Tuesday 22 September 2015

அந்த கால நினைவுகள்



அப்பா விரும்பும் மாகாளிக்கிழங்கு நறுக்கு
அதன் நறுமணம் மிகு சாரல் சிவப்பு நீர்ச்சொட்டு

அம்மா நறுக்கித் தந்த ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
அதில் மிதக்கும் கொண்டைக்கடலை மூக்குகள்
அதற்காக பரிசளித்த பெரும்பீங்கான் ஜாடிகள்

நடுக்கூடத்தில் பந்துபந்தாய் மோர்சாதம்
பிசைந்து பிசைந்து அன்பு பூட்டிய
கூட்டுக்குடும்பத்தின் பாசக்கரங்களும் பசுமாடும்.

மணக்கால் மலட்டாறு நடுவில்
அள்ளிப்பருகிய பளிங்குநீர் ததும்பும்
வட்டக்கிணறில் தெரியும் அடி ஊற்று

எங்கும் இருந்து அருள் பாலிக்கும்
சுப்பிரமணியசாமி கோவில் வாசலில்
வேர்கடலையும் நல்லெண்ணையும் பிசைந்த
புளிசாதமும் அன்பு வெண்தயிர் சாதமும்!

எத்தனை தூரம் ஓடி வந்துவிட்டோம்
எத்தனை தூரம் கடந்து வந்துவிட்டோம்
எவர் கொண்டு சென்றனர் எங்கோ
நேற்று வீசிய தென்றல் இன்றும் வீசுவதாக
மனத்திண்ணையில் புரண்டு படுப்பேன்
புழுக்கம் மிகு மின்விசிறி தலைமேல் சத்தமிட்டு முறைத்திட.

 

1 comment:

  1. மனத்திண்ணையில்//

    ரசித்தேன்.

    ReplyDelete