Sunday 6 January 2013

திருப்பாவையில் அறியாமை

மார்கழி :15
திருப்பாடல் :15

திருப்பாவையில் அற்புதமான பாடல் இது. நம்மைச் சுற்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளது. நாமும் அறியாமை கொண்டவர்களே. எனினும் மற்றவர்களை விட ஒரு சில விஷயத்தில் அறிவு விழிப்பு உள்ளவர்களாய் நமக்கே தோன்றும்போது அறியாமை கொண்டோரிடம் கோபமாக “என்ன! உனக்கு இதுகூட தெரியாதா” என்று சினம் கொள்வோம். அப்படிப்பட்டவர்களை கோபமாக  அப்படிச் சொன்னால் மாறமாட்டார்கள். நமக்கு ரத்தக் கொதிப்பு (பி.பி) எகிறும். உண்மையில் திட்டு வாங்கும் நபர் , “உமக்கு மட்டும் எல்லாம் தெரியுமோ!” என்று கேட்கவும் கூடும். இந்த சிக்கல்கள் தீர ஆண்டாள் அம்மை அழகிய காட்சி ஒன்றைத் தருகிறார்.
அறியாமை என்கிற உறக்கத்தில் இருப்பவர்களை மெல்லென “எல்லே!” என்றும் “இளங்கிளியே” என்றும் கொஞ்சும் அன்புடன் அழைக்க வேண்டும். பிறகுதான் “இன்னும் உறங்குதியோ” என்று சிடுசிடுப்பு காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் மாறுவார்களா? விழிப்பார்களா? “நீங்கள் எல்லாம் பேச்சில் திறமைசாலிகள்” என்று புகழ்ந்து ஒதுங்கப் பார்ப்பார்கள். மீண்டும் புரியுமாறு கூறுவோம். அப்போது அவர்கள் “மற்றவர்கள் உறக்கம் விட்டு (அறியாமை) நீங்கிவிட்டார்களா? அவர்கள் எத்தனை பேர்! முதலில் அதை எண்ணிச் சொல்லுங்கள்” என்றுதான் கூறுவார்கள். இத்தகைய உலகப்பண்பை  மார்கழி குளிர் நடுவே வரைந்த கோலத்தில் வைத்த மஞ்சள் பூசணிப்பூ போல செழுமையாக சேர்த்துவிட்டார் நம் ஆண்டாள்!
   
திருப்பாடல்:

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


1 comment:

  1. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete