Sunday 18 October 2015

அப்பா என்றொரு சூரியன்




சு.பார்த்தசாரதி தோற்றம் 15.5. 1931 மறைவு 30.10. 2015 என எழுதாதீர்
அப்பா இனிமேல்தான் வாழப்போகிறார்
கடைசியில் ஒரு நாள் இறக்கவேண்டியதுதான் ஆனால்
அப்பா இறப்பை மருத்துவம் சொன்னாலும் சத்தியமாய் நம்பேன்
84வயது அப்பாவுக்கு கொள்ளியிட்டு வடலூரில் சிதை மூட்டினேன்
எனினும் அப்பா கனக்க அப்பாதான் தோளில் கனத்தாரா
அவர் லேசல்லவே அவர் கனமல்லவே எதைச் சொல்வேன்
போய்விட்டீர்களா எனக்கனலும் நெருப்பின் கனல் ஒன்றை
அடித்தொண்டையில் சிவப்பில்லாச் சிவப்புடன் கனல வைத்தார்
பூமித்துண்டே இழந்துவிட்டாய் பேசும் மரம் ஒன்றை
முதிர்ந்த வாசக கிரிக்கெட் கிழ இளைஞர் ஒருவரை
மூக்குப்பொடி வழியும்  கருடமூக்கு லாவகம் காணோம் எழுந்திரப்பா
ப்ரீசர் பாக்ஸ் பெட்டி மூச்சு உனக்கெதற்கு கண்விழி
கைலி கட்டிய  பறவை என படபடக்கும் நாக்குடன்
காலைக்காற்றுக்கும் காலைநேர பள்ளிக்குழந்தைக்கும் காலை காபிக்கும்
ஆசானாய் பல காலம் வாழ்ந்த புத்துயிரே எங்குதான் சென்றாய்
அதெப்படி அப்பாக்கள் மட்டும் அப்பாதான் என்றும் எதனால் எனில்
அவர் உருவம் பிரியும் ஆனால் அவர் நிழல் என நம்மை மாற்றுதல்
எதை சொல்லி என்னப்பா எழுந்து வா
தனித்த மனம் தனித்த இரணம்
வாய் ஓயாப்பேச்சும் கம்பனும் ஷெல்லியுமாய் இலக்கியபூமியுமாய்
மாடி பார்த்த நட்சத்திரங்களில் ஆகாயப் பூவென பேச்சு பெச்சு பேச்சு
முகசவரம் செய்யும்போதும் தாடைதிருப்பும் பேச்சு
மலச்சிக்கல் மனச்சிக்கல் பணச்சிக்கல் மூன்றிலும் வெல்லும் கலை
எவரும் கண்டதில்லை இருமலில்லை சளியில்லை
ஊன்றுகோலில்லை கழிச்சலில்லை ஆஸ்பத்ரி படுக்கை வலியில்லை
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை
திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் உன் தாய்க்கு
என்னை பட்டினத்தார் தாய்ப்பாடல் பாடச்சொன்னாய்
உனக்கு என்னே அதிசயம்
வெட்டியானின் செல் வழியே
“கல்லிலே கலை வண்ணம் கண்டான்..” சீர்காழி குரல் கேட்டாய்
நெடு விழிகள் கரைந்து ஒழுக
இடுகாட்டுச்செடிகள் நனைய வட்ட நீர்ப் பானை உடைந்து
நவம் நவமாய் தந்த அப்பா
கணம் கணமாய் கலைந்து போனார் பிரபஞ்சமானார்!
 


 

1 comment:

  1. ஆழ்ந்த இரங்கல் சத்தியமோகன். உன் தந்தை மறைவு தாங்க முடியாத துக்கம்.அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். உங்கள் பதிவில் 30.10.15 என்பதை மாற்றி விடுங்கள்

    ReplyDelete