Sunday, 20 January 2013

தான் இல்லாது கொடுக்கும் கலை

      “தானம்” என்பதன் தெளிவான விளக்கத்தை கீதை உபதேசித்துள்ளது. முதலில் , அது தகுதியுள்ளவர்களுக்கே செய்யப்பட வேண்டும். அதாவது அதனைப் பெறுகிறவன் , திருப்பித் தரும் அளவுக்கு வசதி வாய்ப்புள்ளவனாக இருக்கக்கூடாது. அப்படி வசதி வாய்ப்புகள் இருந்தால் “தானம்” என்பது தலைகீழ் ஆக வாய்ப்புண்டு.
         இரண்டாவதாக, தானம் என்கிற செயல் உண்மையிலேயே தேவைப் படுகிறவர்களுக்கு  நிகழ வேண்டும் என்கிறது கீதை. மூன்றாவது சரியான இடத்தில் நிகழ வேண்டும். (இக்கருத்து தானம் என்பது மிக ரகசியமாகவும் வேண்டாம். மிகவும் விளம்பரமாகவும் செய்யப்பட வேண்டாம் என்று பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்) நான்காவது: கொடுக்கிற நபர் தனது கடமையாக எண்ணியே உதவி அளித்தல் எனும் தானம் நிகழ்த்துதல் வேண்டும்.
          எதிர்பார்ப்பின் எந்த ஒரு கூறுபாடும் தானம் தருகிறவருக்கு இருந்துவிடக் கூடாது. மரியாதை பெறுதல் நிமித்தமாகவும் கூடாது. பெறுகிறவர்கள் அன்பை எதிர்பார்ப்பதும் கூடாது. எந்த மறுபலனும் அற்றதே தானம். இந்த நான்குவித கோட்பாடுகளும் நிரம்பியதே சாத்வீக தானம் எனப்படும். அது உண்மையானது . நல்லது.
            தானே முன் சென்று தருதலை குரானும் கட்டாயமாக்கியுள்ளது.
     கீதையும் பிறருக்கு கொடுப்பதை “தனது கடமை” என்ற உணர்வோடு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கண்ணில் தெரிகின்ற- கண்ணறியாமல் மறைத்த உனது ஒவ்வொரு சொத்துக்கும் “சகத்” குறிப்பிட்ட தொகையில் செலுத்தப்பட வேண்டும் என்று புனித குரான் கூறுகிறது. மறைத்தோ வெளிப்படையாகவோ தானம் செய்வதை புனித குரான் கொடுப்பவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறது. ஏனெனில் கருணையோடு செய்யப்படுவதை விரும்புகிறது. அதிகாரம் ,புகழ், கெளரவம் பெற விரும்பும் தானம் தானமே அல்ல என்கிறது புனித குரான்.
      மனிதன் என்பவனை வர்ணிக்க வேண்டுமானால் எதை எதை தியாகம் செய்தானோ அதில்தான் உண்மையாக இருக்கிறான் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.
       ஜான் கார்மோ கூறுகிறார்:-  தியாகம் என்பது நமது வாழ்வின் பரிசு. அந்தப் பரிசு நமது நேரத்தினால் ஆக்கப்பட்டிருக்கலாம். நமது திறமையாக இருக்கலாம்.  நமது சொத்தாக இருக்கலாம்.


*****

No comments:

Post a Comment