திரத்தை ஏவிய  செய்தியை
மெல்லச் சொல்வாயாக
மென்மையாக விரிப்பாயாக.

பாடல்-682:

அது மட்டுமல்ல
 இன்னொன்றையும் இராமன் மனதில் விரிவாக
தைக்கும்விதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
ஆம்! அந்தக் காகம்
தன்னைக் கொல்ல வரும் அம்பு கண்டு அஞ்சியது
பிரம்மலோகம் சென்றது
பிரம்மன் கோபித்து அனுப்பி விட்டான்
உமையொரு பாகனிடம் சென்றது
திசை எட்டும் சென்றது
ஒவ்வொருவரும் தமது இடத்திற்கு
ஏன் வந்தாய் என மறுத்தனர்”

பாடல்-683:

அந்தக் காகம் வேறு யாருமல்ல
இந்திரன் மகன் ஜெயந்தன்!
அவனது துன்பங்களை
ஆகாயத் தேவர்கள் பார்த்து
“இராமனின் திருவடிகளே உனக்கு அடைக்கலம்
அங்கு சென்று விழு” என்று சொல்லியதும்
அந்தக் காகம் சரண் அடைந்தது
இந்நிகழ்வை அவன் நெஞ்சில் வைப்பாய் அனுமனே.

பாடல்-684:

ஜெயந்தன் இறுதியில்
இராமபிரானிடம் புகலிடம் பெற்றான்
மகிழ்ந்த இராமபிரான்
பிரம்மாஸ்திரத்திற்கு இட்ட ஆணை என்னவெனில்:
“இக்கொடியவனின் இரண்டாம் கண்ணை
அப்புறப்படுத்து” என்றதும்
தெய்வ அம்பு
அந்த காக்கையின் கண்ணைப் பறித்துச் சென்றது
இதனை நினைவூட்டுக.

பாடல்-685:

“தந்தையே உன் திருவடி சரணம்
என்ற தன்மையினால்
முன்பு நீ செய்த குற்றமும் பொறுத்தோம்”
என்று கூறி ஆறுதல் தந்ததை
அவனிடம் சொல்வாயாக.

பாடல்-686:

ஜெயந்தன் அச்சம் நீங்கினான்
இராமனை வணங்கி வானுலகம் சென்றான்
தேவர்கள் பூமழை பொழிய
யானை போன்ற இலக்குவன்
இவ்வெற்றியை அறிவதற்கு
இனிய சொற்களால் இராமனிடம் சொல்க.

பாடல்-687:

என் நாயகனே
உண்மை வழியோனே
என் இனிய உயிர் போன்ற கிளிக்கு
யார் பெயர் வைப்பது என்று கேட்டேன்
“என் தாயாகிய
மாசற்ற கேகய மன்னன் மகளாகிய
கைகேயியின் பெயர் இடுக”
என்று அக்காலத்தில் சொன்ன மொழியை
இராமனிடம் கூறுக.

பாடல்-688:

சீதாதேவி
அடையாளச் செய்திகள் யாவும் கூறிய பிறகு
இனி கூறுவதற்கு ஏதுமில்லை என உணர்ந்தாள் சீதை
தனது திருத்துகிலில் பொதிவுற்ற
பதித்து வைத்திருந்த
சூளாமணியை எடுத்தாள்
சூரியனை வெல்லும் ஒளி வீசியது அதன் சுடர்.

பாடல்-689:

சீதை தனது மலர்க்கையினால்
எடுத்த சூளாமணியைக் கண்டு அனுமன் வியந்தான்
“இது என்ன!” என்று திகைத்து வியப்புற்றான்
வியப்பால் வீங்கினான்
சூளாமணியின் ஒளியினால்
ஏழுலக இருளும் ஓடிப்போனது!

பாடல்-690:

அந்த சூளாமணியின் ஒளி
அரக்கர்களுக்கு ஒரு சந்தேகம் தந்தது
“மேகமண்டலச் சூரியன்
இராவணனுக்கு அஞ்சாமல்
இலங்கையுள் புகுந்துவிட்டானோ!!”
சக்கரவாகப்பறவைகளுக்கும் குழப்பம்
தினசரி சூரியன் போல் எண்ணி
துணையுடன் கூடாமல் சஞ்சலப்பட்டன
தாமரை மலர்கள் சூரியன் என எண்ணி மலர்ந்தன.
சூரிய காந்தக் கற்கள் தீ உமிழ்ந்தன

பாடல்-691:

அந்தச் சூளாமணி
சீதையின் கூந்தல் மேகத்தின் மேல்
ஒளிவிடும் சூரியனை ஒத்திருந்தது
சீதை மேனி போல் சிவந்திருந்தது
இராமனது திருவடி போல்
இருள் நீக்கி ஒளி உமிழ்கிறது.


பாடல்-692:

சீதை சொன்னது இது
“என்னைத் தேடி வந்து
என் இனிய உயிர் காத்த அனுமனே
இந்தச் சூளாமணி இதற்கு முன்பு பல நாட்கள்
என் ஆடையில் இருந்தது
இதுவே அடையாளம் எனப் பெற்றுக் கொள்! கோடி!!”

பாடல்-693:

சீதை தந்த சூளாமணியைத் தொழுதான் வாங்கினான்
தன் ஆடையில் சுற்றிக் கொண்டான்
பாதுகாப்பு செய்தான்
வணங்கினான் அழுதான்
மூன்று முறை வலம் வந்து வணங்கினான்
ஓவியப் பாவை போன்ற சீதை புகழ்ந்தாள்
புறப்பட்டான் அனுமன்
(சூளாமணிப் படலம் முற்றியது)

பொழில் இறுத்த படலம்

பாடல்-694:
வடக்கு திசை வழியே செல்ல
முடிவு செய்தான் அனுமன்
மலர்ச்சோலைகள் நடுவே விரைந்து சென்றான்
இலங்கையில் சிறிய வேலைதானே செய்தோம்
வீரத்திற்கு அது தீமை!” என ந்¢னைத்தான்
வேறு ஒரு செயல் செய்ய நினைத்தான்.

பாடல்-695:

இழி தொழில் அரக்கரை
அடித்துக் கொல்லாமல்
கடலில் சிதறி விழ வீசாமல்
மான் விழி சீதையை
இராமனின் திருவடியில் சேர்க்காமல் நான் எப்படி
இராமனின் அடியவன் என ஆக முடியும்?

பாடல்-696:

நான் எனது வாலினால்
இராவணனின்
பத்து தலைகளையும் இருபது தோகளையும் சேர்த்து
நெருக்கிக் கட்டவில்லையே
கொடிய சிறையில் வைக்கவில்லேயே
போரிலும் வெல்லவில்லையே
இராமனே தஞ்சம் என நான் கூறுவது
பொருத்தமாகவா இருக்கிறது?

பாடல்-697:

ஒன்று செய்வோம்
அரக்கர் கூட்டத்தை
எனது வலிமையால் கலங்கச் செய்வோம்
இராவணன் பார்க்கும் போதே
அவன் மனைவி மண்டோதரியின்
மலர்க்கூந்தல் பிடித்துக் கொண்டு போய்
சிறை வைத்தால் என்ன குறைந்து விடும்!

பாடல்-698:

மேலும் மேலும்
மற்ற ஒன்று எண்ணுவதற்கு நேரம் ஏது?
அரக்கர்களை வருந்தி ஓடச் செய்ய
எனது முழு வலிமையும் பயன்பட வேண்டும்
அரக்கர்களை
கடும்போரில் சிக்க வைக்க
வழிகள் என்ன என சிந்தித்தான் அனுமன்,.

பாடல்-699:

அரக்கர்களை
சினத்தினர் ஆக்க வேண்டும்
கோபமுற வைத்துவிட்டால்
என் நோக்கம் எளிதாகிவிடும்
இங்குள்ள சோலைகளை இறுக்கி
அழித்தால் பேரொலி கேட்கும்
அரக்கர்கள் கோபமுடன் தாக்கவருவர்
என் வலிமையுடன் மோதி உயிர் இழப்பர்
இதுவே என் தந்திரம்.


பாடல்-700:

வந்த அரக்கர்கள்
திருப்பிச் செல்ல முடியாது
வந்தவர்கள் வந்தவர்கள் தான்!
எவரும் திரும்பாமையால்
இராவணன் என்னிடம் மோத வருவான்
அவன் மகுடம் மிக்க தலைகள்
தரையில் உருண்டோட வைப்பேன்
இந்த  வெற்றிச் செய்தியுடன்
இராமனிடம் மகிழ்ந்து செல்வேன்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment