Thursday, 3 January 2013

திருப்பாவையில் உறக்கம் பற்றிய எச்சரிக்கை

திருப்பாடல்:6
மார்கழி:6



“பிள்ளாய் எழுந்திராய்!” என்பது பாவை நோன்பு நோற்கும் பெண்களுக்கு என நினைத்துக் கொண்டோம். யாரோ யாரையோ எழுப்புவது பற்றியா எழுதுவார்கள்? அது உண்மையா ? அப்படியெனில் அது சிறு சம்பவம் மட்டுமே. சம்பவம் கூட இல்லை. வெற்று நிகழ்ச்சி. உறங்குவதும் மரணமும் ஒன்றே என்கிறது வள்ளுவம். அறிதுயில் என்கிற வகையறாவும் உண்டு. அது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்த ஆறாம்பாடலில் இரண்டுமுறை “எழுந்திரு எழுந்திரு” என்கிற அறிவிப்பு வருகிறது. அது இளமையில் நமது மனசாட்சி நம்மிடம் சரணாகதி பற்றி கிசுகிசுப்பாகக் கூறுவது. அதையே “பறவைகள் சிலம்பின” என்று ஆண்டாளின் வரி அழகுறக் கூறுகிறது. அது தூரத்தில் பறவைகள் பாடும் சிலம்பு ஒலிதானே! நமக்கென்ன!”என்று நாம் புறக்கணிக்கிறோம். இரண்டாம் முறை உள்குரல் வருகிறது. இப்போது நாம் அழுத்தமாக வற்புறுத்தப்படுகிறோம். சங்கின் ஒலி உன்னை விளிக்கிறது. அழைக்கிறது. அது பேரரவம்- பெரும் சத்தமாக உன்னை அழைக்கிறது. “அதோ பார் மனமே! முனிவர்களும் யோகிகளும் இந்த மார்கழி குளிர் அதிகாலையில் மெள்ள எழுகின்றனர். “அரி அரி!” என்ற பேரரவம் கேட்கிறது!” அற்புதமான அனுபவம் இந்த 6ம் பாடல்.

திருப்பாடல்:

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment