காபிக்கடை
காபி :1
13.9.2025 சனிக்கிழமை.
சென்னை நகரம் புதிது. பழக்கம் இல்லா மனிதர்கள். பணமே பிரதானம்,வியாபாரமே நோக்கம்.
பணம் இல்லையா அப்படியெனில் என்னைப் பார்க்காதே என்று சொல்வது போல் எங்கும் விரையும் மனிதர்கள் நெரிசல்.
எப்படித்தான் இங்கு தொடர்ந்து வாழ்வதோ - காலம் தள்ளுவதோ -என்ற கவலையோடு கடந்துபோனது செப்டம்பர் 5.9.25உடன் ஒரு வருடம்.
காலை சந்தடிகளிலும் சைக்கிளே என் தேர்வு. மெல்ல ஒரு பெட்டிக்கடையில் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினேன்.
தயிர் ஒரு லிட்டர் ஆவின் ஒரு லிட்டர் மற்றும் ஒரு வாராந்தரிக்கு ரூபாய் 125/- ஆயிற்று.
என்னமோ தெரியவில்லை. வானம் மப்பினால் செல் டவர் கிடைக்கலியோ.
கடைக்காரருக்கு பணம் செல்ல மறுத்தது. செல்போன் சுற்றி சுற்றி வந்தது.
பணம் செலுத்தாமல் நான் தயிரையும் பாலையும் எடுக்கவில்லை. அதற்குள் -
“ அலோ என்னங்க! காசு தராம தள்ளி போயி நிக்றீங்க?” என்ற குரலையே எதிர்பார்த்தேன்.
காரணம் நிற்க இடமில்லா சென்னை அவ்வளவு பிசி. பண அவசரம். நிதியே குறிக்கோள். இங்கு இருப்பவர்கள் அறிவர். அல்லது தலை நகர சுழற்சி.
இதே போல் முன்பு ஒரு பெட்டிக் கடையில் தயிர் இருபத்தி ஒரு ரூபாய் என்றார். என்னிடம் ஒரு ரூபாய் இல்லை என்றதும் தயிரை எடுத்து ப்ரீசரில் வைத்து வழி அனுப்பி விட்டார்.
அந்த கசப்பே நினைவில் நின்றதால் இப்பவும் எதிர்பார்த்தேன் இவரிடமும்.
அவர் சொன்னார்: “ செல் டவர் இல்லேன்னா நாளக்கு கொடுங்க”
ஆச்சர்யம் அடைந்தேன்
“இல்லேன்னா நாளன்னிக்கு கொடுங்க!”
இளம் காலையில் இன்னும் ஆச்சரியப்பட்டேன். அவரும் என்னைப் போலவே வேட்டி கட்டியிருந்தார். ஏதோ முனகியது போலிருந்தது.
என்ன? என்றேன்.
“ பணத்தை பார்த்துக்கிட்டேவா பிறந்தோம்!”
ஆச்சரியப்பட்டுப் போனேன்.
உயிருள்ள உலகம் ஆழத்தில் இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆசைப்படுகிறேன்.
அடுத்த காபியில் சந்திப்போம்.
***
No comments:
Post a Comment