Wednesday, 2 September 2026

முல்லா கதைகள்: 8

 முல்லா கதைகள்: 8 ( posted on 2.9.26)

************


யாருக்கு மதிப்பு?

************** 

ஒரு நாள் முல்லாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அவரிடம், “ முல்லா, இன்று ஒரு நாள் உங்கள் கழுதையை இரவல் தந்தால், இன்று மாலையே திருப்பித் தருகிறேன்” என்று கேட்டார்.

முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை . “ முன்பே எனது கழுதையை வேறொரு நண்பருக்கு இரவல் தந்துவிட்டேன்” என்று சொன்னார்.

வந்திருந்த நண்பர் கிள்ம்பியபோது , வீட்டின் பின் பக்கமிருந்த முல்லாவின் கழுதை கத்தியதால், “ முல்லா! உள்ளே கழுதை கத்தும் சத்தம் கேட்கிறதே” என்று முல்லாவைக் கேட்டார்.

“ பொய் பேசி மாட்டிக்கொண்டோமே என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, “ ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல், ஒரு கழிதையின் வார்த்தையை நம்பும் உங்களுக்கு என் கழுதையை இரவல் பெறும் தகுதி கிடையாது” என்று மிகுந்த சினத்துடன் கூறிக்கொண்டே கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டார்.


நீதி: ஒருவரிடம் ஒன்றை இரவல் பெறுவது அத்தனை எளிதல்ல.  


**  





Tuesday, 25 August 2026

முல்லா கதைகள்: 7

 முல்லா கதைகள்: 7  

***********

ஒரு சமயம் ஒருவர் முல்லாப் பார்த்து “ விதி என்பது என்ன?” என்று கேட்டார்.

“ நாம் எதிர்பார்ப்பதற்கு எதிராக நடப்பதுதான் விதி” என்றார் முல்லா.

அவர் சொன்ன பதில் புரியாததால் “கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.

“ ஒரு காரியம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து தோல்வி அடைந்தால் அதை விதி என்றும்; ஒரு காரியம் தோல்வி அடையும் என எதிர்பார்த்து வெற்றி அடைந்தால் அதனையும் விதி என்று சொல்கிறீர்கள்.. அதாவது எதிர்பார்த்தது நடைபெறவில்லை என்றால் நாம் தரும் பெயர் விதியாகும்”


நீதி:  முல்லாவின் விளக்கம் சரியே. மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற பாதைக்கு செல்வதில்லை. விதி மீது பழி போடுதல் எளிது.


>>> 

Sunday, 23 August 2026

முல்லா கதைகள்: 6

 முல்லா கதைகள்: 6 

*****************

மதிய வேளை. முல்லா ஆனந்தமாக ஓர் மல்பெரி மரத்தின் கீழே தங்கி இருந்தார். சற்று தொலைவில் தர்பூசனிக் கொடியில் பெரிய பெரிய தர்பூசனிப் பழங்கள் காய்த்திருப்பதைக் கண்டார். தான் நின்றிருந்த மல்பெரி மரத்தில் சிறிது சிறிதாய் பழங்கள் நிறைய இருப்பதையும் ஒப்பிட்டார்.

“ இந்த உறுதியான  பெரிய மரத்தில் சின்னஞ் சிறிய பழங்களையும்; அந்த மென்மையான கொடியில் பெரிய பெரிய பழங்களையும் ஆண்டவன் ஏன் வினோதமாகப் படைத்திருக்கிறான்?”

முல்லாவின் சிந்தனை முடியும் முன்னர். ஒரு ம்ல்பெரிப்பழம் முல்லாவின் மொட்டை தலையில் விழுந்து கீழே ஓடியது.

“ கடவுள் ஏன் இப்படிப் படைத்தான் என்று இப்போது புரிகிறது. இல்லாவிட்டால் என் தலை நொறுங்கியிருக்குமே” என்று சொல்லிக்கொண்டார் முல்லா.

நீதி: ஒவ்வொரு துன்பமும் அமைக்கப்பட்ட விதத்தில் அமைக்கப்பட்ட நேரத்தில் நம்மை  அணுகி துன்பம் கொடுத்தே தீரும். ஏற்றே ஆக வேண்டும். அதனை நாம் கேள்வி கேட்க முடிவதில்லை.


Thursday, 20 August 2026

முல்லா கதைகள்: 5

 முல்லா கதைகள்: 5

********

ஒரு சமயம் முல்லா ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றார். கல்யாண வீட்டு வாசலில் தயங்கி இன்று “ காலில் உள்ள செருப்பை வெளியே விட்டு செல்வதா?” என்று யோசனை செய்தார்.

ஏற்கெனவே ஒரு கல்யாணவீட்டில் ஒரு ஜோடி செருப்பை இழந்த அனுபவத்தால் , இம்முறையும் ஒரு ஜோடி செருப்பை ; அதுவும் புதிய செருப்பை இழக்க  விரும்பவில்லை. அதனால் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, யாரும் பார்க்காத சமயம் தன் சட்டைக்குள் வைத்துக்கொண்டு கல்யாண வீட்டுக்குள் சென்றார்.

முல்லாவை வரவேற்ற கல்யாணவீட்டார், அவர் சட்டைப் பைக்குள் ஏதோ இருப்பதைக்கண்டு “அது என்ன”  என வினவினர். அதற்கு முல்லா “ஒரு புத்தகம்” என்று கூற; அவர்கள் “ என்ன புத்தகம்?” என்று வினவ அதற்கு முல்லா  “வேதாந்த புத்தகம்” என்று சொன்னார்.

“அந்த புத்தகத்தை எங்கு வாங்கினீர்கள்?” என்று அவர்கள் கேட்க “ செருப்புக்கடையில் வாங்கினேன்” என்று முல்லா பதில் சொல்ல கேட்டவர்கள் திகைத்தார்கள்!

நீதி: இந்தக்கதையிலும் புத்தகத்தை வாங்கும் ஆசைவயப்பட்டு தவறான கேள்வி கேட்கும் நம் வழக்கத்தை உணரலாம். “எங்கேஅந்தப் புத்தகத்தைக் காட்டுங்கள்?” என்ற கேள்வி கேட்டிருக்கலாம்.

இன்னொரு கோணமும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. உலகியல் பொருள்களுக்கே நாம் பாதுகாப்பும் மரியாதையும் தருவதால் எவ்வளவு உயர்ந்த விஷயத்தையும் மட்டமான பொருள் பற்றுக்காக பொய் சொல்லப் பயன் படுத்தும் அற்ப குணம் நமக்கு இருக்கிறது என்பதற்கே “வேதாந்த புத்தகம்” என்ற சொல் இக்கதையில் உள்ளது.


Wednesday, 19 August 2026

வாசிப்பவர்களுக்கு ஒளவை சொன்ன மூன்று வேலைகள் என்ன?

  வாசிப்பவர்களுக்கு ஒளவை சொன்ன மூன்று வேலைகள் என்ன?

*********************************

நாம் வாசிக்க நிறைய நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பது ஒளவையார் சொல்லியிருக்கிறார். முக்கியமாக எழுதுவர்கள் ஓராமல்தான் (எந்தப்பக்கம் எப்படி என்று கவனம் குவித்து கூர்ந்து) எழுதுவதில்லை என்பதை அவர் தமக்கே ஒப்புக்கொள்வது ஒளவையே அவையடக்கம் கருதி குறிப்பிடும்போது இன்று எழுதுவோர் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள்!

எழுதுவோர் கதி இப்படி இருப்பதால், வாசிப்போருக்கு சில டிப்ஸ் அன்றே தந்த நம் ஒளவையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஓராது எழுதினேன் ஆயினும் ஒண்பொருளை

ஆராய்ந்து கொள்வது அறிவுடமை - சீராய்ந்து

குற்றம் களைந்து குறை பெய்து வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்.

நான் ஆராய்ந்து எழுதவில்லை. அறிந்தவற்றை எழுதினேன். ஆனாலும் நுட்பமான அர்த்தம்  எதுவென ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்தல் அறிவுடையோர் கடமை.

அதன் சிறப்பு ஆராய்ந்து குற்றம் குறைகளை நீக்கி, நான் கூறாதவற்றை இடத்திற்கேற்ப நிரப்பி ( fill) அமைத்துப் படியுங்கள். அதுவே கல்வியில் சிறந்த மனிதர்களின் பொறுப்பு.

ஒளவையார் , படிப்பவர்களுக்கு சொன்ன மூன்று வேலைகள் என்ன?.  எழுதுகிறவர்கள் அவர்கள் அறிந்ததை மட்டுமே எழுதி உள்ளார்கள் என்பது புரிந்துகொண்டு -

1) அதில் நுட்பம் எது என ஆராயும் வேலை வாசகனுக்கு உண்டு 

2) சிறப்பானது எது என ஆராயும் வேலையின்போது குற்றம் குறை இருக்கத்தான் செய்யும் ; அதனை நீக்கி விடுக.

3) கூறாதன நோக்கி குறிப்பு அறிந்து அதனை நீங்கள் உங்கள் அறிதல் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்க என்பதை “குறை பெய்து”  வாசித்தலும் வாசகனுக்கு உண்டு.அவனே கற்று அறிந்த மாந்தன்.

**


முல்லா கதைகள்: 4

 முல்லா கதைகள்: 4 

****************

முல்லா, தமது ஊரிலிருந்த பண்க்காரரிடம் போய் “ எனக்கு சிறிது பணம் தேவைப்படுகிறது, கொடுங்கள்' என்று கேட்டார்.

“ எதற்குப் பணம்?” என்று பணக்காரர் கேட்டார்.

“ ஒரு யானை வாங்கப் போகிறேன்” என்று முல்லா பதில் சொன்னார்.

அதற்கு அந்தப் பணக்காரர் , “ யானைக்கு தீனி போடுவதற்கே பணம் நிறைய வேண்டுமே? உங்களிடம் பணம் இல்லாதபோது யானையை எப்படிக் காப்பாற்றுவீர்கள்?” என்று கேட்டார்.

இதைக் கேட்டு கோபமுற்ற முல்லா “ நான் பணம் வாங்கத்தான் உங்களிடம் வந்தேனே தவிர அறிவுரை பெறுவதற்காக அல்ல”

நீதி:-

1) அறிவுரை தந்து முனையிலேயே முயற்சியைக் கிள்ளி எறிவோர் உலகில் அதிகம்.

2) பணம் இல்லாதவர்கள் ரோஷம் காட்டினால் பணம் கிடைப்பதில்லை.

** 


Monday, 17 August 2026

முல்லா கதைகள்: 3

  முல்லா கதைகள்: 3 

*****

கடமை பொது


ஒரு சமயம் முல்லா, கப்பலில் பயணம் செய்டதுகொண்டிருந்தபோது, புயல் திடீரென்று வீசியதால் கடல் கொந்தளித்தது.

“ கப்பல் எந்த நேரமும் கவிழ்ந்து விடலாம்” என்று கப்பல் தலைவன் உள்பட எல்லோரும் அஞ்சியதால் , உடனே மண்டியிட்டு “ ஆண்டவனே! எங்களுடைய கப்பலைக் காப்பாற்று” என்று இறைவனைத் தொழுதனர்.

முல்லா இந்தப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைக் கண்ட கப்பல் தலைவன், “ முல்லா! சமயவாதியான தாங்கள் இந்தப் பிரார்த்னையில் கலந்து கொள்ளாமல்  ஒதுங்கி நிற்கலாமா?” என்று வினவினான்.

“ இது கப்பலைக் காப்பாற்ற வேண்டிய பிரார்த்தனை. கப்பலைக் காப்பாற்றவேண்டியது உங்கள் வேலை, உங்கள் கடமை. நான் கப்பலின் மாலுமி இல்லை. வெறும் பயணிதான். ஆகவே ,கப்பலைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இல்லை” என்று பதில் சொன்னார்,

***


நீதி:- ஒரு நாளில் 5000 விஷயங்களை சிக்கல்களை ஈரான் அமெரிக்க யுத்தம் முதல்;சாலை விபத்துகள், சட்ட மன்ற லைவ்; குஜராத் வெள்ளம்; தெருநாய்கள் பிரர்ச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; போதைப் பழக்க கொலைகள் உள்ளிட்ட  பலவற்றை நமது தொலைக்காட்சி நமக்குள் கண்கள் வழியாகப் போடுகிறது. அவற்றை நமதாக என்ணுகிறோம். நம்மை அறியாமல். நமது பங்கு ( role) என்ன, நாம் அதில் செய்ய என்ன உள்ளது? என்ற கேள்விகள் நாம் நம்மைக் கேட்பதில்லை. நாம் கவலைப் பட வேண்டியதில்லை. நாம் பயணிகள். பயணிகள் மட்டுமே.


***