Saturday, 13 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  16) 14.12.25 

****************************************************


பாடல் 16

******************

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனதுபோல் பாங்கு அறியாப்

புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்.


ஏ மக்களே! 

காட்டுக்குப் போயிருந்தேன். கண்டேன். உடலில் நஞ்சு ஏறி நோயுற்றுக் கிடக்கிறது ஒரு வேங்கைபுலி. கவனிக்கிறான் ஒரு விஷ வைத்தியன் ( விட காரி). குணப்படுத்திவிடுகிறான். புலி என்ன செய்கிறது? அந்த இடத்திலேயே வைத்தியனை உண்டு விடுகிறது.

நாட்டுக்குள் வந்தேன். நன்மை அறியாத ( பாங்கு ) புல்லறிவாளருக்கு ( அற்ப அறிவுடையவருக்கு) உதவி செய்யும் ஒருவனைப் பார்த்தேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் செய்யும் உதவி கல்லின் மேல் எறியப்பட்ட மண்கலம் போல் நொறுங்கி விடும்.

புலிக்கு உதவிய விஷ வைத்தியனும் புல்லறிவாளருக்கு உதவுகிறவனும் ஒன்றே.

                                                              ( ஈசனால் சிந்திப்போம்)

                                      


சந்த்யாவந்தனம்: (16) 14.12.25 

********************************************

சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் பார்ப்போம்.

ஆசமனம்:-

நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதேபோல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. நமது உள்ளமும் உடலும் சுத்தமாவதற்கு  ஆசமனம் அவசியம்; அங்க வந்தனம் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணரவேண்டும். உத்தரணியில் ஜலம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கட்டைவிரலின் அடிபாகத்தால் விடப்படும் ஜலம் பிரம்மதீர்த்தம் எனப்படும். மூன்றுமுறை மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி, எச்சில்படாமல் உட்கொள்ள வேண்டும். உணவுக் குழாய்க்கும் போதுமான ஜலம் செல்ல வேண்டும்.

பிராணயாமம் என்பதன் விளக்கம் என்ன?

                                                             ( ஈசனால் தொடர்வோம்)

 

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (16) - 14.12.25 

****************************************************************************************


பகவான் பாடல் : 15

*************************


கண்ணுக்கு கண்ணாய்க் கண் இன்றிக் காண்; உனைக்

காணுவதுயார் அருணாசலா.

கண்கள் இருந்தாலும் உடலில் உயிர் எனும் ஆத்மா இல்லாதபோது காணமுடிவதில்லை. அப்படியெனில் கண்ணுக்கு கண்ணாய் கண்டது யார்? ஆத்மா தான். அக நோக்குதான்.

முகத்திலே கண் கொண்டு  காண்கின்ற மூடர்காள்

அகத்திலே கண் கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைக் 

கூறுமாறென்றால் எங்கணே?

மகளுக்கு ஒரு தாய் தனது கணவனுடன் நிகழ்ந்த சுகத்தை எப்படி விவரிக்க முடியாதோ அதுபோல அகத்தில் கண் கொண்டு ஈசனுடன் நேரும் அனுபவம் எனும் திருமூலர் பாடலோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அபிராமி அந்தாதி : பாடல் 50

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி  என்று

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே


மேற்கண்ட பாடலில் அம்மையின் 11 திருநாமங்கள் கூறப்பட்டு மனம் இன்புறும் நிலை பாடப் படுகின்றது. ஜீவாத்மாவுக்குத் தெரியாமல் பரமாத்மா இல்லை என்ற அத்வைத நிலை தோன்றிய பின் பகவான் இரமணர் கேட்கும் இவ்வினா, கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றிக் காணுவது ஏக நிலைப்பட்ட ஆத்மாதான் என உணர்த்தவே ஆகும்.


                                                                            ( ஈசனால் சிந்திப்போம்)  


Friday, 12 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  15) 13.12.25 

*************************************************


பாடல் 15. 

*****************

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிரகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 


ஏ மனிதர்களே! திரும்பத் திரும்ப கூறுகிறேன். 

கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். இலக்கியம் வேண்டுமா? அதில் ஆழ்ந்து செல்க. விண் இயல் பொறியியல் ஞானம் வேண்டுமா? அதில் கல்வி கொள்க.

அதுவே மனிதனின் அகம் விரிய உதவும். 

இதனை அறியாதவர்கள் என்ன செய்கிறார்கள்? 

காட்டிலுள்ள மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி ஒன்று தன் அழகில்லா சிறகுகளை விரித்து தன்னை மயிலாக நினைத்து ஆடுவதைப் போல கவிதை எழுத முற்படுகிறார்கள்.


                                                                          ( தொடர்வோம்)


 சந்த்யாவந்தனம்: (15) 13.12.25

***************************************

மனு தருமத்தில் கால எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை, ஆனால் சந்த்யாவந்தனம் தொடங்கும் காலத்தில் மாற்றம் இல்லை. 

ஆம். சூரியன் உதிக்கும் முன் ஆரம்பித்தல் ; சூரியன் உச்சிக்கு வரும் முன் ஆரம்பித்தல்; மேற்கு வானில் சூரியன் மறையும் முன்பு ஆரம்பித்தல் என்பவை அவை.

தவம் எனும் நிலையை சந்த்யாவந்தனத்தின் மூலம் நாம் அடைய முடியும். 

அதாவது காயத்ரி மந்திரம் எவ்வளவு நீண்ட நேரம் சொல்லப்படுமோ அதுவே தவமாகும். ஜபமே தவத்தின் பாதை. 

ஞானிகள் இவ்வாறு தவம் மேற்கொண்டு நீண்ட ஆயுள் அடைந்தனர். ஆரோக்யம், புகழ், ஞானம், தெள்ளிய அறிவு மற்றும் பரம்பொருளுடன் ஐக்கியம் ஆகியன பெற்றனர் என்பது மிகையல்ல.

மேலும் , சந்த்யாவந்தனம் பசுமாட்டுத் தொழுவத்திலோ கோசாலையிலோ நதிக்கரைகளிலோ அல்லது திருக்கோயில்களிலோ செய்தால் வீட்டில் செய்யப்படுவதை விட;  பல்லாயிரம் மடங்குகள்; கணக்கில் அடங்கா மடங்குகள் பலன் தரக் கூடியது என மனுசாஸ்திரம் கூறுகிறது. 

சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் என்ன?

                                                        ( ஈசனால் சிந்திப்போம்)


 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (15) - 13.12.25 

***************************************************************************************

பகவான் பாடல்: 14

****************************

“ஒளவை போல் எனக்கு உன் அருளைத் தந்து எனை

ஆளுவது உன் கடன் அருணாசலா”

புறக்காட்சி நாடுவது இளமை. ஆசா பாசம் என்பது புறம். ஒளவை தன் இளமை நீக்கி முதுமை யாசித்து இறைவனை வேண்டிப் பெற்றது அகத்தில் ஈசனைக் காணவே ஆகும். இது ஈசன் கருணை ( அருள்) நமக்கு கிட்டினால்தான் சாத்தியம். காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். அவரும் முதுமை வரம் பெற்று திருஆலங்காடு ஈசனுடன் உறைந்தார்.

அபிராமி அந்தாதி பாடல் : 42 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து

வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை

நடம் கொண்ட கொள்கை  நலம் கொண்ட நாயகி நல் அரவின்

படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே

             “நலம் கொண்ட நாயகி” என்ற வரியினால் தன் கணவனாகிய ஈசன் நெஞ்சில் நீங்காமல் இருக்க வேண்டும் என்ற உண்மை தோன்றுகிறது. பல முறை ஈசன் நெஞ்சில் நடம் ( திரும்பத் திரும்ப ஆடினாள்)என்பது நடம் கொண்ட கொள்கை ஆகிறது. என் கணவர் என்னைப் பிரிய மாட்டார் எனும் செயலையே நலம் கொண்டது என்றார்.

               அருள் வேண்டுவோம் - உடலில் முதுமை கிடைக்கவும்; ஈசன் அன்பில் முதுமை கொள்ளவும் அருள் வேண்டி அழுவோம் குழந்தைகள் கிரயான்சுக்கு அழுவதுபோல.

                  **** 


 நான் ஒளவை பேசுகிறேன் (  14) 12.12.25 

*************************************************

பாடல் 14.  

****************

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவை அல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நல் மரம்.


ஏ மனிதர்களே! 

கிளைவிரித்து பல கொம்புகளுடன் உயர்ந்த மரங்கள் நல்ல மரங்கள் என்று நான் கூற மாட்டேன். அவற்றை விட்டுவிடுங்கள்.

அறிஞர்கள் சபையில் தரப்பட்ட ஏடுகளின் குறிப்புகளை உள் அர்த்தம் உணர்ந்து கொள்ள இயலாதவன் நல்ல மரம் என்பேன். அவனை மரம் என்று சொல்லுங்கள்.